முன்னுரை

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.

ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்

இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
மூஸா நபியும் அற்புதங்களும்
ஈஸா நபியும் அற்புதங்களும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
மூஸா நபியின் காலத்தில்…
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
நபிகள் நாயகத்துக்கு சூனியம்
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
முரண்பட்ட அறிவிப்புக்கள்
113, 114வது அத்தியாயங்கள்
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
தவறான மொழிபெயர்ப்பு
சரியான மொழி பெயர்ப்பு
ஹாரூத் மாரூத்
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை, அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன.

இதன் காரணமாகத் தான் முஸ்லிம் அறிஞர்களும் இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடமிருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். மக்களை ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம்; உண்மையில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை என்பது தான் சரியான அந்த முடிவாகும்.

சூனியம் என்பதற்கு அரபு மொழியில் ஸிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்