யாஸீன் விளக்கவுரை-8

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
25, 26, 27 வது வசனங்கள்

25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும் கூறினார்).

26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்றார்.

இதில் 25 வது வசனம் வரை நல்லடியார் சொன்ன அறிவுரைகளை அல்லாஹ் கூறிவிட்டு 26 வது வசனத்தில் “சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என கூறுகிறான். மக்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தவரை திடீரென்று சொர்க்கத்திற்கு செல் என்று கூறினால் இடையில் நடந்த சம்பவங்கள் என்ன? என்ற கேள்வி இதை படிப்பவர்களுக்கு ஏற்படும்.

உயிர் தியாகிகளுக்கு நேரடி சொர்க்கம்

அசத்தியத்திலிருந்தவர்கள் இவருடைய அறிவுரையை, பிரச்சாரத்தை பொறுத்து கொள்ள முடியாமல் இவரை கொலை செய்துவிட, தன் உயிரை அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து விடுகிறார்.

பொதுவாக மரணமடைபவர்களுக்கு “பர்ஸக்” எனும் மண்ணறை வாழ்க்கை, மண்ணறையின் விசாரணை போன்றவற்றிற்கு பிறகுதான் மறுமையில் சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்படும். ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு “பர்ஸக்” எனும் வாழ்க்கையின்றி எவ்வித கேள்வி கணக்கின்றி நேரடியாக சொர்க்கம் செல்லுமாறு அல்லாஹ் கட்டளையிடுவான்.

இந்த நல்லடியார் தன் உயிரை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தியாகம் செய்ததால் இவ்வாறு கட்டளையிடுகிறான். இதுதான் இடையில் நடந்த சம்பவமாகும். இதை சொர்க்கத்திற்கு செல் என்ற இறைவசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக கொல்லப்பட்டோர் நேரடியாக சொர்க்கம் சென்றாலும் மனித வடிவத்தில் செல்ல மாட்டார்கள். மாறாக பறவையின் உடலுக்குள் இவர்களுடைய உயிரை செலுத்தி விரும்பியவாறு சுற்றித்திரிய அனுமதியளிக்கப்படும். இதை பின்வரும் சான்றுகளின் மூலம் அறியலாம்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர். இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது.

எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ்(முஸ்லிம்: 3834).

அறியாத மக்களின் மறுமை வாழ்க்கை மீதான அக்கறை!.

அந்த நல்லடியாரிடம் “சொர்க்கத்திற்கு செல்” என்று அல்லாஹ் கூறியவுடன் தன்னை கொலை செய்த சமுதாயத்தை பற்றி கவலைப்படுகிறார். தன்னை அல்லாஹ் மன்னித்ததை அறிந்து அவர்கள் நேர்வழிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார். இந்த குணம் பிரச்சாரம் செய்பவர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களும் இந்த குணத்தை கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உ ன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார்.

உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.

ஸஹீஹ்(புகாரி: 3231).

சுய நினைவை இழக்கும் அளவுக்கு தன்னை தாக்கினாலும் அவர்களும் நேர்வழி பெறவேண்டும் என்றே நபி (ஸல்) அவர்கள் விரும்பியுள்ளார்கள்.

நபியவர்கள் மட்டுமின்றி அபூபக்ர் (ரலி) அவர்களும் இவ்வாறே விரும்பியுள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியது.

“என் சமுதாயத்தில் நான்கு இலட்சம் நபர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதாக அல்லாஹ் எனக்கு வாக்கு கொடுத்துள்ளான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (போதாது) மேலும் அதிகப் படுத்துங்கள்” என்றார்.

நபியவர்கள் தன் கையை இணைத்து “இவ்வாறு (மக்களை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைப்பான்)” என்றார்கள். (மீண்டும்) அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (போதாது) மேலும் அதிகப் படுத்துங்கள்” என்றார். நபியவர்கள் (மீண்டும் தன் கையை இணைத்து) “இவ்வாறு (மக்களை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைப்பான்) என்றார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் “அபூபக்ரே! போதும் (இதற்கு மேல் கேட்காதீர்) என்றார்.

