03) திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்து கொள்வது
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணை கற்பித்தல் என்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் எடுத்துக் காட்டும்போது சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று சொல்பவர்களும் சில குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.
அதாவது சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது என்பதற்கு ஆதாரம் இருப்பது போல் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கும் ஆதாரம் உண்டு என்பது போன்ற குழப்பம் இதனால் மக்களுக்கு ஏற்படும்.
திருக்குர்ஆன் ஒருக்காலும் முரண்பட்ட இரண்டு கருத்துக்களைச் சொல்லாது.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்காது என்பதுதான் இறைவேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
முரண்பாடு இருப்பது போல் நமக்குத் தோன்றினால் அது நம்முடைய சிந்திக்கும் தன்மையில் ஏற்பட்ட குறைபாடாகத் தான் இருக்க முடியும். இதனால் தான் இவ்வசனத்தில் சிந்திக்க மாட்டீர்களா? என்றும் சிந்தித்தால் முரண்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
புரிந்து கொள்வதில் சிலருக்குத் தெளிவில்லாத காரணத்தால் தான் முரண்பட்ட இரு கருத்துக்களுக்கும் திருக்குர்ஆன் இடம் தருவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ முரண்பாடு உள்ளது போல் தோன்றினால் அதை எப்படி சீர்படுத்திக் கொள்வது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்
இதற்குப் பொதுவான சில அடிப்படைகள் உள்ளன.
திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம். இம்மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அனைத்தையும் அறிந்த ஒருவனால் இந்த மார்க்கம் தரப்பட்டுள்ளது.
எதிரிகளாலும் நேர்மையானவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாக மக்களுக்கு இம்மார்க்கம் அருளப்பட்டது.
இப்படிப்பட்ட இந்த மார்க்கத்தில் முரண்பாடுகளோ, கிறுக்குத்தனங்களோ இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் திருக்குர்ஆனை அணுக வேண்டும்.
நாம் திருக்குர்ஆனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கிறோம். அந்த விளக்கம் அல்லாஹ்வின் தகுதிக்கு ஏற்ப அமைந்துள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த விளக்கத்தையும் திருக்குர்ஆனுக்குக் கொடுக்கக் கூடாது.
எந்த வசனத்தைப் புரிந்து கொள்வதாக இருந்தாலும் அதைச் சொன்னவனின் தகுதியையும், அவனது மகத்தான அறிவையும், ஆற்றலையும் கவனத்தில் கொண்டு அவனது அறிவாற்றலுக்கு ஏற்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக அல்லாஹ் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதர்களைப் படைத்தான். அதற்காகத் தான் மனிதர்களில் இருந்தே தூதர்களை அனுப்பினான். நான் எஜமான்; நீங்கள் அடிமைகள் என்பதுதான் ஒட்டு மொத்த திருகுர்ஆனின் சாரமாகும்.
ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் வணங்கலாம் என்று திசை திருப்பும் வகையில் இருந்தாலும் அப்படி அதை விளங்கக் கூடாது. அல்லாஹ் ஒரு போதும் தன்னைத் தவிர மற்ற யாரையும் வணங்குமாறு கூறவே மாட்டான் என்பதற்கு ஏற்ற விளக்கத்தைத் தான் எந்த வசனத்துக்கும் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக, இறைத்தூதர்களை மக்கள் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் சில அற்புதங்களைக் கொடுக்கிறான். அல்லாஹ்வால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்கள் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டதால் அவர்களுக்கும் அல்லாஹ்வைப் போன்ற ஆற்றல் உண்டு என்று விளங்கக் கூடாது. அப்படி விளங்கினால் அல்லாஹ்வுக்கே உள்ள தகுதியையும், அவனது தனிப்பெருமையையும் நாம் மறுத்தவர்களாக நேரும்.
இறைத்தூதர்களாக இல்லாத சில நல்லடியார்களிடமும் சில அதிசயங்கள் நிகழ்ந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்” என்று (மர்யம்) கூறினார். அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
இந்தச் சம்பவத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, மர்யம் (அலை) அவர்களுக்கு அதிசயமான முறையில் அல்லாஹ்விடமிருந்து நேரடியாக உணவு கிடைத்தது என்பதால் பெரியார்களிடம் கேட்டால் தருவார்கள் என்று விளங்கக் கூடாது.
குர்ஆனில் சொல்லப்பட்ட எந்தச் சம்பவமாக இருந்தாலும், லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் அடிப்படைக்கு உட்பட்டுத்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். அதற்கு எதிராக விளக்கம் கொடுக்கக் கூடாது.
