இரு பெருநாட்களில் முஸ்லிம்கள் ஏன் மது அருந்துவதில்லை?
“தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 காலை 10 மணி முதல் ஏப்ரல் 19 இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்”
இது பத்திரிக்கை செய்தி!
சாதாரண காலங்களில் தண்ணீராகப் பாய்ந்தோடும் மதுவுக்குத் தேர்தல் காலத்தில் மட்டும் ஏனிந்த தடை? அரசு அதிகாரியின் இந்த உத்தரவு தெரிவிப்பது என்ன? இந்தியாவில் தேர்தல் காலத்தில் மக்கள் வாக்களிக்கும் போது சுயநினைவோடும் சுதந்தர சிந்தனையோடும் வாக்களிக்க வேண்டும் என்பது இதன் முதல் நோக்கமாகும்.
மது அருந்திய மக்களிடையே அடி, தடி, கலாட்டா ஏற்படுவது இயல்பு. அது கலகத்தில் போய் முடிந்து விடக்கூடாது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகி சுதந்தரமாக நடக்கும் தேர்தலுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது இரண்டாவது நோக்கமாகும்.
தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையம் அல்லது அரசு செய்யக்கூடிய காரியம், எரிவதைப் பிடுங்கி விட்டால் கொதிப்பது அடங்கி விடும் என்ற ரீதியில் மதுக்கடைகளை அடைப்பது தான்!
தேர்தலுக்கு மட்டும் மக்கள் சுதந்திரமாகச் சிந்தித்தால் போதுமா? தேர்தல் நாளில் மட்டும் கலகம் இல்லாமல் சுபிட்சமாக இருந்தால் போதுமா? மற்ற நாட்களில் எவன் எப்படிப் போனாலும் கவலையில்லை என்ற அடிப்படையில் மதுக்கடைகளைத் திறந்து வைப்பது ஒரு நல்ல அரசாங்கத்தின் செயலாக இருக்க முடியாது.
‘நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்ற அடிப்படையில் இப்போது அரசு உடனடியாக அவசர, அவசரமாகச் செய்ய வேண்டிய காரியம் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாமல் நிரந்தரமாக மது விற்பனைக்குத் தடை விதிப்பதாகும். அதுதான் கள்ளச் சாராய சாவுகளை மட்டுமின்றி, நல்ல (?) சாராயச் சாவுகளையும் தடுக்கும் வழிமுறையாகும்.
இதோ இந்திய ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த மாநில அரசுகளுக்கும் கண் கூடான சாட்சியாக 30 கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அண்மையில் அவர்களுக்கு இரு பெருநாட்கள் நடந்து முடிந்தன.
அதிலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரத்திலும், அருகில் உள்ள மாதவக்குறிச்சியிலும் கள்ளச்சாராயம் குடித்து, கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலம், முஸ்லிம்கள் ஈதுல் அள்ஹா பெருநாளைக் கொண்டாடி முடித்திருக்கின்ற காலமாகும். இந்தப் பெருநாள் காலத்தில் தங்கள் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக முஸ்லிம்கள் ஏன் நல்ல சாராயம் (?) விற்கப்படுகின்ற டாஸ்மாக் கடைகளுக்குச் செல்வதில்லை?
ஈதுல் ஃபித்ர் பெருநாளை முன்னிட்டு அல்லது ஈதுல் அள்ஹாவை முன்னிட்டு டாஸ்மாக் 600 கோடிக்கு விற்பனை என்று வேண்டாம், ஏன்? ஒரு பத்தாயிரம் அல்லது ஓர் ஆயிரம் ரூபாய்க்கு வழக்கத்தை விட விற்பனை அதிகம் என்று அரசு அறிவிப்பு வெளியிடாத காரணம் என்ன? அவர்கள் மது ஏன் அருந்துவதில்லை?
பெருநாட்கள் அல்லாமல் அவர்கள் வீட்டில் நடைபெறும் திருமணங்கள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் ஏன் மது பரிமாறுவதில்லை. துக்க வீடுகளிலும் மது பருகுவதில்லையே! ஏன்? முஸ்லிம்கள் மதுக்கடைகள் ஏன் நடத்துவதில்லை?