அபூபக்ர் (ரலி) “உமரே! என்னை விட்டுவிடு, அல்லாஹ் நம் அனைவரையும் சொர்க்கத்தில் நுழைப்பது உம்மிடம் இல்லை” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “(இல்லை) அல்லாஹ் நாடினால் தன் படைப்பினம் (முழுவதையும்) ஒரே பிடியில் சொர்க்கத்தில் நுழைத்து விடுவான்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “உமர் உண்மை கூறிவிட்டார்” என்றார்கள்.

(அஹ்மத்: 12718)

தன்னை எதிர்ப்பவர்களும் சொர்க்கம் செல்லவேண்டும் என்று விரும்பியதால்தான் அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோர் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த எண்ணத்துடன்தான் தவ்ஹீத் ஜமாஅத் ஜமாஅத் மக்களிடம் செயல்பட்டு வருகிறது. தன்னை விமர்சனம் செய்பவர்களும் நேர்வழிக்கு வர வேண்டும் என விரும்புகிறது. தவறான பிரச்சாரத்தை மக்களிடம் செய்கின்ற சில ஆலிம்கள் மட்டும்தான் சத்தியத்தை மறைக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் அறியாமல்தான் உள்ளனர். அவர்களும் சொர்க்கம் செல்ல வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

நல்லடியாரின் பெருந்தன்மை

மேலும் தன்னை கொலை செய்தவர்களாக இருப்பினும் அவர்களை பற்றி நல்லடியார் கவலை கொள்கிறார். இக்கவலையின் மூலம் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு பலரிடம் இந்த குணம் காணப்படுவதில்லை. அல்லாஹ் பெருந்தன்மையை ஆர்வமூட்டுகிறான்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.

பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

(அல்குர் ஆன் : 41:34,35.)

ஒருவர் நமக்கு தீமை செய்தாலும் நாம் நன்மை செய்ய வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு பெருந்தன்மையோடு நடப்பவர் மகத்தான் பாக்கியம் வழங்கப் பட்டவர் என்றும் கூறுகிறான். மேலும் நபி (ஸல்) அவர்களும் பெருந்தன்மையை கடைபிடித்துள்ளார்கள்.

தன்னை கொல்ல நினைத்தவர்களிடம் பெருந்தன்மை!.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்’ என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

ஸஹீஹ்(புகாரி: 2910).

அனஸ்(ரலி) அறிவித்தார். யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

ஸஹீஹ்(புகாரி: 2617).

தன் அரசின் கீழுள்ள பொதுமக்களை யாரேனும் தாக்க முன்வந்தால் அதற்கு பதிலடி கொடுத்த நபி (ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் தன்னை கொலை செய்ய நினைத்தவர்களை மன்னித்து தன் பெருந்தன்மையை நிரூபித்துள்ளார்கள்.

நபித்தோழர்களின் பெருந்தன்மை!.

தான் மட்டுமின்றி தன்னுடைய தோழர்களையும் இவ்வாறே வார்த்திருந்தார்கள்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்” என்று தொடங்கும் (24:1120) பத்து வசனங்களை அருளினான். (ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்’ என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள்.

-மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். -அப்போது அல்லாஹ், ‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்’ எனும் (அல்குர்ஆன்: 24:22) ➚வது) வசனத்தை அருளினான்.

அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்’ என்றும் கூறினார்கள்.(ஹதீஸின் சுருக்கம்…)

ஸஹீஹ்(புகாரி: 6679).

“பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு பெருந்தன்மை வழங்கப்படாது.” என்ற வசனத்திற்கு எடுத்துக் காட்டாக நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வாழ்ந்துள்ளார்கள். எனவே நாமும் இதிலிருந்து பாடம் பெற்று பெருந்தன்மையோடு நடக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு இவ்வுலக தொடர்பு இல்லை

ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரை அம்மக்கள் நிராகரித்தபோது ஒரு நல்லடியார் இறைத்தூதர்களுக்கு ஆதரவாக பேசினார். பிறகு அம்மக்கள் அவரை கொலை செய்துவிட்டனர் என்பதையும் அவருடைய வாழ்வில் நாம் பெறவேண்டிய படிப்பினைகளையும் முன்னர் கண்டோம்.

அவர் கொலை செய்யப்பட்டவுடன் “சொர்க்கத்திற்கு செல்” என்று அவரிடம் கூறப்பட்டபோது “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்று கூறுகிறார். மரணத்திற்கு பிறகு இவருக்கு நடப்பவற்றை மக்கள் அறிமாட்டார்கள் என்பதாலேயே இவ்வாறு கூறுகிறார்.

