08) ஜிஹாதின் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை! அதிர்ச்சி வரலாறு

ஜிஹாத் - ஓர் ஆய்வு

“ஜிஹாத்’ என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம்.
ஜிஹாத் (கிதால் – ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பற்றியும் பார்ப்போம்.
ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்த போர் முனைகளில் வெட்டி வீழ்த்தப்பட்ட இஸ்லாத்தின் எதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்களுக்குப் பிறகு ஜிஹாத் (கிதால்) என்ற பெயரில் நடந்த கலகங்களினாலும், உள்நாட்டுக் குழப்பங்களினாலும் முஸ்லிம்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று சொல்லுமளவிற்கு பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
இத்தகைய துயரச் சம்பவங்கள் ஏற்படாமலிருக்க எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? முஸ்லிம்கள் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை பெருமானார் (ஸல்) அவர்கள் வழங்காமலிருக்கவில்லை. இது பற்றிய எச்சரிக்கையைச் செய்யாமலும் மரணிக்கவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது, அரஃபா பெருவெளியில் ஆற்றிய உரையில், முஸ்லிம்களின் உயிர்களும், உடைமைகளும், மானமும் கியாமத் நாள் வரை புனிதம் வாய்ந்தது என்று பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். தனக்குப் பிறகு முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டு இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)களாய் ஆகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் எச்சரித்திருக்கிறார்கள்.

பெருமானாரின் இறுதி ஹஜ் உரை

நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில், “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களுடைய புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்கள் செயல்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகேடர்களாக நீங்கள் மாறி விடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில் இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப் படுகின்றதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவர்களில் சிலரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராக இருக்கலாம்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “நான் (உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? நான் உங்களிடம் சேர்த்து விட்டேனா?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),(புகாரி: 7447)
நபி (ஸல்) அவர்கள் விடை பெறும் ஹஜ்ஜின் போது, (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், “மக்களை மவுனமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். பின்னர், “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறை மறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி),(புகாரி: 6869)
மேலும் பார்க்க: ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்: 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6785, 6868, 7077, 7078, 7079, 7080
வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்தும், அரும்பெரும் தியாகங்களைச் செய்தும், ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டி, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பெருமானார் (ஸல்) அவர்கள் நிறுவினார்கள்.
அந்த சாம்ராஜ்ஜியத்தின் தூண்களான முஸ்லிம்கள் (நபித்தோழர்கள்) தங்களுக்கிடையே சண்டையிட்டு அழிந்து விடக் கூடாது, இஸ்லாமிய சாம்ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் எந்த அளவுக்குக் கவலையும், அக்கறையும் கொண்டு, தங்களின் இறுதிக் காலத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் எடுத்தியம்புகின்றன.
ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பின் இன்று வரை முஸ்லிம் சமுதாயம் அவர்களின் எச்சரிக்கையை மறந்து செயல்படக் கூடிய காட்சியைத் தான் காண முடிகிறது. அதனால் தான் முஸ்லிம்களுக்குள் குழப்பமும், பிளவும், பிரிவும் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக் கூடிய பரிதாப நிலை ஏற்பட்டது.
ஜிஹாத் (கிதால்) என்ற பெயரால் முஸ்லிம்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டிச் சாய்க்கும் அளவிற்கு நிலைமை மோசமானதற்கு என்ன காரணம்? ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு மத்தியில் குழப்பம் எங்கிருந்து துவங்குகிறது? அது எவ்வாறு தொடர்கிறது? என்பதை பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாத்தின் ஆரம்ப வரலாற்றிலிருந்து தொடங்கி தொடர்ந்து பார்ப்போம்.
பொதுவாகவே நபி (ஸல்) அவர்களின் காலந்தொட்டே முனாஃபிக் என்றழைக்கப்படும் நயவஞ்சகர்களின் ரகசிய நடவடிக்கைகள் முஸ்லிம்களைப் பெரிதும் பாதித்தே வந்துள்ளது. எதிரிகளையாவது அடையாளங்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும். ஆனால் முனாஃபிக்குகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடக்க இயலாது. பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் முனாஃபிக்குகள் பற்றி அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்ததால், மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்கலானார்கள். அவர்களின் நயவஞ்சகத்தனம் எடுபடவில்லை. இஸ்லாத்தை அழிப்பதற்காக முஸ்லிம்களை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நிர்வாகத் திறமையுடன், சிறந்த ஆட்சித் தலைவர்களாக திகழ்ந்தார்கள்.
இவ்விருவரின் ஆட்சியின் போதும், முனாஃபிக் (நயவஞ்சகர்)கள் இருந்த போதும், அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நரித்தனம் எடுபடவில்லை. எனவே எவ்வித குளறுபடிகளோ, கலகமோ, உள்நாட்டுக் குழப்பமோ ஏற்படவில்லை.
முனாஃபிக்குகள் விஷயத்தில் உமர் (ரலி) அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். அதன் விளைவாக உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் முனாஃபிக்குகள் அவர்களைக் கொலை செய்தார்கள்.
உமர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மூன்றாவது ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள்.
அதன் பின்னர் தான் முதன் முதலாக குழப்பம் தலை தூக்கியது. முனாஃபிக்(நயவஞ்சகர்)களும் தங்களின் கைவரிசையைக் காட்டத் துவங்கினார்கள். அவர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட சிறு சிறு அதிருப்தியால் ஏற்பட்ட குழப்பம் புரட்சியாக வெடித்து இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் போய் முடிந்தது.
இந்தத் துயரச் சம்பவத்தை நிகழ்த்துவதற்கு கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் “ஜிஹாத்’ தான். ஜிஹாத் என்ற பெயரில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
– உஸ்மான் (ரலி) அவர்கள் மீது ஒரு சாராருக்கு அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன?
– அந்த அதிருப்தி நியாயமானது தானா?
– அவர்களது ஆட்சிக்கு எதிராக “ஜிஹாத்’ பிரகடனம் ஏன் செய்யப்பட்டது?
– அவ்வாறு செய்யப்பட்டது சரியா?
என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை பற்றிய வரலாற்றுப் பதிவுகளுக்குள் செல்வோம்.
எந்த ஒரு உயர்ந்த அதிகாரப் பதவியாக இருந்தாலும், அந்தப் பதவியிலிருப்போரின் நண்பர்கள், உறவினர்கள் என நெருக்கமானவர்கள் யாராக இருந்தாலும், தங்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி சில சலுகைகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அரசாங்க வேலைகளையோ அல்லது சிறு சிறு அதிகாரப் பதவிகளையோ பெற்றுக் கொள்ள முயற்சிப்பார்கள். அவர்களது முயற்சிக்கு அப்பதவியிலிருப்பவர் வளைந்து கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிப்பார்கள். இதைப் பார்க்கக் கூடிய நடுநிலையாளர்கள் இதை எதிர்க்கக் கூடிய நிலையை பொதுவாக நாம் பார்த்து வருகிறோம்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது இது தான் நடந்தது. அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமான குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) அவர்களின் கோத்திரமான “பனூ உமைய்யா’ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது என்பது தான்.
இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், உறவு, நட்பு ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஆட்சி புரிந்தார்கள். பெருமானாரின் கோத்திரமான ஹாஷிம் கோத்திரத்தில் எத்தனையோ பேர் இருந்தும் அலீ (ரலி) அவர்களுக்கு மட்டும் தான் தகுதி அடிப்படையில் பல பொறுப்புகளை அளித்தார்கள்.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் எந்தப் பதவியையும் அளிக்கவில்லை.
அவர்களுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமர் (ரலி) அவர்கள் தங்களின் பத்தாண்டு கால ஆட்சியில், தமது கோத்திரத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நபருக்கு மட்டும் தகுதி அடிப்படையில் பதவியளித்தார்கள். அதுவும் குறுகிய காலத்திலேயே அந்த நபரையும் பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள்.
திறமை – தகுதியின் அடிப்படையில் உறவினர்கள், நெருக்கமானவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பது அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ தடை செய்த காரியம் அல்ல. ஆனாலும், தேவையற்ற சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவே அபூபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
எவ்வளவு தான் நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்தாலும் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டினால் நிச்சயமாக அவப்பெயரையும், குழப்பங்களையும் சந்தித்து, ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்த காரணத்தால், உமர் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக வரலாம் என்று அவர்கள் கருதிய உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) ஆகிய மூவரையும் தனித்தனியே அழைத்து,
“எனக்குப் பிறகு நீங்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்க நேரிட்டால், முஸ்லிம்களின் கடிவாளத்தை உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த எவரிடமும் கொடுத்துவிடக் கூடாது” என்று வாக்குறுதி வாங்கினார்கள். (ஆதார நூல்: அத்தபரீ)
பனூ உமையாக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம்
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஜிஹாத் என்னும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை வரிசையாகக் காண்போம்.
முதலில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டான உறவினர்களைப் பதவியில் அமர்த்தியது பற்றி பார்ப்போம்.

