பகுத்தறிவுக்கு எதிரான மார்க்கமா இஸ்லாம்?
இஸ்லாத்தின் சத்திய போதனைகளை எவ்வித சமரசமுமின்றி மக்கள் மத்தியில் எடுத்தியம்பி வருகின்றது.நமது இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட பலர் நம்மீது பல அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவ்வாறு நம்மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமான ஒன்றுதான், “இவர்கள் பகுத்தறிவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்; பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கிறோம் என்று சொல்லி இஸ்லாத்தை மறுக்கின்றனர்; திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்” என்ற குற்றச்சாட்டாகும்.இவ்வாறு நம்மீது இந்த அவதூறை இவர்கள் சுமத்தக் காரணம் இஸ்லாத்தின் அடிப்படை அகீதா குறித்தும், திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் குறித்தும் இவர்கள் முழுமையாக அறியாததுதான்.பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திப்பது இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட ஒரு செயல் போல இவர்கள் சித்தரிக்கின்றனர்.
பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திப்பது பாவச்செயல் என்பதுபோல இவர்கள் பில்டப் கொடுப்பதால்தான் நாம் திருக்குர்ஆனை இழிவுபடுத்துவதாக நம்மீது அவதூறு கூறுகின்றனர்.ஆனால் உண்மை என்ன தெரியுமா? பகுத்தறிவுப்பூர்வமாக எதையெல்லாம் இஸ்லாம் சிந்திக்கச் சொல்லியுள்ளதோ அவற்றையெல்லாம் பகுத்தறிவுப்பூர்வமாக சிந்தித்து அறியும் அறிவுதான் திருக்குர்ஆன் கூறும் அறிவாகும்.திருக்குர்ஆன் எந்த வழியில் நின்று நம்மை வழிநடத்துகின்றதோ அந்த வழியைப் பின்பற்றி, திருக்குர்ஆன் கூறும் அறிவின் பிரகாரம் சிந்தித்து, திருக்குர்ஆனோடு நேரடியாக முரண்படும் ஒரு கட்டுக்கதையை நாம் பொய் என்று மறுத்தால் அதற்கு நம்மை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம் என்ன தெரியுமா?இப்படித்தான் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் திருக்குர்ஆனை மறுக்கின்றார்கள்; ஹதீஸ்களை மறுக்கின்றார்கள் என்று நம்மீது அவதூறை இட்டுக்கட்டுகின்றனர்.
ஆனால் குர்ஆன் முழுவதும் நாம் புரட்டிப் பார்த்தோமேயானால் அறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லியும், தர்க்க ரீதியாக – லாஜிக் பிரகாரம் சிந்திக்கச் சொல்லியும் அல்லாஹ் பல இடங்களில் கட்டளையிடுகின்றான்.அவ்வாறு லாஜிக் பிரகாரம் சிந்திப்பது நமக்கு இறைவன் இடக்கூடிய கட்டளையாகும்.இதோ வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! (அல்குர்ஆன்: 46:4)➚
மேற்கண்ட வசனத்தை ஒன்றுக்குப் பலதடவை வாசித்துப் பாருங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் கூடாது என்பதற்கு அல்லாஹ் பகுத்தறிவுப் பூர்வமாக எடுத்து வைக்கும் வாதத்தைப் பாருங்கள்.இதற்கு முன்பு உள்ள வேதத்திலிருந்து ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் அல்லது அறிவுச்சான்றைக் கொண்டு வாருங்கள்.அறிவிப்பூர்வமாகச் சிந்தித்தாலே ஒரேயொரு இறைவன் தான் நம்மைப் படைத்திருக்க முடியும் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம். இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்பது.
