யாஸீன் விளக்கவுரை-7

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
16, 17 வது வசனங்கள்

16, 17. “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று (தூதர்கள்) கூறினர்.

இவ்வரு வசனங்களிலும் அந்த மூன்று தூதர்களும் கூறிய பதில்கள் இடம் பெற்றுள்ளது. இதிலும் நமக்கு பல பாடங்கள் உண்டு.

பிரச்சாரகர்கள் மென்மையாக நடக்கவேண்டும்

பொதுவாக மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அதை அவர்கள் ஏற்கமறுப்பது மட்டுமின்றி நம்மை பொய்யர் என்றும் விமர்சிப்பார்கள். ஏளனமாக பேசுவார்கள். இது போன்ற சூழல்களில் நாம் மென்மையாக நடக்கவேண்டும்.

மக்கள் பொய்யென கருதினாலும் அதை நினைத்து துவண்டுவிடாமல் நாம் சொல்வது உண்மையென்பதை அல்லாஹ் அறிவான் என்கிற உறுதி சத்தியத்தை பிரச்சாரம் செய்வோருக்கு இருக்க வேண்டும். இதை இந்த தூதர்களிடமிருந்து கற்றுக் கொள்ளமுடிகிறது.

மக்கள் அவர்களை பொய்யர் என்று கூறும்போதும் “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; என்றுதான் கூறினார்களே தவிர மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. ஆனால் நம்மில் சில பிரச்சாரகர்கள் மக்கள் மீது கோபம் கொள்கிறார்கள். அதை நாம் தவிர்த்து கொள்ளவேண்டும்.

நபிமார்களும் மென்மையை கடைபிடித்தனர்

மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய இருவரும் ஃபிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்யும்போது மென்மையாக பேசுமாறு அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிடுகிறான்.

இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.

“அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

(அல்குர்ஆன்: 20:43),44) ➚.)

ஃபிர்அவ்ன் என்பவன் இன்றைய மக்களை போன்று அல்லாஹ்வை வணங்கியவன் அல்ல. மாறாக தன்னைத்தானே இறைவன் என்று கூறியவன்.

நானே உங்களின் மிகப்பெரிய இறைவன் என்றான்.

(அல்குர்ஆன்: 79:24) ➚.)

இத்தகைய இறைமறுப்பாளனிடமும் மென்மையாக நடக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகையில் இன்றைய மக்களிடம் கூடுதலாக மென்மையை மேற்கொள்ளவேண்டும்.

ஏனெனில் இன்றைய மக்கள் “தன்னை இறைவன்” என்று கூறவில்லை. மாறாக “சுப்ஹான ரப்பியல் அஃலா” (என்னுடைய உயர்ந்த இறைவன் தூயவன்) என்று அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அறியாமல் இறைபோதனைக்கு மாற்றமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள், இவர்களை மென்மையுடன் அணுகி வென்றெடுக்கவேண்டும். என்பதையும் இவ்விரு வசனங்கள் நமக்கு கற்றுத்தருகின்றன.

தெளிவாக எடுத்துச்சொல்லுதல்

மேலும் 17 வது வசனத்தில் “தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும் இல்லை” என்று (தூதர்கள்) கூறினர். இதில் “எடுத்துச் சொல்வது” என்று இடம் பெறாமல், “தெளிவாக எடுத்துச் சொல்வது” என்று இடம் பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்க முக்கிய அம்சமாகும்.

பிரச்சாரம் செய்யும்போது மக்களுக்கு ஏற்றவாறு பூசி மொழுகி பதிலளிக்கக்கூடாது. என்ன சொல்ல வருகிறோம் என்பதே தெளிவில்லாமல் பிரச்சாரம் செய்யக் கூடாது. சொல்வதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இக்கருத்தை மேலும் சில வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள் !

(அல்குர்ஆன்: 33:70) ➚.)

சிலர் இவ்வசனங்களுக்கு மாற்றமாக தெளிவின்றி மார்க்கத்தை எடுத்து சொல்கிறார்கள் மத்ஹப் அடிப்படையிலும் தனித்தனியாக மார்க்க சட்டங்களை வகுக்கிறார்கள். சந்தர்ப்பத்திற்கேற்ப மக்களுக்கு தகுந்தாற்போல் மார்க்க சட்டத்தை மாற்றிமாற்றி கூறுகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். மார்க்கத்தை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகத்தான் கூறவேண்டும்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன்: 15:94) ➚.)