மர்வான் பின் ஹகம்

உஸ்மான் (ரலி) அவர்களின் சிறிய தந்தையான ஹகம் பின் அபீ அல்ஆஸ் என்பவர் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர். அதன் பிறகு மதீனாவிற்கு குடியேறினார். அவர் மதீனாவில் இருக்கும் போது, அவரது நடவடிக்கைகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காததால் ஹகமை மதீனாவை விட்டு வெளியேறி தாயிஃப் நகருக்கு செல்லும்படி கட்டளையிட்டார்கள். அப்போது மர்வானுக்கு 8 வயது.
அவர் தாயிஃபிலிருந்து மீண்டும் மதீனாவுக்கு வர அனுமதிக்குமாறு ஹகம் விடுத்த கோரிக்கையை, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் தங்களின் ஆட்சிக் காலத்தில் நிராகரித்து விட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஹகமும் அவரது மகன் மர்வானும் மதீனாவுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி உஸ்மான் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே திரும்ப மதீனாவுக்கு அழைக்க, நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்ததாகவும், அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் வாக்குறுதியளித்ததாகவும் அதனடிப்படையிலேயே இருவரையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்ததாகவும்” ஒரு அறிவிப்பில் காணப்படுவதாக இப்னு ஹஜர் (ரஹ்) அல் இஸாபா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் மீதான நன்னம்பிக்கையின் காரணமாகவே பெருமானார் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருப்பார்கள் என்று மக்களும் நம்பினார்கள். ஹகமையும், மர்வானையும் மதீனாவுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டதில் மக்களிடத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் மர்வான் பின் ஹகமுக்கு தனது ஆட்சியில் செயலாளர் என்னும் பெரிய பதவியை அளித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. தன் மகன் மர்வானின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க விஷயங்களில் ஹகம் தலையிட்டதையும் மக்கள் எதிர்த்தார்கள்.
அப்துல்லாஹ் பின் ஆமிர்
பஸ்ராவின் ஆளுநராக அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்கள் தனது மாமா மகனான அப்துல்லாஹ் பின் ஆமிரை நியமித்தார்கள்.
முஆவியா (ரலி)
பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த முஆவியா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிரியாவின் ஒரு பகுதியான டமாஸ்கஸிற்கு மட்டுமே ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஹிமஸ், ஃபலஸ்தீன், உர்துன், லெபனான் மற்றும் சிரியா முழுவதையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள்.
இப்போதைய சிரியா, லெபனான், உர்தூன், இஸ்ரேல் ஆகிய நான்கு நாடுகளின் மொத்த நிலப்பரப்புக்கும் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் முஆவியா (ரலி) உட்பட நான்கு ஆளுநர்கள் இருந்தார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் அனைத்தையும் முஆவியா (ரலி) தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து விட்டார்.
மேலும், ஜனாதிபதிக்குக் கட்டுப்பட்டு மாகாண ஆளுநர் செயல்படுவதற்குப் பதிலாக, சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி), ஜனாதிபதியே தன்னைச் சார்ந்திருக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தார். அந்த அளவுக்கு முஆவியா (ரலி) அவர்களின் ஆதிக்கம் இருந்தது. இதைப் பலரும் ஜீரணிக்கவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் மீதான எதிர்ப்புணர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
வலீத் பின் உக்பா
வலீத் பின் உக்பா என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். உஸ்மான் (ரலி) அவர்களது தாயாரின் வேறொரு கணவருக்கு பிறந்த சகோதரர். நபி (ஸல்) அவர்கள், பனூ முஸ்தலிக் என்ற கோத்திரத்தினரிடம் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை வலீதிடம் ஒப்படைத்திருந்தார்கள். அவர் அக்கோத்திரத்தினரிடம் சென்று ஜகாத் தொகையைக் கேட்காமல், அவர்கள் தர மறுக்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்லி விட்டார். நபி (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று, அவர்களுக்கெதிராக படை திரட்டி விட்டார்கள். இதை அறிந்த அக்கோத்திரத்தினர் மதீனாவுக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் “நாங்கள் ஜகாத் கொடுக்கக் காத்திருந்தோம். ஆனால் இவர் எங்களிடம் வந்து கேட்கவில்லை” என்ற உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்கள்.
இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு வசனத்தையே இறக்கினான்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:6)
(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)
வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)
இத்தகைய தன்மையைக் கொண்ட வலீதை சில காலத்திற்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் பணியில் அமர்த்தினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் இறுதிக் காலத்தில் பனூ தக்ளப் கோத்திரத்தினர் வாழ்ந்த அல்ஜஸீரா பகுதியில் சிறிய அதிகாரியாக பணியமர்த்தினார்கள். (ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப்,)
உஸ்மான் (ரலி) அவர்கள் தனது ஆட்சியின் போது, சிறு அதிகாரியாக கீழ் மட்டத்தில் பதவி வகித்த வலீத் பின் உக்பாவை திடீரென கூஃபாவின் ஆளுநராக ஆக்கினார்கள். அது வரை கூஃபாவின் ஆளுநராக பதவி வகித்த ஸஃது வின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பதவியிலிருந்து நீக்கினார்கள்.
ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமியப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்கள். கல்வியறிவிலும், மார்க்கப் பற்றிலும் வலீதை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். மேலும் “மஜ்லிஸ் ஷுரா’ என்றழைக்கப்படும் தலைமை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினர். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என பத்து தோழர்களைப் பற்றி அறிவித்தார்கள். அஷ்ரதுல் முபஷ்ஷரா எனப்படும் அவர்களில் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களும் ஒருவர். எனவே அவர்களை நீக்கியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் வலீத் பின் உக்பா குடிகாரர் என்பதும், ஒரு முறை சுபுஹ் தொழுகையை 4 ரகஅத்துகள் தொழ வைத்தார் என்றும், தொழுகை முடிந்ததும் இன்னும் தொழ வைக்கவா? என்று கேட்டும் அசிங்கப்பட்டு போயிருக்கிறார். இச்செய்தி மதீனா வரை எட்டி மதீனாவில் மக்கள் எல்லாம் பேச ஆரம்பித்து, ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களின் கவனத்திற்குச் சென்ற பின், இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்கள். அக்குழுவின் விசாரணையில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு தண்டனையும் அளிக்கப்பட்டது. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவுது, ஃபத்ஹுல் பாரி, உம்தத்துல் காரீ சுருக்கம்)
வலீத் பின் உக்பாவின் இச்செயலால் மக்கள் தங்களின் அதிருப்தியை உஸ்மான் (ரலி) அவர்கள் மீதே வெளிப்படுத்தினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸஃது
பனூ உமைய்யா கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸஃது என்பவர் இஸ்லாத்தைத் தழுவிய பின்பு “முர்தத்’ ஆக மாறினார். மக்கா வெற்றியின் போது, கொல்லப்பட வேண்டியவரின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு முறை அண்ணலாரிடம் இவரை அழைத்துச் சென்று மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அண்ணலார் இவரை மன்னித்தார்கள்.
எகிப்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) என்ற நபித்தோழர் ஆளுநராகப் பொறுப்பேற்று, அந்நாட்டு மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்று நல்ல செல்வாக்குடன் ஆட்சி நடத்தி வந்தார்கள். இவரது ஆட்சியின் போது, காரிஜியாக்கள் கூட்டத்தினர் முஸ்லிம்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். (காரிஜியாக்கள் என்றால் யார்? அவர்களது கொள்கை என்ன? போன்ற விரிவான விளக்கத்தை பின்னர் பார்க்கவிருக்கிறோம். இன்ஷாஅல்லாஹ்)
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் காரிஜியாக்களின் முயற்சிகளை முறியடித்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்கள். காரிஜியாக்களின் குழப்பத்தை முறியடித்த பிறகு எகிப்திய மக்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை விரும்பாத சிலரைக் கொண்டு, அவரை ஆளுநர் பதவியிலிருந்து இறக்குவதற்கு காரிஜியாக்கள் திட்டம் தீட்டினார்கள். அதனடிப்படையில் ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு நெருக்கடிகள் தரப்படுகின்றது. ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விட்டார்கள். பின்னர் அளவுக்கு மீறிய நெருக்கடி ஏற்பட்ட பின், அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி விட்டு அப்துல்லாஹ் பின் ஸஃதை எகிப்தின் ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்கள் நியமிக்கிறார்கள். ஆனாலும் தொழுகை நடத்தும் அதிகாரத்தை மட்டும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கே உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்தார்கள்.(அக்காலத்தில் ஆட்சித் தலைவர்கள் தான் தொழுகைக்கும் இமாமாக இருப்பது வழக்கம்). நாளடைவில் இமாமத் பொறுப்பும் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
உஸ்மான் (ரலி) அவர்களின் இச்செயல் எகிப்திய மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, மக்களால் உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.
அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை தன்னை (மதீனாவுக்கு) வந்து சந்திக்குமாறு உஸ்மான் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அம்ர் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், தேவையெனில் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னை வந்து பார்க்கட்டும் என்று சொல்லி விட்டார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்