இதன் மூலம் இறந்துவிட்டவருக்கும் உயிரோடு உள்ளவர்களுக்குமிடையில் எந்த தொடர்பும் இல்லை என்பதை விளங்கலாம்.

உயிர்த்தியாகிகள் மீண்டும் நாங்கள் உலகத்திற்கு சென்று மீண்டும் எங்கள் உயிரை உன் பாதையில் தியாகம் செய்யவேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்டபோது அல்லாஹ் அதை மறுத்துவிடுகிறான். இத ன் மூலமும் மேற்கண்ட கருத்தினை விளங்கலாம்.

இறந்தவர் மீண்டும் வரமாட்டார்

யாராக இருப்பினும் அவர் இறந்துவிட்டால் மீண்டும் உலகிற்கு வரமுடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். மனிதர்கள் மரணத்தருவாயில் மீண்டும் தனக்கு வாழ்க்கை வழங்குமாறும் தான் அதிகமாக நல்லறங்கள் செய்வேன் என்றும் கேட்பார்கள். ஆனால் அல்லாஹ் அதை மறுத்துவிடுவான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99), 100) ➚.)

இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளோர்க்கும் தொடர்பே இல்லை எனும் போது சில முஸ்லிம்கள் இறந்தவர்களிடம் சென்று உதவி தேடுகின்றனர். அவர்கள் நமக்கு பதிலளிப்பார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் யாருக்கும் அல்லாஹ்மிடருந்து உதவ முடியாது.

(முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

(அத்தியாயம் : 26 : 214.)

மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் குடும்பத்தாரை அழைத்து எச்சரிக்கை செய்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் இப்னு அவ்வாமின் தாயாரே! முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ்(புகாரி: 3527).

நபி (ஸல்) அவர்களால் கூட யாரையும் காப்பாற்ற முடியாது எனும்போது என்றைக்கோ மரணித்து விட்டவர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.

உயிர்த்தியாகிகளுக்கு மன்னிப்பு

மேலும் 27 வது வசனத்தில் ‘என் இறைவன் என்னை மன்னித்துவிட்டான்” என்று நல்லடியார் கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் பாதையில் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதை விளங்கமுடிகிறது. எனினும் கடன் மட்டும் அவர்களுக்கு மன்னிக்கப்படாது. இதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்” என்றார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 3830).

இந்த செய்தியில் கடனை பற்றிய எச்சரிக்கை உள்ளது. ஒருவர் செய்கின்ற நல்லறங்களிலேயே உயிர் தியாகம்தான் மிக சிறந்ததாகும். அத்தகைய தியாகத்தை செய்தவருக்கே கடன் மட்டும் மன்னிக்கப் படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இன்றைய மக்கள் சர்வ சாதாரணமாக கடன் வாங்குகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இருந்தாலும் ஆடம்பரம் போன்ற பல காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இது மிகவும் ஆபத்தானதாகும். நாம் இதை தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடனைவிட்டு அதிகமாக அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின ் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’

பொருள்:

இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்ன என்று கூறுவார்கள்.

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 832)

மண்ணறை வேதனை, தஜ்ஜாலின் குழப்பங்கள் போன்றவை மிகவும் பாதுகாப்பு தேட வேண்டிய விஷயமாகும். நாம் பயப்படவேண்டிய விஷயமாகும். அதே போன்று கடனையும் ஒப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் அச்சமூட்டுகிறார்கள்.

அல்லாஹ்விடம் மரியாதைக்குரியவர்கள் யார்?

மேலும் 27வது வசனத்தில் “அல்லாஹ் என்னை மரியாதைக்குரியவனாக ஆக்கியியுள்ளான் என்பதை என் சமுதாய மக்கள் அறிய வேண்டாமா?” என்றும் நல்லடியார் கூறுகிறார்.

இதன் மூலம் அல்லாஹ் தான் நாடியோரை எந்த விதத்திலும் கண்ணியப்படுத்துவான் என்பதை விளங்கலாம். இந்த நல்லடியார் உலகில் தீயவர்களால் அதிகளவு இழிவு படுத்தப்பட்டார். எனினும் மறுமையில் அல்லாஹ் அவருக்கு கண்ணியத்தை வழங்கிவிட்டான்.

