30) அல்லாஹ்வும் அவ்லியாவும் ஒன்றா?

மற்றவை: இணை கற்பித்தல் ஒரு விளக்கம்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களுக்கு முன்பிருந்த சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.

(முஸ்லிம்: 4769)

பின்னால் நடக்கக் கூடியதை முன் கூட்டியே அறிவிப்பதெல்லாம் நபிமார்களோடு முடிந்து விட்டது. இந்த உம்மத்தில் யாருக்கும் அவ்வாறு கிடையாது. இதை இறைவன் தந்த அருட்கொடை என்று கூடச் சொல்லலாம்.

இந்தச் செய்தியை மையமாக வைத்து உமர் (ரலி) அவர்கள் சம்பந்தமாக ஒரு செய்தியையும் சொல்வார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மதினாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, ஈரான் நாட்டிற்குப் போருக்காக அனுப்பியிருந்த படை யின் தளபதி ஸாரியா மற்றும் அவரது படையினரை அந்த மலையின் பின் பகுதியில் இருந்து ஒரு படை தாக்க வருவதை மதினாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பார்த்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் ஸாரியா! ஸாரியா! என்று சப்தமிட்டார்கள். மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களிடத்தில் இதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து ஸாரியாவும் அவரது படையினரும் போரை முடித்து விட்டு திரும்பி வந்த பிறகு மக்கள் அவரிடம் சென்று விசாரித்து தெரிந்து கொண்டார்கள்.

இப்படி ஒரு செய்தியைக் கூறி உமர் (ரலி) அவர்களுக்கு மறைவான ஞானத்தை அல்லாஹ் வழங்கி சிறப்பித்திருப்பதாகவும் கூறுவார்கள்.

மேற்கண்ட செய்தி பலவீன மானதாகும். இந்தச் செய்தி தலாயிலுந் நுபுவ்வத் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் அய்யூப் பின் ஹூத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் புகாரி, நஸாயி, அபூஹாத்தம், பைஹகீ, அஹ்மது இப்னு ஹம்பல், தாரகுத்னி, அபூதாவூத் ஆகிய அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் இதே செய்தியை லைஸ் என்பவர் அம்ரு இப்னு ஹாரிஸ் வழியாக அறிவிக்கிறார். ஆனால் இவர்கள் இவருடைக்குமிடையில் சுமார் 124 வருடங்கள் இடைவெளி இருக்கின்றது. இத்தனை வருடங்கள் இடைவெளி இருக்கும் போது இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.

எனவே இந்தச் செய்தியும் பலவீனமானது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அடுத்ததாக, அவ்லியாக்களுக்கு சக்தி உண்டு என்பதற்கு இன்னொரு ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வ தில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செய-லும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

(புகாரி: 6502)

இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா! நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ் அவ்லியாக்களுக்கு வழங்கியிருக் கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அப்படியென்றால் அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அப்படியானால் அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்வார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது பாதுஷா, உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்று சொல்லி மக்களை வழிகெடுப்பதைப் பார்க்கலாம்.

நாம் இதற்கு முன் வைத்த எந்த ஆதாரத்தையும் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த ஹதீஸை நாம் அதில் சொல்லப்பட்டதைப் போன்று நேரடியாகத்தான் புரிந்து கொள்வதா?

நம்முடைய கை அல்லாஹ்வுடைய கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப் பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கி றார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

அதுமட்டுமல்லாமல், அவர்கள் இறந்த பிறகு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டிருக்கின்றது. மேலும் அவ்லியாக்களுக்கு வாரிசு (பிள்ளைகள்) இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொத்துக்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கு மனைவியும் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இறந்து போனது அல்லாஹ்வா?

இந்த ஹதீஸைப் புரிந்து கொள்வதில் தான் பிரச்சனை இருக்கிறது. சாதாரண மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ் வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல் வது என்பது ஒருவகை இருக்கிறது. நேரடியாகப் புரிந்து கொள்வது என்றும் ஒருவகை இருக்கின்றது.

எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக் கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா?

இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.

இதுபோன்று, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள ஒன்று தான், நாம் ஒருவரை இவர் இன்னாரின் வலது கையாகச் செயல்படுகிறார் என்று சொல்வதாகும். உண்மையில் அவர் அவரின் வலது கையா? அவருக்கு என்ன வலது கை இல்லாமலா இருக்கிறது?

இதை நாம் எப்படி விளங்கிக் கொள்வோம். நாம் நமது பெரும் பாலான காரியத்தை வலது கை மூலமாகத்தான் நிறைவேற்றுகின்றோம். எவ்வாறு நமக்கு வலது கை முக்கியமானதாக இருக்கின்றதோ அதை போன்று அந்த மனிதரும் வலது கையாகச் செயல்படுகிறார் என்று தான் நாம் புரிந்து கொள்வோம்.

இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் மனிதனுக்கென்று சுயமாக அற்புதம் செய்ய எந்த ஆற்றலையும் கொடுக்கவில்லை. அல்லாஹ் வேறு, மனிதன் வேறு தான். நபிமார்களுக்குக் கூட அல்லாஹ் தான் அற்புதங்களையே வழங்கினான்.

நபிமார்களும் சில நேரங்களில் செய்த தவறுகளுக்காக அல்லாஹ் விடத்தில் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இருக்கும் போது சாதாரண மனிதர்களை எப்படி அவ்லியாக்கள் என்றும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும் அவர்களுடைய கை, கால்கள், செவிப் புலன்கள், பார்வைப் புலன்கள் அனைத்தும் அல்லாஹ்வுடையது என்றும் சொல்ல எப்படி மனது வருகின்றது?

சரி! அல்லாஹ்வின் கையும் அவ்லியாக்களின் கையும் ஒன்று என மேற்கண்ட ஹதீஸிற்கு ஒரு தவறான வியாக்கியானத்தை – விளக்கத்தைக் கொடுக்கிறார்கள் என்றால் பின்வரும் ஹதீஸிற்கு என்ன விளக்கத்தைக் கொடுப்பார்கள்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய் வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

(முஸ்லிம்: 5021)

இந்த ஹதீஸையும் இவர்கள் நேரடியாக விளங்குவார்கள் என்றால் பிச்சைக்காரர்கள் அனைவரும் அல்லாஹ்வா? அப்படியானால் அவர்கள் அனைவருக்கும் கப்ரு கட்டுவீர்களா?

அதாவது இந்த ஹதீஸை நேரடியாகப் புரிந்து கொள்வதாக இருந்தால் இவர்களுடைய வாதப்படி நோயாளியாக இருந்தது, பசியாக இருந்தது, தாகமாக இருந்தது அனைவரும் அல்லாஹ் தான். ஏனென்றால் அந்த ஹதீஸிலேயே அல்லாஹ், அவனை நலம் விசாரிப்பது என்னை நலம் விசாரிப்பது போலாகும்; அந்த பிச்சைக்காரனுக்கு உண வளிப்பது எனக்கு உணவளிப்பதாகும்; அவனுக்கு தாகத்துக்கு நீர் கொடுப்பது எனக்குத் தாகம் தீர்ப்பதாகும் என்று சொல்லிவிட்டான்.

நாம் கேட்பது என்னவென்றால், இதற்கு முன் நாம் சொன்ன ஹதீஸை நீங்கள் நேரடியாக விளங்கியதைப் போன்று இந்த ஹதீஸையும் நீங்கள் நேரடியாக விளங்கிக் கொள்வீர்களா?

அவ்வாறு நீங்கள் இதையும் நேரடியாக விளங்கிக் கொள்வீர்கள் என்றால் உங்களுடைய வாதப்படி அவ்லியாக்களுக்கெல்லாம் மிகப் பெரிய அவ்லியா பிச்சைக்காரர்கள் தான் என்று சொல்வீர்களா?

அப்படியானால் இந்த ஹதீஸை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? அல்லாஹ்விற்கு எதுவும் தேவை யில்லை. அவன் அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையான வன். எந்தத் தேவைகளுமற்றவன்.

ஆக, எனக்கு வழங்கினால் எந்த அளவுக்குக் கூலியை நான் தருவேனோ அந்த அளவுக்கு கூலியை பிச்சைக்காரனுக்கு நீ வழங்கினால் உனக்குத் தருவேன் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி விளங்க வேண்டிய விஷயங்களை ஒரு சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு வழிகெட்டுப் போவதற்கு ஆதாரம் காட்டுகின்றார்கள்.

அது போன்று, நபிகளாரை ஒளி என்று அல்லாஹ் சொல்கிறான்.

அந்த வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம், நபிகளார் மதீனாவில் நடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் வெளிச்சமாகி விடும் என்று சொல்வார்கள்.

அல்லாஹ் சொல்லக்கூடிய ஒளிக்கு இதுதான் அர்த்தமா? ஒளி என்றால் கல்வி, ஞானம், நேர்வழி என்று அர்த்தம்.

அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடந்தார்கள் என்று நாம் சொல்வோம். இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம். இருட்டாக இருக்கும் போது எப்படி எதுவும் தெரியாதோ, அது போன்று அறியாமையிலும் ஒன்றும் தெரியாத வர்களாக இருந்தார்கள் என்றுதான்.

அறிவு என்றால் வெளிச்சம் என்று சொல்வார்கள். அதாவது வெளிச்சம் என்றால் எப்படி எல்லாம் தெரிகிறதோ அது போன்று கல்வி ஞானம் இருந்தால் எல்லாம் தெரியும் என்று அர்த்தம்.

குர்ஆனை அல்லாஹ் (நூர்) வெளிச்சம் என்று சொல்கிறான். அப்படியானால் இந்த வசனத்தை நபிகளாருக்கு சொன்ன விளக்கத்தைப் போன்று இதற்கும் சொல்வீர்களா? குர்ஆனைத் திறந்தால் இருட்டாக இருப்பது எல்லாம் வெளிச்சமாகும். நம்முடைய வீடு, அறைகளில் நாம் குர்ஆனை திறந்தால் போதும் வெளிச்சமாகி விடும் என்று சொல்வீர்களா?

