19) அலீயின் சிறப்பை ஏற்க மறுத்த யூனூஸ் நபி ஆழ்கடலில் சிறை வைப்பு

நூல்கள்: ஷியாக்கள் ஓர் ஆய்வு

நபிமார்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்
وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

(அல்குர்ஆன்: 25:74)➚

இது திருக்குர்ஆன் வசனத்தின் ஒரு பகுதியாகும். ‘உன்னை அஞ்சுவோருக்கு எங்களை முன்னோடியாகவும் ஆக்குவாயாக!’ என்பது இதன் பொருள்.

இந்த வசனம் அபூ அப்தில்லாஹ்விடம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போது அவர், “எங்களை இறைவனை அஞ்சுவோருக்கு முன்னோடிகளாக (இமாமாக) ஆக்குவாயாக என்று ஒரு பாரதூரமான விஷயத்தை முஸ்லிம்கள் கேட்கின்றார்கள்” என்று குறைபட்டுக் கொண்டார். “ரசூலுல்லாஹ்வின் பேரரே! இது எப்படி?” என்று அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்

وَاجْعَلْ لنا من المتقين إماما

(வஜ் அல்லனா மினல் முத்தகீன இமாமா)

“எங்களுக்கு அஞ்சக்கூடியவர்களிலிருந்து முன்னோடியை ஆக்குவாயாக!’ என்று தான் அருளப்பட்டது” என்று இவ்வசனத்திற்கான விரிவுரையில் கிம்மி எடுத்துச் சொல்கின்றார்.

ومَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

(அல்குர்ஆன்: 33:71)➚கூறுகின்ற சரியான வசனமாகும்.

ஆனால் கலீனீ என்பவர் தனது நூலான அல்காஃபி என்ற நூலில்

ومَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ في ولاية على والأئمة بعده فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

“அலீ (ரலி) மற்றும் அவருக்குப் பின் வருகின்ற இமாம்களின் அதிகார விஷயத்தில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார் என்று தான் குர்ஆன் வசனம் அருளப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார்.

இப்படி ஒரு வாசகம் குர்ஆனில் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

இவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள் தான். வேதத்தில் விளையாடுகின்ற யூத, கிறிஸ்துவர்களின் வேலைகளை இவர்களது வேலைகள் மிஞ்சி விட்டன. தவ்ராத், இன்ஜீலில் அவர்களின் வேலைகள் எடுபட்டன. ஆனால் ஷியாக்களின் விளையாட்டுக்கள் திருக்குர்ஆனில் எடுபடவில்லை; எடுபடவும் செய்யாது. காரணம் அல்லாஹ் இந்த வேதத்தை, திருத்தம், மாற்றம், நீக்கல், சேர்த்தல் அனைத்தை விட்டும் இறுதி நாள் வரை இரும்புத் திரையை மிஞ்சிய தனது திரையைப் போட்டுப் பாதுகாத்து விட்டான். இதோ அல்லாஹ் சொல்கின்றான்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன்: 15:9)➚

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் நம்மீது இட்டுக்கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.

(அல்குர்ஆன்: 69:43-45)➚

திரித்தல் என்ற திருட்டு வாதம்

திருக்குர்ஆனில் திருத்தம் உள்ளது. மாற்றம் உள்ளது என்று இவர்கள் தில்லுமுல்லு வாதம் செய்வது ஏன்? திருகுதாளப் பேச்சு ஏன்? இதற்கு அடிப்படைக் காரணம் வேறொன்றுமில்லை. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைமை தங்களுக்கு மட்டுமே சொந்தம்; வேறு யாருக்கும் கிடையாது என்ற அவர்களின் அலாதியான, அபரிமிதமான நம்பிக்கை தான். அதாவது ஒட்டுமொத்த சமுதாயமும் அவர்களின் தலைமைத்துவத்தை நம்பிக்கை கொள்ளவேண்டும்.

எப்படி நாம் அல்லாஹ்வையும் தூதர்களையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறோமோ அதுபோன்று ஷியாக்களின் தலைமைத்துவத்தை நம்ப வேண்டும்.

இதோ கலீனீ அறிவிக்கின்றார்:

மக்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் அவர்கள் மீது விதியாக்கியுள்ளான். மக்கள் நம்மை அறியாமல் இருப்பது தகாது. நம்மைத் தெரியாது என்று சொல்லி அவர்கள் தப்பிக்கத் தக்க காரணமில்லை. நம்மை அறிந்தவர் நம்பிக்கை கொண்டவாராவர் (அதாவது முஃமினாவார்) மறுத்தவர் இறைநிராகரிப்பாளர் ஆவார். நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அல்லாஹ் விதித்திருக்கின்ற நேர்வழியின் பக்கம் அவர்கள் திருந்தி, திரும்புகின்ற வரை நம்மை அறியாமல் இருந்து நம்மை மறுக்காதவர் வழி கெட்டவராவார்.

