02) சிறப்புகள்
கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்தப் பத்து வசனங்களுக்கும் தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ். இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.
உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)
நூல் : முஸ்லிம்
அபூதாவூத் நூலின் அறிவிப்பில், “அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜாலின் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது இந்த அத்தியாயத்திற்கான சிறப்புக்களில் ஒன்றாகும்.
ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது. கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : பராஃ (ரலி), நூலகள் : புகாரி, முஸ்லிம்
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதினால்அடுத்த ஜும்ஆ வரை அவருக்கு பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி), நூல் : ஹாகிம்
அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும். இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்