நபியின் பரிந்துரை வேண்டுவது தவறா?
நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன?
பதில்:
இறைவா மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை செய்யும் முறை பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது.
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை பெரும் பாக்கியவான்களுக்குத் தான் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
ஆனால் நபிமொழிகளை ஆராயும் போது இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது என்பதையும் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும் பாவிகளுக்கே பரிந்துரை செய்வார்கள் என்பதையும் அறியலாம். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவாக அறிவிக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் பெரும்பாவம் புரிந்தவர்களுக்கே எனது பரிந்துரை உண்டு.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், (திர்மிதீ: 2359) ➚
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا أَبُو بَدْرٍ حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
எனது சமுதாயத்தில் பாதி நபர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பது அல்லது பரிந்துரை செய்வது (இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும்) தேர்வு செய்யும் உரிமை எனக்கு (இறைவனால்) வழங்கப்பட்டது. நான் பரிந்துரை செய்வதைத் தேர்வு செய்தேன். ஏனென்றால் அது தான் நிறைவானதாகவும் விசாலமானதாகவும் உள்ளது. அந்தப் பரிந்துரை இறையச்சமுள்ளவர்களுக்கு என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை நிச்சயமாக அது பாவக்கறை படிந்த பாவிகளுக்கே உரியது. அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி), (இப்னு மாஜா: 4301) ➚
மறுமையில் உயர்ந்த தகுதியைப் பெற்றவர்கள் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். ஆனால் நரகவாசிகள் பிறருடைய பரிந்துரை மூலம் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பின்வரும் செய்தி இதைத் தெளிவுபடுத்துகின்றது.
நம்பிக்கையாளர்கள் மட்டும் (அந்தப் பாலத்தைக் கடந்து) தப்பிச் செல்வார்கள். (அவர்களில்) தப்பிச் செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்து வரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).
பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறி எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள் மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக் கொண்டேயிருப்பார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), (முஸ்லிம்: 316) ➚
நல்லவர்கள் அனைவரும் சொர்க்கம் சென்ற பிறகு தான் நரகத்தில் உள்ளவர்களுக்காக பரிந்துரை நடைபெறும் என இந்தச் செய்தி தெளிவாக்க் கூறுகின்றது.
சிறிய அளவு ஈமான் உள்ளவர்களுக்குத் தான் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை தேவைப்படும். உயர்ந்த நிலையை அடைந்தவர்களுக்கு இந்தப் பரிந்துரை தேவைப்படாது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் “என் இறைவா! எவரது உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!” என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் “எவரது உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக” என்று மீண்டும் பிரார்த்திப்பேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), (புகாரி: 7509) ➚
நான் (மறுமையில் மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அப்போது, “செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்று சொல்வேன். அப்போது “செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் “அணுவளவு’ அல்லது “கடுகளவு’ இறை நம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்லப்படும்.
நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அதற்கு அவன், “செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), (புகாரி: 7510) ➚
மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவிகளுக்குத் தான் பரிந்துரை செய்வார்கள் என்று மேற்கண்ட செய்திகள் தெளிவாகக் கூறுகின்றன.
பாவிகளுக்குத் தான் பரிந்துரை உண்டு என்றாலும் நாம் மறுமையில் பாவிகள் பட்டியலில் சேர்வோமா? எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்வோமா என்பது நமக்குத் தெரியாது. நாம் பாவிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்ல முடியாமல் போனால் அப்போது நமக்கு நபிகள் நாயகத்தின் பரிந்துரை தேவைப்படும். எனவே யாருக்குப் பரிந்துரை தேவைப்படும் என்பதை அறிய முடியாததால் நமக்கு அந்த நிலை ஏற்பட்டால் நபியின் பரிந்துரை கிடைக்க வேண்டும் ஆசைப்படலாம். இப்படி நபித்தோழர்களும் ஆசைப்பட்டுள்ளனர்.