உஸ்மான் (ரலி) அவர்கள் உறவினர்களைப் பதவியிலமர்த்தினார் என்ற குற்றச்சாட்டிற்கு உதாரணமாக, பெரிய பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் பற்றியும், அவர்களது தகுதிகளைப் பற்றியும் அதுவே மக்களிடம் பெரும் அதிருப்தியைத் தோற்றுவிக்கக் காரணமானது என்பதையும் மேலே ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்த்தோம்.
பொதுவாக அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் குணநலன்களுக்கும், உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்களுக்கும் அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. உஸ்மான் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை மிகவும் இரக்க குணம், வெட்க குணம், எளிதில் யாரையும் நம்பி விடக் கூடிய சுபாவமும் உடையவர்கள்.
அவர்களின் இத்தகைய வெள்ளை உள்ளம் தான் உறவினர்கள் விஷயத்திலும் அக்கறைக் காட்ட வைத்தது. அதுவும் அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களை தகுதியற்றவர்கள் என்று தெரிந்து பதவியில் அமர்த்தவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள், தகுதியானவர்கள் என்று நினைத்தே அமர்த்தினார்கள். தகுதியற்றவர்கள் என்று தெரிந்த பின் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் செய்தார்கள், தண்டிக்கவும் செய்தார்கள் என்பதை “வலீத் பின் உக்பா’வின் சம்பவம் எடுத்துரைக்கிறது.
உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களில் பெரும்பாலோர் மக்கா வெற்றி வரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம்களை எதிர்த்து விட்டு, மக்கா வெற்றியின் போது பெருமானார் (ஸல்) அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினருமே (உ.தாரணம்: முஆவியா (ரலி), வலீத் பின் உக்பா, மர்வான் பின் ஹகம்) என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மூத்த நபித்தோழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எகிப்திலிருந்து ரகசியப் படை கிளம்புதல்

எகிப்தின் ஆளுநர் பதவியிலிருந்து அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களை நீக்கியதை ஏற்றுக் கொள்ளாத சிலர், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு கூட்டத்தைத் திரட்டுகிறார்கள். ஆட்சிக்கு எதிராக திட்டம் வகுத்து ரகசியமாக செயல்பட “பைஅத்’ (உறுதிமொழி) செய்த 600 பேர் தயாராகிறார்கள்.
இந்த ரகசிய பைஅத் செய்த 600 பேர் கொண்ட கூட்டம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய – புனித நகரமான – சண்டையிடுவதற்குத் தடை செய்யப்பட்ட இடமான – மதீனாவுக்குள் நுழைந்து தலைநகரையே கைப்பற்றுவதற்கான திட்டத்தில் – அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டது.
600 பேரும் மதீனாவுக்குள் ஒட்டுமொத்தமாக நுழைவது கடினம். அது இயலாத காரியம் என்றெண்ணி உம்ராவுக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு இஹ்ராம் கட்டிய நிலையில் ஹிஜ்ரி 35-ம் ஆண்டு ரஜப் மாதத்தில் மதீனாவுக்குச் செல்கிறது.
உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிரான இந்த அதிரடி ரகசிய நடவடிக்கைகளை தனது உளவாளிகள் மூலம் அறிந்த எகிப்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அப்துல்லாஹ் பின் ஸஃத் அவர்கள், உடனடியாக உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தகவலைப் பெற்ற உஸ்மான் (ரலி) அவர்கள், தலைநகரைக் கைப்பற்ற எகிப்திலிருந்து ரகசியப் படை வரும் தகவலைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அதை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அலீ (ரலி) அவர்கள், தம்முடன் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக் கொண்டு மதீனாவின் நுழைவாயிலுக்குச் சென்று, எகிப்திலிருந்து வந்த ரகசியப் படையினருடன் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிராக அவர்கள் படை திரட்டி வந்ததற்கான காரணங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள், அவர்களின் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, ஒவ்வொன்றுக்கும் உஸ்மான் (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது போன்றே பதிலளித்து, அவர்களை ஓரளவு திருப்திப்படுத்தி, திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

உஸ்மான்(ரலி) மீதான குற்றச்சாட்டுக்கு அலீ (ரலி) விளக்கம்

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்புக்கும், அவர்களுக்கெதிரான புரட்சிக்கும் மிகமுக்கியக் காரணமான உறவினர்களுக்கு சலுகை அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த வரலாற்று ஆதாரங்களை மேலே பார்த்தோம்.
அவர்கள் தங்களின் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த புரட்சியாளர்ளை அலீ (ரலி) அவர்கள் மதீனா எல்லையில் தடுத்து நிறுத்திய போது, நாம் மேலே குறிப்பிட்டபடி மூத்த ஸஹாபாக்களையெல்லாம் புறக்கணித்து விட்டு இளைஞர்களையே உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்துகிறார் என்ற பிரதான குற்றச்சாட்டுடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அலீ (ரலி) அவர்களிடம் முன்வைத்தார்கள். அவற்றுக்கு அலீ (ரலி) அவர்கள் என்ன பதில் சொல்லி அவர்களைத் திருப்திபடுத்தினார்கள் என்பதை பார்ப்போம்.

1. மூத்த ஸஹாபாக்களை விட்டு விட்டு இளைஞர்களுக்குப் பதவி

உஸ்மான் (ரலி) அவர்கள் இளைஞர்களுக்குப் பதவியளித்தார்கள் என்பதை குற்றமாகக் கருத முடியாது. நபி (ஸல் அவர்களும் கூட மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற இளைஞர்களுக்குத் தகுதி அடிப்படையில் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி அதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார்கள். அவை யாவன:
• அத்தாப் பின் உஸைது என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவியவர், அவருக்கு 20 வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் நிர்வாகியாக பதவியளித்தார்கள்.
• உஸாமா பின் ஜைத் அவர்களை ஒரு போருக்குத் தளபதியாக பெருமானார் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள்.
• தன்னை நபி என்று சொல்லிக் கொண்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த முஸைலமா என்பவனுக்கு எதிராக போருக்குப் புறப்பட்ட படையின் தளபதியாக இளைஞர் உஸாமா அவர்களை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று விளக்கமளித்தார்கள்.

