06) உஸாமா தலைமையில் படை அனுப்பியது ஏன்?

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் உஸாமாவின் தலைமையில் புறப்பட்ட போர்ப்படை இப்போது புறப்படத் தயாராகட்டும் என்ற அபூபக்ர் (ரலி)யின் பிரகடனத்தையும் அதையொட்டி அவர்கள் ஆற்றிய பேருரையையும் கண்டோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்காக ஏன் இவ்வளவு அவசரம் காட்டினார்கள் என்பதைக் காணும் முன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட சம்பவத்தைப் பார்ப்போம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக மட்டுமல்லாமல், ஆட்சித் தலைவராகவும் இருந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததும் அவர்கள் வகித்து வந்த தூதுத்துவத்திற்கு யாரும் பொறுப்பாளராக ஆக முடியாது. ஆனால் அதே சமயத்தில் அவர்கள் வகித்து வந்த ஆட்சிப் பொறுப்புக்கு அடுத்தக்கட்ட பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும். இல்லையெனில் நிர்வாகம் ஸ்தம்பித்து விடும்.
இறந்து விட்ட முதல் ஆட்சியாளரை அடக்கம் செய்யும் பொறுப்பும் அடுத்தக்கட்ட ஆட்சியாளரைத் தான் சாரும். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தின் நடுநாயகர்கள், நபித்தோழர்கள் முதன் முதலில் ஆட்சியாளரை தேர்வு செய்து விட்டு, அதற்கு அடுத்தாற்போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய பணிகளில் இறங்குகின்றனர்.
எங்கே அடக்கம் செய்வது?
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் அடுத்த ஆட்சித் தலைவருக்குரிய பணியில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் அலீ (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோர் நபி (ஸல்) அவர்களின் உடலைக் கழுவுவது, கபனிடுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். பைஅத் – பதவிப் பிரமாணப் பணிகள் செவ்வாய் கிழமை முற்பகல் வரை தொடர்ந்தன! இதன் பின் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் “ஜனாஸா’ பணியில் இறங்கி விட்டனர். இது தொடர்பாக ஏற்பட்ட சிக்கலுக்கும் உரிய தீர்வுகளை அபூபக்ர் (ரலி) யிடம் பெற்றுக் கொண்டனர்.
திங்கட்கிழமை அன்று உச்சி சாய்ந்ததிலிருந்து மறுநாள் செவ்வாய் கிழமை உச்சி சாய்கின்ற வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உடல் நாற்காலியில் வைக்கப் பட்டிருந்தது. மக்கள் வந்து தொழுது கொண்டு சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்காக தனித்தனியாக மக்கள் தொழுதனர். (நூல் : அல்பிதாயா வன்னிஹாயா)

இப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உடலை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்ற விவகாரம் எழுகின்றது. ஆட்சிப் பிரச்சனைக்குத் தீர்வு கண்ட அபூபக்ர் (ரலி) இதற்கும் ஒரு தீர்வை வழங்குகின்றார்கள்.
குழி தோண்டுபவர்கள் மதீனாவில் இரண்டு பேர் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இறந்ததும், நாங்கள் அவர்களை எங்கு அடக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறந்த இடத்திலேயே (குழி தோண்ட வேண்டும்)”என்று கூறினார்கள். அவ்விருவரில் ஒருவர் உட்குழி வெட்டுபவராகவும், மற்றொருவர் குழி தோண்டுபவராகவும் இருந்தார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : அல்பிதாயா வன்னிஹாயா

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய இந்தத் தீர்வின்* மூலம் நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்ற பிரச்சனை முடிவுக்கு வருகின்றது.
நள்ளிரவில் கிளம்பிய மண் வெட்டிகளின் ஓசைகள் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உடல் அடக்கம் செய்யப் பட்டு விட்டது என்று விளங்கிக் கொண்டோம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : அல்பிதாயா வன்னிஹாயா)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உடல் அடக்கப் பிரச்சனை முடிந்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமாவின் தலைமையிலான படையை அனுப்பும் பணியில் ஈடுபடுகின்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று அடியெடுத்து வைக்கத் துவங்கிய அந்தப் பாதை பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்ட மலர் பாதையாக இல்லை. அதில் கற்கள், முட்கள், கற்றாழைச் செடிகள் என பரவிக் கிடந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ என்ற கேடயம், பாதுகாப்புக் கவசம் இருந்தது. அதனால் அவர்களிடம் யாரும் எகிறிக் குதிக்க முடியவில்லை. ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அத்தகைய பாதுகாப்புக் கவசம் எதுவும் இல்லை. அதனால் குறுகிய நோக்கம் படைத்தோர் குதித்து எழுந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜகாத் கொடுத்து வந்தவர்கள், ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று போர்க் கொடி உயர்த்தினர்.
மதீனாவில் நயவஞ்சகம் தனது விஷத்தைக் கக்க ஆரம்பித்தது. மக்கா, மதீனாவைச் சூழ உள்ள கிராம மக்கள் மதம் மாறி விட்டனர். போலிகள் இஸ்லாமியப் போர்வையில் தங்களை நபி என்று புலம்ப ஆரம்பித்து அவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் புறப்பட்டு விட்டனர்.
புற்றீசல்களாய் – புயல்களாய் – பூகம்பங்களாய் இத்தனை பிரச்சனைகளும் அபூபக்ர் (ரலி)க்கு எதிராக படை நடத்திக் கொண்டு வருகையில் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் உஸாமா (ரலி) தலைமையிலான படையை அனுப்ப அவசரம் காட்டுகின்றார்கள். இதற்கான அடிப்படைக் காரணத்தை அறிய வேண்டுமாயின் நபி (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) பெற்றிருந்த உன்னத, உயரிய இடத்தை நாம் ஒரு தரம் பார்த்தாக வேண்டும். உஸாமா எனும் போது அவரது தந்தை ஸைத் (ரலி) அவர்களையும் சேர்த்தே பார்த்தாக வேண்டும்.

ஸைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் என்ற இடத்தைப் பெற்றிருந்தார்கள் என்பதையும், வளர்ப்பு மகன் விஷயத்தில் அறியாமைக் காலத்தில் இருந்து வந்த வழக்கத்தை அல்அஹ்ஸாப் 37 வசனத்தின் மூலம் அல்லாஹ் மாற்றியமைத்தான் என்பதையும் நாம் நன்கறிந்து வைத்திருக்கின்றோம். இத்தகைய சரித்திரப் புகழ் வாய்ந்த ஸைத் (ரலி), நபி (ஸல்) அவர்களால் முஃதா போருக்கு அனுப்பப் படுகின்றார்கள். அந்தப் போரில் கொல்லவும் படுகின்றார்கள். அந்தப் புனிதத் தியாகியின் புதல்வரான உஸாமா (ரலி), நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் ஓர் உயரிய இடத்தை அடைந்திருந்தார்கள். இதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்தார்கள். கழுதையின் சேண இருக்கையின் மீதிருந்த பூம்பட்டு விரிப்பொன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னை கழுதையின் மீது அமர்த்திக் கொண்டார்கள்” என்று உஸாமா பின் ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(புகாரி: 2987)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனான) என்னைப் பிடித்து தமது ஒரு தொடையின் மீதும், (தமது பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களை இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக் கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, “இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகின்றேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி),
நூல் : 6003

நபி (ஸல்) அவர்கள் உஸாமாவின் மூக்கிலிருந்த சளியைத் துடைக்க விரும்பினார்கள். அப்போது ஆயிஷா (ரலி), “நான் செய்வதற்கு என்னை விடுங்கள்”என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! உஸாமாவை நீ நேசி! நிச்சயமாக நான் அவனை நேசிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)யிடமிருந்து ஆயிஷா பின்த் தல்ஹா, நூல் : திர்மிதி3754
இவ்வளவு பாசத்திற்குரிய இளவல் உஸாமாவின் தலைமையில் தான் நபி (ஸல்) அவர்கள் ஒரு படையை அனுப்பினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால்,. இதற்கு முன் (முஃதா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
(புகாரி: 3730)

இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமாவை அனுப்புகையில் அதற்கு விமர்சனம் கிளம்புகின்றது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு பதிலளிக்கின்றார்கள். இது நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும்.
இங்கு நபி (ஸல்) அவர்கள் உஸாமாவின் மீது கொண்டிருந்த அன்பை அபூபக்ர் (ரலி) கவனிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கண் மூடும் முன் உஸாமாவின் தலைமையில் படை அனுப்பினார்கள். ஆனால் அது நடைபெறாமல் போய் விடுகின்றது.
அபூபக்ர் (ரலி), தன்னுயிரை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை நாம் தெளிவாக அறிவோம். அதற்கு எடுத்துக் காட்டாகத் தான் அபூபக்ர் (ரலி) ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக உஸாமாவின் தலைமையில் படையை அனுப்புகின்றார்கள். இதற்கு ஊடே இந்த உலகமே குறுக்கே வந்து நின்றாலும் அதை அபூபக்ர் (ரலி) உதாசீனம் செய்கின்றார்கள்.
“எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் ஈமான் கொண்டவராக மாட்டார்” (புகாரி: 14) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதற்கேற்ப, அவர்களை நேசிப்பதில் தன்னை விஞ்சியவர் யாருமில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகும் நிரூபித்து, இந்த ஹதீசுக்கு சிறந்த இலக்கணமாக அபூபக்ர் (ரலி) திகழ்கின்றார்கள்.