05) காமவெறி தான் காரணமா?

நூல்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு இவை காரணமல்லவென்றால் உண்மையான காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் நபியவர்கள் பல பெண்களை மணந்ததற்கு மிதமிஞ்சிய காம உணர்வே காரணம் என்ற பிரச்சாரம் எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.

ஒரு ஆண் மகனுக்கு அவனது இளமைப் பருவத்தில் தான் பெண்களின் பால் அதிக நாட்டம் இருக்கும். பெண்களை அனுபவிப்பதற்கான வலிமையும் இளமைப் பருவத்தில் தான் மிகுதியாக இருக்கும். உலகத்து இன்பங்களை – குறிப்பாக உடலுறவு மூலம் கிடைக்கும் இன்பத்தை – அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி நிற்பதும் அந்தப் பருவத்தில் தான்.

வயதான காலத்தில் கூட சிலர் இதில் இளைஞர்களை விட அதிக நாட்டம் கொள்கிறார்களே என்று சிலருக்குத் தோன்றலாம். இது உண்மை தான், எனினும் முதிய வயதில் பெண்களை அதிகம் நாடுபவர்கள், அவர்களின் இளமைக் காலத்தில் அதை விடவும் அதிகம் நாடியிருப்பார்கள். அவரவர்களின் இளமைப் பருவத்துடன் அவரவர்களின் முதுமைப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இளமைப் பருவம் தான் அந்த இன்பத்தை அனுபவிக்க ஏற்ற பருவமாகும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.