சிலர் உலகில் யாருக்கு பொருளாதாரமும் சகல வசதிகளும் அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்தான் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்கு உரியவர் என்று நினைக்கின்றனர். இது தவறாகும் உலகத்தில் கிடைக்கின்ற வசதிகளை வைத்து மறுமை கண்ணியத்தை முடிவு செய்யமுடியாது.

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான்.

அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 89:15),16) ➚.)

இவ்வுலகில் இன்பத்தை அளித்தால் அல்லாஹ் தன்னை கண்ணியப்படுத்தியதாகவும், சோதிக்கும் விதமாக துன்பத்தை வழங்கினால் அதை சோதனை என்று விளங்காமல் அல்லாஹ் தன்னை இழிவுபடுத்துவதாகவும் மனிதன் நினைக்கிறான் என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இந்த சிந்தனை தவறு என்பதையும் எவ்வித வசதியும் இல்லாவிட்டாலும் இறையச்சம் இருந்தால் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான் என்பதை மற்றொரு வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.

உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அத்தியாயம் : 49 : 13.)

மேலும் இறைவனை அஞ்சுகின்ற நல்லடியார்களுக்கு மட்டும்தான் மறுமையில் மரியாதை உண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.

(அத்தியாயம் : 37 : 40,41,42,43.)

எனவே உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை வைத்து அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் என்று தீர்மானித்து விடக்கூடாது. தனித்து விடப்பட்டாலும் பிரச்சாரத்தை விட்டுவிடக்கூடாது. இந்த நல்லடியாருடைய வாழ்வில் மற்றுமொரு முக்கியமான பாடமும் உண்டு. ஊர் மக்கள் பல துன்பங்களை அவருக்கு அளித்தபோதும் தனியாக நின்று அதை எதிர்கொள்கிறார்.

சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது மற்றவர்களால் நாம் தனித்து விடப்பட்டாலும் நம்முடைய பிரச்சாரத்தை விடக்கூடாது. பலர் நம்மை எதிர்த்தாலும் அதை தாங்கும் வலிமையை அல்லாஹ்விடம் நாம் கேட்கவேண்டும்.

துன்பத்திற்கேற்ப கூலி

மேலும் மார்க்க பிரச்சாரத்தில் ஈடுபடுபவருக்கு அவருடைய துன்பத்திற்கேற்ப அல்லாஹ் கூலி வழங்குவான். அந்த கூலியை நினைத்து துன்பங்களை பொறுத்து கொள்ளவேண்டும் என்பதும் இவரது வாழ்க்கை கற்றுத் தரும் பாடமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூமினான ஆண் அல்லது பெண்ணுக்கு உடலிலும் பொருளாதாரத்திலும் குழந்தையிலும் சோதனை இருந்துகொண்டே இருக்கும். (இதனால்) இறுதியில் தன் மீது எந்த பாவமுமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்: 7521)

28, 29வது வசனங்கள்

அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்திலிருந்து நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை.

29. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்.

அந்த நல்லடியாருடைய மரணத்திற்கு பிறகு அல்லாஹ்வின் படையினர்களாகிய வானவர்களை இறக்கி அல்லாஹ் அவர்களை தண்டிக்கவில்லை. மாறாக பெரும் சப்தத்தை அனுப்பி தண்டிக்கிறான். ஏனெனில் வானவர்கள் அல்லாத வேறு வழியிலும் அல்லாஹ் தண்டிக்க வல்லவன். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தண்டனையை வழங்குகிறான்.

மேலும் வானவர்களை நாம் அனுப்பவில்லை என இங்கு கூறப்படுவதற்கு சில காரணங்கள் உண்டு. ஏனெனில் பல்வேறு நிகழ்வுகளில் வானவர்கள் எனும் தன் படையினர்களை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அவற்றை விட்டு இதை பிரித்து காட்டுவதற்குத்தான் இவ்வாறு கூறுகிறான்.

உதாரணமாக இஸ்லாத்தின் பெரிய போர்களில் ஒன்றான பத்ர் போரில் முஸ்லிம்களுடைய எண்ணிக்கை முன்னூற்றி சொற்பத்தையே அடைந்தது. ஆனால் எதிரிகளுடைய எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பத்ருகளத்தில் வானவர்களை அனுப்பி அல்லாஹ் உதவி செய்தான்.

