ஜும்ஆ உரையின் நோக்கமும், முக்கியத்துவமும்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

ஜும்ஆ தொழுகை மிகச் சரியாக அமைவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று ஜும்ஆ உரையாகும். நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறை கூட ஜும்ஆ உரையை விட்டது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9) فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ (10)

இறைநம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் (ஜும்ஆ) தொழுகைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் நீங்கள் பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 62:10)➚

“அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக விரைந்து செல்லுங்கள்.”

என்ற இறைவசனத்தில் “நினைவு கூர்தல்” என்பதற்கு “திக்ர்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

“திக்ர்” என்றால் அறிவுரை, உபதேசம், இறைநினைவு போன்ற விரிவான பொருளை உள்ளடக்கிய வார்த்தையாகும்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “திக்ரில்லாஹ்” (அல்லாஹ்வை நினைவு கூர்தல்) என்பது ஜும்ஆ உரையையும், தொழுகையையும் ஒரு சேரக் குறிக்கும் வார்த்தையாகும்.

பின்வரும் நபிமொழியில் ஜும்ஆ உரையைக் குறிக்க “திக்ர்” என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.

ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.

இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 881)

 

فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتْ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ

“இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்“

ஜும்ஆ உரைக்கு “திக்ர்” என்ற சொல்லையே நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது.

“இறைநம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் (ஜும்ஆ) தொழுகைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.“

(அல்குர்ஆன்: 62:9)➚

ஜும்ஆ உரையிலும், தொழுகையிலும் கலந்து கொள்வதற்காக வியாபாரத்தை விட்டு விட்டு வரச்சொல்வதிலிருந்தே அதன் முக்கியத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இமாமின் ஜும்ஆ உரையை வானவர்களும் செவியேற்கிறார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகிறது.

ஜும்ஆ உரை “திக்ருல்லாஹ்” என்று கூறப்படுவதிலிருந்து அவ்வுரை அல்லாஹ்வைப் போற்றிப் புகழக் கூடியதாகவும், இறைக் கட்டளைகளை எடுத்துரைத்து, இறைவன் தடுத்தவற்றைப் பற்றி எச்சரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நபியவர்கள் ஜும்ஆ உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஜும்ஆ உரையில் கலந்து கொள்ளாமல் கலைந்து சென்றோரை பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கண்டிக்கின்றான்.

وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ

(நபியே!) வியாபாரத்தையோ, வீணானதையோ அவர்கள் பார்த்தால், (உரையாற்றிக் கொண்டிருக்கும்) உம்மை நிற்கும் நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். “வீணானதையும், வியாபாரத்தையும்விட அல்லாஹ்விடம் இருப்பதே மிகச் சிறந்ததாகும். உணவளிப்போரில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 62:11)➚

இவ்வசனம் அருளப்பட்டதற்கான காரணத்தை பின்வரும் ஹதீஸ் எடுத்துரைக்கிறது.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நின்றவாறு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டகக் கூட்டம் (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே அதை நோக்கி மக்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சி யிருந்தனர். அப்போதுதான் “அல்ஜுமுஆ’ (62) அத்தியாயத்திலுள்ள “(நபியே!) வியாபாரத்தையோ, வீணானதையோ அவர்கள் பார்த்தால், (உரையாற்றிக் கொண்டிருக்கும்) உம்மை நிற்கும் நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். “வீணானதையும், வியாபாரத்தையும்விட அல்லாஹ்விடம் இருப்பதே மிகச் சிறந்ததாகும். உணவளிப்போரில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்” என்று கூறுவீராக!” எனும் இந்த (11ஆவது) வசனம் அருளப்பெற்றது

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(முஸ்லிம்: 1566)

ஜும்ஆ உரையில் கலந்து கொள்ளாமல் கலைந்து சென்ற மக்களையே அல்லாஹ் கண்டிக்கும் போது ஜும்ஆ உரையே இல்லாமல் ஜும்ஆ நடத்தினால் அது நபிவழிக்கு நேர் எதிரான செயல் என்பதை சந்தேகமின்றி அறிந்து கொள்ளலாம்.

ஜும்ஆ உரை “திக்ருல்லாஹ்” (இறைநினைவூட்டல்) ஆக இருப்பதால் உரையைச் செவியேற்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நபிமொழிகள் ஜும்ஆ உரையின் முக்கியத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளன.

இமாம் உரையாற்றும் போது பேசுவது கூடாது என்பதை பி்ன்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிப்பவரிடம் நீ மௌனமாக இரு!’ என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 934)

இமாம் உரையாற்றும் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும், மௌமான இருக்க வேண்டும், கற்களைக் கிளறிக் கொண்டிருக்கக் கூடாது என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 1557)

ஜும்ஆ உரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதினால்தான் அந்த உரையைக் கேட்பவர்களுக்கு மார்க்கம் ஒழுக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் கற்றுக் கொடுக்கிறது.

எனவே உரை இன்றி ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது நபிவழிக்கு எதிரான செயலாகும்.

மக்கள் விளங்கிக் கொள்வதற்காகவே ஜும்ஆ உரை

ஜும்ஆ உரை என்பது “திக்ருல்லாஹ்“ (இறை நினைவூட்டல்) என்பதால் அது மக்களுக்கு இறைவனைப் பற்றிய அச்சத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு அறிவுரைகளையும். உபதேசங்களையும், நினைவூட்டல்களையும், இறைக்கட்டளைகளையும் எடுத்துரைப்பதுதான் உரையாற்றுவதின் நோக்கமாகும். நபி (ஸல்) அந்த நோக்கத்திற்காகத்தான் உரையாற்றியுள்ளார்கள்.

