Tamil Bayan Points

இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 23, 2023 by Trichy Farook

முன்னுரை

எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!  சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள், இறைநம்பிக்கையாளர்கள்; முஃமின்கள் எனப்படுகிறார்கள்.

இவர்களின் பண்புகளைப் பற்றி திருமறை குர்ஆனும், ஹதீஸ்களும் நமக்கு பல செய்திகளை சொல்லித் தருகின்றன. அவற்றைத் தான் இன்றைய உரையிலே பார்க்க இருக்கிறோம்!

ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் 

عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்துக் காட்டினார்கள்.

அறி : அபூமூசா (ரலி),
நூல் : புகாரி-481 

திருக்குர்ஆனை ஓதுவார்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالْمُؤْمِنُ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَالْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ أَوْ خَبِيثٌ وَرِيحُهَا مُرٌّ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை.

குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது’ அல்லது அருவருப்பானது.’ அதன் வாடையும் வெறுப்பானது.

அறி : அபூமூசா (ரலி),
நூல் : புகாரி-5059 

சோதனையின் போது தளரமாட்டார்

مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنْ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً وَتَعْدِلُهَا مَرَّةً وَمَثَلُ الْمُنَافِقِ كَالْأَرْزَةِ لَا تَزَالُ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.

அறி : கஅப் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி-5643 

 سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ لَا يَسْقُطُ وَرَقُهَا وَلَا يَتَحَاتُّ فَقَالَ الْقَوْمُ هِيَ شَجَرَةُ كَذَا هِيَ شَجَرَةُ كَذَا فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ وَأَنَا غُلَامٌ شَابٌّ فَاسْتَحْيَيْتُ فَقَالَ هِيَ النَّخْلَةُ

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்று கூறினர். அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அது பேரீச்ச மரம் என்று சொன்னார்கள்.

நுல் : புகாரி-6122 

ஏமாற மாட்டார்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ
لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-6133 

அனைத்திலும் நன்மையைப் பெறுவார்

عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை.

அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.

அறி : ஸுஹைப் (ரலி),
நூல் : முஸ்லிம்-5726 

நற்குணம் நிறைந்திருக்கும்

عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ

(இறைநம்பிக்கையாளனின்) தாரசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறி: அபுத்தர்தா (ரலி),
நூல்: அபூதாவூத்-4799 (4166)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا

இறைநம்பிக்கையில் முழுமை பெற்றவர் அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர், தனது மனைவியிடம் சிறந்தவராக இருப்பவரே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ-1162 (1082)

இறைநம்பிக்கையாளனின் சகோதரர்

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ عَلَى الْمِنْبَرِ يَقُولُ
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَذَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துத் தமக் காக) அவர் பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்).

அறி : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : முஸ்லிம்-2765 

சபிக்க மாட்டார், குறைகூற, கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்

நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும். சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும் சபிப்பதைப் காணமுடிகிறது. இன்னும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மண்ணை வாறியிறைத்து சாபமிடும் பழக்கமுடையவராயிருப்பதைக் காணலாம்.

இத்தகைய பண்புகள் உண்மையான முஃமின்களுக்கு உரிய பண்பு இல்லை. முஃமின்களைச் சபிப்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறி: அப்துல்லாஹ் (ரலி),
நூல்: திர்மிதீ-1977 (1900)

சபித்தவனையே சூழும் சாபம்

قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا ثُمَّ تَهِبْطُ إِلَى الأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالاً فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِى لُعِنَ فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلاً وَإِلاَّ رَجَعَتْ إِلَى قَائِلِهَا

‘ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபுத்தர்தா (ரலி),
நூல்: அபூதாவூத்-4905 

பயனளிப்பதையே ஆசைப்படுவான்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் (மறுமையில் நன்மைகளை) பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே.

உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) “லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.

அறி : உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல் : முஸ்லிம்-5178

உண்மையான இறை நம்பிக்கையாளராக வாழ்ந்து, இது போன்ற நன்மையான செயல்களை செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!