05) 4,5 வசனங்கள்

மற்றவை: (Changed from Books to Bayans) கஹ்ஃப் அத்தியாயம்-விளக்கம்

மேலும் அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) இவர்களுக்கோ இவர்களின் மூதாதையருக்கோ இது பற்றி எந்த ஞானமும் கிடையாது. இவர்களின் வாய்களிலிருந்து புறப்படும் (வார்த்தைகளில்) மிகப்பெரிய வார்த்தையாக இது இருக்கின்றது. இவர்கள் பொய்யையே கூறுகின்றனர்.
(சூரத்துல் கஹ்ஃப் : 4, 5 வசனங்கள்)
தனது கடுமையான தண்டனை குறித்துப் பொதுவாக எச்சரிப்பதற்காக இவ்வேதத்தை அருளியதாக முந்தைய வசனத்தில் இறைவன் கூறினான். கடவுளை நிராகரிப்போர், கடவுளுக்கு இணை வைப்போர், கடவுளுக்கு மனைவி மக்களைக் கற்பிப்போர் ஆகிய அனைவரும் அந்தப் பொதுவான எச்சரிக்கைக்குள் அடங்குவார்கள் என்றாலும் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவோரைத் தனியாகக் குறிப்பிட்டு இவ்வசனங்கள் மூலம் இறைவன் எச்சரிக்கிறான்.
கடவுளுக்கு மகன் இல்லை
ஏற்கனவே கூறிய பொதுவான எச்சரிக்கையில் இவர்களும் அடங்குவார்கள் என்ற போதும் இவர்களைத் தனியாக இறைவன் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது மற்ற இரண்டு குற்றங்களை விடக் கடுமையானது என்பதை விளங்கலாம்.
அவர்கள் பேசும் வார்த்தைகளிலேயே இது தான் பெரிய வார்த்தை என்ற சொற்பிரயோகமும் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது. இணை வைத்தலில் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது முதலிடத்தில் நிற்கும் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதன் தனக்கு சந்ததி இருப்பதில் பெருமை கொள்கிறான். மகிழ்ச்சியடைகிறான். சந்ததி இல்லாவிட்டால் இடிந்து போகிறான். ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ தனக்கு சந்ததி இருப்பதாகக் கூறுவதைக் கடுமையாக வெறுக்கிறான்.

மனிதனுக்கு ஏன் சந்ததி?

மனிதன் ஏன் தனக்கு சந்ததிகள் வேண்டும் என்று விரும்புகிறான்? இந்தக் கேள்விக்கு விடை கண்டால் இறைவன் ஏன் சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கும் விடை காணலாம்.
மனிதன் குறிப்பிட்ட காலத்தில் தள்ளாத வயதை அடைவான். அவனது எல்லா செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைந்து செயலற்றவனாக ஆகிவிடுவான். அந்த நேரத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள மற்றவரின் துணை அவனுக்குத் தேவைப்படுகிறது.
அந்த மற்றவன் தனது உதிரத்திலிருந்து உருவானவனாக இருந்தால் தன்னைக் கவனித்துக் கொள்வது நிச்சயம் என்று மனிதன் நினைக்கிறான். இதன் காரணமாகவே மனிதன் சந்ததிகளை விரும்புகிறான்.
மேலும் தான் என்றாவது ஒரு நாள் மரணித்து விடுவோம் என்பதையும் மனிதன் அறிந்து வைத்திருக்கிறான். தான் சிரமப்பட்டு திரட்டிய செல்வங்களை யாரோ எவரோ அனுபவிப்பதை விட நமது உதிரத்திலிருந்து பிறந்தவன் அனுபவிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் மனிதன் சந்ததிகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பதற்கான காரணம்.

கடவுளுக்கு ஏன் சந்ததியில்லை?

