51) கப்ரில் உள்ளவர்கள் உதவி செய்வார்களா?

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

கப்ரில் உள்ளவர்கள் உதவி செய்வார்களா?

இறந்தவர்கள் நல்லவர்களாக இருந்தால் மறுமை நாள் வரும் வரை மண்ணறையில் அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள். அவர்களுக்கும், பூமியில் உள்ளவர்களுக்கும் மத்தியில் எந்த விதமான தொடர்பும் இருக்காது. இறந்தவர்களால் உயிருள்ளவர் களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது.

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன்: 7:197)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படு கிறது. அதைச் செவிதாழ்த்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 22:73)

உங்கள் இறைவன் அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

(அல்குர்ஆன்: 35:13)

(மண்ணறையில் நல்லடியார்களிடம் விசாரணை முடிந்தவுடன்) உறங்குங்கள் என்று அவரிடம் சொல்லப்படும். அதற்கு அவர் எனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று (எனக்குக் கிடைத்த நல்வாழ்க்கையை) அவர்களிடம் கூறி விட்டு வருகிறேன் என்று கூறுவார். அதற்கு இரு வானவரும் “அல்லாஹ் உன்னை இந்த இடத்திலிருந்து எழுப்பும் வரை புது மாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்கு. புது மாப்பிள்ளையை அவருக்குப் பிரியமானவரைத் தவிர வேறு யாரும் எழுப்ப மாட்டார்கள்” என்று கூறிவிடுவார்கள்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி-991