தமிழகத்தில் 5,329 சில்லறை விற்பனைக் கடைகள் இருக்கின்றன. இவற்றில் முஸ்லிம்கள் ஏன் முதலீடு செய்வதில்லை? அவற்றுடன் 3,240 மதுக்கூடங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் இவற்றில் பெருநாள் அன்று கூட்டம் கூட்டமாகக் கூடி உல்லாசமாக மது அருந்துவதில்லையே!
டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மதுபான ஆலைகளை அவர்கள் ஏன் நடத்துவதில்லை? இத்தனையும் வளங்கொழிக்கும் தொழில்துறைகள் என்று தெரிந்தும் இந்தத் துறையில் இறங்கவில்லையே ஏன்?
இந்தக் கேள்விகளை மத்திய, மாநில அரசுகள், நாட்டில் வாழும் சக குடிமக்கள் ஒரு நிமிடம் முஸ்லிம்களைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய கள்ளச் சாராய சாவுக்கு உரிய தீர்வு கிடைத்து விடும்.
ஒரு சில முஸ்லிம்கள் மது அருந்தலாம். அதை விதிவிலக்கு என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது முஸ்லிம் சமுதாய மக்களில் 99% சதவிகிதம் குடிகாரர்களைக் காண முடியாது! அதற்குக் காரணம் என்ன?
முஸ்லிம்களை வழிநடத்தும் திருக்குர்ஆன் இதற்கு முதல் காரணமாகும். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.
இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், சிலைகள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அறுவெறுக்கத்தக்க செயல்களாகும். எனவே அவற்றை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள். ஷைத்தான் மதுவின் மூலமும், சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையே பகையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி, அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவே நாடுகிறான். எனவே நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன்: 5:90)➚,91)
முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அகில உலக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனை இரண்டாவது காரணமாகும். திருக்குர்ஆன் வசனங்களைப் போன்று நபி அவர்களின் போதனையும் முஸ்லிம்களுக்கு வேத வாக்காகும்.
“போதை தரும் ஒவ்வொரு பொருளும் (முஸ்லிம்களுக்கு) விலக்கலாகும்”
(புகாரி: 4343) ➚
என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இது முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது. அதனால் அவர்கள் மதுவின் பக்கம் நெருங்குவதில்லை. மிக முக்கியமாக முஸ்லிம்கள் இறந்த பிறகு ஒரு வாழ்க்கை என்று நம்பிக்கைக் கொண்டவர்கள். இவ்வுலகில் மது அருந்தினால் மறுமையில் தாங்கள் மீண்டும் எழுப்பப்படும் போது தண்டிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை, அவர்கள் மதுவின் பக்கம் நெருங்காமல் இருப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமாகும்.
இறைத்தூதர் மது அருந்துவதை மட்டும் தடை செய்யவில்லை. மது விற்பனை செய்வதையும் தடை செய்தார்கள். முஹம்மது அவர்கள் ஹிஜிரி 8ஆம் ஆண்டு மக்காவை வெற்றிக் கொள்கின்றார்கள்.
மக்காவை வெற்றி கொண்டதும் அவர்கள் மதுபானம், செத்தப்பிராணிகள், பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றைத் தடை செய்தார்கள்.
(புகாரி: 2236) ➚
“மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளை யிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:
தூதர்களே! நல்லவற்றை உண்ணுங்கள்! நற்செயல் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் நன்கறிபவன். (23:51➚).
இறைநம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்திருப்பவற்றில் தூய்மையான வற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (2:172➚).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா” என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 1844) ➚
தடை செய்யப்பட்ட பொருள் மூலம் ஈட்டுகின்ற வருவாயிலிருந்து சாப்பிட்டால் தங்களது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற இறைத்தூதரின் இந்த எச்சரிக்கை அவர்களை உளவியல் ரீதியாக சாராய விற்பனை செய்வதை விட்டும் தடுத்து விடுகின்றது.
பிறர் உயிர் பறிக்கும் அளவுக்கு மதுவின் பாதிப்பு உள்ளதால் நாளை மறுமையில் மிகக் கடுமையாகத் தாங்கள் தண்டிக்கப்படுவோம்; அந்தப் பாவம் நம்மை சும்மா விடாது, நரகத்தில் தள்ளி விடும் என்ற அச்சம் அவர்களை மேலும் மது மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதை விட்டும் தடுத்து விடுகின்றது.