எனவே மக்கள் மனது புண்படாத வகையில் மென்மையாக பிரச்சாரம் செய்யும் அதே தருணத்தில் மக்களின் விமர்சனத்திற்கு அஞ்சி மார்க்கத்தை வளைத்து விடாமல் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

நேர்வழி காட்டுபவன் அல்லாஹ்தான்

மேலும் “தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று தூதர்கள் கூறியதன் மூலம் எடுத்துச் சொல்வதுதான் நம்முடைய கடமை. நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் புறத்தில்தான் உள்ளது என்பதையும் அறியலாம். இதற்கு நபி ஸல் அவர்களின் வாழ்க்கையிலேயே பல உதாரண நிகழ்வுகள் உள்ளது.

அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லை

முஸய்யப் இப்னு ஹஸ்ன் இப்னி அபீ வஹ்ப்(ரலி) கூறியதாவது.

அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்துவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி(ஸல்) அவர்கள், ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களு க்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்’ என்று கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், ‘அபூ தாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், ‘(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)’ என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை’ என்று கூறினார்கள்.

அப்போதுதான், ‘இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’ என்னும் (அல்குர்ஆன்: 09:113) ➚ திருக்குர்ஆன் வசனமும, ‘(நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது’ என்னும் (அல்குர்ஆன்: 28:56) ➚ திருக்குர்ஆன் வசனமும அருளப்பட்டன.

ஸஹீஹ்(புகாரி: 3884).

இறைத்தூதர்களாகவே இருந்தாலும் நேர்வழி காட்டும் பொறுப்பு அல்லாஹ்விடம்தான் உள்ளது என்பதை இச்செய்தியில் இரண்டாவதாக அருளப்பட்ட வசனத்தின் மூலம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து நபிமார்களுக்கும் இதே விதிதான்.

நூஹ் நபியின் மகனுக்கு நேர்வழி கிடைக்கவில்லை

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 11:45),46) ➚.)

லூத் நபியின் மனைவிக்கு நேர்வழி கிடைக்கவில்லை

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 66:10) ➚.)

சிலர் தன் பிரச்சாரத்தை மக்கள் ஏற்காவிட்டால் பெரியளவில் மனச்சோர்வடைகிறார்கள். இத்தனை ஆண்டுகள் பிரச்சாரம் செய்தும் மக்கள் ஏற்கவில்லையே என தளர்ந்து விடுகிறார்கள். அத்தகையவர்கள் இதை கவனிக்கவேண்டும்.

தூதர்கள் விரும்பியவர்களுக்கே நேர்வழி கிடைக்கவில்லை எனும்போது நாம் விரும்பியவர்களுக்கெல்லாம் நேர்வழி கிடைக்காதது ஆச்சரியமானதல்ல. ஏனென்றால் நேர்வழி இறையதிகாரத்தில் உள்ளது என்பதை விளங்கவேண்டும். மேலும் அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தால் நன்மைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கும். பல இறைத்தூதர்கள் பிரச்சாரம் செய்தும் மக்கள் ஏற்காமல் இருந்துள்ளனர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர்.

அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, ‘இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், ‘பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், ‘இங்கும் இங்கும் பாருங்கள்’ என்று சொல்லப்பட்டது.

அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று சொல்லப்பட்டது.

ஸஹீஹ்(புகாரி: 5752).

மேற்கண்ட செய்தியில் பல பாடங்கள் உள்ளது. இவர்களெல்லாம் பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்த இறைத்தூதர்களாவர். சில இறைத்தூதருடைய பிரச்சாரத்தை ஒருவர் கூட ஏற்றுக்கொள்ளாத நிலை இருந்தும் தூதர்கள் இடைவிடாது, சோர்வுறாது பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.

உதாரணமாக நூஹ் (அலை) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களிடம் அம்மக்கள் கூறியது.

“நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண் டு வாரும்!” என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 11:32) ➚.)

இது போன்ற வார்த்தைகளை தாங்கிக்கொண்டு தொள்ளாயிரத்து ஐம்பது வருடங்கள் வாழ்ந்து பிரச்சாரம் செய்தும் ஒரு கப்பலில் ஏறும் அளவிற்குதான் கூட்டம் இருந்தது. ஆனால் நம்மிடம் ஒரே சந்தேகத்தை பலமுறை கேட்டால் பொறுத்துக் கொள்வது சிரமமாக கருதப்படுகிறது. இக்குணத்தை மாற்றிக் கொண்டு நபிமார்கள் போன்று பொறுமையை கடைபிடிக்கவேண்டும்.

இஸ்லாத்தில் இல்லாத முரீது வியாபாரம்

கடந்த காலங்களில் சில முஸ்லிம்கள் முரீது என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத சில விஷயங்களை செய்தார்கள்.