2. கோத்திரத்தாருக்கு முன்னுரிமை

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து குடியேறி அங்கு ஆட்சி அமைத்த பிறகு எல்லாத் துறைகளிலும் மதீனா வாசிகளான அன்சாரிகளை விட மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைப் புறக்கணித்து விட்டார்கள். மக்கா வாசிகள் என்பதற்காக முன்னுரிமையளித்து விட்டார்கள் என்று குற்றமாக எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இது ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக படை திரட்டக் கூடிய அளவுக்கு பெரிய குற்றமாகாது என பதிலளித்தார்கள்.

3. குர்ஆனை எரித்தார்

அடுத்து அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) குர்ஆனை எரித்து விட்டார். எனவே குர்ஆனை எரித்தவர்களுக்கு எதிராக போர் செய்யலாம் என்ற வாதத்தை வைத்தார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு ஏன் உருவானது?
நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப 23 ஆண்டுகள் இறக்கப்பட்டது. அவ்வப்போது அவர்களுக்கு அருளப்படும் வசனங்களை எழுதிக் கொள்வதற்காக “காத்திபுல் வஹீ’ – வஹீயை எழுதுபவர்கள் என்று சில நபித்தோழர்கள் இருந்தார்கள்.
திருக்குர்ஆனை எழுதி வைத்திருந்த நபித்தோழர்கள் அனைவரிடத்திலும், முழுக்குர்ஆனும் இருந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பல பகுதிகளுக்கும் சென்ற அந்த நபித்தோழர்கள் தங்களிடமிருந்த வசனங்களைக் கொண்டு மட்டுமே மக்களிடம் போதனை செய்து வந்தார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காக தமது ஆட்சியின் போது எல்லா நபித்தோழர்களிடமும் இருந்த கையெழுத்துப் பிரதியை சேகரித்து, முழுக் குர்ஆனையும் தொகுக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு “ஜாமிஉல் குர்ஆன்’ (குர்ஆனை ஒன்று சேர்த்தவர்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
அவ்வாறு முழுக் குர்ஆனையும் தொகுத்த பின் துண்டு துண்டாக இருந்த வசனங்களை – அவை மட்டும் தான் குர்ஆன் என்ற நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எரித்து விட்டார்கள். (உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனின் கையெழுத்துப் பிரதி இன்று உலகிலேயே இரண்டு தான் உள்ளது. அவற்றில் ஒன்று ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்ட் மியூசியத்திலும், மற்றொன்று துருக்கியில் இஸ்தான்புல் மியூசியத்திலும் உள்ளது)
அவ்வாறு நல்ல நோக்கத்திற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் அத்தகைய குர்ஆன் பிரதிகளை எரித்ததை, காரிஜியாக்களும், முனாபிக்குகளும் பெரிதுபடுத்தி, உஸ்மான் குர்ஆனை எரித்து விட்டார். எனவே அவருக்கு எதிராக ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம்களிடம் பரப்பி விட்டார்கள். இந்த விளக்கத்தை அலீ (ரலி) அவர்கள் சொன்ன பிறகு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

4. ஹஜ்ஜின் போது தொழுகையில் மாறு செய்தார்

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது தொழுகையில் கஸர் (குறைத்துத் தொழுதல்) செய்ய வேண்டும் என்றே வழிகாட்டி இருக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் கஸர் செய்யாமல் தொழுதார் என்பது அவர்கள் அடுத்து வைத்த குற்றச்சாட்டு
இதற்குப் பதிலளித்த அலீ (ரலி) அவர்கள், மக்காவை அவர் தனது சொந்த ஊராகக் கருதியதால் சொந்த ஊரில் கஸர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால் அவர் அப்படி தொழுதார் என்று விளக்கமளித்தார்கள்.

