Tamil Bayan Points

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்!

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on November 17, 2016 by Trichy Farook

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்!

2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். ஒரு பயங்கரவாதியைக் கூட அவர்கள் தப்பிக்க விடவில்லை. பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை நாடே வரவேற்றது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு சதி செய்ததாக சொல்லி, காஷ்மீரை சேர்ந்த அப்சல் குருவை மத்திய அரசு ‘திடுதிப்’ என்று தூக்கில் போட்டுள்ளது. இது காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50க்கும் அதிகமான பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் காஷ்மீரில் முடக்கப்பட்டுள்ளன. 14 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு காரணம் – அப்சல் குரு சட்டத்தின் அடிப்படையில் தூக்கில் போடப்படவில்லை. மாறாக அரசியலுக்காக தூக்கில் போடப்பட்டார்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் கூடுதலாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டத்தை நாம் எதிர்த்தவுடன் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையே கூடாது என்று நாம் எதிர்ப்பதாக யாரும் விளங்கிக் கொள்ளக்கூடாது. மரணதண்டனையே கூடாது என்பது நமது வாதம் அல்ல. அது சட்டப்படி முறையாக விசாரித்து வழங்கப்பட வேண்டும் என்பதே நமது வாதம்.

அப்சல் குரு துப்பாக்கி தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் செல்லவில்லை. அங்கு யாரையும் அவர் துப்பாக்கியால் சுட வில்லை. இந்த பாராளுமன்ற தாக்குதலுக்கும், அப்சல் குருவுக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை.

(குறிப்பு : மேற்கண்டவாறு நாம் சொல்லவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இது குறித்த செய்திகளை லிங்கில் காண்க!)

இப்படி பாராளுமன்ற தாக்குதலில் நேரடி சம்பந்தம் இல்லாத அப்சல் குருவை பா.ஜ.கவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து, மத்திய காங்கிரஸ் அரசு தூக்கில் போட்டது நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற தாக்குதலில் அப்சல் குரு மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. இவரோடு சேர்த்து பேராசிரியர் ஜிலானி, சவுகத் ஹுசைன், அப்சான் குரு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி தனி நீதிமன்றம் முதலில் அப்சான் குருவை நிரபராதி என்று சொல்லி விடுதலை செய்து விட்டது. அதே சமயம் ஜிலானி, சவுகத் ஹீசைன், அப்சல் குரு ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது.

இதன் பிறகு உச்ச நீதி மன்றம் பேராசிரியர் ஜிலானியை நிரபராதி என்று சொல்லி விடுதலை செய்து, சவுகத் ஹீசேனுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த சிறைத் தண்டனை காலம் கழிந்து சவுகத் ஹுசைனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

இந்நிலையில் தான் மத்திய அரசு அப்சல் குருவை அவசர அவசரமாக தூக்கில் தொங்க விட்டுள்ளது. அப்சல் குருவிற்கு நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை கிடைப்பதற்கு சட்டத்தின் உரிமைகள் அவருக்கு தரப்படவில்லை என்பது பிரதான காரணமாகும்.

அப்சல் குரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். 1986ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேறிய இவர் 1988ஆம் ஆண்டு 12வது படித்து முடித்து ஒரு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முழுமையாக ஒரு ஆண்டு நன்றாக படித்து முடித்தார். இதற்கு மேல் படிக்க இவருடைய பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை. அதனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பழ வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்.

மருத்துவ கல்லூரியில் சீட் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மருத்துவ படிப்பையே இவர் பாதியில் விட்டுவிட்டார் எனில் வறுமை இவரை எந்த அளவிற்கு விரட்டி இருக்க வேண்டும்? அந்த ஏழையைத்தான் சட்டப்படியான உரிமைகளை தராமல் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தூக்கில் ஏற்றி சாகடித்துள்ளார்கள்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழையான அப்சல் குருவுக்கு வக்கீல் வைத்துக் கொள்ளகூட வசதியில்லை. வக்கீல் வைத்துக் கொள்ள வசதி இல்லாதவருக்கு அரசுதான் இலவச வக்கீல் அமர்த்தித் தர வேண்டும். ஆனால் வழக்கு விசாரணையின் போது இவர் கேட்ட வக்கீலை அரசு அமர்த்தித்தர வில்லை. மாறாக அரசுக்கு இணக்கமான ஒரு வழக்கறிஞரை அமர்த்தினார்கள். இந்த முதல் கோணல்தான் முற்றிலும் கோணலாகி இப்போது அவரது உயிரை பறித்து விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

பாராளுமன்ற தாக்குதலில் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லாத இருவரை நீதிமன்றமே விடுதலை செய்து, ஒருவருக்கு 10ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அப்சல் குருவுக்குமட்டும் தூக்குத் தண்டனை கிடைப்பதற்கு காரணம் – ஏழையான அப்சல் குருவுக்கு கிடைக்க வேண்டிய சட்ட ரீதியான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதை மக்கள் அறியாமல் இல்லை. என்னதான் இருந்தாலும் அப்சல் குரு உச்சநீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டவர். அவரை தூக்கில் போடுவதை எதிர்க்கக் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள்.

உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை மட்டும் உறுதி செய்து, வேறு எவருடைய தூக்குத் தண்டனையும் உறுதி செய்யாமல் இருந்தால் இவர்களின் வாதத்தை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அப்சல் குருவுக்கு முன்னால் 90பேரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவர்களையெல்லாம் தூக்கில் போட்டு விட்டு அப்சல் குருவையும் தூக்கில் போட்டால் இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில் போடவில்லை. உதாரணமாக முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இன்றுவரை தூக்கிலிடப்படவில்லை. காலிஸ்தான் பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது இந்தியாவின் பயங்கர சம்பவம் இல்லையா? பஞ்சாபின் முதல் மந்திரியை ரஜோனா என்பவர் கொன்றது பயங்கர சம்பவம் இல்லையா? தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இவர்களை எல்லாம் தூக்கில் போடாமல் இவர்களுக்குப் பின்னால் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவை மட்டும் தூக்கில் போட்டுள்ளார்கள் எனில் உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்ததால் அப்சல் குருவை தூக்கில் இடவில்லை. மாறாக அப்சல் குரு ஒரு ஏழை முஸ்லிம். இவரை தூக்கில் போட வேண்டும் என்று பா.ஜ.க கூக்குரலிட்டது. அதனால் அவர் தூக்கிலிடப்பட்டார் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதனால் அவர் தூக்கிலிடப்பட்டார் என்ற சொத்தை வாதத்தையும் சிலர் வைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் சிதம்பரம் – ஜனாதிபதியிடம் தரப்பட்ட கருணை மனுக்கள் வரிசையாகத்தான் பரிசீலிக்கப்படும் என்றார். மத்திய அரசின் இந்த உறுதி மொழியின்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நடந்துகொள்ளவில்லை. எல்லா கருணை மனுக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு 1984ஆம் ஆண்டு காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் மக்பூல் பட், அஜ்மல் கசாப் , அப்சல் குரு ஆகியோர் மனுக்களை மட்டும் பரிசீலித்து நிராகரிக்கிறார் எனில் இதில் அரசியல் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

ஜனாதிபதி கருணை மனுக்களை வரிசையாக பரிசீலனை செய்யாமல் இருப்பதில் அரசியல் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகமும் கொலை குற்றவாளிகளை வரிசைப்படுத்தி தூக்கில் போடாமல் இருப்பதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. சிறைத் துறையும் வரிசையை பின்பற்றாமல் முஸ்லிம்களைமட்டும் குறி வைத்து தூக்கில் போடுவதில் அரசியல் இல்லாமல் வேறு என்ன இருக்கிறது?

காஷ்மீரில் 98ஆயிரம் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக கொல்லப்பட்டவர்கள் ஆவர். சிறைக்கு வெளியில் இருக்கும் அப்பாவி மக்கள் முஸ்லிம்கள் என்பதற்காகத்தான் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரை சேர்ந்த அப்சல் குருவும் முஸ்லிம் என்பதற்காகத்தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். இவை அனைத்தும் அரசியல் ரீதியான பச்சை படுகொலைகள்.

இந்தியாவில் முஸ்லிம்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்று இந்த சம்பவங்கள் தெளிவு படுத்துகின்றன. இந்த அரசியல் சதியை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிர் கொள்ள வேண்டும். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காவி அமைப்புகள் முஸ்லிம்களை குறிவைத்து நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நடத்தி கொலை வெறியாட்டம் போடுகின்றனர். திட்டமிட்டு மதக் கலவரங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கின்றனர். இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் பிணமாக கிடந்தார்கள். முஸ்லிம் அல்லாத ஒருவர் கூட பலியாகி கிடக்கவில்லை என்று வி.எச்.பி.யின் தலைவர் பிரவீன் தொக்கடியா ஒப்புக் கொள்ளும் அளவுக்கு நிலைமை படுபயங்கரமாக இருக்கிறது. இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அரசோ காவி பயங்கரவாதிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு போலீஸ், இராணுவ நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது. சட்ட ரீதியான உரிமைகளை பறித்து அவர்களை கழுவிலும் ஏற்றுகிறது. இவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Published on: February 11, 2013, 7:01 PM Views: 1043