முரீது (நாடுபவர்) எனும் சாதாரண நபர் ஷேக் (ஆசிரியர்) எனப்படுபவரிடம் சென்று உறுதிமொழி எடுப்பார். இந்த உறுதிமொழியின் மூலம் தன்னை தனது ஆசான் பக்குவப் படுத்துவார், தன் மனதை தீமையிலிருந்து மாற்றிவிடுவார் என்றும் நம்புவார். இது முற்றிலும் தவறாகும். இது போன்ற முறை இஸ்லாத்தில் இருந்திருந்தால் யாசீன் சூராவில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மக்களை மாற்றியிருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு இயலவில்லை. மேலும் “தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை’ என கூறுகிறார்கள். இதன் மூலம் யாராலும் மனித மனங்களை நேர்வழியின் பால் அழைத்து செல்ல முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு எந்த மனிதனுக்கும் இல்லை என்பதை விளங்கலாம்.

18,19வது வசனம்

18. “நாங்கள் உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையானால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்” என்று (அவ்வூரார்) கூறினர்.

19. “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா (எங்களை மிரட்டுவீர்கள்)? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று (தூதர்கள்) கூறினர்.

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை

இவ்வசனங்களில் அத்தூதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது. தாங்கள் விரும்பாத கருத்தை கூறியதால் தூதர்களை கெட்ட சகுனமாக அம்மக்கள் கருதினர். இம்மூன்று தூதர்களுக்கு மட்டுமில்லாமல் மூஸா (அலை) போன்ற மற்ற தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)” எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.”

(அல்குர்ஆன்: 7:131) ➚.)

தாங்கள் விரும்பாத செயல்கள் தங்களுக்கு ஏற்பட்டால் அதை தூதர்களோடு இணைத்து துர்சகுனமாக கருதுவார்கள். “இவர்களால்தான் இந்த தீய விஷயங்கள் நடக்கிறது” என்று கூறி அவமதிப்பார்கள். நன்மை நடந்தால் தங்களோடு அதை இணைத்துக் கொள்வார்கள். இவ்வாறு கெட்ட சகுனமாக தூதர்களை கருதும் பழக்கம் பல சமுதாயத்திடம் இருந்துள்ளது.

மேலும் ஸாலிஹ் நபியின் சமுதாயமும் இவ்வாறு கூறியுள்ளனர்.

47. உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 27:47) ➚.)

இறைவன் இவர்களின் சகுணம் பற்றிய கூற்றை அடியோடு மறுக்கின்றான்.

“கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.” என்று கூறி, நன்மை, தீமை அனைத்தும் தன்னிடமிருந்தே வருகிறது என அல்லாஹ் கூறுகிறான்.

தூதர்களும் உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்” என்று கூறி, இது போன்ற சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் முஸ்லிம்களிடையே சகுனம் பார்க்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

சிலர் திருமண அழைப்பிதழ்களில் சகுனத்தை அடிப்படையாக கொண்டு இன்ன நல்ல நேரத்தில் திருமணம் நடைபெறும் என்று குறிப்பிடுவார்கள். பாதையில் பூனை குறுக்கே சென்றால் கெட்ட நேரம் என்றும், பல்லி விழுந்தால் இன்ன அர்த்தம் என்று பலவாறாக சகுனம் பார்க்கிறார்கள். இவை அனைத்துமே தவறு என நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. “ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 5757)

ஆரம்பத்தில் அரபுகள் பறவை சகுனம் மட்டுமே பார்த்து வந்தனர். பிறகு பல சகுனங்களை அதிகப் படுத்துக் கொண்டனர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் “பறவை சகுனம் கூடாது என்று குறிப்பிடுகிறார்கள். எனினும் அனைத்து சகுனமும் கூடாது என்பதுதான் இதன் கருத்தாகும்.

ஃபஃல் என்றால் என்ன?

இஸ்லாத்தில் சகுனம் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஃபஃல் என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று சொன்னார்கள். மக்கள், “நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 5754)

ஃபஃல் என்பது நல்லவற்றை சொல்வதற்குரிய வார்த்தையாகும். உதாரணமாக ஒருவரை நோய்நலம் விசாரிக்க செல்லும்போது “அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். எந்த சிரமும் இல்லை” என்று ஆறுதலான வார்த்தைகளை கூறுவோம். இது ஃபஃல் என்பதாகும்.

மேலும் திருமணங்களுக்கு செல்லும்போது “அல்லாஹ் நாடினால் இருவரும் நீண்டகாலம் வாழ்வீர்கள்” என்று நல்ல வார்த்தைகளை கூறுவதும் ஃபஃல் என்பதாகும். ஆனால் சிலர் இதை தவறாக விளங்கிக் கொண்டு “பால் கிதாப்” என்ற பெயரில் “வருங்காலத்தை கணித்து கூறுகிறோம்” என்று கூறி, மக்களை ஏமாற்றுகின்றனர். இது ஃபஃல் அல்ல. ஏமாற்று வேலையாகும். மார்க்க அடிப்படையில் ஹராமாகும். இதை அறியாத மக்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்கள்

மேலும் சகுனம் பார்க்காமல் இருக்கும் மக்களுக்கு மறுமையில் மிகப்பெரும் சிறப்புகளை அல்லாஹ் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.