5. விளை நிலங்களை அரசுடமை ஆக்கினார்

(அக்காலத்தில் உரிமை கொண்டாடப்படாத விளைநிலங்கள் இருந்தன. அவற்றை யாரெல்லாம் தங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களுக்குச் சொந்தம் என்ற நிலை இருந்து வந்தது. அதை மாற்றி அத்தகைய) நிலங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் சட்டமியற்றினார்கள். இது மக்கள் விரோதச் செயல் என்று குற்றச்சாட்டை வைத்தார்கள்.
இதற்குப் பதில் அளித்த அலீ (ரலி) அவர்கள், உரிமை கோரப்படாத விளைநிலங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கியதற்குக் காரணம், ஜகாத் ஒட்டகங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவற்றின் மேய்ச்சலுக்காக நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு தான் உஸ்மான் (ரலி) இந்தச் சட்டத்தை இயற்றினார். இது ஒரு குற்றமாகாது. மேலும் ஏற்கனவே உமர் (ரலி) அவர்களும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று விளக்கமளித்தார்கள்.
ஆட்சித் தலைவருக்கு அலீ (ரலி)யின் அறிவுரை
அதன்பிறகு அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் “உங்களின் ஆட்சி முறையில் மக்களின் அதிருப்தி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நீங்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் நடத்திய ஆட்சி முறையைப் பின்பற்றிச் செல்லுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது” என்று அறிவுரை கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு ஜும்ஆ குத்பாவின் போது, தனது ஆட்சியில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளுக்காக மனந்திருந்தி மக்களிடம் அழுது மன்னிப்புக் கேட்டார்கள்.
தான் இது நாள் வரை ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து சற்று விலகி இருந்து விட்டதாகவும், இனி அது போல இருக்க மாட்டேன், எந்த நேரமும் மக்கள் என்னை வந்து சந்தித்து தங்கள் குறைகளை முறையிடலாம். இனி சிறந்த முறையில் ஆட்சி செய்வேன் என்று உத்தரவாதமளித்தார்கள். அந்த குத்பாவின் போது, உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் நிலையை விளக்கி அழுததைப் பார்த்த மக்களும் அழுதார்கள்.
அதன் பிறகு சிலகாலம் மக்கள் ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்கக் கூடிய, குறை நிறைகளைப் பற்றி பேசக் கூடிய, ஆலோசனைகள் வழங்கக்கூடிய நிலை சிறிது காலம் தொடர்ந்தது.
மர்வானின் அடாவடி
உஸ்மான் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பின் மீது அதிக கவனம் செலுத்தி, குறைகளைக் களைந்து, நடவடிக்கை எடுத்து வருவதை ஜீரணிக்க முடியாத மர்வான் பின் ஹகம் (தலைமைச் செயலர்), ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே பல காரியங்களைச் செய்யத் துவங்கினார். அவரது செயல்களுக்கான பழியை உஸ்மான் (ரலி) அவர்களே சுமக்க வேண்டியதாயிற்று. ஏனைய சஹபாக்களுக்கும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டிக்க முற்பட்டார். தன்னை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார். மஜ்லிஸ் ஷுராவில் சஹாபாக்களைக் கண்டித்துப் பேசவும் ஆரம்பித்தார். இதைப் பெரும்பாலான சஹாபாக்கள் விரும்பவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியார் நாயிலா (ரலி) அவர்களுக்குக் கூட மர்வானின் செயல் பிடிக்கவில்லை. ஒரு முறை தனது கணவரிடம், “நீங்கள் மர்வானின் பேச்சைக் கேட்டு நடந்தால் உங்களைக் கொலை செய்யாமல் விடமாட்டார். அவருக்கு அல்லாஹ்வின் மீது அச்சமோ, அன்போ, மதிப்போ இல்லை” என்று நேரடியாகவே எச்சரிக்கவும் செய்தார்.
மக்களெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களை மர்வான் தன் கையில் போட்டுக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மீண்டும் அதிருப்தியும், குழப்பமும் தலைதூக்குகிறது. அலீ (ரலி) அவர்களும் மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டிக்கிறார்கள்.

