யாஸீன் விளக்கவுரை-13

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
65 வது வசனம்

65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

(அல்குர்ஆன்: 36:65)

மறுமையில் அல்லாஹ்வின் விசாரணை முறையை இவ்வசனம் விளக்குகிறது. யாரும் தங்கள் நாவால் பதிலளிக்க முடியாது. மாறாக செயலாற்றிய உறுப்புகளே பதிலளிக்கும். வாய்க்கு முத்திரை இடப்படும். இதனால் மனிதர்கள் தங்கள் உறுப்புகளிடம் கேள்வியெழுப்புவார்கள்.

“எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். “ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள் !” என்று அவை கூறும்.

(அல்குர்ஆன்: 41:21) ➚.)

இதை பற்றி நபி (ஸல்) அவர்கள் விரிவாக விளக்குகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமைநாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேக மூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை” என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி,உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா?உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்க வில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம்” என்பான்.

இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை” என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான். பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த்தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா?

குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச்செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “ஆம், என் இறைவா!” என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?”என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை” என்பான்.

இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான். பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய்தேன்” என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்” என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்” என்று கூறுவான். அந்த மனிதன், தனக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும்.

அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து “பேசுங்கள்” என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5678).

உறுப்புகள் மட்டும்தான் மறுமையில் பேசுமா?

மேற்கண்ட 65வது வசனத்தில் வாய்களுக்கு முத்திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக சில வசனங்கள் உள்ளது.

66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

(அத்தியாயம் : 33 : 66.)

இது போன்று மேலும் சில வசனங்களில் மனிதர்கள் தங்கள் நாவாலும் பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே? வாய்களுக்கு பூட்டு போடப்பட்ட பிறகு எப்படி வாயால் பேசுவார்கள்? இது முரண்பாடாக உள்ளதே என்று சிலருக்கு தோன்றலாம். எனினும் இதற்கு தெளிவான பதில் உண்டு.

யாசீன் அத்தியாயத்தில் உள்ளது போன்று வாய்க்கு முத்திரையிடப்படுவது விசாரணையின ் போது மட்டும்தான். மற்ற நேரங்களில் அல்ல. ஏனெனில் அவனுடைய உறுப்புகளே அவனுக்கெதிராக சாட்சியம் சொல்வதை அவன் மறுக்கமுடியாது என்பதால் விசாரணையின் போது இந்த ஏற்பாடு. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் அவன் வாய் திறந்து பேசுவான்.

மறுமையில் ஏடு வழங்கப்படும் போது புலம்புதல்

மறுமையில் சொர்க்கமா? நரகமா? என தன்னுடைய முடிவை தெரிவிக்கும் ஏடு தனக்கு வழங்கப்படும் போது மனிதன் வாய் திறந்து பேசுவான்.

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் “எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே! எனக் கூறுவான்.

(அல்குர்ஆன்: 69:25), 26) ➚, 27, 28, 29.)

எனவே இது போன்ற நேரங்களில் மனிதனால் பேச இயலும் விசாரணையின் போதுதான் வாய்க்கு முத்திரையிடப்படும். இவ்விரண்டிற்குமிடையில் எந்த முரண்பாடும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

66 வது வசனம்

66. நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம். அப்போது பாதையை நோக்கி விரைவார்கள். அப்போது எப்படி அவர்கள் பார்க்க முடியும்?

(அல்குர்ஆன்: 36:66) ➚.)

இவ்வசனத்தில் “நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம்.” என்று அல்லாஹ் கூறுவது நேரடியான பொருளில் அல்ல. மாறாக கருத்து ரீதியிலாகும். அவனுடைய அறிவு கண்ணை எடுத்துவிட்டால் நல்வழியை அறிந்து நேர்வழியில் அவனால் செல்ல முடியாது. இதைத்தான் இவ்வசனம் குறிக்கிறது.

67 வது வசனம்

67. நாம் நாடியிருந்தால் இருந்த இடத்திலேயே அவர்களை உருமாற்றி இருப்போம். அதனால் அவர்கள் (முன்னே) செல்ல இயலாது. பின்னேயும் செல்ல மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 36:67) ➚.)