இதைத்தான் திருக்குர்ஆன் கூறும் அறிவு என்கிறோம்.இப்ராஹீம் யூதரா? கிறித்தவரா?இப்ராஹீம் (அலை) அவர்கள் யூதர் என்று யூத மதத்தைச் சேர்ந்தவர்களும், இல்லை, அவர் கிறித்தவர் என்று கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் வாதிட்டு வந்தனர்.இந்த தருணத்தில் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை அருள்கின்றான்.வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? தவ்ராத்தும், இஞ்சீலும் அவருக்குப் பிறகே அருளப்பட்டன. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன்: 3:65)➚
இப்ராஹீம் (அலை) அவர்கள் யூதரும் இல்லை; அவர் கிறித்தவரும் இல்லை என்பதை நிரூபிக்க அல்லாஹ் தர்க்க ரீதியான அதாவது லாஜிக் பிரகாரம் ஒரு வாதத்தை எடுத்து வைக்கின்றான்.தவ்ராத்தும் இஞ்சீலும் அவருக்குப் பிறகு அருளப் பட்டிருக்கும் போது அவர் எப்படி யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்க முடியும் என்பதுதான் அல்லாஹ் எழுப்பும் லாஜிக் ரீதியான கேள்வி.இதை இன்னும் இலகுவாகப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைக் கூறலாம். இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களில் ஒருவரான காந்தி 1948ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கப்பட்டன.காந்தி அவர்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர் தான் என்று இப்போது திமுக மற்றும் அதிமுகவினர் சொன்னால் அது எப்படி அறிவற்ற வாதமாக இருக்குமோ அதுபோலத்தான் இந்த வாதமும்.காந்தி இறந்த பிறகுதான் திமுகவும், அதிமுகவும் உருவாகின எனும் போது காந்தி எப்படி திமுக உறுப்பினராகவோ அல்லது அதிமுக உறுப்பினராகவோ இருக்க முடியும்? இதுதான் லாஜிக் என்பது.இதைத்தான் பகுத்தறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவுவெடுப்பதற்கான ஒரு அளவுகோலாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
இப்படி சிந்திப்பதுதான் திருக்குர்ஆன் கூறும் அறிவு ஆகும்.யூதர்களே சாவதற்கு ஆசைப்படுங்கள் “அல்லாஹ்விடம் உள்ள மறுமை வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்!’’ என்று கூறுவீராக! அவர்கள் செய்த வினை காரணமாக ஒரு போதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன். மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப் படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுப்பதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
(அல்குர்ஆன்: 2:94-96)➚இந்த வசனத்தில் அல்லாஹ் யூதர்களுக்கு பகுத்தறிவுப்பூர்வமாக ஒரு அறைகூவல் விடுக்கின்றான்.யூதர்கள் தாங்கள் மரணித்துவிட்டால் எங்களுக்கு உடனே சொர்க்கம் என்று சொல்லி வந்தனர். அப்படியானால் ஏன் இந்த உலகத்தில் வாழ்கின்றீர்கள்; செத்ததும் உடனே சொர்க்கம் போய் விடலாமே! அப்படியானால் உடனே சாகுங்கள் என்று அல்லாஹ் தர்க்க ரீதியாக அவர்கள் சொல்வது பொய் என்பதைத் தெளிவுபடுத்துகின்றான்.
மறைவானவற்றின் திறவுகோல் நபிகளாரிடம் இல்லை:நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த அல்லாஹ் எடுத்து வைக்கும் தர்க்க ரீதியான ஆதாரத்தைப் பாருங்கள்: “அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!(அல்குர்ஆன்: 7:188)➚
மறைவானவற்றை அறியக்கூடிய ஞானம் எனக்கு இருந்திருந்தால் எந்தத் தீங்கும் எனக்கு வந்திருக்காதே! எனக்கும் பல துன்பங்கள் நிகழ்கின்றதென்றால் மறைவானது எனக்குத்தெரியாது என்றுதானே அர்த்தம் என இஸ்லாத்தின் அடிப்படை அகீதாவைப் புரிய வைப்பதற்கும் கூட அல்லாஹ் லாஜிக்கான வாதத்தை முன்வைக்கச் சொல்லி தனது தூதருக்குக் கட்டளையிடுகின்றான். அரபியல்லாதவர் அரபுக் குர்ஆனை கற்றுக் கொடுக்க முடியுமா?அதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் உயர்ந்த நடையானது அரபு காஃபிர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
எழுதப்படிக்கத் தெரியாத இந்த நபி இவ்வளவு உயர்ந்த இலக்கண நடையுடன் கூடிய திருக்குர்ஆனை ஓதிக்காட்டுவதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை. எனவே நபியின் மீது ஒரு அவதூறை இட்டுக்கட்டினார்கள். ஏதோ வேறு ஒரு பிரதேசத்திலிருந்து ஒரு நபர் இவருக்கு இந்தக் குர்ஆனை ஓதிக் காட்டுவதாக அவதூறு பரப்பினர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அல்லாஹ் கீழ்க்கண்டவாறு ஒரு லாஜிக்கான கேள்வியை, தர்க்க ரீதியாக முன் வைக்கின்றான்.“ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்’’ என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்.(அல்குர்ஆன்: 16:103)➚
