17) ஷியாக்கள் குறித்து இந்த இணைய தளத்தில் உள்ள இதர விஷயங்கள்

நூல்கள்: ஷியாக்கள் ஓர் ஆய்வு

17) ஷியாக்கள் குறித்து இந்த இணைய தளத்தில் உள்ள இதர விஷயங்கள்

ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இது பற்றிக் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறினார்கள் என்று புகாரி, முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. எனவே தான் ஆயிஷா (ரலி) அவர்களை வெறுக்கிறோம் என்று கூறுகின்றனர். இது பற்றி விளக்கவும்.

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

 

நபி (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) ஸைனப் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்து அங்கு தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, நானும் ஹஃப்ஸாவும், “நபி (ஸல்) அவர்கள் நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும், “தங்களிடம் கருவேலம் பிசினின் வாடை வருகிறதே, பிசின் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டு விட வேண்டும்” என்று எங்களுக்குள் கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்த போது, முன்பு பேசி வைத்திருந்த படி கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். இனிமேல் ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன்” என்று கூறினார்கள்.

ஆகவே, “நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?” என்று தொடங்கி, “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது)” என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 5267)

 

இந்தச் சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் மது குடித்ததாகக் ஆயிஷா (ரலி) கூறவில்லை. மாறாக “மகாஃபீர்’ எனப்படும் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று தான் கேட்கின்றார்கள். இதில் எந்த அவதூறும் இல்லை. மேலும்  நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகத் தான் கேட்கின்றார்கள். இது எப்படி அவதூறு கூறுவதாகும்?

இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் தேன் அருந்துவதைத் தமக்குத் தாமே தடுத்துக் கொண்டதும், அல்லாஹ் அதைக் கண்டித்து வசனம் அருளியதையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.  நபி (ஸல்) அவர்கள் தேன் அருந்தாமல் ஹராமாக்கிக் கொள்ளக் காரணமாக இருந்ததற்காக ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி) ஆகியோரையும் அல்லாஹ் கண்டித்து வசனம் அருளியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் மீது ஆயிஷா (ரலி) அவர்கள் அவதூறு கூறினார்கள் என்றால் அதையும் அல்லாஹ் இந்த வசனங்களில் கண்டித்திருப்பான். நபி (ஸல்) அவர்களும் இதற்காக ஆயிஷா (ரலி) அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு கண்டித்ததாக எந்தச் செய்தியும் இல்லை.

தமக்கு மரணம் ஏற்படுகின்ற வரை ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்த செய்திகள் ஹதீஸ்களில் உள்ளன. ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தான் நபி (ஸல்) அவர்களது உயிர் பிரிந்தது என்றும் ஹதீஸ்கள் உள்ளன.

 

நபி (ஸல்) அவர்களே இது குறித்து எதுவும் கூறாதிருக்கும் போது, ஷியாக்கள் ஆயிஷா (ரலி)யை வெறுப்பதற்கு இது காரணம் இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம். அலீ (ரலி) அவர்கள் மீது கொண்ட அளவு கடந்த மதிப்பின் காரணமாக மற்ற நபித்தோழர்களைத் திட்டுவது ஷியாக்களின் கொள்கையில் உள்ளதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்களை மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அலீ (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்காமல் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி-அன்ஹும்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பை வகித்ததால், இந்த மூன்று கலீஃபாக்களையும், இவர்களுடன் இருந்த ஏனைய நபித்தோழர்களையும் “காஃபிர்கள்’ (இறை மறுப்பாளர்கள்) என்று கூறுகின்றனர். இந்த நபித்தோழர்களைத் திட்டுவது இறைவனிடத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.

நூல்: கிதாபுர்ரவ்லா மினல் காபி

பாகம் 8, பக்கம் 245

 

அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர்.  அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

நூல்: கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

நூல்: கிதாபுர்ரவ்லா மினல் காபி பக்கம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர்.  அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

நூல்: கிதாபுஷ்ஷியா வஸ் ஸுன்னா என்ற சின்ன ஏடு

இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம்.  ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம். திருக்குர்ஆனில் யூதர்களும், கிறித்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித்தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன.