இந்தியாவில் வாழும் பிற சமுதாய மக்கள், முஸ்லிம்களைப் போன்று மறு உலகத்தை, மறுமை வாழ்க்கையை நம்பாத வரை மது மற்றும் போதைப் பொருளிலிருந்து அவர்களைக் காக்க முடியாது என்பது இஸ்லாத்தின் துல்லிய, தூய பார்வையாகும்.
இந்தியாவில் எந்தவிதமான தடையும் இல்லாமல் மது அருந்துவதற்குச் சுதந்தரம் இருந்தும் இரு பெருநாட்கள் போன்ற மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில், துக்க நேரங்களில் மதுவின் பக்கம் தலை காட்டாமல் இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணமாகும்.
மக்கா இஸ்லாமிய ஆட்சிக் குடையின் கீழ் வந்த மாத்திரத்தில் அவர்கள் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் விதித்த முதல் தடை மதுவுக்குத் தான். அன்று முதல் 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக மது விற்பனைக்கு அங்கு தடை நீடித்து வருகின்றது. தனி நபர்களோ அல்லது அரசாங்கமோ மது விற்பனை செய்யமாட்டார்கள்.
ஆனால் இந்தியாவில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசே மது விற்பனை செய்கின்றது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடில்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சாராய சாம்ராஜய சக்கரவர்த்திகளாக இருக்கின்றார்கள். கள்ளச் சாராயம் அன்றே கொல்லும். நல்லச் சாராயம் (?) நின்று கொல்லும். மொத்தத்தில் இரண்டு சாராயமும் உயிர்க்கொல்லி திரவம்! உயிர்க் கொல்லி திராவகம்! அப்படிப்பட்ட உயிர்க் கொல்லி திராவக வியாபாரத்தை அரசும் செய்யக்கூடாது, தனிநபர்களும் செய்யக்கூடாது. இந்த அடிப்படையில் மது விற்பனையைத் தடை செய்தாலே தவிர மதுவை ஒழிக்க முடியாது.
ஆரம்பத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு அமுலுக்கு ஒரு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்தது. 1971ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சி செய்த திமுக அரசின் முதல்வர் மு.கருணாநிதி அரசுக் கருவூலத்திற்கு வருவாய் வேண்டும் என்பதற்காக வேண்டி மதுவிலக்கை ரத்து செய்தார். அன்றிலிருந்து ஒரு தலைமுறை குடிக்க ஆரம்பித்தது. அதன் நீட்சி தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சம்பவமாகும். அதன் விளைவாக இதுவரையில் 69 பேர்கள் இறந்து விட்டார்கள். 150க்கு மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுவை ஜிப்மர் போன்ற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாவு நிகழ்ச்சிக்கு வந்தவரும் கள்ளச் சாராயம் குடித்து இறந்த நிகழ்ச்சி கொடுமையிலும் கொடுமையாகும். உயிர் பிழைத்து வீடு திரும்பியவர் மீண்டும் கள்ளச் சாராயம் குடிக்கின்றார் என்றால் மது வெறி மக்களிடம் எந்த அளவுக்கு ஊடுறுவி இருக்கின்றது என்பதை நாம் தெளிவாக உணரமுடிகின்றது.
1971ல் மதுவிலக்கை ரத்து செய்த அதே திமுக ஆட்சி பிந்திய நாட்களில் மதுவிலக்கை அமுல் செய்திருந்தாலும் தான் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக ஒரேயடியாக மது விற்பனையைத் தடை செய்து டாஸ்மாக்குகளை உடனே மூட வேண்டும். தனது கட்சிக்காரர்கள் நடத்தும் மதுபான ஆலைகளையும் மூடச் செய்ய வேண்டும். அவ்வாறு மூடிய பின் குடிகாரர்கள் மீண்டும் கள்ளச் சாராயத்தை நோக்கி நகரும் போது இரும்புக்கரம் கொண்டு அதை அடக்க வேண்டும். இதைத் தவிர்த்து குடிகாரர்களுக்கு அளிக்கும் 10 லட்சம் நிவாரணம், ஒரு நபர் ஆணையம் போன்றவை ஒருபோதும் தீர்வாகாது என்று தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.