யார் நபிகளாருக்கு இந்தச் செய்தியை சொல்லிக் கொடுப்பதாக இவர்கள் அவதூறு சொல்கிறார்களோ அவர் வேறு மொழிக்காரர்; அவருக்கு அரபியே தெரியாத நிலையில் அவர் எப்படி இவ்வளவு உயர்ந்த இலக்கண நடையில் உள்ள அரபி மொழியிலான குர்ஆனை நபிகளாருக்குக் கற்றுக் கொடுத்திருப்பார் என்பது குறித்து சிந்திக்க வேண்டாமா? என அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான்.அதோடு மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் முழுதும் நாம் புரட்டினால் பல இடங்களில் அல்லாஹ் இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகின்றான்.அல்லாஹ் தான் இந்த உலகைப் படைத்தான் என்பதற்கும் படைப்பினங்களை சிந்தித்துப் பார்த்து படைத்தவனின் வல்லமையை பகுத்தறிவுப்பூர்வமாக விளங்கச் சொல்லி அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
வானங்களையும், பூமியையும் படைத்திருப் பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். “எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’’ (என்று அவர்கள் கூறுவார்கள்)(அல்குர்ஆன்: 3:190-191)➚
இத்தகைய ஆற்றல் மிக்க இறைவனுக்கு ஈடு இணையில்லை என்பதைத்தான் அல்லாஹ் இங்கே பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லி கட்டளையிட்டுள்ளான்.ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். திருக்குர்ஆன் முழுவதுமே இதுபோன்ற லாஜிக்குகளால் நிறைந்து காணப்படுகின்றது.எனவே ஒரு செய்தி உண்மையா இல்லையா என்பதை பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லி திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.இதை விளங்காமல் தான் பலரும் ஏதோ நாம் நமது சுய அறிவைப் பயன்படுத்தி பகுத்தறிவு வாதம் பேசுவதாக நம்மீது அவதூறு சொல்லி வருகின்றனர்.மிகச்சரியாகச் சொல்வதாக இருந்தால் இது பகுத்தறிவல்ல; குர்ஆன் கூறும் அறிவு. இந்தக் குர்ஆன் கூறும் அறிவின் அடிப்படையில் அறிவுப்பூர்மாகச் சிந்தித்தால் உண்மை விளங்கும்.
மறைவானவற்றை நம்புவதில் பகுத்தறிவுக்கு வேலை இல்லைஅதே நேரத்தில் இங்கு நாம் முக்கியமான மற்றுமொரு செய்தியையும் கவனிக்க வேண்டும். அனைத்தையுமே பகுத்தறிவுப்பூர்வமாகச் சிந்திப் பதாக இருந்தால் சொர்க்கம் நரகம் உண்டு, மறுமை உணடு, விதி உண்டு என்பதையெல்லாம் எப்படி நம்பிக்கை கொள்வீர்கள் என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.இதுபோன்ற மறைவான செய்திகளை நம்புவதில் பகுத்தறிவைப் பயனபடுத்தமாட்டோம்; அவ்வாறு பயன்படுத்தக்கூடாது; ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.(அல்குர்ஆன்: 2:2-5)➚
மறைவானவற்றை முழுமையாக நம்பிக்கை கொள்வோமே தவிர அதில் கேள்வி எழுப்பமாட்டோம்.இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப் பதிலும், வஹீச் செய்தியைப் பின்பற்றுவதிலும் நாம் பகுத்தறிவுப்பூர்வமாகக் கேள்வி எழுப்புவதில்லை; அவ்வாறு கேள்வி எழுப்பக்கூடாது.செவியேற்றோம்; கட்டுப்பட்டோம் என்று சொல்லி முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்போம்.உளூ செய்ய தண்ணீர் இல்லாவிட்டால் தயம்மம் செய்யச் சொல்லி மார்க்கம் சொல்லிக் காட்டுகின்றது; அதில் நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி, ‘ஏன் மண்ணைத் தொட்டு தயம்மம் செய்ய வேண்டும்’ என கேட்பதில்லை.
அதுபோல கால் உறைக்கு மேலே தான் மஸஹ் செய்யச் சொல்லி நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்; காலுறைக்கு அடியில் பாதத்தில் தானே மஸஹ் செய்ய வேண்டும் என்று நாம் சொல்வதில்லை.உளூ செய்த பிறகு காற்றுப் பிரிந்தால் மறுபடியும் உளூ செய்ய வேண்டுமே தவிர, காற்றுப்பிரிந்த இடத்தைக் கழுவினால் போதாதா என்று நாம் கேள்வி எழுப்புவதில்லை.ஆக பகுத்தறிவை எந்த இடத்தில் பயன்படுத்தச் சொல்லி வஹீச் செய்தியில் இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அந்த இடங்களில் மட்டுமே பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்.
இதுதான் திருக்குர்ஆன் கூறும் அறிவு.பகுத்தறிவுக்கு எதிரான மார்க்கமல்ல இஸ்லாம். பகுத்தறிவுப்பூர்வமாக சிந்திக்கச் சொல்லி வழிகாட்டியதால் எழுச்சி கண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.