43) அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

43) அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்

அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனிச் சிறப்பு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மரணத்திற்குப் பிறகு சந்தோஷமான வாழ்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. மண்ணறை வேதனையிலிருந்து இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். அவர்களுடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

(அல்குர்ஆன்: 3:169)

இந்த வசனத்திற்குரிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம்.

நாங்கள் அப்துல்லாஹ்பின் மஸ்வாத் (ரலி) அவர்களிடம், ”(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள். தெரிந்து கொள்க. இந்த வசனத்தைப் பற்றி முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப் பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து விட்டு பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பிய வாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.

இவ்வாறே மூன்றுமுறை (கேள்வியும் பதிலும்) நடை பெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி)

(முஸ்லிம்: 3834)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷஹீதிற்கு (உயிர் தியாகி) ஆறு சிறப்புகள் வழங்கப்படுகிறது. அவருடைய இரத்தத்தில் முதல் சொட்டு (பூமியில் விழும் போதே) அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது. சொர்க்கத்தில் அவருடைய இருப்பிடம் அவருக்குக் காட்டப்படுகிறது. ஹூருல் ஈன்களை அவருக்கு மணமுடித்து வைக்கப்படும். மாபெரும் திடுக்கத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுகிறார். மண்ணறை வேதனையிலிருந்தும் அவர் பாதுகாக்கப்படு கிறார். ஈமான் என்ற ஆடை அவருக்கு அணியப்படுகிறது.

அறிவிப்பவர்: கைஸ் ஜூதாமீ (ரலி)

(அஹ்மத்: 17115)

அல்லாஹ்வின் வழியில் உயிர் தியாகம் செய்தவர்கள் உலகி லேயே சிரமங்களை அனுபவித்து விட்டதால் மண்ணறையில் அவர்கள் விசாரணை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதரே! உயிர் தியாகியைத் தவிர மற்ற இறை நம்பிக்கையாளர்கள் மண்ணறைகளில் (விசாரணை யின் மூலம்) சோதனை செய்யப்படுகிறார்களே ஏன்? என்று ஒரு மனிதர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் (போரின் போது) மின்னுகின்ற வாட்கள் ஷஹீதுடைய தலையில் ஏற்படுத்திய சோதனையே போதுமானமாகும். (எனவே அவர் மண்ணறையில் சோதனை செய்யப்பட மாட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: நஸயீ-2026