எனவே ஆயிஷா (ரலி) அவர்களை ஷியாக்கள் வெறுப்பதற்கு தேன் தொடர்பான சம்பவம் காரணமல்ல. அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறவும் இல்லை.

 

? மத்ஹபுகளில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ஷியா முஸ்லிம் என்று கூறக் காண்கிறோம். ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு முன்னால் மத்ஹப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ஹப் என்றால் போகுமிடம், போக்கிடம் என்பது பொருள். மலஜலம் கழிப்பதற்காகப் போகுமிடம், அதாவது கழிப்பிடம் என்ற பொருளில் தான் இந்தச் சொல் ஹதீஸில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்ஹபுக்குப் போகும் போது தூரமாகச் சென்று விடுவார்கள்.

(நூல்கள் :(அபூதாவூத்: 1),(திர்மிதீ: 20), நஸயீ 17,(அஹ்மத்: 326)

ஒருவரது சிந்தனை சென்ற இடம் என்ற கருத்தில் மத்ஹப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு பின்னர் சிந்தனை என்ற கருத்து கொள்ளப்பட்டது.

ஷாஃபி மத்ஹப் என்றால் ஷாஃபி இமாமின் சிந்தனை என்று பொருள். மத்ஹபுகள் நான்கு மட்டுமே இருப்பதாகக் கூறுவது தவறு! மத்ஹப் இஸ்ஹாக் இப்னு ராஹவை, மத்ஹப் சுஃப்யானுஸ் ஸவ்ரி, மத்ஹப் ஹஸன் பஷரீ என்று ஏராளமான மத்ஹபுகள் உள்ளன.

இந்த இமாம்கள் கூறிய மார்க்கச் சட்டங்களை அவரது மத்ஹப் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தார்கள். தனது மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த இமாமும் கூறவில்லை. ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பிடித்துக் கொண்டு, அதை மட்டுமே தாங்கள் பின்பற்ற வேண்டும், அது தான் இஸ்லாத்தின் கொள்கை என்பது போல் மாற்றி விட்டார்கள்.

 

தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளிலும் இதர மார்க்கச் சட்டங்களிலும் மத்ஹபுகளில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், கடவுள் கொள்கை அடிப்படையில் மத்ஹபுவாதிகள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்கள். ஆனால் ஷியாக்கள் எனப்படுவோரின் கடவுள் கொள்கைக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அலீ (ரலி) ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ (ரலி) அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்றால் ஒரு கூட்டத்தினரைக் குறிக்கும் சொல். அலீ (ரலி) க்கு ஆதரவான கூட்டம் என்பதால் “ஷீயத் அலீ – அலீயுடைய கூட்டத்தினர்’ என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு தோன்றிய ஷியாக்கள் காலப் போக்கில், அலீ (ரலி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் கொண்ட அளவுக்கதிகமான பிரியத்தால் அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். நபி (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி-அன்ஹும்) ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர்.

 

அலீ (ரலி) அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் தான், அவர்கள் சிறு வயதினராக இருந்ததால் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப் பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அலீ (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்காமல் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி-அன்ஹும்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பை வகித்ததால், இந்த மூன்று கலீஃபாக்களையும், இவர்களுடன் இருந்த ஏனைய நபித்தோழர்களையும் “காஃபிர்கள்’ (இறை மறுப்பாளர்கள்) என்று கூறுகின்றனர். இந்த நபித்தோழர்களைத் திட்டுவது இறைவனிடத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் கருதுகின்றனர்.