என்னுடைய இறைவன் எனது சமுதாயத்துக்கு நான் பரிந்துரை செய்வது அல்லது அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை சொர்க்கத்திற்குள் அனுப்புவது (இவ்விரண்டு விஷயங்களில் ஒன்றை) தேர்வு செய்யும் உரிமையை எனக்கு வழங்கினான். பரிந்துரையே அவர்களுக்கு விசாலமானது என்று நான் கருதி பரிந்துரை செய்வதை தேர்வு செய்துகொண்டேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அபூ மூசா (ரலி) அவர்களும் அவர்களுடன் வந்த ஒருவரும் அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய பரிந்துரைக்குரிய நபர்களில் எங்களையும் ஆக்குமாறு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அவ்விருவரும் நபித்தோழர்களிடம் (வந்து) நபியவர்கள் கூறிய இவ்விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களுடைய பரிந்துரைக்குரிய நபர்களில் அல்லாஹ் எங்களையும் ஆக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினர். நபியவர்கள் அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள். (இதை மற்ற) கூட்டத்தினர் (செவியுற்று) பொறாமை கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதிகமாக வரத் தொடங்கினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று யார் உறுதியுடன் கூறி மரணித்தாரோ அவர்கள் அனைவருக்கும் எனது பரிந்துரை உண்டு என்று தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி), (அஹ்மத்: 18892) ➚
நபியவர்களின் பரிந்துரை அவர்களின் பிரத்யேகப் பிரார்த்தனையால் தான் கிடைக்கும் என்று நபித்தோழர்கள் புரிந்துகொண்டனர். எனவே தான் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வரத்தொடங்கி விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை அவர்கள் பிரார்த்தனை செய்யாவிட்டாலும் ஏகத்துவக் கொள்கை உள்ளவர்களுக்கு கிடைக்கக் கூடியது என்று நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஏகத்துவக் கொள்கை இல்லாவிட்டால் அவருக்காக யாரும் பரிந்துரை செய்ய மாட்டார்கள். ஏகத்துவக் கொள்கையில் இருந்தால் அவர்கள் எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரை மூலம் சொர்க்கம் செல்வார்கள் என்ற விதி வகுக்கப்பட்டு நமக்கும் சொல்லப்பட்டு விட்டது.
எனவே தான் அனைவரும் பரிந்துரை வேண்டி வந்த போது அவ்வாறு செய்யாமல் ஏகத்துவத்தில் உள்ள அனைவருக்கும் பரிந்துரை உண்டு எனக் கூறி பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடித்து வைத்து விட்டார்கள்.
இதன் பின்னர் இறைவா எனக்கு நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனமாகும்.
எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத் தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.
மறுமைப் பேறுகளுக்காக துஆ செய்யக் கற்றுத் தந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!’ என்று கேட்குமாறு கற்றுத் தரவில்லை. அவ்வாறு யாரும் கேட்டு அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த்தாக்வும் ஆதாரம் இல்லை.
பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.
பொதுவாக சிறந்ததைத் தான் நாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். எடுத்த எடுப்பில் சொர்க்கம் செல்வது தான் சிறந்தது.
பரிந்துரை குறித்து தெளிவான விளக்கம் வருவதற்கு முன்னர் தான் நபித்தோழர்கள் அல்லாஹ்விடம் நீங்கள் எங்களுக்காக பரிந்துரைக்க துஆச் செய்யுங்கள் எனக் கேட்டனர். ஏகத்துவக் கொள்கை உள்ள அனைவருக்கும் என் பரிந்துரை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திவிட்ட பிறகு அதையே மீண்டும் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமானதாகும்.
உலக விஷயத்தில் நாம் விரும்புவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத்தராத்தை கேட்கலாம். ஆனால் மறுமை விஷயமாக செய்யும் எந்த துஆ வானாலும் எந்தக் கோரிக்கைஅயானலும் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ கற்றுத்தந்தால் தான் கேட்க வேண்டும். நம் இஷ்டப்படி கேட்கக் கூடாது.