Tamil Bayan Points

ஆபாசப் படங்களால் சீரழியும் இந்தியா

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 1, 2019 by

ஆபாசப் படங்களால் சீரழியும் இந்தியா

ஜூ லை 31ஆம் தேதிக்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதள முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. இணையதளங்களை முடக்க கண்காணிப்பு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

31.07.17ஆம் தேதிக்குள் குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகள் சார்ந்த ஆபாச இணையதளங்களை மட்டும் முடக்கிவிட்டால் போதுமா? இதன் மூலம் மட்டுமே நாட்டில் கலாச்சார சீரழிவை ஒழித்துவிடலாமா? என்பது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதுதான் அனைத்து விதமான ஒழுக்கக்கேடுகளின் திறவுகோலாக உள்ளது.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதால்தான் கற்பழிப்பு மற்றும் விபச்சாரம் பெருகுகின்றது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; அவர்களுக்கு உரிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும் என்றெல்லாம் மாதர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்; ஆனால் அவர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவது எது என்பது குறித்த மூலக்காரணங்களை இவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்; அதுதான் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிக்க என்ன   காரணம் என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி சந்திரசேகர் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது; அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரிய வந்தன. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியதாவது: பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாச படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளுமே காரணம்.

இவை எளிதாக கிடைப்பதால், இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இதை, உடனடியாக தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்து தண்டிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்க படுத்த வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக பார்க்கக் கூடாது.

இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதைச் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை , அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது. பள்ளிகளில், தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை, மாணவியர் புகாராக தெரிவிக்க, குறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆபாச இணையதளங்களை அழிக்காமல் ஆசி வழங்கி அனுமதி கொடுத்து வைத்திருப்பதன் விளைவு பெண்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளின் திறவுகோலாக இருப்பது இந்த ஆபாச இனையதளங்கள்தான் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்; உடனடியாக அனைத்து ஆபாச இணையதளங்களையும் அழிக்க ஆவண செய்ய வேண்டுமா இல்லையா?

அதை விட்டு விட்டு சிறுகுழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச இணையதளங்களை மட்டும் நாங்கள் அழிக்கப்போகின்றோம் என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு:

இதற்கு முன்னதாக இதுபோல ஆபாச இணையதளங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. “இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன;

அத்தகைய இணைய தளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது’ எனவும், இதுபோன்ற இணையதளங்களை என்ன செய்யப்போகின்றீர்கள் எனவும் கடந்த பல வருடங்களாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி வந்தது; மேலும், “ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கடந்த 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது;

உச்சநீதிமன்ற நீதிபதிகள், “அவற்றை முழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றும் அப்போதே உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு மிக மந்தமான போக்கை கடைபிடிப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

ஆபாச இணையதளங்களை தடை செய்வது சுலபமா?

எத்தனையோ லட்சக்கணக்கான ஆபாச இணையதளங்கள் இருக்கும் போது அவற்றை முற்றிலுமாக தடை செய்வது மத்திய அரசால் இயலுமா? என்று சிலர் நினைக்கலாம்; ஒரேயரு உத்தரவின் மூலம் அனைத்து ஆபாச இணையதளங்களையும் மத்திய அரசால் இலகுவாக தடை செய்துவிட முடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்; இதுஒன்றும் சிரமமான காரியம் இல்லை.

ஆபாச இணையதளங்களால் சீரழியும் ஆண்கள்

ஆபாச இணையதளங்களை பார்ப்பதனால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படுகின்றது என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. இதுபோன்ற ஆபாச படங்களை பார்ப்பதால் எத்தகைய சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் வருமாறு:

ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாது என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாச படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வுகூறுகிறது.

வீடியோவில் ஆபாச படங்களை பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார். இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து ஆண்மையின்றி தவிக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

ஆபாச சினிமா மற்றும் சீரியலுக்கும் தடை வேண்டும்

இதுபோன்ற ஆபாச படங்களை இண்டர்நெட் வழியாக பார்த்து சீரழிவது ஒருபுறம் என்றால் இந்தியாவில் வெளியிடப்படும் சினிமாக்களில் 100 சதவீத திரைப்படங்களும் காம இச்சைகளை தூண்டக்கூடிய திரைப்படங்களாகத்தான் உள்ளன; அதில் காட்டப்படும் ஆபாச காட்சிகளின் அளவில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாமே தவிர அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்; எனவே அனைத்து ஆபாச சினிமா காட்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்; போதாக்குறைக்கு மெகா சீரியல்கள் என்று தொலைக்காட்சிகளில் வரும் ஆபாச நிகழ்ச்சிகளுக்கும் தடை போட்டால் தான் இந்த இந்தியாவை ஒழுக்கக்கேட்டிலிருந்து காப்பாற்ற முடியும்.

Source: unarvu (26/05/17)