(புகாரி: 6472)

இச்செய்தியில் ஓதிப்பார்ப்பதையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வார்த்தைகளை கூறி ஓதிப்பார்ப்பவர்களை இது குறிக்காது. அவர்கள் கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்லலாம். மாறாக அனுமதிக்கப்படாத, இணைவைத்தலான வார்த்தைகளை கூறி ஓதிப்பார்ப்பவர்கள்தான் சொர்க்கம் செல்லமுடியாது. எனவே வாழ்வில் நடைபெறுகின்ர நன்மை, தீமைகளனைத்தும் அல்லாஹ்வின் வதிப்படிதான் நடக்கிறது. சகுனத்தின்படி அல்ல என்று உறுதியாக நம்ப வேண்டும்.

20,21வது வசனங்கள்

20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, “என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!” என்றார்.

21. உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.

சிரமத்தை தாங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்தல்

இவ்வசனங்களிலும் முஸ்லிம்களுக்கு பல அறிவுரைகள் அடங்கியுள்ளது.

அம்மனிதர் ஊரின் கடைசி பகுதியில் இருந்தாலும் சிரமத்தை பொருட்படுத்தாமல் மக்களிடம் வந்து தூதர்களுக்கு பக்க பலமாக நிற்கிறார். நல்ல விஷயங்களை மக்களுக்கு கூறுகிறார். நாமும் இது போன்று மார்க்கத்திற்காக வெகுதூரம் செல்வதை சிரமமாக கருதாமல் மார்க்கத்தை எடுத்து கூறவேண்டும்.

விரைந்து நன்மை செய்தல்

மேலும் 20 வது வசனத்தில் “அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்தார்” என்று உள்ளது. மக்கள் தீமை செய்வதை கண்டவுடன் தாமதமின்றி விரைவாக வந்து சத்தியத்தை எடுத்துச் சொல்கிறார்.

நாம் ஏதேனும் தீமையை கண்டால் “பிறகு தடுத்துக்கொள்வோம்” என்று தாமதித்து விடாமல் உடனடியாக விரைந்து தடுக்கவேண்டும் என்பதை இவ்வசனம் கற்றுத்தருகிறது.

நபி (ஸல்) அவர்களும் இவ்வழிமுறையை கடை பிடித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)” என்றேன்; அவர்கள் “ஐந்து நாட்கள்!” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே…!” என்றேன்; “ஒன்பது நாட்கள்!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே…! என்றேன்; “பதினொரு நாட்கள்!” என்றார்கள். பிறகு, “தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.

(புகாரி: 1980)

ஒரு நபித்தோழர் மார்க்கத்தின் வரையறை கடந்து விட்டார் என தெரிந்தவுடன் எவ்வித கால தாமதமுமின்றி நபி (ஸல்) அவர்கள் விரைந்து வந்து அவருக்கு சரியான வழியை காட்டுகிறார்கள்.

கூலி கேட்காத நேர்வழி பெற்றோரை பின்பற்ற வேண்டும்

மேலும் 21 வது வசனத்தில் “உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.” என்று அந்த நல்லடியார் கூறியதாக உள்ளது.

பொதுவாக நேர்வழியைதான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். வழிகேட்டை செய்துவிடக் கூடாது. மேலும் மக்களிடம் கூலியை எதிர் பார்க்கமால் மார்க்கத்தை சொல்லவேண்டும் என்பதையும் இதில் விளங்கலாம். அனைத்து இறைத்தூதர்களும் இதே கருத்தை கூறினார்கள்.

நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

(அத்தியாயம்:26 : 127.)

நபி (ஸல்) அவர்களும் இதை கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

“உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்டதில்லை. அது உங்களுக்கே உரியது. எனது கூலி அல்லாஹ்விடம் தவிர வேறு (எவரிடமும்) இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்” என்று கூறுவீராக!

(அத்தியாம் : 34 : 47.)

மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும்போது கூலிக்காக பிரச்சாரம் செய்கிறாரோ? என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறுமாறு அல்லாஹ் பணிக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களிடமும் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! என்னை என் சமுதாத்திற்கு (தொழவைக்கும்) இமாமாக நியமியுங்கள்! என்று கேட்டேன். அதற்கவர்கள் “(சரி) நீ அவர்களின் இமாமாக செயல்படு. பலவீனமானவர்களை (சிரமமில்லாமல்) வழிநடத்து! (பாங்கு) தொழுகை அழைப்பிற்கு கூலி கேட்காத அழைப்பாளரை ஏற்படுத்திக்கொள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரலி)

(அஹ்மத்: 15670)

பாங்கு சொல்ல கூலி கேட்க கூடாது என்று கூறி இதன் மூலம் எவ்விதத்தில் மார்க்கப் பணி செய்தாலும் அதற்காக கூலி பெறக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் விளக்கிவிட்டார்கள்.