உருமாற்றம் குறித்த விளக்கம்

பொதுவாக உருமாற்றம் என்பது ஓர் தண்டனையாகும். மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டது போன்று அல்லாஹ் சிலரை உருமாற்றிவிட்டால் அதன் பிறகு எதையும் அவர்களால் அறியமுடியாது. இறைக்கட்டளையை மீறிய ஒரு கூட்டத்திற்கு அல்லாஹ் இதை தண்டனையாக வழங்கியுள்ளான்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர்.

அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்.)” எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறினோம்.

(அத்தியாயம் : 7 : 163,164,165,166.)

சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்று இறைவனின் புறத்திலிருந்து அச்சமுதாயத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது. இறைவனின் கட்டளையை மீறிய காரணத்தால் தண்டிக்கும் விதமாக குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்பட்டார்கள் என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.

உருமாற்றம் செய்யப்பட்டோருக்கு சந்ததி உண்டா?

அவ்வாறு உருமாற்றம் செய்யப்பட்டவர்களிடையே சந்ததி பெருகியதா? தற்போதுள்ள பன்றிகளிலும் குரங்குகளிலும் அவர்கள் உள்ளார்களா? என்ற கேள்வி எழலாம். பொதுவாக உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டால் அவர்களுக்கு சந்ததிகள் ஏற்படாது. இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததி களையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 5176)

எனவே இன்றைக்கு உள்ள பன்றிகளிலும் குரங்குகளிலும் உருமாற்றம் செய்யப்பட்டவை இல்லை. இவ்வாறு தான் நாடினால் உருமாற்றம் செய்திருப்பேன் என மக்களுக்கு இறைவன் எச்சரிக்கை விடுப்பதே 67 வது வசனம்.

68 வது வசனம்

68. நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

(அல்குர்ஆன்: 36:68) ➚.)

இறங்கு முகம்

மனிதனுக்கு வாழ்நாள் அதிகமாக வழங்கப்படும் போது படைப்பில் இறங்குமுகத்தை நோக்கி செல்வான். குழந்தை பருவத்தில் நம்மை வேறொருவர் கை பிடித்து அழைத்து செல்லும் நிலையில் இருப்போம். பிறகு இளமை பருவத்தில் தானாக செயல்படுவோம். பின்பு முதுமை பருவத்தில் மீண்டும் சிறு குழந்தை போன்று நம்மை யாரேனும் அழைத்து செல்லும் நிலைக்கு ஆளாவோம்.

தானாக நடக்க இயலாமல் கைத்தடி வைத்து நடக்கவும் செய்கிறோம். ஒவ்வொரு தேவைக்கும் வேறு யாரையாவது எதிர்பார்த்து காத்திருப்போம். மேலும் பேச்சின் நிலைகளும் மாறிவிடும். சீரான முறையில் பேசுவதற்கு இயலாமல் மிகவும் சிரமப்படுவோம். இவ்வாறு குழந்தை போன்று ஆகிவிடுவதை இவ்வசனம் இறங்குமுகம் என்று கூறுகிறது. இதை மற்றொரு வசனமும் விளக்குகிறது.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 16:70) ➚.)

சுயமாக செயல்பட முடியாத, தள்ளாத வயதேற்படும் நிலையை விட்டு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

சஅத்பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரிவந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற்.

பொருள்: இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். கருமினத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.

(புகாரி: 2822)

சிலர் தள்ளாத வயதில் தாமும் சிரமப்பட்டு பிறரையும் சிரமப்படுத்துவர். இதனால் பெற்ற பிள்ளைகள் கூட பெற்றோரை சிரமமாக நினைப்பார்கள். இது போன்று சிரமப்படுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு நாம் தேடவேண்டும்.

69 வது வசனம்

69. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை. இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 36:69) ➚.)

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மக்களுக்கு கூறும்போது சிலர் இது கவிதை என்று விமர்சித்தனர். அதற்குரிய பதிலை இந்த வசனத்தில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறுவது கவிதை அல்ல இது குர்ஆன்தான் என்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் கவிதை

கவிதை எனும் பெயரில் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.

