பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை

நூல்கள்: இஸ்லாமியக் கொள்கை

கேள்வி 1 : அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறான்?

பதில் : அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே வணங்க வேண்டுமென்பதற்காக அவன் நம்மைப் படைத்தான்.

என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) ஜின்னையும், மனிதனையும் நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன்: 51:56)

அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை, அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே அவர்கள் வணங்குவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(புகாரி: 2856, 5967, 6267, 6500, 7373)

கேள்வி 2: வணக்கம் என்றால் என்ன?

பதில் : பிரார்த்தனை செய்தல், தொழுதல், பிராணிகளைப் பலியிடுதல் போன்ற இறைவனுக்கு விருப்பமான சொற்களுக்கும், செயல்களுக்கும் பொதுவான பெயரே வணக்கம் என்பதாகும்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்று கூறுவீராக!

என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

(அல்குர்ஆன்: 6:162), 163

எனது அடியான் மீது நான் கடமையாக்கியிருப்பவற்றைச் செய்து என்னை நெருங்குவதை விட எனக்கு மிக விருப்பமான வேறொன்றைச் செய்து அவன் என்னை நெருங்கி விட முடியாது என்று இறைவன் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(புகாரி: 6502)

கேள்வி 3 : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?

பதில் : அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் நமக்குக் கட்டளையிட்டிருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.

(அல்குர்ஆன்: 47:33)

நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கிறானோ அது தள்ளப்பட வேண்டியதே என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 3243)

கேள்வி 4 : அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அல்லாஹ்வின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டும் அல்லாஹ்வை நாம் வணங்கலாமா?

பதில் : ஆம் அப்படித் தான் அவனை நாம் வணங்க வேண்டும். ஏனெனில்

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். என்று ஏகத்துவ நம்பிக்கையாளர்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.

(அல்குர்ஆன்: 32:16)

நான் அல்லாஹ்விடம் சுவனத்தை வேண்டுகிறேன். நரகத்தை விட்டு அவனிடம் காவல் தேடுகிறேன். என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தித்திருக்கிறார்கள்.

(அபூதாவூத்: 672)

கேள்வி 5 : வணக்கத்தில் சிறந்த முறை எது?

பதில் : வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனும் எண்ணத்துடன் அவனை வணங்குவதாகும்.

நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

(அல்குர்ஆன்: 26:218),219

வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ்வை நீர் (நேரில்) பார்ப்பதைப் போன்று வணங்குவதாகும். அவனை நீர் பாக்கவில்லை என்றாலும் நிச்சயம் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புகாரி: 50, 4777)