12) வணக்கங்களும் அதன் வகைகளும்
வணக்கங்களும் அதன் வகைகளும்
நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பதற்காக மட்டுமே அல்லாஹ் நம்மைப் படைத்தான்.
அல்லாஹ் கூறுகிறான்:
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56)➚
”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன்: 17:23)➚
வெளிப்படையாகவும், உளரீதியாகவும் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதுடன் அவன் விரும்பக்கூடிய, கட்டளையிட்ட காரியங்களைச் செய்வதும் அவன் வெறுக்கக்கூடிய மற்றும் தடை செய்த காரியங்களை தவிர்ந்து கொள்வதுமே வணக்கம் எனப்படும். அதாவது முழுவதுமாக இறைவனுக்குப் பயந்து அவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்வதாகும்.
வணக்கங்கள் பலவகைப்படும். இஸ்லாம், ஈமான், இஹ்சான், அஞ்சுதல், தவக்குல் வைத்தல், ஆதரவு வைத்தல், பிரார்த்தனை செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பயிடுதல், பாதுகாப்புத் தேடுதல், உதவிதேடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதுவல்லாமல் இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.
வணக்கதிற்குரிய நாயன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். அல்லாஹ் தவிர வணக்கங்களைச் செய்பவன் இறைமறுப்பாளன் ”காஃபிர்” ஆவான்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன்: 23:117)➚
என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன்: 40:60)➚
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் துஆ செய்வதுதான் வணக்கமாகும்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி),(திர்மிதீ: 891) ➚
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன்: 3:175)➚
அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன்: 2:150)➚
அல்லாஹ்வை அஞ்சுவது போன்று இறைவன் அல்லாதவர்களை அஞ்சுவது இணைவைத்தல் ஆகும்.
தமது இறைவனின் சந்திப்பை ஆதரவு வைப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” (அல்குர்ஆன்: 18:110)➚
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை சந்திப்பதற்கு அல்லாஹ்விடம்தான் ஆதரவு வைக்க வேண்டும் என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே இறைவினடம் மட்டுமே ஆதரவு வைக்க வேண்டிய விஷயங்களில் அவனல்லாதவர்களை ஆதரவு வைப்பது இணைவைத்தல் ஆகும்.
எத்தகைய துன்பம் நேர்ந்த போதிலும் இறைவன் நாடினால் நிச்சயம் அதனை நீக்குவான் என்று இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைப்பதே தவக்குல் ஆகும். இது போன்று இறைவன் அல்லாதவர்கள் மீது தவக்குல் வைப்பது இணைகற்பித்தல் ஆகும்.
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்!” (அல்குர்ஆன்: 5:23)➚
மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! (அல்குர்ஆன்: 25:58)➚
நாம் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடவேண்டும். நாம் அல்லாஹ்விடம் உதவி தேடுவதைப் போன்று இறைவன் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது இணைவைத்தல் ஆகும்.
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன்: 1:5)➚
நீ (எதைக்) கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(திர்மிதீ: 2440) ➚
நாம் அல்லாஹ்விடம் மட்டுமே பாதுகாப்புத் தேட வேண்டும். அல்லாஹ்விடம் எவ்விதத்தில் பாதுகாப்புத் தேடுவோமோ அது போன்று இறைவன் அல்லாதவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுவது இணைவைத்தல் ஆகும்.
மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக (அல்குர்ஆன்: 114:1-3)➚
துன்பங்களின் போது அல்லாஹ்வின் உதவியை நாடுவதே இரட்சிக்கத் தேடுதல் ஆகும். அல்லாஹ்விடம் இரட்சிக்கத் தேடுவதைப் போன்று இறைவன் அல்லாதவர்களிடம் இரட்சிக்கத் தேடுவது இணைகற்பித்தல் ஆகும்.
பத்ருப் போரின் போது நபியவர்களும், ஸஹாபாக்களும் அல்லாஹ்விடம் மட்டுமே இரட்சிப்பைக் கோரினார்கள்
நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது ”உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்” என்று உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன்: 8:9)➚
உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுத்துப் பயிடுவீராக! (அல்குர்ஆன்: 108:2)➚
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பயிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான். அறிவிப்பவர்: அலீ பின் அபீதாப்(ரலி)(முஸ்லிம்: 3657) ➚
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.(அல்குர்ஆன்: 76:7)➚
மறுமையை நம்புவோர் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். எனவே நேர்ச்சை செய்வது வணக்கம் ஆகும். இறைவன் அல்லாஹதவர்களுக்கு நேர்ச்சை செய்வது இணைவைத்தல் ஆகும்.
‘அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 6696, 6700) ➚
சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! (அல்குர்ஆன்: 41:37)➚