(அத்தியாயம் : 26 : 224,225,226.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6154)

சீழ் சலத்தை விட மிகவும் அறுவறுப்பானதாக கவிதை கூறப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் அதிகமாக சினிமாவின் பாடல்களை கேட்கின்றனர். மேலும் மார்க்கத்தின் பார்வையின் இழிவாக கருதப்படுகின்ற மவ்லிது எனும் கவிதையை நன்மை எனக்கருதி ஓதி வருகின்றனர். நபி (ஸல்) அவர்களின் பெயரால் இவ்வாறு செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

மார்க்கத்திற்கு மாற்றமான கவிதைகள் மட்டும்தான் கூடாது இது அல்லாமல் நல்ல கருத்துக்களை தரக்கூடிய கவிதைகள் கூடும். இதை நபி (ஸல்) அவர்களும் அனுமதித்துள்ளார்கள்.

ஹூனைன் போரின் போது கவிதை பாடுதல்

அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு விட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மைதானா)?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “(ஆம், உண்மைதான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர் களாயிருந்தார்கள்.

நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். ஆகவே, முஸ்லிம்கள் (போர்க்களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதரோ பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.)

நான் நபி (ஸல்) அவர்களை தமது “பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “நான் இறைத் தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.

(புகாரி: 2864)

மேற்கண்ட ஹதீஸில் “நான் இறைத் தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்பதை குறிப்பதற்கு அரபியில் “அன நபிய்யுன் லா கதிப், அன இப்னு அப்தில் முத்தலிப்” என்று இரண்டு வாசகங்களின் இறுதியில் “ப்” என்ற எழுத்தை கொண்டு முடியும் வகையில் கவிதை வடிவில் கூறியுள்ளார்கள்.

மேலும் போரில் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கும் கவிதை வடிவில் ஆறுதல் கூறியுள்ளார்கள்.

ஜுன்தப்1 போது அவர்களது விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகின்ற ஒரு விரல் தானே? நீ அடைந்த(பழு) தெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

(புகாரி: 2802)

இச்செய்தியில் “நீ இரத்தம் சொட்டுகின்ற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு) தெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் தானே!” என்ற வாசகத்தை குறிப்பதற்கு அரபியில் “ஹல் அன்த்தி இல்லா இஸ்பஉன் தமீத்தி, வஃபீ சபீலில்லாஹி மா லகீத்தி” என்று இரண்டு வாசகங்களின் இறுதியிலும் “தி” என்று முடியும் வகையில் கவிதை வடிவில் கூறியுள்ளார்கள்.

இது போன்ற தீய அர்த்தங்கள் இல்லாத வார்த்தைகளை கவிதை வடிவில் படிப்பதை நபி (ஸல்) அவர்கள் எந்த முயற்சியும் இல்லாமல் இயல்பாகவே பாடியுள்ளார்கள். இஸ்லாத்தில் அனைத்து கவிதைகளுக்கும் தடையில்லை. நல்ல கவிதைகள் பாடுவது அனுதிக்கப்பட்டுள்ளது. தீய அர்த்தங்கள் கொண்டவைகளுக்கு மட்டும்தான் தடை உள்ளது என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.

70 வது வசனம்

70. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).

(அல்குர்ஆன்: 36:70)

படிப்பினை பெறுபவர்கள்தான் உயிருடன் உள்ளவர்கள்

உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காக குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்று இவ்வசனம் கூறுகிறது.

உயிருடன் உள்ளோரை தானே எச்சரிக்கை செய்யமுடியும்? என்று கருதலாம். இந்த குர்ஆனின் எச்சரிக்கை மூலம் யார் பயன்பெறுகிறார்களோ அவர்களே உயிருடன் உள்ளோர்க்கு சமம். மற்றோர் இறந்தவர்களுக்கு சமம் என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்தும் விதமாகவே இவ்வசனம் அமைந்துள்ளது.

பின்வரும் வசனங்கள் இவ்விளக்கத்தை உறுதி செய்கிறது.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:22) ➚.)

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது. குருடர்களின் வழி கேட்டை நீக்கி அவர்களுக்கு நேர் வழி காட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போர்க்கே நீர் கேட்கச் செய்வீர்!

(அல்குர்ஆன்: 27:80),81) ➚.)

மேற்கண்ட வசனங்களில் உயிருடன் உள்ளவர்கள் சிறப்பித்து கூறப்படுகிறார்கள். குறிப்பாக 27 வது அத்தியாயம் 81 வது வசனத்தில் “குருடர்களின் வழி கேட்டை நீக்கி அவர்களுக்கு நேர் வழி காட்டுபவராகவும் நீர் இல்லை.” என்ற வாசகம் கருத்து ரீதியாகவே கூறப்பட்டுள்ளது. உயிருடன் இருந்தும் தன் அறிவை முறையாக பயன்படுத்தாதவர்களை கருத்து குருடர்கள்.என்று கூறும் வழக்கமுண்டு. யாசீன் அத்தியாயத்தின் 70 வது வசனமும் அது போன்றதே.

