இரகசியமாகத் திருமணம் செய்யலாமா?
இரகசியமாகத் திருமணம் செய்யலாமா?
வலீமாவை திருமணத்தோடு சேர்த்து கொடுக்கலாமா?
திருமணம் செய்வதற்கு உற்றார் உறவினர் தேவையில்லை, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சாட்சி இருந்தால் போதும் என்று நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) திருமணம் செய்த போது அனைவருக்கும் வலீமா விருந்து கொடுக்கச் சொன்னார்கள். இதை திருமண அன்றே அனைவரையும் அழைத்துக் கொடுத்தால் செலவு, காலம் ஆகியவை குறையும். எனவே இவ்வாறு செய்யலாமா?
பதில்:
செலவு குறைந்த, எளிமையான திருமணத்தில் பரக்கத் இருக்கின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் அடிப்படையில் எளிமையாகத் திருமணம் நடத்த வேண்டும், வீண் விரயம் செய்யக் கூடாது என்றெல்லாம் நாம் கூறி வருவது உண்மை தான். அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. இரகசியத் திருமணம் செய்வது நபிவழியுமல்ல.
حدثنا عبد الله حدثني أبي ثنا هارون بن معروف قال عبد الله وسمعته أنا من هارون قال حدثنا عبد الله بن وهب قال حدثني عبد الله بن الأسود القرشي عن عامر بن عبد الله بن الزبير
திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி),(அஹ்மத்: 16175) ➚
திருமணத்தை பகிரங்கமாக அறிவிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் இரகசியத் திருமணம் கூடாது.
இரண்டு சாட்சிகளுடன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தமது மனைவியுடன் சென்றாலும் அவரைப் பற்றிய அவதூறுகள் பரவுவதற்கு அவரது செய்கை காரணமாகி விடும். இதற்குக் காரணம் திருமணத்தை அறிவிக்காமல் இரகசியமாகச் செய்தது தான். எனவே திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதும் என்று சொல்வது குறைந்தபட்ச தகுதி தானே தவிர, வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்பது இதன் பொருளல்ல.
தாங்கள் கூறுவது போல் திருமணம் முடிந்தவுடன் வலீமா விருந்தை மணமகன் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதனால் செலவு குறையும் என்றால் தாராளமாக அவ்வாறு செய்யலாம்.
திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ:
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னையும், ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), நான்அன்சாரிகளில் அதிக செல்வமுள்ளவன். எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகின்றேன். எனது இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகின்றீர் என்று பாரும். அவரை உமக்காக விவாகரத்துச் செய்கின்றேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்குத் திருமணம் முடித்துத் தருகின்றேன் என்று கூறினார். அப்போது நான், இது என்க்குத் தேவையில்லை. வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் இருக்கின்றதா? என்று கேட்டேன். அவர், கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது என்றார். நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும், நெய்யையும் (லாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ மணம் முடித்துவிட்டாயா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை? என்று கேட்டார்கள். ஓர்அன்சாரிப் பெண்ணை என்று நான் கூறினேன். எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம் என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக அளிப்பாயாக என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),(புகாரி: 2048) ➚
இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பார்த்து, திருமணம் முடித்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, வலீமா விருந்து கொடுக்கச் சொல்கின்றார்கள். ஆனால் அதே சமயம் திருமண ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே சில இடங்களில் விருந்தளிக்கப்படுகின்றது. இது வலீமா விருந்தாக ஆகாது. திருமண ஒப்பந்தம் முடிந்த பின்னர் அளிப்பது தான் வலீமா விருந்தாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.