திருக்குர்ஆனை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைச் சில உதாரணங்கள் மூலம் இன்னும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
பொதுவான அர்த்தம் தரும் சொற்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான பொருளை நாம் கொடுக்க மாட்டோம். அதைச் சொல்பவர் யார் என்பதைப் பொருத்து பொருள் மாறுபடும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை ஏகத்துவம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அது போல் பரேலவிகள் கப்ருகளை வணங்குபவர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
பெரியார்களை மதித்து நடங்கள் என்ற சொல்லை தவ்ஹீத் ஜமாஅத்தும் சொல்கிறது. பரேலவிகளும் சொல்கிறார்கள். ஆனால் இருதரப்பினரும் வெவ்வேறு பொருளில் இதைக் கூறுகின்றனர்.
பெரியார்களை மதிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொன்னால் அதன் அர்த்தம் என்ன என்பதை இந்த ஜமாஅத்தின் நிலைபாட்டிற்கு ஏற்றவாறு புரிந்து கொள்கிறோம். பெரியார்களைத் தரக்குறைவாக பேசாதீர்கள். அவர்களிடம் கன்னியமாக நடந்து கொள்ளுங்கள் என்ற பொருளில் தான் இதை தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
கப்ரு வணக்கம் செய்வோர் இந்தச் சொல்லைக் கூறினால் அவர்களின் கொள்கைக்கு ஏற்ப அவர்களின் கூற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்து போனவர்களை வணங்க வேண்டும்; அவர்களிடம் பிரார்த்திக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்வதற்காகத் தான் இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வோம்.
இரு தரப்பினரின் கொள்கை, கோட்பாடு, அவர்களின் பிரச்சாரம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு தான் அதன் பொருளை நாம் தீர்மானிக்கிறோம். வெறும் வார்த்தையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொருள் செய்வதில்லை.
நபித்தோழர்களை மதிக்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொன்னால், நபித்தோழர்கள் செய்த தியாகங்கள், சமுதாயத்திற்கு சத்தியத்தைக் கொண்டு வந்து சேர்த்தது, கஷ்டமான காலத்தில் இஸ்லாத்தைத் தூய நோக்கில் ஏற்றுக் கொண்டது இவற்றையெல்லாம் மதித்து அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்று அர்த்தம் கொடுக்க வேண்டும்.
நபித்தோழர்களை மதிக்க வேண்டும் என்று மற்ற கொள்கையினர் சொன்னால், நபித்தோழர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னால் எவ்வாறு ஏற்றுக் கொள்வோமோ அது போல் நபித்தோழர்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்று விளங்கிக் கொள்கிறோம்.
வார்த்தை ஒன்று தான். யார் சொன்னார்கள் என்பதை வைத்து அதன் விளக்கத்தை பிரித்துப் புரிந்து கொள்கின்றோம்.
இதே போன்றுதான் சிஹ்ர், ஸியாரத் போன்றவற்றைப் பற்றி அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒன்றைச் சொல்வார்களானால் இது குறித்து ஒட்டுமொத்தமாக குர்ஆன், ஹதீஸ் என்ன சொல்கின்றது என்று பார்த்து அந்த கொள்கைக்கு ஏற்றவாறுதான் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தமாக திருக்குர்ஆன் எந்தக் கொள்கையை முன்வைக்கிறதோ அந்தக் கொள்கைக்கு மாற்றமாகப் பொருள் கொள்ளும் வகையில் ஒரு வசனம் நமக்குத் தெரிந்தால் அவ்வாறு பொருள் கொள்ளாமல் ஒட்டு மொத்த குர்ஆனிலிருந்து விளங்கும் கொள்கைக்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்குக் கொடுக்க வேண்டும். இது குர்ஆனைச் சரியாக புரிந்து கொள்ளவதற்குரிய முக்கிய வழிமுறையாகும்.
அதுபோல் சில ஹதீஸ்கள் ஒட்டு மொத்த குர்ஆன் முன்வைக்கும் கொள்கைக்கு மாற்றமாக அமைந்திருக்கின்றன. எந்த வகையிலும் குர்ஆனுடன் ஒத்துப் போகும் வகையில் விளக்கம் கொடுக்க முடியாமல் அவை இருக்கும். அப்போது என்ன செய்வது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள் குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.
இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அனைத்து நபித்தோழர்களும் அது இறைவேதம் என்பதற்குச் சாட்சிகளாக உள்ளனர்.
திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி “இது என் இறைவனிடமிருந்து வந்தது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒட்டுமொத்த நபித்தோழர்களும் சாட்சிகளாக இருந்தனர். எழுத்து வடிவில் பதிவு செய்தனர். பலர் மனனம் செய்தனர்.
ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்.
ஒட்டு மொத்த சமுதாயமே சாட்சி கூறுவதும், ஓரிருவர் சாட்சி கூறுவதும் சமமானதாக ஆகாது.
எவ்வளவு நம்பகமானவர்கள் என்றாலும் ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மட்டுமின்றி அதற்கு அடுத்த காலத்து ஒட்டுமொத்த மக்களும் “இதுதான் குர்ஆன்” என்று நபித்தோழர்கள் சொன்னதாக அறிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள அனைவரும் இதுபோல் அறிவிக்கின்றனர்.
ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன.
எனவே திருக்குர்ஆன் விஷயத்தில் கடுகளவு கூட சந்தேகம் வராது. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இந்த நிலை கிடையாது.
ஆனாலும் நபித்தோழர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அவற்றை ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனுடன் மோதாத வரை இத்தகைய செய்திகளில் சந்தேகம் கொள்ளக் கூடாது. ஒரு ஹதீஸ் திருக்குர்ஆனுடன் மோதும்போது “இந்த அறிவிப்பில் எங்கோ தவறு நடந்துள்ளது” என்று முடிவு செய்து குர்ஆனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நபித்தோழர்கள் அறைகுறையாகக் கேட்டதன் மூலம், அல்லது தவறாகப் புரிந்து கொண்டதன் மூலம் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். அல்லது நபித்தோழர்களிடம் கேட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு நிகழ்ந்திருக்கலாம். அல்லது அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரிடம் தவறு ஏற்பட்டிருக்கலாம்.
ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்று குர்ஆனை மறுத்து விடக்கூடாது. மாறாக குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நபிமொழி அல்ல என்று மறுக்க வேண்டும்.
அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. இதனை அல்லாஹ்வுடைய தூதரே சொல்லி விட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெயரால் சொல்லப்படும் செய்திகளில் பொய்யானவை கலந்து விடும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இங்கே விளக்குகிறார்கள்.
எந்தச் செய்தியைக் கேட்கும் போது இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அது போன்ற செய்திகளைச் சொல்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள். எந்தச் செய்தியைச் செவியுறும் போது தக்க காரணங்களுடன் ஒருவரது மனசாட்சி அதை வெறுக்குமோ, அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவரது மனசாட்சிக்குத் தோன்றுமோ அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதது; அவர்கள் செய்யாதது என்பதுதான் அந்த வழிமுறை என்று தெளிவாக விளக்கி விட்டார்கள்.
அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.
குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழுவது என்றால் என்ன? ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது பல வசனங்களுக்கு முரணாகத் தெரிகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும் உள்ளது. மாற்றமாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும் என்று நம்புவது தான் குருடர்களாக செவிடர்களாக விழுவது என்பதன் கருத்தாக இருக்க முடியும்.
பல வசனங்களுக்கு முரணாக உள்ளதால் முரணில்லாத வகையில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்காத வகையில் பொருள் கொள்பவர்கள் தான் குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழாதவர்கள்.
நமது வசனங்களை வளைப்போரும், இந்த அறிவுரை தங்களிடம் வந்த போது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்திட முடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனா? அல்லது கியாமத் நாளில் அச்சமற்றவனாக வருபவனா? நீங்கள் நினைத்ததைச் செய்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கும் வேதம். இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.
திருக்குர்ஆனில் முரண்பாடுகளும் இருக்காது, தவறும் இருக்காது என்று இவ்வசனங்கள் அடித்துச் சொல்கின்றன.
எனவே குர்ஆனில் முரண்பாடும், தவறும் இருக்கிறது என்ற வகையில் நமது நம்பிக்கை இருக்கக் கூடாது.
திருக்குர்ஆனில் தவறு இருக்கிறதென்று ஒரு ஹதீஸ் வருமானால் அது ஹதீஸ் கிடையாது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டும். அவர்கள் பெயரைச் சொல்லி தவறாக வந்துள்ளது என்று எண்ண வேண்டும்.
உதாரணத்துக்கு இது போல் அமைந்த சில ஹதீஸ்களைப் பார்ப்போம்.