ஜிஹாத் (கிதால்) பிரகடனம்

இந்நிலையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் – ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால், “உஸ்மானை எதிர்ப்பது தான் மிகப்பெரிய ஜிஹாத் (அக்பருல் ஜிஹாத்)” என்ற கருத்து மக்களிடம் உருவாக்கப்படுகிறது.
முன்னர் எகிப்திலிருந்து மட்டுமே ஒரு ரகசியக் கூட்டம் மதீனாவைக் கைப்பற்ற வந்த நிலை மாறி, இப்போது பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் அடங்கிய கூட்டம் ஆயுதங்களுடன் மதீனாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றக் கிளம்பி விட்டது.
அக்கூட்டத்தினரில் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அலீ (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு எகிப்திலிருந்து வந்த கூட்டமும், ஜுபைர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கூஃபாவிலிருந்து வந்த கூட்டமும், தல்ஹா (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஸராவிலிருந்து வந்த கூட்டமும் மதீனாவை முற்றுகையிட்டன. ஆனால் அம்மூவருமே இவர்களின் செயலை அங்கீகரிக்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை.
மேலும் “ஜிஹாத்’ என்று சொல்லிக் கொண்டு படைதிரட்டி வந்தவர்கள் யாரும் தத்தமது பகுதி மக்களின் பிரதிநிதிகளுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரத்துடன் வந்தவர்களுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு எதிராக, புனித நகருக்குள் புகுந்து சண்டையிடுவதையும், ஹராமாக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதமேந்தி வருவதையும், முஸ்லிம்களுக்குள் அதுவும் பெருமானாரின் தோழர்களுக்குள் மோதிக் கொள்ளும் போக்கையும் பெரும்பாலான நபித்தோழர்கள் விரும்பவில்லை. இந்தப் போக்கைக் கண்டிக்கவே செய்தார்கள். ஏராளமான நபித்தோழர்கள் தடுத்தார்கள். எதிர்பாராத விதமாக கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களுடன் புகுந்ததாலும், நிராயுதபாணிகளாக அவர்கள் இருந்ததாலும், புனித மண்ணில் போரிடக் கூடாது என்ற காரணத்தாலும் அவர்கள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் போனது. இத்தகைய பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாக இருந்ததால் இறுதியில் கிளர்ச்சியானர்கள் உஸ்மான் (ரலி)யின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் சொன்னவுடன் பதவி விலக முடியாது. அதேசமயம் உங்களின் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
உஸ்மான் (ரலி) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த போது நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் இது பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “ஒரு சிலர் ஒன்று கூடி பதவி விலகச் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் பதவி விலகத் தேவையில்லை. அத்தகைய ஒரு நிலையை முஸ்லிம்களிடத்தில் நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள். அதற்கான வாசலைத் திறந்து விட்டு விடாதீர்கள்” என்று கூறினார்கள். (தபகாத்து இப்னு சஅத்)
உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விடுவார்களோ என்று சில சஹாபாக்கள் அஞ்சினார்கள். எனவே அவர்களைப் பாதுகாக்க உஸ்மான் (ரலி) அவர்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டைச் சுற்றி மதீனாவிலிருந்த சஹாபாக்களில் ஒரு கூட்டம் காவல் காத்து வந்தது. அவ்வாறு பாதுகாப்புக்காக நின்றவர்களில் அலீ (ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்களும் ஒருவர். அந்தப் பாதுகாப்பு வளையத்தைச் சுற்றி உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக வந்த ஆயுதந்தாங்கிய கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாத அளவுக்கு காவல் நிற்கிறது.
இந்நிலையிலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆ குத்பா நிகழ்த்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ குத்பாக்களில் ஒரு முறை மிம்பரிலிருந்து இழுத்துக் கீழே வீசப்பட்டு உஸ்மான் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போது, முற்றுகையிட்டிருந்த கூட்டத்தினரிடம், “ஒருசில குற்றங்களின் அடிப்படையில் ஒருவரைக் கொலை செய்ய மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு எந்தக் குற்றமும் செய்யாத என்னை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். தான் செய்த நல்லறங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தார்கள்.
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, “ஒரு குடிநீர் கிணறு உள்ளது. அதை யாராவது விலை கொடுத்து வாங்கி வக்ஃப் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? நபியின் பள்ளிவாசலை விஸ்தீரணம் செய்தேனே! என்று ஒவ்வொன்றாகச் சொல்லி தன்னை விடுவிக்கும்படி கோரினார்கள். ஆனாலும் அக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை.
இதனிடையே உஸ்மான் (ரலி) அவர்களை வீட்டுக்காவலின் போது சந்தித்த ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நிலைமை மோசமடைவதைக் கண்டு அன்சாரிகள் அனைவரும் தங்களுக்காக அணிதிரளத் தயாராக உள்ளதாக அறிவித்தார். அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) ஆகியோரும் இதையே கூறினார்கள். ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் நான் அவர்களுடன் இப்புனித மண்ணில் போரிடத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார்கள்.
ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்பது ஒருபுறமிருக்க, ஒரு இஸ்லாமிய ஆட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சிக்கெதிராக அணிதிரண்டு வந்தவர்களை எதிர்த்து ஆட்சியாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு பாதுகாப்பாக வீட்டைச் சுற்றி இருந்த சஹபாக்களைக் கூட நீங்கள் எனக்காக கஷ்டப்பட வேண்டாம், போய் விடுங்கள் என்று கூறினார்கள்.
அச்சமயத்தில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். உச்சக்கட்டமாக உம்முல் முஃமினீன் என்றழைக்கப்படும் பெருமானார் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (முஆவியா (ரலி)யின் சகோதரி) கூட அவமானப்படுத்தப்பட்டார்கள். “இழிவான இச்சூறாவளியில் சிக்கி நானும் என்னை அவமானப்படுத்திக் கொள்ளவா?” என்று கேட்டபடி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று விட்டார்கள்.
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக உஸ்மான் (ரலி) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இறுதியாக ஒருநாள் வீட்டிற்குள் வைத்தே உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். (இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவர்களின் வீடும் சூறையாடப்பட்டது. சொத்துக்களும் அபகரிக்கப் பட்டன.
உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் முனாஃபிக்குகள் என்று சொல்லப்பட்டாலும் அச்செயலில் ஈடுபட்டவர்களில் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பது தெளிவாகிறது.
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகனார் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களின் தாடியைப் பிடித்து இழுத்த போது, உஸ்மான் (ரலி) அவர்கள் மிகவும் மனமுடைந்து போய் அவரிடம், “முஹம்மதே! உனது தந்தை அபூபக்கர் கூட எனது தாடியில் கை வைத்தது கிடையாதே” என்று அழுதிருக்கிறார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகத் திரண்டவர்கள் – அவர்களைக் கொல்லுமளவுக்குச் சென்றவர்கள் அத்தனை பேரும் இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)கள் அல்ல. ஆனாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் ஏற்பட்ட குறையின் காரணமாகவே அவர்கள் தவறான முடிவுக்குச் சென்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அவை திருத்திக் கொள்ளக் கூடியவை தான். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இத்தகைய சாதாரண குற்றச்சாட்டுகளைத் தவிர அவர்களது ஆட்சி முறை போற்றத்தக்க வகையில் தான் இருந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது. அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் பரிகாரம் காணக் கூடியவையாகத் தான் இருந்தனவே தவிர பழிதீர்க்கக் கூடியதாக இல்லை.
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜிஹாத்
உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தவர்கள் வேண்டுமென்றே உஸ்மானைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, சொந்தப் பகையின் காரணமாகவோ இவ்வாறு செயல்படவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை அநீதி, அக்கிரமம் நிறைந்ததாக இல்லை. ஆனாலும் அவரை எதிர்த்தவர்கள் பார்வையில் சிறு சிறு தவறுகள் அநீதியாக – அக்கிரமமாகத் தெரிந்தது. அதன் காரணமாகவே “அக்கிரமக்கார ஆட்சியை எதிர்த்து ஜிஹாத்” என்ற அஸ்திரத்தை எடுத்தார்கள். ஆனால் அதன் மறுபக்கமான – ஒரு ஆட்சித் தலைவரின் கீழ் குடிமக்கள் எப்படி நடக்க வேண்டும், ஆட்சியாளருக்கு எதிராக அணி திரள்வதற்கு உரிய காலகட்டம் என்ன? ஒரு ஆட்சியாளருக்கு எது வரை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் – என்று பெருமானார் (ஸல்) அவர்கள் விதித்துள்ள நெறிமுறைகளை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.
சுருக்கமாகச் சொல்தென்றால், நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட தவறு என்பது தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்ததும், அவர்களை எதிர்த்தவர்கள் நடந்து கொண்ட முறையும்.
(இந்த சமுதாயத்தில்) தலைவர்கள் தோன்றுவார்கள். (அவர்களை) அறிந்து (அடையாளங் கண்டு) வெறுப்பீர்கள். (அவர்களை) அறிந்து கொள்பவர் (பாவத்தை விட்டு) தப்பித்துக் கொள்வார். வெறுப்பவர் விமோசனம் அடைந்து விடுவார். எனினும் அவர்களை திருப்தி கொண்டு பின்பற்றுபவர்கள் தான் (விமோசனம் அடைய மாட்டார்கள்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், தொழுது கொண்டிருக்கும் வரை (அவர்களுடன் போராட) வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி),(முஸ்லிம்: 3445, 3446)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப் படுவதையும் நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்” என்று சொன்னார்கள். “அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகின்றீர்கள். அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கி விடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),(புகாரி: 7052)
மேற்கண்ட ஹதீஸ்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலும், அதற்கான தீர்வுகளைத் தத்ரூபமாக தருகின்ற வகையிலும் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
