11) மதம் மாறியவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம்

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

மதம் மாறியவர்களுக்கு எதிராக அபூபக்ர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட 11 படைத் தளபதிகளும் தங்கள் பயணத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் தங்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள், மதம் மாறியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து எழுதிய கடிதத்தையும் எடுத்துச் செல்கின்றனர்.

அவர்கள் தங்கள் கையில் எடுத்துச் செல்லும் கடிதத்தின் விபரத்தைப் பார்ப்போம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பிரதிநிதியின் கடிதமாகும்.

தலைவர்கள், பொதுமக்கள், இஸ்லாத்தில் தொடர்ந்து வாழ்பவர், இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் என அனைவருக்கும் இது ஒரு பொதுக் கடிதம்!

நேர்வழியைப் பின்பற்றியவர் அதிலிருந்து விலகி அசத்தியம் மற்றும் வழிகேட்டின் பால் செல்லாத கொள்கைவாதிகளுக்கு அமைதி உண்டாகட்டுமாக! உங்களிடம் எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் புகழ்கின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன். அவன் ஏகன்! அவனுக்கு இணை, துணை யாருமில்லை! நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவனது அடியார் என நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை நிலை நாட்டி, அதை மறுப்போரை எதிர்த்து நின்று போராடுவோம்.

இந்த இறைப் புகழ்ச்சிக்குப் பின்னால்….

நன்மாராயம் கூறக்கூடியவராகவும், எச்சரிக்கை செய்யக் கூடியவராகவும், அல்லாஹ்வின் பால் அவனது உத்தரவைக் கொண்டு அழைப்பவராகவும், ஒளிர்கின்ற விளக்காகவும், உயிருடன் உள்ளவரை எச்சரிக்கை செய்யும் வகையிலும், சத்தியத்தை மறுப்பவர் மீது இறைத் தண்டனை உறுதியாகும் வகையிலும் அல்லாஹ் தனது படைப்பினத்தின் மீது உண்மையாகவே தூதரை அனுப்பி வைத்தான்.

இதற்குப் பதிலளித்தவரை உண்மையின் பக்கம் வழி காட்டினான். புறக்கணித்தவர் மீது நபி (ஸல்) அவர்களைப் போர் புரியச் செய்தான். அதன் விளைவாய் அவர்கள் தாமாகவோ, அல்லது நிர்ப்பந்தமாகவோ இஸ்லாமிய மார்க்கத்திற்கு இணங்கினர்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றினார்கள். தனது சமுதாயத்திற்கு நன்மையையே நாடினார்கள். தன் மீதுள்ள கடமையை அவர்கள் ஆற்றினார்கள். இந்நிலையில் அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்தான். இது தொடர்பாக தனது தூதருக்கும், முஸ்லிம்களுக்கும் தன் வேதத்தில்,

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக்கூடியவர்களா? (அல்குர்ஆன்: 21:34)

(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே. (அல்குர்ஆன்: 39:30) என்று தெளிவாக விளக்கியிருக்கின்றான்.

மேலும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் தனது திருமறையில், முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன்: 3:144) என்று தெரிவிக்கின்றான்.

எனவே எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கினால் நிச்சயமாக அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அவர் விளங்கிக் கொள்வாராக! யார் அல்லாஹ்வை வணங்குகின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் மரணமே ஆகாத நித்திய ஜீவன்! அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

அவன் தன் காரியத்தைப் பாதுகாப்பவன். தன் எதிரிகளிடம் பழி வாங்குபவன். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்த பாக்கியத்தை மறந்து விடாதீர்கள். உங்கள் தூதர் கொண்டு வந்த சத்தியத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் காட்டிய நேர்வழியில் செல்லுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கடைப்பிடியுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றேன். எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டவில்லையோ நிச்சயமாக அவன் வழி கெட்டு விட்டான். எவருக்கு அல்லாஹ் உதவி செய்யவில்லையோ அவர் கைவிடப்பட்டவர் ஆவார். அல்லாஹ் அல்லாதவர்களால் வழி காட்டப்பட்டவர் வழிகேட்டில் உள்ளவராவார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில், அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவர் நேர் வழி பெற்றவர். அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர் வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர். (அல்குர்ஆன்: 18:17) என்று கூறுகின்றான்.

சத்தியத்தை ஏற்கும் வரை அவருடைய அமலை அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மறுமையில் அவர் செய்த கடமை மற்றும் உபரியான வணக்கங்களுக்கான கூலியும் அளிக்கப்பட மாட்டார்கள்.

ஷைத்தானின் குரலுக்குப் பதிலளித்து, அல்லாஹ்வின் கட்டளையைக் கண்டு கொள்ளாது, இஸ்லாத்தை ஏற்று அதன்படி செயல்பட்ட பிறகு அதை விட்டு மதம் மாறியவர்கள் உங்களில் இருப்பதாக அறிகின்றேன்.

