ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன?

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இறைச்செய்திகள் குர்ஆன் என்றும் ஹதீஸ்கள் என்றும் ஹதீஸ் குத்ஸி என்றும் மூன்று வகைகளாக மக்களால் நம்பப்படுகிறது. குர்ஆன், ஹதீஸின் இதன் இலக்கணத்தை நாம் அறிந்து கொண்டால் ஹதீஸ் குத்ஸி என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

குர்ஆன் என்பது லவ்ஹூல் மஹ்பூல் எனும் மூலப்பிரதியில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக இறைவன் கொடுத்து அனுப்பியதாகும்.

இறைவனிடமிருந்து வந்த செய்திகள் அனைத்தும் குர்ஆனாகாது. அது போல் ஜிப்ரீல் மூலம் வந்த அனைத்தும் குர்ஆன் ஆகாது. திருக்குர்ஆனுக்கு அல்லாஹ்விடம் ஒரு மூலப்பிரதி உள்ளது. அந்த மூலப்பிரதியில் உள்ளதை ஜிப்ரீல் மூலம் அல்லாஹ் கொடுத்து அனுப்புவான். அது மட்டும் தான் குர்ஆன் எனப்படும்.

ஜிப்ரீல் வழியாக வழங்கப்பட்டது தான் திருக்குர்ஆன் என்பதை 2:97, 16:102, 81:19, 26:193, 53:5-8 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

ஜிப்ரீல் அவர்கள் மூலப்பிரதியில் இருந்து இல்லாமல் இறைவனின் செய்தியைக் கொண்டு வந்தால் அது குர்ஆனாக ஆகாது. இதை 56:77,78, 85:21,22 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

இது அல்லாத அனைத்து இறைச் செய்திகளும் ஹதீஸ்கள் எனப்படும்.

வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 42:51)

இறைவன் நேரடியாகப் பேசுவதன் மூலமோ, வானவர்கள் மூலமோ, உள்ளத்தில் உதிக்கச் செய்வதன் மூலமோ இறைவன் தனது செய்திகளை இறைத்தூதர்களுக்குத் தெரிவிப்பான். அவை ஹதீஸ்கள் எனப்படும்.

ஹதீஸ்கள் அனைத்தும் இறைச் செய்திகள் தான். ஆனால் இந்த இறைச் செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் போது பயன்படுத்தும் சொல்லமைப்பைப் பொறுத்து ஹதீஸ் குத்ஸி என்ற ஒரு வகை பிற்காலத்தில் பிரிக்கப்பட்டது.

குத்ஸீ என்றால் பரிசுத்தமானது; தூய்மையானது என்று பொருள். ஹதீஸ் குத்ஸீ தூய்மையான ஹதீஸ் என்று பொருள்படும்.

நோன்பாளிக்கு அல்லாஹ் கூலி கொடுப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னால் அது சாதாரண ஹதீஸ் என்றும்

நான் கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னால் அது ஹதீஸ் குத்ஸீ என்றும்

குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு வகைப்படுத்துவது அறியாமையால் விளைந்ததாகும். மேலே சொன்ன இரண்டு வகையான சொற்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருந்தால் இரண்டுமே பரிசுத்தமானவை தான். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து பெற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னவை தான். இரண்டுக்கும் தரத்தில் எந்த வேறுபாடும் இல்லை.

ஒன்றை தூய்மையான ஹதீஸ் என்றும். மற்றொன்றை சாதாரண ஹதீஸ் என்றும் கூறுவதன் மூலம் குத்ஸீ ஹதீஸ் தான் அல்லாஹ்வின் வழியாகக் கிடைத்தவை என்றும் மற்ற ஹதீஸ்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தமாகச் சொன்னவை என்றும் சித்தரிக்கிறார்கள். இது அறிவற்ற வகைப்படுத்துதல் ஆகும்.

ஹதீஸ் குத்ஸீ என்ற வகைப்படுத்துதலில் எந்த அறிவார்ந்த சிந்தனையும் இல்லை. ஹதீஸ்கள் அனைத்துமே ஹதீஸ் குத்ஸீ –பரிசுத்த ஹதீஸ்கள் – தான்.

இதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியை குறிப்பிடலாம்.

2227حَدَّثَنِي بِشْرُ بْنُ مَرْحُومٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 2227)

ஹதீஸுல் குத்ஸி அனைத்தும் சரியானவை என்று கூற முடியாது. பலவீனமானவர்கள் பொய்யர்கள் வழியாகவும் இது போன்ற செய்திகள் அறிவிக்கப்படும். எனவே மற்ற ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்களை ஆராய்வது போன்று இந்த வகை ஹதீஸ்களையும் ஆராய வேண்டும்.

விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் மறுத்துவிட வேண்டும்.