தூங்குவதின் ஒழுங்குகள் – பயான் குறிப்புகள்
كتاب آداب النوم
தூக்கம், சாய்ந்து படுத்தல், அமர்தல், சபை, நண்பர்கள், கனவுகள் ஆகியவைகளின் ஒழுக்கங்கள்.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, “அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த’’ என்று ஓதுவார்கள்.
பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். எனது முகத்தை உன்னை நோக்கித் திருப்பினேன். எனது காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன் நபியையும் நான் நம்பினேன்.
நூல்: புகாரி (6315)
புகாரி அவர்கள் ஒழுக்கங்கள் எனும் பாடத்தில் இவ்வாசகத்துடன் இதை அறிவித்துள்ளார்.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நீ படுக்கைக்கு சென்றால் தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்து கொள். பிறகு உன் வலப்பக்கமாக சாய்ந்து உறங்கு பிறகு மேற்கண்ட துஆ இடம் பெற்றுள்ளது. இதை (இந்த பிரார்த்தனையை) உன் கடைசி சொல்லாக ஆக்கி கொள்“ என்று இதில் இடம் பெற்றுள்ளது.
நூல்கள்: புகாரி (247), முஸ்லிம் (5249)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். பஜ்ருடைய நேரம் வந்து விட்டால் சுருக்கமாக (ஃபஜ்ருடைய முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு பாங்கு சொல்பவர் வந்து அவர்களை அழைக்கும் வரை வலப்புறமாக சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
நூல்கள்: புகாரி (6310), முஸ்லிம் (1340)
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு சென்றால் தமது (வலக்) கையைத் தம்முடைய (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்து (உறங்கு)வார்கள். பிறகு, “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’’ இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன் என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழும்போது “அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாத்தனா வஇலைஹின் நுஷூர்’’ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும் அவனிடமே செல்லவேண்டியுள்ளது“ என்று கூறுவார்கள்.
நூல்: புகாரி (6314)
என் தந்தை தஹ்ஃபா பின் கைஸ் (ரலி) கூறினார்கள்: நான் பள்ளிவாசலில் ஒருக்களித்து குப்புறப்படுத்திருந்தேன். அப்போது ஒருவர் தமது காலால் என்னை அசைத்து “இது (குப்புறப்படுத்தல்) அல்லாஹ்வை கோபமுறச் செய்யும் படுக்கையாகும்“ என்று கூறினார். உடனே நான் (அது யார் என்று?) பார்த்தேன் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான்.
அறிவிப்பவர்: யஈஷ் பின் தஹ்ஃபா (ரலி), நூல்: அபூதாவுத் (4383)
அபூதாவுத் இதை ஆதாரப்பூர்மான அறிவிப்பாளர் தொடருடன் அறிவித்துள்ளார்.
குறிப்பு: இந்த அறிவிப்பில் பல குளறுபடிகளும் மற்றும் நுணுக்கமான குறைபாடுகள் இருப்பதால், இது பலவீனமான செய்தியாகும்.
“யார் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் இருக்கையில் அமர்வாரோ அது அல்லாஹ்விடமிருந்து அவருக்கு கைசேதமாக ஆகிவிடும். யார் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் ஒருக்களித்து படுத்துறங்குவாரோ அது அல்லாஹ்விடமிருந்து அவருக்கு கைசேதமாக ஆகிவிடும்.“ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவுத் (4215)
குறிப்பு: இப்னு அஜ்லான் அவர்கள் ஸயீத் அல் மக்புரி வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில் குழப்பம் உள்ளது என்று அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். இந்த செய்தி அந்த வகையில் உள்ளதாகும்.
باب جواز الاستلقاء على القفا
ووضع إحدى الرجلين على الأخرى إذا لم يَخف انكشاف العورة وجواز القعود متربعاً ومحتبياً
மறைவிடம் தெரியாத வகையில் கால் மீது கால் வைத்து மல்லாந்து படுப்பது அனுதிக்கப்பட்டுள்ளது. சம்மணமிட்டு அமர்வதற்கும் குத்தவைத்து அமர்வதற்கும் அனுமதி உண்டு.
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கால் மீது கால் வைத்து பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் பார்த்தேன்.
நூல்கள்: புகாரி (6287), முஸ்லிம் (4266)
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகை தொழுது விட்டு சூரியன் நன்கு உதிக்கும் வரை (தொழுத) இடத்திலே சம்மணமிட்டு அமர்ந்திருப்பார்கள்.
நூல்: அபூதாவுத் (4210)
இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதை சரியான அறிவிப்பாளர் தொடருடன் அபூதாவுத் உள்ளிட்ட அறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
குறிப்பு: முஸ்லிமில் ( 1188) ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் முற்றத்தில் கைகளை காலில் கட்டிக் கொண்டு இவ்வாறு (குத்தவைத்து) அமர்ந்திருந்ததை கண்டேன் என்று தம் கைகளால் செய்து காட்டினார்கள்.
நூல்: புகாரி (6272)
நபி (ஸல்) அவர்கள் கைகளை காலில் கட்டிக் கொண்டு (குத்தவைத்து) அமர்ந்திருந்ததை கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) மிகவும் பணிவுடன் அமர்ந்திருப்பதை பார்த்த போது நான் உள்ளச்சத்தால் நடுங்கிவிட்டேன்.
அறிவிப்பவர்: கைலா பின்த் மக்ரமா (ரலி), நூல்கள்: அபூதாவுத் (4207), திர்மிதீ (512)
وعنِ الشَّريد بن سُوَيْدٍ رضي الله عنه قال: مر بي رسولُ الله صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَأنا جَالس هكذا وَقَدْ وَضَعتُ يَديِ اليُسْرَى خَلْفَ ظَهْرِي وَاتَّكأْتُ عَلَى إليْة يَدِي فقال: أتقْعُدُ قِعْدةَ المَغضُوبِ عَلَيهْمْ – رواه أبو داود بإسناد صحيح ٍ.
ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். என் இடது கையை முதுகுக்கு பின்னால் வைத்து கையை ஊன்றி அமர்ந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “சபிக்கப்பட்டவர்கள் அமர்வதை போன்று நீ அமர்ந்திருக்கிறாயா?“ என்று (கண்டிக்கும் விதமாக) கூறினார்கள்.
நூல்: அபூதாவுத் (4208)
ஆதாரப்பூர்மான அறிவிப்பாளர் தொடருடன் அபூதாவுத் இதை அறிவித்துள்ளார்.