சமாதி வழிபாடு, தரீக்கா, ஷைஹ், முரீது என சமுதாயத்தில் நிலவி வரும் எண்ணற்ற வழிகேடுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது ஷியாயிஸம் தான். ஷாதுலிய்யா, காதிரிய்யா போன்ற தரீக்காக்கள் அனைத்தும் சங்கிலி தொடராகச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் போய் முடிவடையும். இந்த வழிகேடுகள் ஷியாக்களிடமிருந்து வந்தவை என்பதே இதற்குக் காரணம்.

இப்படி இஸ்லாத்திற்கு எள்ளளவும் சம்பந்தமில்லாத, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான கொள்கைகளை உடையவர்கள் தான் ஷியாக்கள்.

 

? ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? விளக்கவும்

ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.

“தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்” என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.

அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238

 

ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம்.

அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226

“நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்” என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261

“உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்” என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்களாம்.

அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27

 

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது “முஹம்மதே! திரும்பிப் பாரும்” என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்களாம்.

தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197

அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.

காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837

 

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245

அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

 

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு

அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.

ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.

அல் உஸுலு மினல் காபி பக்கம் 258

 

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.

அல் உஸுலுமினல் காபி பக்கம் 398

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.

அல் உஸுலுமினல் காபி பக்கம் 402

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர்.

குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) “வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்” என்றார்களாம்.

அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261

 

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம்.

கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470

“யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்” என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம்.

பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23

அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள்.
அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் “வரவேண்டியவர்” என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.

தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172

 

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.

தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இங்கு பக்கங்கள் போதாது. அந்த அளவுக்கு இவர்களிடம் மவ்ட்டீகங்களும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

 

ஷியாக் கொள்கையில் பற்றுடையவர் அறிவிப்பின் நிலை

இவரது ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற கருத்துடையவர்கள் கூறும் முதல் காரணம், “இவர் ஷியாக் கொள்கையில் தீவிரப் பற்றுள்ளவராக இருந்தார்” என்பது தான்.

இப்னு ஹிப்பான், இப்னு மயீன் உள்ளிட்ட சில அறிஞர்கள், “இவர் ஷியாக் கொள்கையில் பற்று கொண்டவராக இருந்தார்’ என்று கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக  இவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் எத்தகைய கொள்கை உடையவர் என்ற அடிப்படையில் ஒருவரது நம்பகத்தன்மையை ஹதீஸ் கலை வல்லுநர்கள் எடை போடுவதில்லை. அவரது நாணயம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நம்பகத்தன்மையை எடை போடுவார்கள்.

ஹதீஸ் கலை வல்லுனர்களால் நம்பகமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் பலர் ஷியாக்களாகவும், கத்ரியாக்களாகவும், முர்ஜியாக்களாகவும் இன்னும் பல தவறான கொள்கையுடையவர்களாகவும் இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

 

இதனால் தான் இவரைப் பற்றி இப்னு மயீன் அவர்கள் கூறும் போது, “இவர் பழுதில்லாதவர்; ஆயினும் ஷியாக் கொள்கையுடையவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.

“இவர் ஷியாக் கொள்கையுடையவர் என்பதால் இவரைக் குறை கூறியுள்ளனர். ஆனால் இவரது அறிவிப்புக்களைப் பொறுத்த வரை இவரை உண்மையாளர் என்று வர்ணித்துள்ளனர்’ என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஸன் பின் இத்ரீஸ் அவர்கள் பின்வரும் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அலீ பின் குராப் பற்றி அப்துல்லாஹ் பின் அம்மாரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “அவர் ஹதீஸில் ஈடுபாடு உள்ளவராகவும், ஹதீஸ் ஞானமுள்ளவராகவும் இருந்தார்” என்று விடையளித்தார்கள். “அவர் பலவீனமானவர் இல்லையா?” என்று நான் கேட்டேன்.

