மூஸா நபியும் அற்புதங்களும்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

மூஸா நபியவர்களுக்கு மகத்தான அற்புதங்கள் சிலவற்றை இறைவன் வழங்கி இருந்தான். அந்த அற்புதங்களை ஏற்க மறுத்தவர்கள் அவற்றை ஸிஹ்ர் எனக் கூறியே நிராகரித்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 7:107), 108, 109

அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்) என்றனர். உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் (ஸிஹ்ர் செய்பவர்கள்) வெற்றி பெற மாட்டார்கள் என்று மூஸா கூறினார்.

(அல்குர்ஆன்: 10:75), 76, 77

நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும் என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. இவர் திறமை மிக்க சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். தனது (ஸிஹ்ர்) சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்).

(அல்குர்ஆன்: 26:31), 32, 33, 34, 35

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட (ஸிஹ்ர்) சூனியம் தவிர வேறில்லை; இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

(அல்குர்ஆன்: 28:36)

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். இவர் சூனியக்காரரோ (ஸிஹ்ர் செய்பவரோ) பைத்தியக்காரரோ எனக் கூறினான்.

(அல்குர்ஆன்: 51:38), 39

உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்றான்). நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்) என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன்: 27:12), 13, 14

மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 40:24)

மூஸா நபி கொண்டு வந்த அற்புதங்களை நிராகரிக்க ஸிஹ்ர் எனும் சொல்லை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து ஸிஹ்ர் என்றால் தந்திரம் தான். உண்மையில் ஏதும் நடப்பதில்லை என்று அறிந்து கொள்கிறோம்.

இந்த இடத்தில் சிலர் ஒரு சந்தேகத்தை எழுப்புவார்கள். ஸிஹ்ர் என்ற சொல்லை பித்தலாட்டம் என்ற பொருளில் இறைத் தூதரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பயன்படுத்தியதாகத் தான் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. ஸிஹ்ர் என்ற சொல்லை இறைவன் தனது சொல்லாகப் பயன்படுத்தவில்லை. இறைத் தூதர்களின் எதிரிகள் பயன்படுத்திய சொல்லை எடுத்துக் காட்டுகிறான். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு ஸிஹ்ர் என்பது உண்மையில்லை என்று எவ்வாறு வாதிடலாம் என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகத்திற்கு மேலே நாம் சுட்டிக் காட்டிய 10:77 வசனத்தில் தெளிவான விளக்கம் உள்ளது.

மூஸா நபி கொண்டு வந்த அற்புதத்தை ஸிஹ்ர் எனக் கூறி அம்மக்கள் மறுத்த போது மூஸா நபியர்கள் பின்வருமாறு எதிர்க் கேள்வி எழுப்பியதாக 10:77 வசனம் கூறுகிறது.

உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? இவ்வாறு மூஸா நபியவர்கள் உண்மைக்கு எதிர்ப் பதமாக ஸிஹ்ர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உண்மையை நீங்கள் எப்படி (ஸிஹ்ர்) பித்தலாட்டம் என்று கூறலாம் என்று இறைத் தூதர் கேள்வி எழுப்பியதால் ஸிஹ்ர் என்பது ஏமாற்றும் வித்தை தான்; உண்மையானது அல்ல என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.