இவ்வசனத்தில் மற்றொரு படிப்பினையும் உண்டு. இன்றைக்கு நம் சமுதாயத்தில் இறந்தவர்களுக்காக யாசீன் அத்தியாயத்தை ஓதும் வழக்கம் உண்டு. இறந்தவரின் தலைப்பகுதியில் அமர்ந்து கொண்டு ஓதுவார்கள். அத்தகையவர்கள் 70 வது வசனத்தை கவனிக்க வேண்டும். உயிருடன் உள்ளவர்களை எச்சரிப்பதற்காகவே இந்த குர்ஆனே அருளப்பட்டது. மேலும் உயிருடன் உள்ளோருக்கு மட்டும்தான் குர்ஆன் பயன்தரும் எனும் போது இறந்தவர்களுக்காக இந்த அத்தியாயத்தை ஓதுவது ஏற்புடையதல்ல. அதற்கு ஆதாரமும் இல்லை.

குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க வேண்டும்

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 70 வது வசனத்தில் உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்கு இந்த குர்ஆனை அருளியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை பலன் தர வேண்டுமென்றால் அதை பொருளுணர்ந்து படிக்க வேண்டும். அரபியில் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடாமல் அதன் பொருளையும் சிந்திக்கவேண்டும். உதாரணமாக பின்வரும் வசனத்தை காணலாம்.

(முஹம்மதே!)வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன்: 29:45) ➚.)

இவ்வசனம் தொழுகை தீமையை விட்டு தடுக்கும் என்று கூறுகிறது.

இதை முறையாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் தொழுகையை சாதாரண உடற்பயிற்சி என்று நினைத்து தொழுதால் அவருக்கு பயன்தராது. அனைத்து தொழுகைகளிலும் நாம் ஓதுகிற குர்ஆன் வசனங்களை சிந்திக்க வேண்டும். இமாமை பின்பற்றி தொழும்போது அவர் ஓதும் வசனங்களையும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் என்ன போதிக்கின்றது என்பதை அறியும் போது தான் தொழுகை மானக்கேடானவற்றை தடுக்கும்.

குர்ஆனை அதன் பொருளுணர்ந்து படித்து செயல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையும் 70வது வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

தண்டனை வழங்குவதில் நேர்மை

மேலும் யாசீன் அத்தியாயத்தின் 70 வது வசனத்தில் ” (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).” என்று உள்ளது.

இறைநிராகரிப்பாளர்களை எந்த சான்றுமின்றி தண்டித்தால் அது அநீதியிழைத்ததை போன்று ஆகிவிடும். இதை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடை அல்லாஹ் செய்துள்ளான்.

அல்லாஹ்வை மறுத்தாலோ அல்லது இணைவைத்தாலோ மறுமையில் தண்டிக்கப்படுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இதை படித்த பிறகும் ஒருவன் இத்தீமையை செய்யும் போது அது தண்டனைக்குரிய குற்றமாகி விடுகிறது. இறைவனின் தண்டனைக்கு தன்னை தகுதியாக்கி விடுகிறான்.

உதாரணமாக அரசாங்கம் ஒரு சட்டத்தை விதித்த பிறகு ஒருவன் அதை மீறிவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு பின் இவனை தண்டிப்பதற்கு அரசாங்கம் காரணமல்ல. இவனுடைய அலட்சியமும் தவறுமே காரணம்.

இவ்வாறே இறைமறுப்பாளர்கள் குர்ஆனை படித்த பிறகும் மீறும் போது அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு தகுதியாகி விடுகிறார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

71 வது வசனம்

71. நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?

(அல்குர்ஆன்: 36:71) ➚.)

அல்லாஹ்வின் கரத்தால் படைக்கப்பட்ட ஆதம் நபி

இவ்வசனத்தின் துவக்கத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதை படிக்கும் போது பின்வரும் சந்தேகம் நமக்கு ஏற்படலாம்.