ஆதமுக்குப் பணியுங்கள்! என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன்: 18:50)

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான். (அல்குர்ஆன்: 21:34)

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

முஹாஜிர்கள், அன்சார்கள், நன்மையில் அவர்களைப் பின்பற்றியவர்கள் அடங்கிய ஒரு படையை உங்களை நோக்கி அனுப்பியிருக்கின்றேன். அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதைத் தவிர வேறெந்த சமாதானத்தையும் மதம் மாறியவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும், மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களை அழைக்கும் வரை அவர்களில் யாரையும் கொல்லக் கூடாது என்றும் என்னுடைய படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டிருக்கின்றேன்.

மக்கள் இதற்கு இசைவு தெரிவித்து இணங்கி நல்லமல்கள் செய்ய முன் வந்தால் அதை எனது படை வீரர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையெனில், போர் அல்லது புனித மரணம் அடைகின்ற வரை அவர்கள் எதிர்த்து நின்று போராடுவார்கள். பிடிபட்டவர்களின் மீது தண்டனை வழங்காமல், கொளுத்த வேண்டியர்களைக் கொளுத்தாமல், கொல்ல வேண்டியவர்களைக் கொல்லாமல் விட மாட்டார்கள். சிறார்களையும் பெண்களையும் சிறை பிடிப்பார்கள். அம்மக்களிடமிருந்து இஸ்லாத்தைத் தவிர வேறெதையும் அவர்கள் ஈடாகப் பெற மாட்டார்கள். என்னுடைய இந்தக் கடிதத்தை அவர்கள் செல்கின்ற ஊர்களில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் படித்துக் காட்டும் படி அவர்களுக்கு நான் உத்தரவிட்டிருக்கின்றேன்.

அவர்கள் செல்கின்ற ஊர்களில் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் அம்மக்கள் மீது அவர்கள் போர் தொடுக்க மாட்டார்கள். பாங்கு சொல்லவில்லை என்றால் அம்மக்கள் மீது விசாரணை நடத்துவார்கள். மறுத்தால் அம்மக்களை அவர்கள் களத்தில் சந்திப்பார்கள். இணங்கினால் அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்வார்கள். இது நான் அவர்களுக்குப் பிறப்பித்திருக்கும் உத்தரவு!

இவ்வாறு அபூபக்ர் (ரலி) தளபதிகளிடம் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

தோல்வியைத் தழுவும் போலித் தூதர்கள்

அபூபக்ர் (ரலி) அவர்கள் பறக்கும் கொடிகளுடன் அனுப்பிய பதினோரு படைத்தளபதிகளில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் குறிப்பிடத் தக்க படைத்தளபதி ஆவார்கள்.

போலி நபியான தலீஹா பின் குவைலித் அல்அஸதீக்கு எதிராக போர் நடத்துவதற்காக, “அல்லாஹ்வின் போர் வாளே!” என்று வாழ்த்தி காலித் பின் வலீத் (ரலி)யை அபூபக்ர் (ரலி) அனுப்பி வைக்கின்றார்கள்.

இந்தப் போலி நபியின் கைகளுக்கு விலங்கு பூட்டி, கைது செய்து கொண்டு வருதல் அல்லது கதையை முடித்து குழியில் புதைத்தல் என்ற இலட்சியப் பணி முடிவுற்றதும் பதாஹ் என்ற இடத்தில் வசிக்கின்ற மாலிக் பின் நுவைராவை நோக்கி படையெடுத்துச் செல்லுதல் ஆகிய பணிகளை அல்லாஹ்வின் போர்வாளான தளபதி காலிதிடம் ஒப்படைத்திருந்தார்கள். அந்தப் புனிதப் போருக்கான போர்க் கொடியுடன் போலி நபிக்கு எதிராக அனுப்பி வைத்தார்கள்.

தலீஹா என்பவன் அபூபக்ர் (ரலி) அவர்கள் களத்தில் சந்திக்கும் முதல் போலி நபியாக இருந்தாலும், மொத்தத்தில் போலி நபிகளின் பட்டியலில் மூன்றாவது நபராவான்.

அப்படியானால் இன்னும் இரண்டு பேர் யார் என்ற கேள்வி எழலாம். இதற்கு புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் விளக்கம் தருகின்றது.

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களின் கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது என் இரு கைகளிலும் தங்கத்தாலான காப்புகள் இரண்டு வைக்கப் பட்டன. நான் அவற்றை அருவருப்பாகக் கருதி வெறுத்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதிக்கப் பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத அவை பறந்து விட்டன. அவ்விரண்டும் இனி வரவிருக்கும் இரண்டு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக நான் விளக்கம் கண்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட (அஸ்வத்) அல் அன்ஸீ ஆவான். மற்றொருவன் மகா பொய்யன் முஸைலிமா ஆவான். (புகாரி: 4379)