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் “பத்ரு’க்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

“(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!

அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

(அல்குர்ஆன்: 3:123),124) ➚,125.)

இது போன்றே பலரையும் அழிப்பதற்காகவும் வானவர்களை இறக்கி வைப்பான். அவற்றை 9 வது அத்தியாயம் 25, 26 மற்றும் 40 ஆகிய வசனங்களில் காணலாம்.

எனினும் இந்த மூன்று இறைத்தூதர்களுகம் மற்றும் அந்த நல்லடியாரும் பிரச்சாரம் செய்த கூட்டத்தினரை அவ்வாறு அழிக்காமல் பெரும் சப்தத்தின் மூலமே அழித்துள்ளான். அதையே இவ்வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

30 வது வசனம்

30. அடியார்களுக்கு இது நஷ்டமே! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை.

மக்களிடம் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்களை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளாது கேலி செய்தனர் எனும் கருத்தை இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது.

தூதர்களை கேலி செய்தல்

இவ்வாறே நூஹ் நபியையும் அவரது சமுதாய மக்கள் கேலி செய்தனர்.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.

“இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)

(அல்குர்ஆன்: 11:38),39) ➚.)

நூஹ் நபி மட்டுமின்றி அனைத்து இறைத்தூதர்களும் கேலி செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

(அல்குர்ஆன்: 51:52) ➚.)

மக்கள் இறைத்தூதர்களை கேலி செய்யும் போது அல்லாஹ் அதற்கு பதிலளித்துள்ளான்.

சூனியம் செய்யப்பட்டவர் என்ற விமர்சனத்திற்கு பதில்

நபி (ஸல்) அவர்களை சூனியம் செய்யப்பட்டவர் என்று விமர்சனம் செய்யும் போது அநியாயக் காரர்களே இவ்வாறு சொல்வார் என்று அல்லாஹ் பதிலளித்துள்ளான்

“அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் “சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்: 25:8) ➚.)

பைத்தியக்காரர் என்ற விமர்சனத்திற்கு பதில்.

46. “நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் “உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை” என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்” எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 34:46) ➚.)

நபி (ஸல்) அவர்களுக்கு பைத்தியம் பீடித்துள்ளது என்று கேலி செய்த போது சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற சிறிதளவு மனநோய் கூட இல்லை என்று அல்லாஹ் பதிலளிக்கிறான். இப்படி இறைத்தூதர்களை மக்கள் கேலி செய்த போது இறைத்தூதர்கள் சார்பில் அல்லாஹ் பதிலளித்துள்ளான்.

இந்தக் கேலிப்பேச்சால் தனக்கோ தனது தூதர்களுக்கோ எவ்வித நஷ்டமும் இல்லை. மாறாக கேலி செய்யும் “அடியார்களுக்கு இது நஷ்டமே! எனக் கூறி அவர்களுக்கே நஷ்டம் என்று 30 வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பிரச்சார களத்தில் இருந்தால் இது போன்ற கேலி பேச்சுக்கள் நம்மை பார்த்தும் பேசப்படும். அவற்றை நினைத்து துவண்டுவிடாமல் பொறுமையோடு இருந்து மக்களை வென்றெடுக்க வேண்டும் எனும் ஊக்கத்தை இவ்வசனங்கள் தருகின்றது.

31 வது வசனம்

அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அவர்கள் இவர்களிடம் திரும்பி வர மாட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையா?

அழிக்கப்பட்டவர்கள் மீண்டும் வருவதில்லை

ஏதேனும் ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க நாடினால் தடம் தெரியாத அளவிற்கு அழித்து விடுவான். இதனால் மீண்டும் அவர்கள் வரமுடியாது.

லூத் நபியின் சமுதாயத்தை அழித்தல்

லூத் நபியின் சமுதாயத்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டனர். இதை லூத் நபி கண்டித்து பிரச்சாரம் செய்தும் அம்மக்கள் கேட்கவில்லை. ஒரு முறை வானவர்கள் மனித வடிவில் அவர்களிடம் வந்து போது அவர்களையும் தவறாக தீண்ட நினைத்தனர்.

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். “இது மிகவும் கடினமான நாள்” எனவும் கூறினார்.