ஆதம் நபியவர்களைதான் அல்லாஹ் தன் கைகளால் படைத்துள்ளான். ஆனால் இவ்வசனத்தில் கைகளால் உருவாக்கிய கால்நடைகள் என்று கூறப்படுகிறதே என்று தோன்றலாம். இதற்கான பதிலை அறிந்து கொள்ள வேண்டும். ஆதம் நபியவர்களை மட்டும்தான் அல்லாஹ் தன் கைகளால் படைத்துள்ளான்.

“இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

(அல்குர்ஆன்: 38:75) ➚.)

ஆதம் நபியவர்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்ததை இவ்வசனம் உறுதிபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்களும் இதை உறுதிபடுத்துகிறார்கள்.

உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்.

உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்).

(புகாரி: 3340)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச்செய்த ஆதம் நீங்கள்தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளை தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர்தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்” என்று பதிலளித்தார்கள். “அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “ஆம்” என்றார்கள்.

“அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?” என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள். (இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

ஸஹீஹ்(முஸ்லிம்: 5159).

இநத் சான்றுகளின் மூலம் ஆதம் அலை அவர்களே இறைவனின் கரத்தால் படைக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்.

எனவே யாசீன் அத்தியாயத்தின் 71 வது வசனத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” கூறப்படுவது பேச்சு வழக்கில் உள்ளதாகும். இதை போன்று பல வசனங்கள் உண்டு.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், அவர்கள் திருந்துவதற்காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது.

(அல்குர்ஆன்: 30:41)

இதில் மனிதர்களின் கரங்கள் செய்தவை என்று கூறப்பட்டிருந்தாலும் அனைத்து உறுப்புகளும் செய்த தீமைகளையும் இது குறிக்கும். கைகள் செய்ததை மட்டும் குறிக்காது. இருப்பினும் கைகள் செய்தவை என்று கூறுவது பேச்சு வழக்காகும்.

30. உங்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் உங்கள் கைகள் செய்ததன் காரணத்தினால் ஏற்பட்டது. அவன் அதிகமானவற்றை மன்னிக்கிறான்.

அத்தியாயம் 42 : 30

இவ்வசனத்திலும் “கைகள் செய்ததன் காரணமாக” என்ற ு கூறும் போது நாவு, கால்கள், கண்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் என்றுதான் நாம் புரிந்து கொள்வோம்.

இது போன்றே யாசீன் அத்தியாயத்தின் 71 வது வசனத்தில் “நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம்” என்று கூறப்படுவதையும் அல்லாஹ்வின் ஆற்றலால் படைக்கப்பட்டது என்று இலக்கியமாக புரிந்து கொள்ளவேண்டும்.

72 வது வசனம்

72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.

(அல்குர்ஆன்: 36:72)

இவ்வசனத்தின் துவக்கத்தில் “அவற்றை (கால்நடைகளை) அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம்.” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதர்களுக்கு கால்நடைகள் வசப்படுத்துவது மிகப்பெரும் பாக்கியமாகும். இது போன்று மனிதர்களை வசப்படுத்து முடியாது.

மனிதனை விட ஆற்றல் அதிகமாக உள்ள மாடு, யானை போன்ற பல்வேறு உயிரினங்கள் மனிதர்களுக்கு கட்டுப்படுகிறது. இல்லாவிட்டால் மிகப்பெரும் சிரமத்திற்கு மனிதர்கள் ஆளாகிவிடுவார்கள்.

சுமை தூக்கும் மனிதர்கள் கூட நம்முடைய அனைத்து கட்டளைகளுக்கும் கட்டுப்படமாட்டார்கள். ஆனால் கழுதை போன்ற உயிரினங்கள் அனைத்து சுமைகளையும் சுமந்து கொண்டு நமக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. இவை மட்டுமின்றி கால்நடைகளின் இறைச்சிகளை உண்கிறோம். வாகனங்களாக உபயோகிக்கிறோம்.

அவற்றின் தோல்களை பதனிட்டு பயன்படுத்துகிறோம். இன்னும் பல நன்மைகளை அவற்றின் மூலம் அடைகிறோம். மேலும் நம்முடைய நாட்டில் மாடுகளின் மீது வண்டி பூட்டி செல்லும் வழக்கம் உள்ளது. பனிப்பிரதேசங்களில் அதன் மீதே அமர்ந்து செல்கின்றனர். இக்கருத்தை அடுத்த வசனமும் விளக்குகிறது.

