44) உயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

44) உயிர் தியாகம் செய்யாதவருக்கும்

ஷஹீதுடைய அந்தஸ்து

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரை தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும்.

இதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரணை இல்லாமல் மண்ணறை வேதனையிலிருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப் படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம்.

«مَنْ طَلَبَ الشَّهَادَةَ صَادِقًا، أُعْطِيَهَا، وَلَوْ لَمْ تُصِبْهُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உண்மையான மனதுடன் இறைவழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார். அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(முஸ்லிம்: 3869)

«مَنْ سَأَلَ اللهَ الشَّهَادَةَ بِصِدْقٍ، بَلَّغَهُ اللهُ مَنَازِلَ الشُّهَدَاءِ، وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ»، وَلَمْ يَذْكُرْ أَبُو الطَّاهِرِ فِي حَدِيثِهِ: «بِصِدْقٍ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர் தியாகிகள் தகுதிக்கு அல்லாஹ் உயர்த்துவான். அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் (ரஹ்)

(முஸ்லிம்: 3870)