ஆனால் கடவுளைப் பொறுத்த வரை அவனுக்கு முதுமையோ இயலாமையோ மரணமோ ஏற்படப் போவதில்லை. சந்ததிகள் வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இறைவனுக்கு மகனிருக்க 00முடியாது என்பதற்கு இது ஒரு காரணம்
கடவுள் தன்மை என்பது பங்கு போட்டுக் கொடுக்கமுடியாத தனி உரிமையாகும். கடவுளுக்குப் பிறப்பவன் நிச்சயம் கடவுளாகத் தான் இருப்பான். பிறகு அந்த மகனுக்கும் மகன்கள் பிறப்பார்கள். அவர்களும் கடவுளாகவே இருப்பார்கள். கடவுள் தன்மையைப் பலரும் பங்கு போட்டுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும். போட்டியும் பகைமையும் ஏற்படும். இதனால் கடவுளின் பணிகளே பாதிக்கப்பட்டுப் போய் விடும்.
கடவுளுக்கு மகன்களைக் கற்பித்த மதங்களில் தந்தைக் கடவுளுக்கும் மகன் கடவுளுக்கும் சண்டை நடந்த கதைகளைக் காண்கிறோம். அண்ணன் கடவுளுக்கும் தம்பி கடவுளுக்கும் கூட சண்டை நடந்திருக்கிற கதைகளை கேள்விப் பட்டுள்ளோம்.
மனிதனுக்கு மகன் இருப்பது நன்மை பயக்கும். கடவுளுக்கு மகன் இருந்தால் கேடுதான் ஏற்படும்.
இது போக, கடவுள் என்பவன் எந்தத் தேவையுமற்றவனாக இருக்க வேண்டும். சந்ததி இருக்கிறது எனக் கூறும் போது அவனுக்குத் தேவை இருக்கிறது என்று ஆகும். சந்ததி மட்டும் தேவை என்று ஆகாது. கூடவே மனைவியும் தேவை என்று ஆகும். அப்புறம் கணவன் கடவுளுக்கும் மனைவி கடவுளுக்கும் நடக்கும் சண்டைகளால் உலகம் ஸ்தம்பித்துப் போகும்.
இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் தனக்கு மகனோ மகளோ இல்லை எனக் கூறுகிறான். அவ்வாறு கூறுவதும் நம்புவதும் கடும் குற்றம் எனவும் எச்சரிக்கிறான். இதன் காரணமாகத் தான் சொற்களில் பெரும் பாதகமான சொல் எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆனில் இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல. பல இடங்களில் இந்தக் குற்றத்தைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். சில இடங்களில் இதைவிடக் கடுமையாகவும் எச்சரித்துள்ளான்.
அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் (அந்தப் பலவீனத்திலிருந்து) தூய்மையானவன், வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனுக்கே உரியன.
(அல்(அல்குர்ஆன்:)
“வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனது உடமைகள்” என்பது அற்புதமான சொற்றொடர்.
நாம் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கி அதை நமது உடமையாக்கிக் கொள்கிறோம். அத்தகைய பொருளை நமது சந்ததி என்று நாம் கூறுவோமா? காசு கொடுத்து வாங்கிய காளை மாட்டை இது தான் எனது ஆண் மகன் எனக் கூறுவோர் உண்டா? உடமையாக்கிக் கொண்ட பொருளை யாரும் தனது சந்ததி எனக் கூறமாட்டார்கள்.
அல்லாஹ்வைப் பொறுத்த வரை வானங்களும், (நாம் உள்ளிட்ட) இந்தப் பூமியும் அவனது உடமைகள். யாரைக் கடவுளின் மகன் எனக் கூறுகிறார்களோ அவரும் அவனுக்குச் சொந்தமான தட்டு முட்டுச் சாமான் போன்றவர் தான். எனவே எனக்கு எவரும் மகனாக முடியாது என்று காரணத்துடன் விளக்குகிறான்.
நாம் சட்டையில் குத்திக் கொண்ட நமது உடமையாக இருக்கின்ற பேனாவை நமது மகன் எனக் கூறமாட்டோம். நமக்கும் பேனாவுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவோ அதை விட அதிக வித்தியாசம் கடவுளுக்கும் கடவுளின் மகன் எனக் கூறப்படுபவருக்கும் இடையே உள்ளது.
நம்மைப் பொறுத்த வரை பேனா எந்த நிலையில் உள்ளதோ அது போன்ற நிலையில் படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் இறைவனின் 0பார்வையில் உள்ளன. “அனைத்தும் எனது உடமை” என்ற அற்புதமான சொற்றொடர் மூலம் தனக்கு சந்ததியில்லை என்பதை அறிவுப்பூர்வமாக விளக்குகிறான்.
இதே வாதத்தை 4 : 171, 10 : 68 ஆகிய வசனங்களிலும் முன்வைக்கிறான்.
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்:)
“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்த வித பலவீனத்தைக் கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
(அல்குர்ஆன்:)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான் (உடனே) அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன்:)
இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும். அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால் ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான். இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
(அல்குர்ஆன்: 88:95)
அவர்கள் “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறுகிறார்கள். (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
(அல்குர்ஆன்:)
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை. அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரை விட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
(அல்குர்ஆன்:)
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி எவருமில்லை. அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான்.
(அல்குர்ஆன்:)
அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
(அல்குர்ஆன்:)
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள். அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான். இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள். அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்:)
அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன்:)
மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது. அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
(அல்குர்ஆன்:)
இவ்வசனங்களில் தனக்கு மகனோ மகளோ இருக்க முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைக்கிறான்.
இது தனக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறான்.
மறுமை நாளில் யாரைக் கடவுளின் மகன் என்று கற்பனை செய்தீர்களோ அவரே ஓர் அடிமையாகத்தான் என் முன்னே நிறுத்தப்படுவார். மகனாக அல்ல எனவும் கூறுகிறான்.
இவ்வளவு கடுமையான குற்றமாக இது இருப்பதால் தான் இவர்களுக்குத் தனியாகவும் இறைவன் எச்சரிக்கிறான்.