39) திருப்தியான வாழ்க்கை

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

39) திருப்தியான வாழ்க்கை

உலக வாழ்வில் எவ்வளவுதான் இன்பங்களை மனிதன் அடைந்தாலும் திருப்தி அவனுக்குக் கிடைப்பதில்லை. இதனால் நிம்மதியின்றி செல்வத்தைத் தேடிக் கொண்டே வாழ்நாளைக் கழித்து விடுகிறான். ஆனால் நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது திருப்திக்குரியதாகவும், சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கும். சத்தியத்திற்காக உயிர் நீத்த நபித்தோழர்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

‘பிஃரு மஊனா’ (என்னுமிடத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமது) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர – அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூசுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்கு கேடு நேர- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள்.

பிஃரு மஊனா வில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டு விட்டது. ” ‘நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தி அடைந்து விட்டான். நாங்கள் அவனைக் குறித்து திருப்தி அடைந்தோம்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 2814)