நன்மையையும், தீமையையும் (ஆட்சியில்) காணும் போது, தீமையைக் காண்பவர் அதைக் கண்டிக்க வேண்டும்; அவ்வாறு கண்டித்தால் தான் மறுமையில் தப்பித்துக் கொள்ள முடியும்; அந்தத் தீமையில் திருப்தியடைந்தால் தண்டனை தான் கிடைக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்பத்தான் அலீ (ரலி) போன்ற முக்கிய சஹபாக்கள் எல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்ததை அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. அதே போல அதிபருக்கு எதிராகப் படைதிரட்டி வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள். அவர்களின் செயலையும் சரி காணவில்லை. போர் (ஜிஹாத்) தொடுக்கும் அளவிற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் நடவடிக்கை வரம்பு மீறி விடவில்லை என்பதையும் எடுத்துரைக்கிறார்கள்.
ஆனால் உஸ்மான் (ரலி) அவர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய வந்தவர்கள், அவர்களைக் கொல்லுமளவிற்குச் சென்றவர்கள், “தொழுகையை நிலைநாட்டும் வரை போர் செய்யக் கூடாது” என்ற விதிமுறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, முஸ்லிமில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம். நாங்கள் எந்த நன்மையில் இருக்கின்றோமோ அந்த நன்மையை (இஸ்லாத்தை) அல்லாஹ் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். “அது எப்படி இருக்கும்?” என்று நான் வினவினேன். அதற்கு அவர்கள், “எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலையை அடைந்து விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்த ஆட்சியாளர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி, உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்கு செவி சாய்த்துக் கட்டுப்படு!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபத் அல் யமான் (ரலி),(முஸ்லிம்: 3435)
இந்த நபிமொழி ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவது எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்தது, எது வரை கட்டுப்படுவது என்பதைத் துல்லியமாக விளக்குகிறது.
முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸ் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.
“யார் ஓர் ஆட்சியாளரிடத்தில் பைஅத் செய்து, அவரிடத்தில் கைப்பிடித்து உளமாற உறுதிமொழி வழங்கி விடுகின்றாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப் படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி),(முஸ்லிம்: 3431)
“நாங்கள் உற்சாகமாக இருக்கும் போதும், சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப் படும் போதும் கூட (ஆட்சியாளரின் கட்டளைக்கு) செவியேற்று, கட்டுப்பட்டு நடப்போம்; ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிட மாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை நாங்கள் ஆட்சியாளரிடம் கண்டாலே தவிர” என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அறிவிப்பவர்: உப்பாதா பின் அஸ்ஸாமித் (ரலி),(புகாரி: 7056)
ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவதின் ஒழுங்குகளையும், ஜிஹாத் என்ற பெயரில் ஆட்சிக்கெதிராக கலகம், குழப்பத்தை ஏற்படுத்துவதின் ஆபத்தையும் மேற்கண்ட நபிமொழி தெளிவாக எடுத்தியம்புகின்றது.
எனவே ஜிஹாத் (கிதால்) சம்பந்தமான இஸ்லாத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு மறுபக்கத்தை கவனிக்கத் தவறியதன் விளைவு தான் சத்திய சஹாபாக்களில் ஒரு பிரிவினர் கூட உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக களமிறங்கியதும், கொலைப் பழியை சுமந்ததும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதா எச்சரிக்கை எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை ஒன்றே போதும். முஸ்லிம் அரசாங்கத்திற்கு எதிராக அதன் அதிபர் என்ன தான் அக்கிரமம் செய்தாலும் ஆயுதம் தாங்குவதற்கு அனுமதியில்லை. ஜிஹாதை வலியுறுத்தும் எத்தனை ஆதாரங்களை அவர்கள் எடுத்துக் காட்டினாலும் அவை இதற்குப் பொருந்தாது.
ஒரு அதிபர் என்ன தான் அநியாயம் செய்தாலும் அவர் தொழுகையை நிலைநாட்டும் வரை ஆயுதம் தூக்கக் கூடாது என்ற நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையை இவர்கள் விளங்கியிருந்தால் ஜிஹாதின் பெயரால் நடந்த முதல் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஓரிறைக் கொள்கையை விட்டு விலகாத வரை எவருக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கக் கூடாது என்பதை விளங்கியிருந்தால் உஸ்மான் (ரலி) படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும். தவறாகப் புரிந்து கொண்ட ஜிஹாத் வெறி உஸ்மான் (ரலி), பத்து சொர்க்கவாசிகளில் ஒருவர் என்பதையும், நபிகள் நாயகத்தின் மருமகன் என்பதையும், நபிகள் நாயகம் அவர்களின் திருவாயால் அவர் பெற்ற எண்ணற்ற நற்சான்றுகளையும் அலட்சியப்படுத்தும் அளவுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டது.
சட்டதிட்டங்களிலும் உட்பிரிவுகளிலும் முஸ்லிம்களுக்கிடையே அன்று கருத்து மோதல்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இதன் காரணமாக ஒருவர் தலையை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்படவில்லை. ஆனால் ஜிஹாத் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் தான் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்பட்டது என்பதற்கு உஸ்மான் (ரலி) கொலை மட்டுமின்றி ரத்தக் கறை படிந்த வரலாறுகளின் பட்டியல் நீள்கின்றது.
ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த மேலும் பல அதிர்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.
(குறிப்பு: இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்று நூலான அல் பிதாயா வன் நிஹாயா மற்றும் அத்தபரீ, அல் இஸ்திஆப், அல் இஸாபா, தஹ்தீபுத் தஹ்தீப், தபக்காத்து இப்னு சஅத், தப்ஸீர் இப்னு கஸீர் ஆகிய நூற்களில் இடம்பெற்றவை)