எனினும் சில மார்க்க அறிஞர்கள் பிரச்சாரம் செய்வதற்காக அதற்கன்று கூலி நிர்ணயித்து கேட்கின்றனர். மேடைகளில் உரை நிகழ்த்துவதற்கு குறிப்பிட்ட தொகையும் உள்ளரங்குகளில் பிரச்சாரம் செய்வதற்கு குறிப்பிட்ட தொகை என்றும் வாங்குகின்றனர். சிலர் உள்ளூரில் திருமண நிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தினாலும் பல ஆயிரங்களை பெற்றுக் கொள்கின்றனர். இவையனைத்தும் தவறாகும்.

அதே நேரத்தில் ஒருவர் தனது பொருளாதாரத்தை செலவு வெளியூர் சென்று பிரச்சாரம் செய்கிறார் என்றால் அவருக்கு ஏற்பட்ட போக்குவரத்து செலவினை வழங்கலாம். அது மார்க்கம் பேச கூலி வழங்கியதாகாது.

ஒருவர் பள்ளியில் பாங்கும் கூறி, அத்துடன் பள்ளியின் பராமரிப்பு, பொருட்களை பாதுகாத்தல் தண்ணீர் ஏற்பாடு செய்தல் போன்ற மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளையும் செய்யும் போது அதற்கு பொருளாதாரம் வழங்குவது அனுமதியாகும்.

(இது குறித்து விரிவாக இவ்வசனத்தின் இறுதியில் காண்போம்.)

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுகிறோம் என்கிற பெயரால் அதற்கென்று பணம் வசூலிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடையே உள்ளது. இதற்கு கத்தமுல் குர்ஆன் என்று கூறிக் கொள்கின்றனர்.

இத்தகைய குர்ஆனை வியாபாரமாக்கும் காரியம் மார்க்கத்தில் உள்ளதல்ல. நபி (ஸல்) அவர்களின் வழியுமல்ல. நபியவர்களுடைய பிள்ளைகளும் மனைவியர்களும் இறந்தபோது ஒருமுறை கூட நபியவர்கள் இவ்வாறு ஓதவில்லை. நபித்தோழர்களும் இவ்வாறு செய்யவில்லை. இது முற்றிலும் பித்அத்தான ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குர்ஆனை ஓதுங்கள்! அ(தை ஓதுவ)தன் மூலம் சாப்பிடாதீர்கள்.

இதை அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்: 14986)

“(உங்களுக்கு பின்) ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் அம்பு சீராக வைக்கப்படுவதை போன்று சீராக அதை (குர்ஆனை) ஓதுவார்கள். அவர்கள் (உலகில்) கூலியை எதிர்ப்பார்ப்பார்கள். (மறுமையில்) எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(அஹ்மத்: 14735)

அல்லாஹ்வும் இதை வன்மையாக தடை செய்கிறான்.

உங்களிடம் உள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய (குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள் ! இதை மறுப்போரில் முதன்மையாகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

(அத்தியாயம் : 2 : 41.)

எனவே குர்ஆனை ஓதி கூலி கேட்பது தவறு என்பதை இதன் மூலம் விளங்கலாம்.

குர்ஆனை அச்சிட்டு விற்க கூலி பெறலாமா?

இன்றைய நவீன காலத்தில் குர்ஆனை பிரதிகளாக அச்சிட்டு விற்கக்கூடிய வழக்கம் உள்ளது. இதற்காக விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. “இது குர்ஆனை விற்பதாக ஆகாதா?” என்று கேள்வி எழலாம். ஆனால் இது தவறல்ல. ஏனெனில் இதில் பெறப்படுகின்ற கூலி குர்ஆனை ஓதுவதற்கல்ல.

மாறாக அச்சுப்பணி, ஊழியர்கள் ஊதியம் இதர செலவீனங்கள் போன்றவற்றுக்காகதான். இவற்றிற்காக கூலி பெறவில்லையென்றால் இப்பணிகள் நடக்காது. நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாத இது போன்றவற்றுக்காக கூலி பெறுவது தடையல்ல.

இதை தெளிவுபடுத்தும் விதமாக பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டதாலும், அதற்குச் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே (ஏகஇறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 5:44) ➚.)