73 வது வசனம்

73. அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

(அல்குர் ஆன் : 36 : 74.)

கால்நடைகள் போன்ற பல அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் இருப்பதை பற்றி அல்லாஹ் கேட்கிறான். மேலும் இவ்வசனத்தில் பொதுவாக பயன்கள் உள்ளன என்றுதான் வந்துள்ளது. மற்ற சில வசனங்கள் அதை விளக்குகிறது.

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.

(அல்குர் ஆன் : 16:80.)

கூடாரம், ஆடைகள் போன்ற பல பொருட்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து நாம் பயன்படுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான். இதை நிதர்சனமாக காண்கிறோம்.

நாம் உபயோகிக்கும் ஃபேண்ட் பெல்ட், செருப்புகள் போன்றவை கால்நடைகளின் தோல்களால் ஆனவை. இவை மட்டுமின்றி மறைமுகமாகவும் கால்நடைகளின் உறுப்புகள் பயன்படுகின்றன. வீடியோ கேமராவை நிறுத்துவதற்குரிய ஸ்டான்டில் கூட அதன் வளைவு தன்மைக்காக கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதை செய்திகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் கால்நடைகளை மனிதர்களுக்கு அல்லாஹ் கீழ்படியச் செய்துள்ளதால்தான் நடக்கிறது.

இஸ்லாத்தின் பார்வையில் உயிர்வதை

இவ்வாறு கால்நடைகளை பயன்படுத்துவதையும், அறுப்பதையும் சிலர் உயிர்வதை என்று கூறி தவறு என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். இதை பற்றிய விளக்கத்தை அறிய வேண்டும்.

பொதுவாக கால்நடைகள் மனிதர்களுடைய நன்மைக்காகதான் படைக்கப்பட்டுள்ளன. அதன் இயக்கம், உடல் உறுப்புக்கள் அனைத்தும் மனிதனுக்கு பயன்படுகின்றன. அவற்றை இஸ்லாம் கூறும் வகையில் குரல்வலையில் அறுக்கும் போது அவற்றின் இரத்தம் முழுவதுமாக வெளியேறி கிருமிகள் வெளியேறி அதை உண்ணும் மனிதர்களுக்கு நோய் ஏற்படாமல் இருக்கிறது.

மேலும் பிராணிகளுக்கு குறைந்தபட்ச வலி உணர்வு மட்டுமே இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. நூறு மாடுகளில் ஐம்பதை இஸ்லாமிய முறைப்படியும் ஐம்பதை மற்ற சில முறைப்படியும் அறுத்தால் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்ட மாடுகள்தான் குறைந்த வலியை உணருகிறது என கருவிகளில் பதிவாகின்றது.

இஸ்லாமிய முறைப்படி குரல்வலையை அறுக்கும் போது உடனடியாக இரத்தம் வெளியேறி இதனால் சில நிமிடங்கள் மட்டுமே பிராணி வலியை உணர்கிறது. பிறகு இரத்தத்தை வெளியேற்றுவதற்காகதான் துடிக்கிறது. மற்ற முறைகளில் தலையை துண்டிக்கும் போதோ, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யும் போதோ அதிக நேரம் வலியை உணர்கிறது. மேலும் இரத்தம் முழுவதுமாக வெளியேறாமல் உடலில் கிருமிகள் தேங்கி அதை உண்பவர்களுக்கு பல நோய்களும் ஏற்படுகின்றன. எனவே இஸ்லாத்தின் முறைப்படி அறுப்பதுதான் சரியானதாகும்.

மேலும் இதை உயிர்வதை என்றுகூறுபவர்களும் மறைமுகமாக பல உயிர்களை கொள்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீர், தாவரம் போன்றவற்றிலும் பல நுண்ணுயிர்கள் உண்டு என்று அறிவியல் நிரூபித்துள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது நுண்ணுயிர்களும் சேர்ந்தே உயிரிழக்கிறது. கால்நடைகளை பற்றி உயிர்வதை என்று கூறுபவர்கள் இதை நுண்ணுயிர்வதை என்று கூறுவதில்லை.