அதற்கவர்கள், “அவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். ஹதீஸ் பற்றி ஞானமுள்ள ஒருவர் பொய்யராக இல்லாத போது, ஷியாக் கொள்கை அல்லது கத்ரியாக் கொள்கையுடையவர் என்ற காரணத்துக்காக அவரது ஹதீஸ்களை நான் விட்டு விட மாட்டேன். மூஸிலியை விடச் சிறந்தவராக இருக்கும் ஒருவர் ஹதீஸ் பற்றி ஞானமில்லாதவராக இருந்தால் அவர் வழியாக எதையும் நான் அறிவிக்கவும் மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.

இப்னு கானிவு அவர்கள் இவரைப் பற்றிக் கூறும் போது, “இவர் நம்பகமானவர்; ஷியாக் கொள்கை உடையவர்” என்று குறிப்பிட்டார்கள். ஒருவரது கொள்கை எது என்பது ஹதீஸ் துறையில் கவனிக்கப் படுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

புகாரியில் ஷியாக்கள்

இதை இன்னும் உறுதிப்படுத்திட புகாரியில் இடம் பெற்ற ஷியாக்கள் சிலரை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

புகாரி இமாமின் ஆசிரியரான உபைதுல்லாஹ் பின் மூஸா என்பவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அத்துடன் மிகவும் நம்பகமானவராகவும் இருந்தார். இதன் காரணமாக புகாரி இமாம் அவர்கள் இவர் வழியாக ஏராளமான ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

அவை வருமாறு: 8, 126, 127, 354, 520, 865, 1139, 1140, 1330, 1915, 2006, 2341, 2518, 2700, 3359, 3632, 4039, 4043, 4053, 4150, 4251, 4512, 4706, 4839, 4904, 4917, 4928, 4979, 4990, 5054, 5152, 5541, 5836, 6154, 6536, 6744, 6864, 6908, 6920, 7063, 7311, 7511.

 

இது போல் அதீ பின் ஸாபித் அன்ஸாரி என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார்; அத்துடன் நம்பகமானவராகவும் இருந்தார். இவரது கொள்கையைக் கவனிக்காமல் நம்பகத்தன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு இமாம் புகாரி அவர்கள் இவர் வழியாகப் பல ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

55, 769, 964, 989, 1382, 1674, 1884, 2398, 2474, 2727, 3213, 3255, 3282, 3783, 4050, 4124, 4222, 4225, 4414, 5351, 5397, 5516, 5881, 6048, 6115, 6195, 7546. இவரைப் போலவே அவ்ஃப் பின் அபீஜமீலா என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அதே நேரத்தில் நம்பகத்தன்மை உடையவராகவும் இருந்தார். இவர் வழியாகப் பின்வரும் ஹதீஸ்களை இமாம் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

 

47, 344, 348, 547, 599, 1143, 2225, 3275, 3345, 3404, 3915, 3947, 4425, 4674, 4799, 4849, 5010, 5198, 6075, 6546, 6669, 7047, 7099, 7112 இது போன்று முஹம்மத் பின் ஃபுளைல் பின் கஸ்வான் என்பவரும் நம்பகமானவராகவும், அதே சமயம் ஷியாக் கொள்கையுடையவராகவும் இருந்தார். இவர் வழியாகவும் பல ஹதீஸ்களை புகாரி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

38, 595, 1300, 1728, 2041, 2064, 2544, 2963, 3821, 4022, 4170, 4268, 5374, 5483, 6460, 6682, 7079, 7563 இன்னும் இவர்களைப் போன்று வேறு சில ஷியாக்களின் அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒருவர் ஷியாக் கொள்கை உடையவர் என்பதற்காக ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தைப் பற்றியும் அவ்வாறு கூற வேண்டும். அப்படி எந்த அறிஞரும் கூறவில்லை.

எனவே அலீ பின் குராப் என்பவர் ஷியாக் கொள்கையுடையவர் என்றாலும் அவர் நம்பகமானவர்; உண்மையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைக் காரணம் காட்டி இவரது அறிவிப்புகளை நிராகரிக்க முடியாது.