யூதர்களை நோக்கி “அற்ப விலைக்கு வசனங்களை விற்காதீர்கள்” என்று கூறுப்படுவதன் நோக்கம் வசனங்களை ஓதுவதற்கென்று கூலி பெறக்கூடாது என்பதுதான். எனவே ஓதுதல் அல்லாமல் அச்சிடுதல் போன்ற செலவீனங்களுக்காக தொகையை பெறுவது தடையல்ல.

ஓதிப்பார்ப்பதற்கு கூலி பெறலாமா?

மேலும் குர்ஆனை ஓதி ஒரு நோயாளிக்கு நிவாரணம் கிடைத்துவிட்டால் அதற்காக ஏதேனும் கூலியை பெறுவது தவறல்ல. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அபூ ஸயீத்(ரலி) கூறியதாவது:

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!’ என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து ‘கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?’ என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!’ என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.

நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..’ என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள்.

‘இதைப் பங்கு வையுங்கள்!’ என்று ஒருவர் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!’ என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டுவிட்டு, ‘நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 2276).

பொதுவாக குர்ஆனை ஓதுவதற்கு கூலி பெறக்கூடாது என்றிருந்தாலும் நோயாளிக்கு ஓதிப்பார்த்து நிவாரணம் கிடைத்துவிட்டால் அன்பளிப்பு போன்று கூலியை பெறுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

ஓதிப்பார்த்தலும் இன்றைய நிலையும்

இன்றைய சூழலில் சில மக்கள் ஆலிம்களிடம் சென்று ஓதிப்பார்த்து கூலியை கொடுக்கின்றனர். இது தவறாகும். ஏனெனில் ஃபாத்திஹா அத்தியாயம் தனக்கு தெரிந்தாலும் கூட குறிப்பிட்ட ஆலிம் அதை ஓதினால்தான் குணம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அவர் மக்களுக்கு தெரியாத பல வார்த்தைகளை கூறுவதால் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இவ்வாறு செய்வது தவறாகும்.

ஃபாத்திஹா அத்தியாயம் தெரியாதவர்களுக்கு ஓதிப் பார்த்து நிவாரணம் கிடைத்தால் மட்டும் கூலி பெறலாம். ஆனால் இன்றைய சூழல் அது போன்றல்ல. தெரிந்தவர்களும் ஆலிமிடம் செல்வது அவரின் மீதுள்ள நம்பிக்கையினால்தானே தவிர குர்ஆனின் மீதான மதிப்பில் அல்ல. மேலும் நிவாரணம் கிடைப்பதற்கு முன்பே கூலியை பேசி பெற்றுக்கொள்வதாலும் இது தவறாகவிடும். எனவே மறுமை நன்மையை எதிர்ப்பார்த்து செய்கின்ற எந்த செயல்களுக்கும் கூலி பெறக்கூடாது.

முழுநேர மார்க்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கலாமா?

யாசீன் அத்தியாயத்தின் 21 வது வசனத்தில் “உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.” என்பதற்கு விளக்கம் கூறும்போது மார்க்கத்தை பிரச்சாரம் செய்பவர்கள் கூலி கேட்கக் கூடாது. அது தவறாகும் என்று விளக்கியிருந்தோம்.

அப்படியானால் பள்ளிவாசலில் இமாமாக அல்லது முஅத்தீனாக இருப்பவர்களுக்கு மாதாரந்திர சம்பளம் வழங்கப்படுகிறதே இது சரியானதா?” என்ற சந்தேகம் எழலாம். பொதுவாக மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்கு கூலி வாங்கக்கூடாது என்பதுதான் விதியாகும். எனினும் மார்க்கம் சார்ந்த விஷயங்களுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து, வேறு எவ்வித வருமானமும். இல்லாமல் இதையே முழுநேர பணியாக செய்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கலாம் என்பதை குர்ஆன் ஹதீஸிலிருந்து அறியமுடிகிறது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:273) ➚.)

பொருள் திரட்டி வருமானம் பார்க்க இயலாதவாறு அல்லாஹ்வுடைய மார்க்கப் பணிகளிலேயே தங்களை தடுத்துக் கொண்டவர்களுக்கு மக்களிடம் பெறப்படுகின்ற பொருளாதாரத்திலிருந்து ஊக்கத் தொகை வழங்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வும் இதை கூறுகிறது.

அம்ர் இப்னு சலிமா(ரலி) கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்… கூறுகிறார்’ என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)’ என்று கூறினார்கள்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள்.

தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை.

எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது.

எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

ஸஹீஹ்(புகாரி: 4302).

அல்லாஹ்வின் வசனங்களை மனனம் செய்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்ததால் ஏற்ப்ட்ட வறுமையை போக்க மக்கள் அவருக்கு ஆடையை அளித்திருக்கிறார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். மேலும் தர்மங்களை எத்தகையவர்களுக்கு வழங்கலாம் என்பதை அல்லாஹ் கூறுகிறான்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:60) ➚.)

