இரவுத் தொழுகை தொழுவோமே!
பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1Last Updated on September 26, 2023 by Trichy Farook
இரவுத் தொழுகை தொழுவோமே!
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
மத்ஹப்பை பின்பற்றும் நேரத்தில் கண்ணும் கருத்துமாக தொழுத இரவுத் தொழுகை தொழும் பழக்கம், ஏகத்துவத்தை ஏற்ற மக்களிடையே பெரும்பாலும் குறைந்து வருகிறது. இரவுத் தொழுகையைப் பற்றி குர்ஆனும், ஹதீஸும் ஏராளமான சிறப்புகளை எடுத்துரைக்கின்றன.
அப்படி தொழும் சிலரும் முந்திய பகுதிகளில் தொழுதுவிட்டு உறங்கி விடுகின்றனர். ஆனால், இரவுத் தொழுகையை பொருத்த வரையில் பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே, பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு, முடிந்த அளவு அதைச் செயல்படுத்தி, அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!
விலகி விடும் விலாப்புறங்கள்
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
நரகத்திலிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப் பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன்.
அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!” என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
அறி : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-1121 , 1122
பொறாமை கொள்ளத்தக்க அமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி-5025
வல்ல இறைவனின் வானுலக வருகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-1145
கேட்டது கிடைக்கும் நேரம்
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம்-1384 (1259)
தொழுகையில் சிறந்தது
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம்மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-2157
ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
நூல்: திர்மிதீ-2485 (2409)
தொழத் தொடங்கியவர் விடலாகாது
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!” என்று கூறினார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல்: புகாரி-1152
ரமளானில் இரவுத் தொழுகை
யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி-37
மேற்கூறிய இறைவசனம் மற்றும் ஹதீஸ்களின்படி முடிந்தவரை ஒவ்வொரு நாளும் இரவுத் தொழுகை தொழுது, முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாகவே மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!