மேலும் கால்நடைகளை விவசாயத்திற்காக பயன்படுத்தும் போதும் அவை சிரமத்திற்குள்ளாகின்றன. தன் குட்டிகளுக்காக சுரக்கும் பாலை மனிதர்கள் எடுத்து பருகுகிறார்கள். இதுவும் அவற்றுக்கு சிரமம் அளிப்பதுதான். ஆனால் இவற்றையெல்லாம் உயிர்வதை என்று கூறுவதில்லை.

துருவ பிரதேசங்களில் உள்ளவர்களிடம் உயிரினங்களை சாப்பிடக்கூடாது என்று கூறினால் அவர்கள் உயிர்வாழவே இயலாது. மேலும் இத்தகைய பிராணிகளை அறுப்பதை தவறு என்று கூறுபவர்கள் அவை தாமாக உயிரிழந்தாலும் அவற்றை உண்பது கிடையாது. இவ்வாறு இவர்கள் ஒரு தலைபட்சமாக விளங்குவது தவறாகும். இவர்களுடைய முன்னோர்களின் வழிகாட்டல்படிதான் இதை உயிர்வதை என்று கூறுகிறார்கள். அறிவார்ந்த ரீதியில் அல்ல.

உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்கே!

இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களனைத்தும் ஏதேனும் ஒரு விதத்தில் மனிதனுக்கு பயன்படும் வகையில்தான் அல்லாஹ் அவற்றை படைத்துள்ளான். (இறைவன் தடை செய்தவற்றை தவிர) இதை புரிந்து கொண்டு முறையாக அவற்றை உபயோகிக்க வேண்டும். தேவையின்றியோ துன்புறுத்தும் வகையிலோ அவற்றை அறுப்பது கூடாது. இத்தகைய பிராணிகளை நமக்கு வசப்படுத்தி கொடுத்த அல்லாஹ்வின் பெயரை கூறி அறுக்க வேண்டும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (“அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.

(புகாரி: 5565)

74, 75 வது வசனங்கள்

74. தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

75.அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக் கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

(அல்குர்ஆன்: 36:74),75) ➚.)

இணைவைப்பவர்களின் அறியாமை

இவ்வசனங்கள் இணைவைப்பை பற்றியும் இணைக்கடவுளர்களை பற்றியும் பேசுகின்றது.

அல்லாஹ்வையன்றி நல்லடியார்கள் என்று கூறப்படுபவர்களிடத்திலோ அல்லது மண்ணறைகளுக்கு சென்றோ சிலர் உதவி தேடுகின்றனர். இறுதியில் அவற்றுக்கு ஏதேனும் ஒரு தீங்கு என்றால் அவர்கள்தான் முதலில் அதை சீர்செய்கிறார்கள். மண்ணறைகளை பராமரிக்கிறார்கள். இது போன்று தன்னை பராமரிப்பதை கூட தானாக செய்ய இயலாதவர்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுவார்கள் என்று அறிவுப்பூர்வமாக அல்லாஹ் கேள்வி எழுப்புகிறான். மற்ற சில வசனங்கள் இதைவிட தெளிவாக விளக்குகிறது.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73) ➚.)

அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்கள் எத்தகைய மடமையில் உள்ளார்கள் என்பதை இவ்வசனம் உதாரணத்துடன் விளக்குகிறது.

ஒரு ஈயிடமிருந்து எந்த பொருளையும் மீட்க முடியாதவர்களிடம் சென்று பிரார்த்தனை செய்வது மிகப்பெரும் தவறாகும். இப்ராஹீம் நபியவர்கள் இதை அறிவுப்பூர்வமாக விளக்கியுள்ளார்கள்.

“ஓர் இளைஞர் அவற்றைவிமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர். “அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்’ என்றனர். “இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள்தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர். “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

(அல்குர் ஆன் 21 : 60 முதல் 67 வரை.)

அல்லாஹ்விற்கு இணையாக வணங்கப்பட்டவர்கள் உலகில் மட்டுமின்றி மறுமையிலும் எந்த உதவியும் புரிய மாட்டார்கள். அவர்களே அல்லாஹ்விடம் சரணடைந்துவிடுவார்கள்.

“உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?” (என்று கேட்கப்படும்.) அவ்வாறு நடக்காது. இன்று அவர்கள் சரணடைந்தவர்கள்.

(அல்குர்ஆன்: 37:25),26) ➚.)

எனவே அனைவரும் இத்தகைய இணைவைப்பை விட்டொழிக்கவேண்டும்.