வசதிபடைத்தவர்கள் ஜகாத் வழங்குவது கடமையாகும். ஜகாத் தொகையிலிருந்தே வசூலிப்பவருக்கு வழங்கலாம் என்பதை இவ்வசனம் அனுமதிக்கின்றது.

எனவே பள்ளிவாசல் இமாம், முஅத்தீன், ஜகாத் வசூலிப்பவர் போன்று மார்க்கத்திற்காக முழுநேர பணியாளர்களாக இருப்பவர்கள் தாங்களாக முன்வந்து பொருளாதாரத்தை கேட்பது சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்பதால் நாமே ஊதியம் வழங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்பதை மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் அறியலாம்.

உதாரணமாக போரில் வெற்றி பெறும்போது எதிரிகள் விட்டுச்செல்லும் கனீமத் பொருட்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு பங்கு வைத்து கொடுப்பார்கள். அதுவும் மேற்கண்ட அடிப்படையில்தான். மேலும் இமாமாக அல்லது முஅத்தீனாக பணிபுரிவருக்கு ஜந்து நேரம் தொழவைத்தால் அதிக ஊதியம் என்றும் அதற்கு குறைவாக தொழவைத்தால் குறைந்த ஊதியம் என்றும் வழங்கப்படுவதில்லை. மாறாக அவருடைய அர்ப்பணிப்புக்குதான் ஊதியம் வழங்கப்படுகிறது. தொழுகைக்காக வழங்கப்படுவதில்லை என்பதால் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படதாகும்.

22 வது வசனம்

22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்?” என்று அந்த நல்லடியார் கேட்கிறார். இவரது கேள்வியில் இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளது.

அல்லாஹ்வையே நம்மை படைத்துள்ளான். ஆகவே அவனையே நாம் வணங்க வேண்டும். அவனையல்லாத வேறு எதையும் யாரையும் வணங்குதல் கூடாது என்பது ஒன்று.

இன்னொன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொள்தல் மாத்திரம் போதாது. அவனை வணங்குதலும் அவசியமாகும் என்பதாகும்.

1. வணக்கத்திற்கு தகுதியற்றவற்றை வணங்குவது

2.அல்லாஹ்வை வணங்காமலிருப்பது

இரண்டுமே தவறு என்பதை இந்த வாசகம் உணர்த்துகின்றது. ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் அல்லாஹ்வை வணங்காமலிருக்க எனக்கென்ன நேர்ந்தது என்ற சிந்தளை அவசியம் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் இத்தகைய சிந்தனை இருந்ததை பின்வரும் சம்பவம் உறுதி செய்கின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான் “ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?” என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். “ருகூஉ’ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, “ருகூஉ’ செய்வார்கள்.

(புகாரி: 4837)

முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட தாங்கள் ஏன் இறைவணக்கத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நபியிடம் கேட்கப்பட்ட போது நான் நன்றி செலுத்தக் கூட்டிய அடியானாக ஆகக் கூடாதா? என்று கேள்வியெழுப்பி நான் எப்படி அல்லாஹ்வை வணங்காமலிருப்பேன்? என்கிறார்கள்.

யாசீன் அத்தியாயத்தில் கூறப்பட்ட நல்லாடியாரிடம் இருந்த அதே சிந்தனை நபிகளாரிடமும் இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.

22 வது வசனம்

22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்?” என்று அந்த நல்லடியார் கேட்கிறார். இவரது கேள்வியில் இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளது.

அல்லாஹ்வையே நம்மை படைத்துள்ளான். ஆகவே அவனையே நாம் வணங்க வேண்டும். அவனையல்லாத வேறு எதையும் யாரையும் வணங்குதல் கூடாது என்பது ஒன்று.

இன்னொன்று அல்லாஹ்வை நம்பிக்கை கொள்தல் மாத்திரம் போதாது. அவனை வணங்குதலும் அவசியமாகும் என்பதாகும்.

1. வணக்கத்திற்கு தகுதியற்றவற்றை வணங்குவது

2.அல்லாஹ்வை வணங்காமலிருப்பது

இரண்டுமே தவறு என்பதை இந்த வாசகம் உணர்த்துகின்றது. ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் அல்லாஹ்வை வணங்காமலிருக்க எனக்கென்ன நேர்ந்தது என்ற சிந்தளை அவசியம் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் இத்தகைய சிந்தனை இருந்ததை பின்வரும் சம்பவம் உறுதி செய்கின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான் “ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?” என்று கேட்டேன். அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?” என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். “ருகூஉ’ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, “ருகூஉ’ செய்வார்கள்.

