14) பதில் கூறாதவனுக்கு தண்டனை

நூல்கள்: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

14) பதில் கூறாதவனுக்கு தண்டனை

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறாத வனுக்கு சுத்தியலால் பலத்த அடி அவனுடைய பிடரியில் கொடுக்கப் படும். நெருப்பில் புரட்டப்படுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கேள்வி கேட்ட) பிறகு இரும்பாலான சுத்தியால் (சரியான பதில் கூறாத) அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1335)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவனுக்கு நெருப்பாலான ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திறந்து விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும், ஜூவாலையும் அவனிடத்தில் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும்.

பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை (வேதனை செய்வதற்காக) நியமிக்கப் படுவார். அவருடன் இரும்பாலான சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலைகூட மண்ணாகி விடும். ஜின்களையும், மனிதர்களையும் தவிர கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகி விடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப்(ரலி)

(அபூதாவூத்: 4127)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கெட்ட வாடையுடன் அசிங்கமான ஆடையுடன் கோரமான முகத்துடன் ஒருவர் (இறந்துவிட்ட கெட்ட) மனிதரிடம் வருவார். உனக்கு தீங்கு தரக் கூடியதை நற்செய்தியாகப் பெற்றுக்கொள். உனக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான் என்று கூறுவார். அதற்கு அவன் உன் முகமே மீண்டும் மீண்டும் தீய செய்தியைத் தருகிறதே நீயார்? என்று கேட்பான்.

அதற்கு நான் தான் நீ செய்து வந்த தீமையான காரியங்கள் என்று பதில் கூறுவார். அவன் என் இறைவா மறுமை நாளை வரவழைத்து விடாதே என்று கூறுவான்.

அறிவிப்பவர்: பராக பின் ஆஸிப் (ரலி)

(அஹ்மத்: 17803)