இது ஷியாக்களின் தலைமைத்துவ வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

மார்க்க விஷயத்தில் கட்டுப்படுதல் என்பது முதலில் அல்லாஹ்வுக்கும் அதன் பின்னர் அவனது இறைத்தூதர்களுக்கும் மட்டும் தான். ஆனால் இந்த ஷியாக்கள் இதைப் பொதுவுடைமையாக்கி விட்டார்கள்.

அவர்களது இமாம்களில் ஒருவரான அபூஅப்தில்லாஹ், “கட்டுப்படுவது என்பது இறைத்தூதர்களுக்கும் இறைநேசர்களுக்கும் பொதுவானதாகும்” என்று சொல்கின்றார். இவ்வாறு கலீனீ தனது அல்காஃபீ என்ற நூலில் அறிவிக்கின்றார்.“அல்லாஹ்வையும் அஹ்லுல் பைத்தை (நபியவர்களின் குடும்பத்தாரைச்) சார்ந்த அவனது இமாமையும் அறிந்தவர் தான் அல்லாஹ்வை அறிந்தவரும் அவனை வணங்குபவருமாவார்; அல்லாஹ்வையும் அஹ்லுல் பைத்தைச் சார்ந்த நம் இமாமையும் அறியாதவர் அவனை அறியாதவரும் அல்லாஹ் அல்லாத மற்றவரையும் வணங்கியவருமாவார். அல்லாஹ்வின் மீது வழிகேட்டை வணங்கியவருமாவார்” என்று அபூஜஃபர் அறிவித்ததாக ஜாபிர் வழியாக அறிவிக்கப்படுகின்றது.

இது அல்காஃபி என்ற அவர்களின் நூலில் இடம்பெறுகின்றது.இது ஷியாக்களின் உயர்சாதி மனப்பான்மை யையும் அவர்களின் ஆதிக்கவெறியையும் தெளிவாகவே பறை சாற்றுகின்றது.

அதற்காகத் தான் அவர்கள், ‘குர்ஆனில் பிழையிருக்கின்றது, திருத்தமிருக்கின்றது, தில்லுமுல்லு இருக்கின்றது’ என்று திருட்டு வாதம் புரிகின்றார்கள். என்ன விலை கொடுத்தேனும் தலைமைத்துவம் தங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்பது அவர்களிடம் கொழுந்து விட்டு எரிகின்ற கோர நெருப்பாகும். இந்தக் காரணத்தால் அவர்கள் தலைமைத்துவத்தை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஆக்கிவிட்டார்கள். இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து என்பது நமது தூய மார்க்கம் கூறும் அடிப்படையாகும்.

عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலைநிறுத்துவது.

3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),(புகாரி: 8)

ஆனால் களங்கமும் கலப்படமும் நிறைந்த ஷியாக்களின் மதம் கூறும் அடிப்படையைப் பாருங்கள்:

1. தொழுகையை நிலைநிறுத்துவது.

2. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

3. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

4. ரமளானில் நோன்பு நோற்பது.

5. விலாயத்.

(இறுதி ஹஜ்ஜின் போது)கதீர் (என்ற இடத்தில் பேசிய) தினத்தன்று விலாயத்துக்கு அழைப்புக் கொடுத்தது போன்று நபி (ஸல்) அவர்கள் வேறெதற்கும் அழைப்புக் கொடுக்கவில்லை. இவ்வாறு இமாம் அபூஜஃபர் கூறியதாக கலீனீ தனது அல்காஃபி என்று நூலில் அறிவிக்கின்றார்.

இந்த ஐந்து கடமைகளில் எது சிறந்தது? என்று கேட்ட போது, “விலாயத்தை விட வேறு எது சிறந்ததாக இருக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டார்.

தூய இஸ்லாமிய மார்க்கத்தில் தூய கலிமா முதலாவது அடிப்படையாக இடம்பெறுகின்றது. அதற்குப் பதிலாக ஷியா மதத்தின் கடமைகளில் விலாயத் இடம்பெறுகின்றது. விலாயத் என்றால் இறைநேசம் என்று பொருள்.“நாங்கள் நபியின் குடும்பம். எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே விலாயத் என்ற இறைநேசம் சொந்தம். அதன் ஏகபோக உரிமை வேறு யாருக்கும் கிடையாது. எங்கள் குடும்பத்தில் தான் இறைநேசர்கள் அதாவது வலீமார்கள் இருக்கின்றார்கள். நாங்கள் தான் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இதனால் நாங்கள் தான் தலைமைத்துவத்திற்குத் தகுதி வாய்ந்தவர்கள்” என்ற யூத வாதத்தை வைக்கின்றார்கள்.

இவர்களின் இந்த வாதத்திற்கு எதிராகத் திருக்குர்ஆன் கொள்கை இருப்பதால் அதில் திருத்தம் உள்ளது என்ற திருட்டு வாதத்தை வைக்கின்றார்கள்; திருகுதாளம் புரிகின்றார்கள்.

