Tamil Bayan Points

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டணை

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 17, 2016 by Trichy Farook

இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணுக்கு சவூதி நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்துள்ளது குறித்து அறிவுஜீவிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். சவூதி அரசின் இந்தச் செயல் சரியானதா?

பதில்

நமது நாட்டில் உள்ள அதிகமான அறிவுஜீவிகளுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று நாம் திட்டவட்டமாக முடிவுக்கு வரும் வகையில் இவர்களின் விமர்சனங்கள் அமைந்துள்ளன. தனக்குத்தானே முரண்படுவதுதான் பைத்தியக்காரத்தனத்தனத்திற்கான ஆரம்ப அறிகுறி. இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.

குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்குத் தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், மைனர் வயதை 16ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் இதுதான் சட்டமாக உள்ளது. குற்றம் நடக்கும் போது ரிசானா 17வயதுப் பெண் என்பதால் அந்தச் சட்டப்படி அவர் மேஜர் இல்லை.

டெல்லி மாணவி பிரச்சனையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்த்தார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா?

மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தைப் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் பார்த்துத் தான் நீதி வழங்க வேண்டும்.

அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதைத் தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை பேனா பிடித்த மூடர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்ய வேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிகளும், நக்கீரப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை; மனசாட்சியும் இல்லை; உலக அறிவும் இல்லை; சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் பைத்தியக்காரர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில் மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்.

அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான் நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்பட்டு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்?

மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்ட மாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவூதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவசரமாக ஏன் தூக்கில் போட வேண்டும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வழக்கில் ரிசானா குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார் என்று 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தவாத்மி கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று முதல் அவர் மகளிர் சிறையில் இருந்து வந்தார். இதை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அதன் பின்னர் உடனே தூக்கில் போடவில்லை. இறுதியாக சவூதியின் சுப்ரீம் ஜுடீசியல் கமிட்டி மூலமும் இந்த குற்றம் விசாரணை செய்யப்பட்டு கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு அத்தோடு சவூதி அரசாங்கம் இதை விட்டுவிடவில்லை. சுப்ரீம் ஜுடீசியல் கமிட்டியே இதை உறுதி செய்த பின்னரும் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் சவூதி அரசும் இலங்கை அரசும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.

ரியாதின் கவர்னருக்குக் கீழ் செயல்படக்கூடிய மறு சமரசக்குழு மூலமாக குழந்தையின் பெற்றோர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி இந்தக் குற்றத்தை மன்னிக்கச் சொல்லி பேசிப்பார்த்தனர். ஆனால் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மன்னிக்க மறுத்து விட்டனர். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது எப்படி அவசர முடிவாக இருக்க முடியும்?

குழந்தையைக் கொல்ல அந்த பெண்ணுக்கு எந்தக் காரணமும் இல்லையாம். இப்படியும் அறிவு ஜீவிகள் கூப்பாடு போடுகின்றனர்.

இந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பதற்கு சவூதிக்கு எந்தக் காரணம் இருந்தது? சவூதி மன்னருக்கும் இவருக்கும் முன்பகையா? அல்லது சவூதி நீதிமன்றங்களுக்கும் இவருக்கும் முன்பகை இருந்ததா? இவருக்கு மரண தண்டனை அளிப்பதால் சவூதி அரசுக்கு என்ன ஆதாயம்? இது போல் சிந்திக்க மட்டும் இவர்களின் மூளை காய்ந்து விடுமா?

எஜமானர்கள் கொடுமைப்படுத்தியதால் அவர்கள் வீட்டு பிள்ளைகளை வேலைக்காரிகள் கொன்ற சம்பவம் நமது தமிழகத்தில் ஏராளம் நடந்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதியது இவர்களுக்குத் தெரியவில்லையா? சிறுவனைக் கொலை செய்து சூட்கேசில் அடைத்த பெண்ணைப் பற்றி இவர்கள் பக்கம் பக்கமாக எழுதினார்களே அது போன்ற காரணம் இருக்கக் கூடாதா?

(மேலும் விபரத்துக்கு இது குறித்த தனிக்கட்டுரைகளைக் காண்க)