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். “என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?” என்று கேட்டார்.

“உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்” என்றனர்.

“உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 11:77),78) ➚,79,80.)

அவர்கள் திருந்தாத போது அல்லாஹ் அவர்களுக்கு பேரழிவை ஏற்பத்தினான்.

“லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்று தூதர்கள் கூறினார்கள்.

நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.

(அல்குர்ஆன்: 11:81),82) ➚.)

இது போன்று மிகவும் கொடுமையான தீமைகளை செய்யும்போது முதலில் அல்லாஹ் எச்சரிப்பான். அவர்கள் திருந்தாவிட்டால் இது போன்றே பேரழிவை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

நூஹ் நபியின் சமுதாயத்திற்கு ஏற்பட்ட அழிவு

மேலும் நூஹ் நபியின் சமுதாய மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்த போது நபி நூஹ் அலை அவர்கள் எச்சரித்தார்கள். ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கடித்து அவர்களுக்கு பேரழிவை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.

“நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டிலேயே காண்கிறோம்” என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.

“என் சமுதாயமே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்” என்று அவர் கூறினார்.

“என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்”

“உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (இறைவனை) அஞ்சவும், உங்களுக்கு அருள் செய்யப்படவும், உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?” (என்றும் கூறினார்.)

ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம்.நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

(அல்குர்ஆன்: 7:59),60) ➚,61,62,63,64.)

இத்தகைய அழிவுகளின் மூலம் அனைவரும் படிப்பினை பெற்று நடக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தண்டனையும் விளக்கமும்

ஒரு சமுதாயத்திற்கு இது போன்ற அழிவுகளை எடுத்த மாத்திரத்திலேயே அல்லாஹ் ஏற்படுத்தமாட்டான். மாறாக அதற்கு முன்பு தூதரை அனுப்பி அவர்களை எச்சரிக்கை செய்வான். அதற்கு பிறகும் அவர்கள் அநியாயம் செய்யும் போதுதான் அவர்களை அழிப்பான்.

ஊர்களின் தாய் நகரத்துக்குத் தூதரை அனுப்பாத வரை உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. அவர்களுக்கு அவர் நமது வசனங்களைக் கூறுவார். ஊரிலுள்ளவர்கள் அநீதி இழைக்காமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.

(அல்குர்ஆன்: 28:59) ➚.)

அதே வேளை ஓர் ஊரை அல்லாஹ் அழிக்க நாடும் போது அவர்களை அவ்வழிவிற்கு தகுதியானவர்களாக ஆன பிறகே அவர்களை அழிப்பான். இதுவே அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

ஓர் ஊரை நாம் அழிக்க நாடும்போது அவ்வூரில் சுகபோகத்தில் மூழ்கியோருக்கு (கட்டுப்பட்டு நடக்குமாறு) கட்டளையிடுவோம். அவர்கள் அதில் குற்றம் புரிவார்கள். எனவே அவ்வூருக்கு எதிராக, (நமது) வார்த்தை உறுதியாகி விடுகிறது. உடனே அதை அடியோடு அழிப்போம்.

(அல்குர்ஆன்: 17:16) ➚.)

சில அழிவுகளில் தீயவர்களுடன் நல்லவர்களும் சேர்ந்து அழிக்கப்படுவார்கள். ஆனால் மறுமையில் நல்லவர்கள் அவர்களுடைய எண்ணங்களின் படி நன்மையோடுதான் எழுப்பப் படுவார்கள்.

ஆயிஷா(ரலி) கூறியதாவது: ‘

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!’ என்றார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 2118).

இது போன்ற இறைவனின் புறத்திலிருந்து அழிவுகளை சந்தித்தவர்கள் மீண்டும் வந்து அதை கூறமாட்டார்கள். மாறாக நாம்தான் அதிலிருந்து பெறவேண்டிய படிப்பினையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இவற்றை அல்லாஹ் கூறுகிறான்.

32வது வசனம்

32. அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

உலகில் வாழும்போது மனிதர்கள் இறைவனை மறந்து வாழக் கூடாது என்பதற்காக மறுமையில் தன்னிடம் ஒன்று திரட்டப்படுவதை அல்லாஹ் நினைவூட்டுகிறான். இதை பல வசனங்களில் குறிப்பிடுகிறான்.