விலாயத்தை மறுத்ததால் விழுங்கிய கடல் மீன்!

இங்கே இயற்கையாகவே ஒரு கேள்வி எழுகின்றது. தொழுகைக்கும் ஜகாத்திற்கும் குர்ஆனில் இடம் கிடைத்த அளவிற்கு விலாயத்திற்கு கிடைக்கவில்லையே! விலாயத் என்பது தொழுகை, ஜகாத்தைப் போன்ற இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றல்ல என்பது இதன் மூலம் விளங்குகின்றதல்லவா? என்பது தான் அந்த கேள்வி.

உண்மை அது தான். ஆனால் ஷியாக்களோ குர்ஆனில் விலாயத்திற்கு மிகப் பெரிய இடம் உள்ளதாக நம்புகின்றனர். அதிலும் அலீ (ரலி) அவர்களின் விலாயத்தைப் பற்றி அல்லாஹ்வே திருக்குர்ஆனில் கூறுவதாகத் திரிக்கின்றனர்.

அலீயின் விலாயத்தைப் பற்றி அல்லாஹ் நபிமார்களிடம் உடன்படிக்கை எடுத்து விட்டான். இவ்வாறு அபூஜஃபர் அறிவிக்கின்றார்.

நூல்: அல்காஃபி, பாடம்:

وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيْتُكُم مِّن كِتَـٰبٍ وَحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥ ۚ قَالَ ءَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِى ۖ قَالُوٓا۟ أَقْرَرْنَا ۚ قَالَ فَٱشْهَدُوا۟ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّـٰهِدِينَ

இறைநம்பிக்கை. “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?’’ என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?’’ என்று கேட்டபோது, “ஒப்புக் கொண்டோம்’’ என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்’’ என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 3:81)➚

அல்லாஹ் இந்த வசனத்தில் நபிமார்களிடம் எடுத்த உடன்படிக்கையைப் பற்றிப் பேசுகின்றான். உங்களிடம் ஒரு நபி வந்தால் அவரை உண்மைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட இறைவசனத்தை அலீ அவர்களுக்குப் பொருத்துகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்குக் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதைப் புரியலாம்.

இப்போது தெரிகின்றதா ஷியாக்களின் விஷம விளையாட்டு?ஆனால் இஸ்லாம் அவ்வாறு கூறவில்லை. விலாயத் என்பது பொதுவானது. முஃமின்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று அல்லாஹ்வின் திருவசனம் விலாயத்தைப் பொதுவுடமையாக்கி விட்டது.

أَلَآ إِنَّ أَوْلِيَآءَ ٱللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 10:62-63)➚

தலைமைத்துவத்தைத் தங்களுக்காக ஆக்க வேண்டும் என்ற தணியாத பதவி தாகத்தில் ஷியா மதம் விலாயத்தைத் தனியுடைமை ஆக்குகின்றது. இதற்காகப் பல்வேறு பொய் மூட்டைகளை அடித்தும் அவிழ்த்தும் விட்டுக் கொண்டிருக்கின்றது.

இதை விடக் கொடுமை என்ன தெரியுமா?

قال أمير المؤمنين على: إن الله عرض ولايتي على أهل السموات وعلى أهل الأرض..أقر بها من أقر وأنكرها من أنكر.. أنكرها يونس فحبسه الله في بطن الحوت حتى أقر بها – بصائر الدرجات

அமீருல் முஃமினீன் அலீ (ரலி) கூறுகின்றார்கள்:

அல்லாஹ் எனது விலாயத்தை வானவர்கள், பூமியில் உள்ளவர்கள் மீது எடுத்துக் காட்டினான். அதை ஏற்பவர்கள் ஏற்றுக் கொண்டனர். மறுப்பவர்கள் மறுத்தனர். அதை யூனூஸ் நபி (அலைஹி) ஏற்க மறுத்துவிட்டார். அதனால் அதை ஏற்கும் வரை அல்லாஹ் அவரை மீன் வயிற்றில் சிறைப்பிடித்து விட்டான்.

நூல்: பஸாயிருத்தரஜாத்

அல்லாஹ் நம்மை இந்த அபத்தமான வாதத்தை விட்டும், இறைமறுப்பை விட்டும் காப்பானாக!

தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்பும், தங்களின் எதிர்பார்ப்புக்கும் ஏக்கத்திற்கும் மாற்றமாகத் திருக்குர்ஆன் இருக்கின்றது என்பதற்காக அதில் திருத்தல், திரித்தல் இருக்கின்றது என்ற இறை மறுப்பும் இவர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கின்றது என்பதை அலீ (ரலி) அவர்கள் கூறியதாக மேலே இடம்பெற்றுள்ள வானளாவிய பொய்ச் செய்தியிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.