ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிதும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمْ الْغَاوُوْنَ
கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். (அல்குர்ஆன்: 26:224)
தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
மவ்லித் வரிகள்
اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ
பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !
اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ
இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ
كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
குர்ஆன் வரிகள்
பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? (அல்குர்ஆன்: 3:135)
“தமக்குத் தாமே வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் விரக்தியடைந்து விடாதீர்கள்! அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன் என்று (இறைவன் கூறுகிறான் என நபியே!) கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:53)
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்களை விட்டும் எங்கள் தீமைகளை அழிப்பாயாக! எங்களை நல்லோருடன் கைப்பற்றுவாயாக! (அல்குர்ஆன்: 3:193)
மவ்லித் வரிகள்
يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ
பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!
புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.
குர்ஆன் வரிகள்
“என்னை அல்லாஹ்விடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது. அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நான் காண மாட்டேன் என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன்:)
அவர்கள் மானக்கேடானதைச் செய்தாலோ, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டாலோ, அல்லாஹ்வை நினைத்துத் தமது பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? அவர்கள் தெரிந்து கொண்டே, தாங்கள் செய்தவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்:)
மவ்லித் வரிகள்
حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ
صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ
தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது. இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும். தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக! அவர் இழப்பினை அடையவில்லை.
குர்ஆன் வரிகள்
அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன். (அல்குர்ஆன்: 5:74)
மவ்லித் வரிகள்
اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ
وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ
நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.
குர்ஆன் வரிகள்
“நான் உங்களுக்குத் தீமையோ, நன்மையோ செய்ய சக்தி பெற மாட்டேன் என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன்: 72:21)
யாரை அல்லாஹ் குழப்பத்தில் ஆழ்த்த நாடிவிட்டானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து எந்த ஒன்றுக்கும் நீர் சக்தி பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த அல்லாஹ் விரும்பவில்லை. இவ்வுலகில் அவர்களுக்கு இழிவும், மறுமையில் அவர்களுக்குக் கடும் வேதனையும் உள்ளது. (அல்குர்ஆன்: 5:41)
மவ்லித் வரிகள்
اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ
அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.
குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்தான் மர்யமின் மகன் மஸீஹ் என்று கூறியோர் இறைமறுப்பாளர்களாகி விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், உலகிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அவர்களைக் காக்க) சிறிதேனும் ஆற்றல் பெற்றவர் யார்? என்று கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியதை அவன் படைக்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றல் மிக்கவன். (அல்குர்ஆன்: 5:17)
மவ்லித் வரிகள்
صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ
வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.
குர்ஆன் வரிகள்
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!) மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்: 2:201)
“எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 3:16)
மவ்லித் வரிகள்
اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ
எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.
குர்ஆன் வரிகள்
உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை. அவன் உங்களைக் கைவிட்டால் அதன் பிறகு உங்களுக்கு உதவுபவர் யார்? எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும். (அல்குர்ஆன்:)
“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையை மேற் கொள்ளுங்கள்! இப்பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தன் அடியார்களில் தான் நாடியோருக்கு அதைச் சொந்தமாக்குகிறான். இறையச்சமுடையோருக்கு (நல்ல) முடிவு உள்ளது என்று மூஸா தம் சமுதாயத்தினரிடம் கூறினார். (அல்குர்ஆன்:)
மவ்லித் வரிகள்
اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ
மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்
குர்ஆன் வரிகள்
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும், உதவியாளரும் இல்லை. (அல்குர்ஆன்: 2:107)
மவ்லித் வரிகள்
ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ
اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ
وَالسَّادَةُ اْلاَخْيَارِ
எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.
குர்ஆன் வரிகள்
(அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது துன்பத்திற்கு உள்ளானவன் பிரார்த்திக்கும்போது அவனுக்குப் பதிலளித்து, அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? நீங்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 27:62)
மவ்லித் வரிகள்
فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ
எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.
குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்வே உங்களை இதிலிருந்தும், மற்ற எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறான். (இதன்)பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 6:64)
அவர்களே இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. (அல்குர்ஆன்: 13:28)
மவ்லித் வரிகள்
قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ
அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.
குர்ஆன் வரிகள்
“அவனையன்றி நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவர்களிடம் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் துன்பத்தை நீக்கவோ, திருப்பவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 17:56)
மவ்லித் வரிகள்
بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ
என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.
குர்ஆன் வரிகள்
“என் துயரத்தையும், துக்கத்தையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன் என்று (யஃகூப்) கூறினார். (அல்குர்ஆன்: 12:86)
நபி மொழி
நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 2440)
மவ்லித் வரிகள்
وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا
கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. அதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன்: 9:72)
அல்லாஹ்வின் மீதான அச்சத்தையும், அவனது பொருத்தத்தையும் கொண்டு தனது கட்டடத்திற்கு அடித்தளமிட்டவன் சிறந்தவனா? அல்லது இடியும் நிலையிலுள்ள, அரித்திருக்கும் கரையின் ஓரத்தில் தனது கட்டடத்திற்கு அடித்தளமிட்டு, அதனுடன் நரக நெருப்பில் சரிந்து விழுந்தவ(ன் சிறந்தவ)னா? அநியாயக்காரக் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்:)
மவ்லித் வரிகள்
وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ
என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.
குர்ஆன் வரிகள்
பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? (அல்குர்ஆன்: 3:135)
உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பின்னர் அவனிடமே திரும்புங்கள்! எனது இறைவன் நிகரிலா அன்பாளன், பேரன்பு கொண்டவன். (அல்குர்ஆன்:)
மவ்லித் வரிகள்
إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.
குர்ஆன் வரிகள்
தீமைகளைச் செய்வோருக்கு, ஒரு தீமைக்கான கூலி அதுபோன்றதே கிடைக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவர் யாருமில்லை. அவர்களின் முகங்கள் இருண்ட இரவின் ஒரு பாகத்தால் மூடப்பட்டதுபோல் இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்:)
மவ்லித் வரிகள்
أَقْسَمْتُ فِيْ نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمْ
நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.
நபி மொழிகள்
அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்: 2829)
சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)
மவ்லித் வரிகள்
اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ
எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.
اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.
يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا
وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ
நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.
குர்ஆன் வரிகள்
நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். (அல்குர்ஆன்: 26:80)
நபி மொழி
மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)
மவ்லித் வரிகள்
مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வையன்றி வேறு பரிந்துரையாளர்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்களா? “அவர்கள் எதற்கும் அதிகாரம் பெறாதவர்களாகவும், (எதையும்) விளங்கிக் கொள்ளாதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! அனைத்துப் பரிந்துரைகளும் அல்லாஹ்வுக்கே உரியது’என்று கூறுவீராக! வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 39:43),44)
உதவி என்பது மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 3:126)
மவ்லித் வரிகள்
اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ
ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ
நரக நெருப்பின் ஜுவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.
وَاَطْفِؤُا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ
நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜுவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.
குர்ஆன் வரிகள்
(நபியே!) வேதனை பற்றிய வாக்கு யார்மீது உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவன்)? நரகில் இருக்கும் ஒருவனை நீர் காப்பாற்றுவீரா? (அல்குர்ஆன்: 39:19)
எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 3:16)
மவ்லித் வரிகள்
عَالِمُ سِرٍّ وَأَخْفى مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.
குர்ஆன் வரிகள்
“அல்லாஹ்வையன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள்; தாம் எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம் என்பதையும் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 27:65)
“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு சக்தி பெற மாட்டேன். நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மைகளையே அதிகம் பெற்றிருப்பேன். எனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்காது. இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 7:188)