மறுமையில் ஸூர் ஊதப்படுதல்

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

(அல்குர்ஆன்: 78:18) ➚.)

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

(அல்குர்ஆன்: 79:13),14) ➚

உறவுகள் முறிந்து விடும்

உலகில் இருந்த எந்த உறவு முறைகளும் அந்நாளில் இருக்காது. உலகில் நம்மை காப்பாற்ற பாடுபட்டவர்கள் அந்நாளில் உதவ மாட்டார்கள். அனைவரும் அரவணைப்பின்றி தனித்து விடப்படுவோம்.

ஸுர் ஊதப்படும் போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரை யொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 23:101) ➚.)

நண்பர்களும் பகைவர்களாக மாறிவிடுவார்கள்

உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 43:67),68) ➚.)

உலகில் ஒருவருக்கொருவர் உதவி செய்த நண்பர்கள் கூட உதவாமல் தன்னுடைய நலனை மட்டும் கருதுமளவிற்கு அந்நாள் மிகவும் பயங்கரமானதாகும்.

இதை பற்றி நபி (ஸல்) அவர்களும் விளக்குகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 6527).

பிறர் நிர்வாணமாக இருந்தால் கூட கண்டுகொள்ளாத அளவிற்கு மிகவும் சிரமமான நாள் என எச்சரிக்கிறார்கள்.

மேலும் சூரியன் மிக மிக அருகில் கொண்டு வரப்பட்டு தன்னுடைய பாவங்களுக்கேற்ப வியர்வையில் தத்தளிப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…’ மேலும் கூறினார்கள்: வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளில் சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம்(அலை) அவர்களிடமும் பிறகு மூஸா(அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத்(ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 1474)1475.

வழிப்போக்கன் போன்று இருக்க வேண்டும்.

இவ்வாறு மறுமையை பற்றி எச்சரித்தது மட்டுமின்றி உலகத்தை மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும் நபி (ஸல்) அவர்கள் போதனை செய்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 6416).

இறைவனை நம்பிக்கை கொண்டவர்கள் இந்த எச்சரிக்கைப் படி வாழவேண்டும். உலகில் உள்ள வசதிகளை ஒரு வழிப்போக்கன் போன்று கருதவேண்டும். எந்நேரத்திலும் இறை நினைவோடு வாழவேண்டும். மறுமையை மட்டும் நமது இலக்காக கருதவேண்டும். பொதுவாக நபித்தோழாக்ள் மறுமையை இலக்காக கொண்டு வாழ்பவர்களாகதான் இருந்தார்கள். அத்தகைய நபர்களுக்கே நபி (ஸல்) அவர்கள் மறுமை சிந்தனையை ஊட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) “ஆலியா”வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?” என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்று சொன்னார்கள்.

ஸஹீஹ்(முஸ்லிம்: 5664).

ஓர் உயிரற்ற ஆட்டை மதிப்பற்றதாக கருதுவதைப் போன்றுதான் உலகத்தையும் கருதவேண்டும். மேலும் இவ்வுலக ஆசையில் மயங்கிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

உலக ஆசையில் மூழ்கிவிடக் கூடாது

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ(ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா(ரலி) வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது.

நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, ‘அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்’ என்று கூற, அன்சாரிகள், ‘ஆமாம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள்.

‘எனவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 3158).

உலகத்தின் ஆசைகளை துறந்து அல்லாஹ்விற்காக வாரி வழங்கிய தன் தோழர்களிடமே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் நம்முடைய நிலையை நாம் யோசிக்கவேண்டும்.

எனவே ஒருநாள் நாமனைவரும் இறைவன் முன்னிலையில் ஒன்று திரட்டப்பட்டவர்களாக நிற்போம் என்னும் மறுமை சிந்தனையை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த சிந்தனை இல்லாத காரணத்தால்தான் அதிகமான தவறுகள் நடக்கிறது. ஒருவர் மற்றவரை ஏமாற்றுகிறார். மோசடி செய்கிறார். இவற்றை தவிர்த்து கொள்வதற்காகதான் மறுமையில் அல்லாஹ்விடம் ஒன்று திரட்டப்படு வோம் என யாசீன் அத்தியாயத்தின் 32 வது வசனத்தில் நினைவூட்டுகிறான்.