(புகாரி: 4837)

முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட தாங்கள் ஏன் இறைவணக்கத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நபியிடம் கேட்கப்பட்ட போது நான் நன்றி செலுத்தக் கூட்டிய அடியானாக ஆகக் கூடாதா? என்று கேள்வியெழுப்பி நான் எப்படி அல்லாஹ்வை வணங்காமலிருப்பேன்? என்கிறார்கள்.

யாசீன் அத்தியாயத்தில் கூறப்பட்ட நல்லாடியாரிடம் இருந்த அதே சிந்தனை நபிகளாரிடமும் இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம்.

23 வது வசனம்

23. அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் மறுமைநாளின் பரிந்துரை

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளை ஏற்படுத்தமாட்டேன் என்றும் அல்லாஹ் ஒரு தீங்கை நாடிவிட்டால் வேறு யாரும் பரிந்துரை செய்து தன்னை காப்பாற்ற முடியாது என்பதையும் நல்லடியார் நன்றாக உணர்த்துகிறார். சிலர் அல்லாஹ்வைத் தவிர மற்ற போலி தெய்வங்களிடம் சென்று வணங்குகின்றனர். மேலும் அவை தங்களுக்கு நன்மை செய்யும் என நினைக்கின்றனர்.

இவ்வாறே மக்கத்து காஃபிர்களும் வாதிட்டனர்

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3) ➚.)

இந்த கருத்தையும் நல்லடியார் மறுக்கிறார். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நமக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய இயலாது என பதிவு செய்கிறார்.

பரிந்துரை செய்ய முடியுமா?

மக்கள் நினைப்பது போன்று யார் வேண்டுமானாலும் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்துவிட முடியாது. மாறாக அல்லாஹ் அனுமதித்தவர்களுக்கு மட்டும்தான் அது இயலும்.

அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?

(அல்குர்ஆன்: 2:255) ➚.)

பரிந்துரை செய்பவரையும் பரிந்துரை செய்யப் படுபவரையும் அல்லாஹ்வே முடிவு செய்வான். இதை பின்வரும் சம்பவத்திலிருந்து அறியலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் ‘(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!’ என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள்.

அவரிடம் ‘அல்லாஹ் தன்னுடைய கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தனர். எனவே, (இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள்’ என்று கூறுவார்கள்.

அதற்கு ஆதம்(அலை) அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்தவற்றை அவர்கள் நினைவுகூருவார்கள். பிறகு ‘நீங்கள் (எனக்குப் பின்) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நபி நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அன்னாரும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறி, (உலகில்) தாம் புரிந்தவற்றை நினைவுகூர்ந்து ‘அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள்.

உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்களும் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு, தாம் புரிந்த தவற்றை நினைவு கூருவார்கள். பிறகு ‘அல்லாஹ் உரையாடிய (நபி) மூஸாவிடம் செல்லுங்கள்’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை’ என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள்நினைவு கூர்ந்தபடி ‘நபி ஈசாவிடம் செல்லுங்கள்!’ என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள்.

அப்போது அவர்கள் ‘(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்’ என்று கூறுவார்கள். உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரம்பணிந்தவனாக சஜ்தாவில் விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதைக் கோர) என்னைவிட்டுவிடுவான்.

பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும. சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் என்னுடைய தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான்.

பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரம் பணிந்தவனாக சஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாகக் குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள்.

என அனஸ்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பார்களில் ஒருவரான கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள், ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர’ என்பதற்கு விளக்கமாக, ‘நிரந்தர நரகம் கட்டாயமாம்விட்டவர்களைத் தவிர’ என்று கூறுவார்கள்.

ஸஹீஹ்(புகாரி: 6565).

இதே கருத்தை பின்வரும் வசனங்களும் தெளிவுபடுத்துகிறது.

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 10:3) ➚.)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18) ➚.)

நபி (ஸல்) அவர்களை போன்று யாருக்கு அல்லாஹ் அனுமதியளித்தானோ அவர்தான் பரிந்துரை செய்ய இயலும். இவைதான் 23 வசனத்தின் விளக்கமாகும்.

24 வது வசனம்

24. அப்போது நான் பகிரங்கமான வழி கேட்டில் ஆவேன்,

அல்(அல்குர்ஆன்: 36:24)

22, 23 ஆகிய வசனங்களில் அல்லாஹ்வை மட்டும்தான் வணங்க வேண்டும் என்பதை கூறிய நல்லடியார் 24 வது
வசனத்தில் மற்றவர்களை வணங்கினால் அது வழிகேடு என்பதை விவரிக்கிறார்.

எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் மற்றவர்களை நாம் வணங்கினால் வழிகேட்டில் சென்றுவிடுவோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.