மரணமும் மறுமையும் – 15 (கப்ரில் நல்லவர்களின் நிலை 2)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும்

பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த ‘பெண்’ அல்லது ‘இளைஞர்’ ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘அவர் இறந்து விட்டார்’ என மக்கள் தெரிவித்தனர். ”நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

பிறகு ”இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லீம் (1742)

நெருக்கும் – பிறகு விசாலமாக்கப்படும்

நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் இறந்தவரை கப்ரில் வைத்தவுடன் மண்ணறை அவரை ஒரு முறை நெருக்கும். மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்து கொள்கின்ற அளவிற்கு அது தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும். நல்லவனாக இருந்தால் தொடர்ந்து நெருக்காமல் அவனை விட்டு விடுகிறது. பிறகு அவருடைய மண்ணறை விசாலமாக்கப்பட்டு அவர் நெருக்கடியில்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வை அனுபவிப்பார்.

சிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரையும் மண்ணறை நெருக்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்க­­ருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதி­ருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல்: தஹதீபுல் ஆஸார் (797)

70 முழம் வரை விசாலமாக்கப்படும் கபுர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளன் மண்ணறையில் பசுமையான தோட்டத்தில் இருப்பார். எழுபது முழம் வரைக்கும் அவருடைய மண்ணறை விசாலமாக்கப்படும். பௌர்ணமி இரவில் சந்திரனின் ஒளியைப் போல் அவருக்கு வெளிச்சம் தரப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்னத் அபீ யஃலா (6504)

மரணித்தவரின் மண்ணறையில் விசாலமாக்குமாறும் ஒளிகொடுக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதன் மூலம் நல்லவர்களுக்கு மண்ணறையில் ஒளி தரப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நல்லதையே வேண்டுதல்

(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடி விட்டார்கள்.

பிறகு, ”உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப் பின் தொடர்கிறது” என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்றனர்” என்று கூறினார்கள்.

மேலும், ”இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி),­

நூல்: முஸ்லீம் (1678)

சொர்க்கம் எடுத்துக் காட்டப்படும்

நல்லடியார் சந்தோஷமாக மண்ணறை வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவருக்கு சொர்க்கம் காட்டப்படும். அதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைந்து கொண்டே இருப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ”அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி (1379)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்லடியாருக்கு நரகத்தின் ஒரு வாசலைக் காட்டுங்கள் என்று கூறப்படும். நரகத்தின் ஒரு வாசல் அவருக்கு காண்பிக்கப்பட்டு நீ அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்திருந்தால் இது தான் உனது இடமாக ஆகியிருக்கும். (ஆனால் நீ மாறு செய்யவில்லை. எனவே இதிலி­ருந்து தப்பித்து விட்டாய்.) என்று கூறப்படும்.

அப்போது அவர் மிகவும் சந்தோஷமும், பரவசமும் அடைவார். பிறகு இவருக்கும் சொர்க்கத்தின் ஒரு வாசலைத் திறந்து விடுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டு இது தான் அல்லாஹ் உனக்கு ஏற்படுத்திய உனது இடமாகும் என்று கூறப்படும். அப்போது அவர் சந்தோஷமும் பரவசமும் அடைவார்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),

நூல்: தப்ரானி (2680)

திருப்தியான வாழ்கை

உலக வாழ்வில் எவ்வளவு தான் இன்பங்களை மனிதன் அடைந்தாலும் திருப்தி அவனுக்குக் கிடைப்பதில்லை. இதனால் நிம்மதியின்றி செல்வத்தைத் தேடிக் கொண்டே வாழ் நாளைக் கழித்து விடுகிறான். ஆனால் நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது திருப்திக்குரியதாகவும், சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கும். சத்தியத்திற்காக உயிர் நீத்த நபித்தோழர்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

‘பிஃரு மஊனா’ (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தமது) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூசுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்குக் கேடு நேர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்கலில் பிரார்த்தித்தார்கள்.

பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னால் அது (இறைவனால்) நீக்கப்பட்டு விட்டது. ” ‘நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல்: புகாரி (2814)

வெற்றிக்கான காரணங்கள் – ஈமான்

மண்ணறை வெற்றிக்கான பல்வேறு காரணங்கள் ஹதீஸ்களில் சொல்லப் பட்டுள்ளன. அதில் முதலாவதாக, ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” எனக் கூறி, அதில் உறுதியாக இருப்பது.

அல்லாஹ்வை நம்புகின்ற விஷயத்தில் தவறிழைக்காமல் அவனை நம்ப வேண்டிய முறைப்படி நம்பியவர்களுக்கு வெற்றி கிடைப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அல்லாஹ்விற்கு யாரையும் இணையாக ஆக்காமல் அவனை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கி வர வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கப்றில் ஒரு இறை நம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்ப(ட்டு கேள்வி கேட்கப்ப)டும்; பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறை நம்பிக்கையாளர், ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்” என சாட்சியம் கூறுவார். இதையே அல்லாஹ், ”எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்” (14:27) எனக் குறிப்பிடுகிறான்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி),

நூல்: புகாரி (1369)

நற்காரியங்கள் செய்ய வேண்டும்

இறந்த பிறகு நாம் சம்பாதித்த செல்வமோ பெற்றெடுத்த குழந்தைகளோ நமக்குத் துணையாக வர மாட்டார்கள். மாறாக நாம் இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும். எனவே நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல்: புகாரி (6514)

குறிப்பாக இறந்த பிறகும் நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய நல்லறங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

மரணித்த பின் தொடருபவை 3 செயல்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன;

  1. நிலையான அறக்கொடை
  2. பயன்பெறப்படும் கல்வி.
  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லீம் (3084)

சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்

மறுமையில் நிறைய பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு நோய்களையும், சிரமங்களையும் தருகிறான். இதை சகித்துக் கொள்ளாதவர்கள் இறைவனை ஏசி நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள். இது தவறாகும்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு மருத்துவம் செய்பவர்களுக்கு இறைவனின் அன்பும், அருளும் கிடைக்கிறது. வயிற்று வலி­யால் இறந்தவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சுலைமான் பின் ஸரத் மற்றும் ஹா­த் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவருரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா? என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்),

நூல்: அஹ்மத் (17591)

அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்

அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனிச் சிறப்பு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மரணத்திற்குப் பிறகு சந்தோஷமான வாழ்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. மண்ணறை வேதனையி­ருந்து இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். அவர்களுடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

அல்குர்ஆன் (3 : 169)

இந்த வசனத்திற்குரிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  அவர்களிடம், ”(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர் ” (3:169) எனும் இந்த இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, ”நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், ”நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, ”இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர் : மஸ்ரூக் (ரஹ்),

நூல்: முஸ்லீம் (3834)

கப்ரில் சோதனை கேள்விக் கணக்கு இல்லை

அல்லாஹ்வின் வழியில் உயிர் தியாகம் செய்தவர்கள் உலகிலேயே சிரமங்களை அனுபவித்துவிட்டதால் மண்ணறையில் அவர்கள் விசாரனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே உயிர் தியாகியைத் தவிர மற்ற இறை நம்பிக்கையாளர்கள் மண்ணறைகளில் (விசாரனையின் மூலம்) சோதனை செய்யப்படுகிறார்களே ஏன்? என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (போரின் போது) (எதிரிகளின்) மின்னுகின்ற வாட்கள் ஷஹீதுடைய தலையில் ஏற்படுத்திய சோதனையே போதுமானதாகும். (எனவே அவர் மண்ணறையில் சோதனை செய்யப்பட மாட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : நஸயீ (2026)

உயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரைத் தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும்.

இதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரனை இல்லாமல் மண்ணறை வேதனையிலிருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப்படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி நூல் : முஸ்லிம் (3869)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீர மரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!

அறிவிப்பவர் : சஹ்ல் பின் ஹ‚னைஃப் நூல் : முஸ்லிம் (3870)

ஆக, நாம் அனைவரும் மரணத்தை எதிர் பார்த்தவர்களாக மறுமையை நோக்கி நன்மையை அதிகப்படுத்தி, மற்றவர்களையும் செய்யும் படி தூண்டி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.