அப்படியானால் இனிமேல் பள்ளிவாசலில் லைட் பல்பு எதுவும் போட வேண்டாம். பள்ளிவாசல்களில் ஒரு பத்து குர்ஆனைக் கட்டி தொங்கப் போடுங்கள். நன்றாக வெளிச்சமாகிவிடும். கரன்ட் பில்லும் கட்ட தேவையில்லை. மின்சாரத்தையும் சிக்கனமாக்கலாம்.

இப்படிச் சொன்னால் அறிவுடைய யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அனைத்தையும் நேரடியாகத் தான் விளங்க வேண்டும் என்று சொல்கின்ற நீங்கள் தான் ஏற்றுக் கொள்வீர்களா?

குர்ஆனை அல்லாஹ் ஒளி என்று குறிப்பிடுவதற்கு விளக்கம் என்னவென்றால், அதில் உள்ள விஷயங்கள் ஒளியை, வெளிச்சத்தை ஏற்படுத்துவதைப் போன்று நமக்கு நேர்வழி காட்டும் என்பதுதான்.

“நபிகள் நாயகம் (ஸல்) தொழும் போது நான் குறுக்கே படுத்து உறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது என் காலைத் தமது விரலால் தொடுவார்கள். உடனே என் காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்று வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை” என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(புகாரி: 513, 519, 1209)

நபிகளார் ஒளி என்பதற்கு நீங்கள் கொடுக்கின்ற விளக்கம் சரியென்றால், அவர்களுடைய வீட்டில் விளக்கு எரியாமல் ஏன் இருட்டாக இருந்தது? நபிகளார் தொழும் போது குறுக்கே படுத்துக் கிடந்த ஆயிஷா (ரலி) அவர்களுடைய காலில் கையால் குத்த வேண்டும்?

இவ்வாறு இவர்கள் இலக்கியமாக சொல்லப்பட்ட விஷயங்களையெல்லாம் நேரடி அர்த்தம் கொடுத்து தானும் வழிகெட்டு மக்களை வழி கெடுக்கின்றார்கள். நேரடியான விஷயங்களை நாம் பல எடுத்துக் காட்டியிருக்கின்றோம். உவமையாகச் சொல்லப்பட்ட சில ஹதீஸ்களை வைத்துக் கொண்டு இப்படித் தவறாக விளங்கியிருக்கின்றனர்.

வானளாவிய மரம் என்று சொல்வோம். அப்படி ஒரு மரம் உண்டா? அதே போன்று விண்ணை முட்டும் கோபுரம் என்று சொல்வோம். அது என்ன வானத்தை முட்டிக் கொண்டா இருக்கிறது? இதை நாம் எவ்வாறு உவமையாக விளங்கிக் கொள்வோமா அதை போன்று மேற்கூறப்பட்ட ஹதீஸ்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதிலும் மேற்கண்ட ஹதீஸில் நான் கையாக மாறிவிடுவேன். காலாக மாறிவிடுவேன் என்று சொல்லிவிட்டு கடைசியாக முடிக்கும் போது, “என்னிடம் கேட்டால் அவனுக்கு நான் கொடுப்பேன்” என்று அல்லாஹ் முடிக்கின்றான்.

இவனுடைய கை கால்கள் அல்லாஹ்வுடைய கை கால்களாக மாறிவிடும் என்றால் ஏன் அல்லாஹ் விடத்தில் கேட்க வேண்டும்? அல்லாஹ் ஏன் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும்?

கடைசியில் அந்த வார்த்தையைச் சொன்னதிலிருந்தே அல்லாஹ் வேறு; மனிதன் வேறு என்று ஆகிவிட்டதா இல்லையா?

நபிமார்கள் அல்லாதவர்கள் மூலமாகவும் சில அற்புதங்கள் நிகழும். வித்தியாசம் என்னவென்றால், நபிமார்களிடமிருந்து நிகழும் அற்புதத்தை அவர்கள் மூலமாக அல்லாஹ் செய்ய வைப்பான். மற்றவர்களிடம் நிகழக்கூடிய அற்புதங்களெல்லாம் அவர்களிடத்தில் அல்லாஹ்வே செய்வானே தவிர அவர்களாக அறிவித்து, முடிவெடுத்து செய்வதாக இருக்காது. இந்த மாதிரியான அற்புதங்கள் எல்லா மனிதர்களுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்க வாய்ப்பிருக் கின்றது என்பதை இதுவரை பார்த்தோம்.

இந்த அற்புதங்கள் நல்லவர் களுக்கு மாத்திரமல்லாமல் கெட்டவர்களுக்கும் நடக்குமா என்றால் கெட்டவர்களுக்கும் நடக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்னாலும் சரி! பின்னாலும் சரி! கெட்டவர்களுக்கும் அற்புதங்கள் நடக்கும்.