ثُمَّ خَطَبَ ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு உபதேசம் புரிந்தார்கள்; (மறுமையை) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

(புகாரி: 975)

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَتْ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ وَيُذَكِّرُ النَّاسَ.

நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர்ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

(முஸ்லிம்: 1564)

குத்பா என்ற பெயரில் அமர்ந்திருக்கும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லாத வகையில் சில நிமிடங்கள் அரபி மொழியில் ஏதேனும் சில வாக்கியங்களை ஓதுவது மக்களுக்கான உபதேசமாக ஆகுமா?

மக்களுக்குப் புரியாத பாஷையில் அவர்களுக்கு அறிவுரை கூறுவதினால் அவர்கள் எதை விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்? என்ன பயனை அடையப் போகிறார்கள்.

உபதேசம் என்பது முஃமின்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் கட்டளை

﴿ وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ المُؤْمِنِينَ ﴾

அறிவுரை கூறுவீராக! இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை பயனளிக்கும்.

(அல்குர்ஆன்: 51:55)➚

فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى (9) سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى (10)

அறிவுரை பயனளிக்குமாயின் நீர் அறிவுரை கூறுவீராக! யார் (இறைவனை) அஞ்சுகிறாரோ அவர் அறிவுரையை ஏற்பார்.

(அல்குர்ஆன்: 87:9-10)➚

எந்த மொழியில் பேசினால் மக்கள் விளங்கிக் கொள்வார்களோ அம்மொழியில்தான் உரையாற்ற வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ

எந்தத் தூதராயினும் அவர் தமது சமுதாயத்திற்குத் தெளிவாக விளக்குவதற்காக அவர்களின் மொழியிலேயே அனுப்பினோம்.

(அல்குர்ஆன்: 14:4)➚

மக்களுக்கு விளக்குவதற்காகத்தான் மக்கள் எந்த மொழி பேசுகிறார்களோ அந்த மொழியிலேயே அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வரை உலகம் முழுதும் வாழும் மக்களுக்கான இறைத்தூதராக இருந்தாலும் நபியவர்களுக்கு தெரிந்த மொழி அரபி மட்டும்தான், அவர்கள் வாழும் போது அரபி பேசும் மக்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்தார்கள் எனவேதான் அம்மக்களுக்கு எளிதாக விளக்க வேண்டும் என்பதற்காகவும், நபியவர்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களால் தெளிவாக விளக்க முடியும் என்பதாலும் அரபி மொழியில் அல்லாஹ் குர்ஆனை அருளினான்.

فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنْذِرَ بِهِ قَوْمًا لُدًّا (97)19

(நபியே!) நாம் இ(வ்வேதத்)தை உமது மொழியில் எளிதாக்கி இருப்பதெல்லாம், இதன் மூலம் இறையச்சமுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவதற்காகவும், விதண்டா வாதம் செய்யும் கூட்டத்தினரை நீர் எச்சரிப்பதற்காகவும் தான்.

(அல்குர்ஆன்: 19:97)➚

فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (58)44

(நபியே!) அவர்கள் சிந்திப்பதற்காகவே இ(வ்வேதத்)தை உமது மொழியில் எளிதாக்கி வைத்துள்ளோம்.

(அல்குர்ஆன்: 44:58)➚

உரை என்பதின் நோக்கமே மக்கள் அதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் . இதைத்தான் மேலே நாம் எடுத்துக்காட்டிய இறைவசனங்கள் எடுத்துரைக்கிறது.

மிக முக்கியமான விசயங்களை எடுத்துரைக்கும் போது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்விசயத்தை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறும் வழக்கமுடையவர்களாக நபியவர்கள் இருந்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(புகாரி: 95)

மக்கள் விளங்கிக் கொள்வதுதான் உபதேசத்தின் அடிப்படையாகும். அது அரபி மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதற்கு நேரடியான எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. நபியவர்களும், ஸஹாபாக்களும் அரபி மொழி பேசக் கூடியவர்களாக இருந்த காரணத்தினால்தான் அவர்கள் அரபி மொழியில் உரையாற்றியுள்ளார்களே தவிர அரபி மொழியில் உரையாற்றுவதுதான் மார்க்கம் என்ற அடிப்படையில் அல்ல.

ஏதேனும் மிக முக்கியமான விசயம் தொடர்பாக நபியவர்கள் உரையாற்றும் அவர்களின் கண்கள் சிவந்துவிடும், குரல் உயர்ந்துவிடும், கோபம் மிகுந்து விடும், எந்த அளவிற்கென்றால் போர்ப்படையில் இராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுப்பவரைப் போன்று ஆகிவிடுவார்கள் என்றெல்லாம் நபியவர்கள் உரையாற்றும் விதம் பற்றி நபிமொழிகளில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

நபியவர்களின் உரைகளைக் கேட்டு எங்கள் உள்ளம் நடுங்கியது, கண்கள் கண்ணீர் வடித்தது என்றெல்லாம் நபித்தோழர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

மக்களுக்குப் புரியாத மொழியில் பேசினால் இவையெல்லாம் சாத்தியமாகுமா?

எனவே ஜும்ஆ உரை என்பது மக்களுக்கு விளங்கும் மொழியில் அமைய வேண்டும் என்பதுதான் மார்க்கத்தின் அடிப்படையாகும்.

அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.!