Tamil Bayan Points

அதிகம் பேசாதீர் (?)

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on October 15, 2020 by

அதிகம் பேசாதீர் (?)

سنن الترمذى – مكنز – (9 / 254)

2593 – حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ أَبِى ثَلْجٍ الْبَغْدَادِىُّ صَاحِبُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ حَفْصٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاطِبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تُكْثِرُوا الْكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الْكَلاَمِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ الْقَلْبُ الْقَاسِى

அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர்த்து அதிகமாகப் பேசாதீர்கள். இறை நினைவு அல்லாத அதிகமான வார்த்தைகள் உள்ளத்தை இறுகச் செய்துவிடும். அல்லாஹ்விடத்தில் மிகவும் தூரமானவர்கள் இறுகிய உள்ளம் உடையவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதீ (2593)

இதே செய்தி பைஹகீ அவர்களின் ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

شعب الإيمان – (7 / 28)

4600 – وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى الصَّيْدَلَانِيُّ، نا إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ، نا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ شَقِيقٍ، نا عَلِيُّ بْنُ حَفْصٍ الْمَدَايِنِيُّ، نا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ قَسْوَةُ الْقَلْبِ، وَإِنَّ أَبَعْدَ النَّاسِ مِنَ اللهِ الْقَلْبُ الْقَاسِي “،

இந்த இரண்டு செய்திகளிலும் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் யார்? இவரின் நம்பகத்தன்மை என்ன என்ற விவரங்கள் இல்லை. நபிமொழியில் இடம்பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர் என்பது உறுதியானால்தான் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாக அமையும். அதில் ஒருவரின் நிலையோ அல்லது பலரின் நிலையோ தெரியவில்லை என்றால் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாக அமையாது.

تهذيب التهذيب ـ محقق – 1 / 116

236 – ت (الترمذي) ابراهيم بن عبدالله بن الحارث بن حاطب الجمحي  وقال ابن القطان لا يعرف حاله.

இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவரின் நிலை அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,பாகம்: 1, பக்கம்: 116

இந்த அறிவிப்பாளரை இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் அஸ்ஸிக்காத் (நம்பகமானவர்கள்) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டால் அவரின் நற்சான்றிதழை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அவர் நம்பகமானவர் என்பதற்கு புதிய ஒரு இலக்கணத்தை வைத்துள்ளார்.

الثقات ج: 1 ص: 13

فكل من ذكرته في كتابي هذا إذا تعرى خبره عن الخصال الخمس التي ذكرتها فهو عدل يجوز الاحتجاج بخبره لأن العدل من لم يفرف منه الجرح ضد التعديل فمن لم يعلم يجرح فهو عدل إذا لم يبين ضده إذ لم يكلف الناس من الناس معرفة ما غاب عنهم وإنما كلفوا الحكم بالظاهر من الأشياء غير المغيب عنهم جعلنا الله ممن أسبل عليه جلاليب الستر في الدنيا واتصل ذلك بالعفو عن جناياته

நம்பகமானவர் என்றால் அவரின் நம்பகத் தன்மைக்கு எதிராக எந்தக் கருத்தும் வந்திருக்கக் கூடாது. (நம்பகமானவர் என்பதற்கு) எதிராக கருத்து வராதவரை அவர் நம்பகமானவராவார்.

நூல்: அஸ்ஸிகாத், பாகம்: 1, பக்கம்: 13

நம்பகமானவர் என்று யாரும் சொல்லா விட்டாலும் அவரைப் பற்றி மோசமானவர் என்று கருத்து வராத வரை அவர் நம்பகமானவராவார் என்று இப்னு ஹிப்பான் அவர்களே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த விதி யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. ஹதீஸ்கலை அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. யார் என்றே அறியப்படாதவர்கள் கூட இப்னுஹிப்பான் அவர்களின் பார்வையில் நம்பகமானவராவார். இந்த விதியைப் பற்றி விமர்சனம் செய்யும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

لسان الميزان ج: 1 ص: 14

 قلت وهذا الذي ذهب اليه بن حبان من ان الرجل إذا انتفت جهالة عينه كان على العدالة الى ان يتبن جرحه مذهب عجيب والجمهور على خلافه وهذا هو مساك بن حبان في كتاب الثقات الذي الفه فإنه يذكر خلقا من نص عليهم أبو حاتم وغيره على انهم مجهولون وكان عند بن حبان ان جهالة العين ترتفع برواية واحد مشهور وهو مذهب شيخه بن خزيمة ولكن جهالة حاله باقية عند غيره

இந்த விதி ஆச்சரியமான ஒன்றாகும். இவரின் கருத்துக்கு மாற்றமாகவே பெரும்பான்மை அறிஞர்கள் உள்ளனர். இந்த விதியைத்தான் அஸ்ஸிகாத் என்ற நூலில் கடைபிடித்துள்ளார். இந்நூலில் அவர் குறிப்பிட்ட பெருந்தொகையினரை அபூஹாத்திம் அவர்கள், இவர்கள் எல்லாம் யாரென்றே அறியப்படாதவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 1, பக்கம்: 14

எனவே இப்னுஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் பட்டியலில் குறிப்பிட்டிருந்தாலும் அவரை வேறு யாரும் நம்பகமானவர் என்று கூறாததாலும் இப்னுல் கத்தான் அவர்கள் இவர் நிலை அறியப்படவில்லை என்று சொன்னதாலும், இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் யாரென அறியப்படாதவராகிறார். எனவே இவர் அறிவிக்கும் செய்தி பலவீனமானது என்பது உறுதியாகிறது.

மேலும் இந்தச் செய்தி அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர மற்ற பேச்சுகள் அதிகம் இருக்கக்கூடாது என்று குறிப்பிடுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திக்ரைத் தவிர மற்ற ஏனைய பேச்சுகள் அதிகம் பேசப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய சான்றுகளை நாம் பார்க்க முடிகிறது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (2 / 132)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا سِمَاكٌ ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى – وَاللَّفْظُ لَهُ – قَالَ أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِى يُصَلِّى فِيهِ الصُّبْحَ أَوِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِى أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ.

சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்று கூறினார்.

நூல்: முஸ்லிம் (1188)

பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சுமார் 45 நிமிடங்கள் இருக்கும் அதுவரை நபிகளார் முன்னிலையில் நபித்தோழர்கள் உலக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நபிகளார் அதைக் கேட்டுப் புன்னகைத்து அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

இதைப் போன்று பஜ்ர் தொழுகையின் சுன்னத் தொழுத பின்னர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (2 / 70)

1161- حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ ، حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى سُنَّةَ الْفَجْرِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً ، حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ.

ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் (ஃபஜ்ர்) தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள்.

நூல்: புகாரி (1161)

மனிதனின் பேச்சுகள் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் மார்க்கம் தடைசெய்யாததாக இருந்தால் பேசுவதில் குற்றம் இல்லை.

ஒருவர் தினமும் பத்து மணிநேரம் வியாபாரம் செய்கிறார் என்றால் அவர் வியாபரம் தொடர்பான பேச்சுக்களையே பேச வேண்டிவரும். அவ்வாறு பேசுவதால் அவரின் உள்ளம் இறுகிப் போகாது. வியாபாரத்தில் பொய், ஏமாற்றுதல் செய்தால் அதற்கு அவர் குற்றம் பிடிக்கப்படுவார். எனவே மார்க்கம் தடைசெய்த வார்த்தைகள் பேசாமல் மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு பேசினால் குற்றம் வராது.