17) உண்மையான காரணங்கள் என்ன?

நூல்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

அப்படியானால் இந்தச் சிறப்பு அனுமதிக்குக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்திய மனைவியரால் மட்டும் தான் அறிய முடியும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே கருத முடியும்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள்.

பொதுவாக காமவெறி கொண்டவர்களை மதிப்புக்கு உரியவராக மக்கள் கருத மாட்டார்கள். ஆன்மிகத் தலைவரிடம் காமவெறி இருப்பதை அறிந்தால் அவரை நஞ்சென வெறுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களைச் செய்வதை தமது கண்களால் பார்த்த மக்கள் மனிதர்களின் பொதுவான இந்த இயல்பின் படி நபிகள் நாயகத்தை எடை போடவில்லை.

அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தக் காரணத்தைக் கூறி மதம் மாறியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் திருமணம் செய்த கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றார்கள். ஏறக்குறைய ஒட்டு மொத்த அரபுலகும் அவர்களை ஏற்றுக் கொண்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி பிடித்தவர் என்றால் அதைக் கண்ணால் கண்டவர்கள் இஸ்லாத்தை வெறுத்து ஒதுக்கி இருப்பார்களே? ஏன் அப்படி நடக்கவில்லை? இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

வரலாறுகளைப் படிப்பவர்கள் ஒன்பது மனைவிகள் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். அதன் முழு விபரத்தைப் பார்க்காமல் முடிவு செய்து விடுகிறார்கள்.

அந்த வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பார்த்தார்கள்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலையையும் பார்த்தார்கள்.

இதுபோன்ற வயதுடைய பெண்களை நாமே மணக்க மாட்டோமே அப்படியானால் இதற்குக் காமவெறி காரணமாக இருக்க முடியாது என்பதையும் அவர்கள் கவனித்தார்கள்.

அதனால் தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல திருமணங்களைக் குறித்து கேள்வி கேட்பவர்கள் நபிகளின் காலத்தில் வாழ்ந்தால் காமவெறி காரணம் அல்ல என்பதை விளங்கி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வெளிஉலகில் நல்லவராகக் காட்சி தரும் சிலர் உண்மையில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றி அவர்களின் மனைவியர் மட்டுமே அறிவார்கள்.

தம் கணவன் நல்லவனா? அல்லது பகல் வேஷக்காரனா? ஒவ்வொரு பெண்ணும் அறிவாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.

ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மனைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மனைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்குப் போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதாரமண்ம் மிகச் சிறந்த அளவு கோலாகும்.

பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.

பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய சக்களத்தி சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா (ரலி) என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மனைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நபிகள் நாயகம் அவர்கள் நள்ளிரவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?

இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல்படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த நபியின் உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?

ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?

மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக்காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?

பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியிடம் கூட பொறுமையைக் கடைப்பிடித்து பண்பாடுகளின் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டுபிடிக்க முடியும்?

கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?

உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான்.

அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆனாகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.

அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும், நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.

அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.

மேலும் நபியின் மனைவியர் செல்வச் செழிப்போடு இருக்கவில்லை. அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிராற உண்டதில்லை என்றார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிறைய உண்ணக் கூட வழி இல்லாமல் தான் அவர்களின் மனைவியர் இருந்தார்கள். உணவுக்கே இக்கதி என்றால் ஏனைய வசதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கட்டிய கணவரால் வேளாவேளைக்குச் சோறு போட முடியாத போதும், அவர் பல மனைவியரை மணந்து தங்கள் இல்லற சுகத்திலும் குறைவு வைத்த போதும், மற்றவர்களுக்கு இல்லாத கட்டுப்பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட போதும் இவர்களுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்ட போதும், நபியவர்களின் வாழ்க்கை விமர்சிக்கப்பட முடியாத தூரத்தில் இருந்தது.

எந்த மனிதனும் வாழ்ந்து காட்ட முடியாத பரிசுத்த வாழ்வுக்கு அவர் சொந்தக்காரர் என்று நிரூபிக்க நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து காட்ட வேண்டியிருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு சிறு பகுதியும் மக்களைச் சென்றடையாமல் இருக்கக் கூடாது. சிலர் சொல்ல மறந்து விட்டாலும் மற்ற சிலரால் உலகுக்கு அது தெரிய வேண்டும். அந்த ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை உலகம் கவனிக்க வேண்டும் என்பதும் அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டதற்கான காரணமாகும்.

எப்படியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமைமிக்க கவிஞன் என்றார்கள், கைதேர்ந்த மந்திரவாதி என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். ஏசிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவரை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்களாகும். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை.

மற்ற எல்லா ஆயுதங்களை விடவும் பலமான இந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக் கூடும். ஆனாலும்; கூட நபியவர்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூறவில்லை. கூறவில்லை என்றால் அவர்களால் கூற முடியவில்லை. கூறினால் எதிரிகளும் கூட நம்ப மாட்டார்கள் என்ற நிலை.

இது போன்ற அவதூறுகளின் எல்லா வாசல்களையும் அல்லாஹ் முழுமையாக அடைத்து விட்டான் அதன் ஒரு பகுதியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்க்கை நடத்தியது.

சுருங்கச் சொல்வதென்றால் நபியவர்கள் காமவெறியில் எந்தத் திருமணத்தையும் செய்ததில்லை. அது தான் காரணம் என்றிருந்தால் அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு தோழர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.

அவர்களின் அத்தனை மனைவியரும் அவரைப் புகழ்ந்து அவரை அப்படியே பின்பற்றி நடந்திருக்க மாட்டார்கள்.

காமவெறி தான் காரணம் என்றால் காமவெறி மேலோங்கி இருக்கக் கூடிய இளமைப் பருவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது.

காமவெறி தான் காரணம் என்றால் உடலுறவுக்குரிய தகுதியை அறவே இழந்த பெண்களை அவர்கள் மனந்திருக்க மாட்டார்கள்.

காமவெறி தான் காரணம் என்றிருந்தால் மிகப்பெரும் அதிகாரம் படைத்த மன்னர் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தெரியாமல் தினமும் ஒரு பெண்ணை அனுபவிக்க முடியும். பகிரங்கமாக அறிவித்துவிட்டு பல பெண்களைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

காமவெறி தான் காரணம் என்றால் காமவெறியைத் தூண்டக் கூடிய உணவு வகைகளை அவர் உண்டு பசியும் பட்டினியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவருக்குத் தான் அது சாத்தியப்படும்.

தொடர்ந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவருக்கு ஓரிரு பேரீச்சம் பழங்களை மட்டும் அல்லது காய்ந்த ரொட்டிகளை மட்டும், அல்லது குழைத்த மாவை மட்டும் உணவாகப் பெறக் கூடியவரிடம் என்ன காமஉணர்வு இருக்கப் போகின்றது?

பல வேளைகள் உண்ண ஏதும் இருக்காதா என்று கேட்டு விட்டு வீட்டில் இல்லை எனக் கூறியதும் நோன்பு நோற்றவரிடம் என்ன காம வெறி இருக்க முடியும்?

இயல்பிலேயே காமவெறி இருந்திருந்தாலும் அவருடைய வறுமை அதை முழுமையாக அப்புறப்படுத்தியிருக்க முடியும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அம்மாமனிதரின் வாழ்வை ஆராயும் பக்குவத்தை அனைவருக்கும் வழங்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.