Tamil Bayan Points

இன்சூரன்ஸ் பற்றிய விளக்கம் தேவை!

கேள்வி-பதில்: வியாபாரம்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

இன்சூரன்ஸ் பற்றிய விளக்கம் தேவை!

கேள்வி :

நான் எனது குடும்பத்தின் வருங்காலத்தைக் கருதி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பிரிமியம் செலுத்திட விரும்புகின்றேன். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் Tern insurance (plan No : 164) என்றொரு திட்டம் உள்ளது. இதில் Jeevan amulya (plan No 190) என்ற வகை உள்ளது. அதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் சேர்ந்திட வயது உச்ச வரம்பு 70 ஆகும். இத்திட்டக் காலம் 35 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் சேர்ந்து ஒரு தவணை செலுத்திய பின் ஒரு முழு ஆண்டு கழித்து பிரிமியர் செலுத்தியவர் இறந்து விட்டால் அவருக்கு ஒரு கணிசமான தொகை கிடைக்கும். அவர் 35 ஆண்டுகள் தொடர்ந்து பிரிமியம் செலுத்தியும் அந்த 35 ஆண்டுகளுக்குள் மரணம் ஏறபடா விட்டால் அவருக்கு எந்தத் தொகையும் கிடைக்காது.

மேலும் இந்த இழப்பீட்டுத் தொகை இயற்கை மரணம் அல்லது விபத்தினால் ஏற்படும் மரணம் ஆகியவற்றுக்கே கிடைக்கும். தற்கொலை செய்து கொண்டால் இந்தத் தொகை கிடைக்காது. மேற்படி ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நான் இணைவது நமது மார்க்கத்திற்கு ஏற்புடையது தானா என்பதற்கு தெளிவான மார்க்கத் தீர்ப்பு வழங்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.

மார்க்கத் தீர்ப்பு

ஆயுள் காப்பீடு (இன்சூரன்ஸ்) என்பது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை. ஆனால் நபியவர்கள் எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்த்தாலும் அதில் எது கூடும்? எது கூடாது? என்பதை மிகத் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இன்றைக்கு நடைமுறையில் உள்ள ஆயுள் காப்பிட்டுத் திட்டங்களில் மார்கத்திற்கு மாற்றமான வட்டி கலந்த திட்டங்களும் உள்ளன. வட்டியில்லாத ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன.

நம்முடைய பணத்திற்கு வட்டி கணக்கிட்டு தரக்கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் நாம் ஒரு போதும் சேர்ந்து விடக்கூடாது. இது மார்க்கத்திற்கு மாற்றமானதும் மறுமையில் நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பாவமாகும்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (3258)

ஒருவர் வட்டியுடன் சேர்த்து திரும்பக் கிடைக்கும் இன்சூரன்ஸில் சேர்ந்து எனக்கு வட்டி வேண்டாம் என்னுடைய அசல் தொகை மட்டும் போதும் என்று கூறினால் அது மார்க்கத்தில் ஹலால் ஆகும்.

வட்டி இல்லாதவை

ஆனால் இன்னும் சில ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் வட்டியின் எந்த ஒரு அம்சமும் கிடையாது. இவற்றில் நாம் போடும் பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது. ஆனால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும். நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையில்லையென்றால் நம்முடைய பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது.
உதாரணமாக மருத்துவக் காப்பீடு (medical insurance), வாகனக் காப்பீடு (vechicle insurance) போன்றவற்றைக் கூறலாம்.
நம்முடைய மார்க்க அடிப்படையில் நாம் அனைவரும் பணம் போட்டு பைதுல் மால் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். நமக்கு நோய் ஏற்படும் போது அந்த பைதுல் மாலின் மூலம் நமக்கு உதவி செய்வார்கள். நாம் பைதுல் மாலிற்கு செலுத்திய பணம் குறைவாக இருந்தாலும் அனைவரின் பணமும் சேர்ந்து நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையென்றால் அந்தப் பணம் வேறு யாருக்காவது பயன்படும்.

இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில்தான் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. நாங்கள் இந்த மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்துகின்றோம். நமக்கு பாதிப்பு வரும்போது அந்த நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு உதவி செய்கிறது. நமக்கு பாதிப்பே வரவில்லையென்றால் நம்முடைய பணம் பாதிப்பு ஏற்பட்ட மற்றொரு சகோதரருக்கு உதவியாகச் செல்லும். இந்த அடிப்படையில்தான் அனைவரும் பணம் செலுத்துகின்றனர். இதில் பணத்திற்கு எந்த விதமான வட்டியும் கணக்கிடப்படுவதில்லை.

இது போன்றுதான் வாகன இன்சூரன்சும். நாம் நம்முடைய வாகனத்திற்காக குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகையை காப்பீடாகச் செலுத்து கின்றோம். இந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் போது அந்த நிறுவனம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படும்.

  • ஒன்று நாம் ஓட்டும் போது எதிரில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
  • இரண்டாவது நாம் ஓட்டுகின்ற வண்டிக்கு பாதிப்பு ஏற்படும்.
  • மூன்றாவது வண்டியின் ஓட்டுனருக்கு ஏற்படும்.

நாம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவன் மீது மோதி அவன் இறந்து விட்டால் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே அவனுக்கு அவனுடைய குடும்ப நிலையை பார்த்து அவனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்பது கட்டாய மார்க்க விதி. நாம் யாராவது ஒருவர் மீது மோதி அவர் மரணத்திதாலோ அல்லது வண்டிக்கு ஏதாவது ஆனாலோ அல்லது நமக்கு ஏதாவது ஆனாலோ எவ்வளவு செலவானாலும் அந்த நிறுவனம் பார்த்துக்கொள்ளும். அப்படி எதுவும் ஆகவில்லையென்றால் பணம் திரும்ப வராது.

இவ்வாறாக கூறித்தான் அனைவரிடமும் பணம் வாங்கப்படுகிறது. இதில் வட்டி இல்லை. அதற்கான சாயலும் இல்லை. இது ஒரு கூட்டு உதவித் திட்டம் தான். இதற்கு மார்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆகையால் இது நமக்கு அனுமதியாகும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயுள் காப்பீட்டுத் திட்டம் வட்டியில்லாத வகையைச் சேர்ந்ததாகும். எனவே அதில் இணைவது தவறுகிடையாது. அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.