11) ஜிஹாதின் பெயரால் ஐயாயிரம் முஸ்லிம்கள் படுகொலை

ஜிஹாத் - ஓர் ஆய்வு
ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள்

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது.
இந்நிலையில், “மர்ருழ் ழஹ்ரான்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் ஆஸ், தனது ஆதரவாளர்களிடம், “நீங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளைப் பழி தீர்க்க விரும்பினால் இந்தப் படையில் உள்ள, தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோர் உட்பட உஸ்மான் (ரலி) ஆட்சியைக் குறை கூறியவர்கள், விமர்சனம் செய்தவர்கள், மதீனாவில் இருந்து கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் காப்பாற்ற முன் வராதவர்கள் போன்றவர்களும் குற்றவாளிகளே! எனவே இந்தப் படையில் உள்ள இந்த வகையினரைக் கொன்று விடுங்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட மர்வான், “அப்படிச் செய்ய வேண்டாம். தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), அலீ (ரலி) ஆகிய மூவரையும் ஒருவரையொருவர் மோத வைப்போம். இதில் யார் தோல்வியடைகின்றார்களோ அவர்களின் கதை முடிந்து விடும். அப்போது அவர்களை நாம் எளிதில் வீழ்த்தி விடலாம்” என்று மிகப் பெரிய கிரிமினல் ஐடியாவைக் கூறினார்.
கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்த கதையாக, சதிகாரர்களை உள்ளடக்கிய நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸராவை வந்தடைந்து, ஒரு மேட்டுப் பகுதியில் பாளையம் இறங்கியது.

பஸராவைக் கைப்பற்றுதல்

உஸ்மான் (ரலி) கொலைக்குப் பல்வேறு வகையில் காரணமானவர்கள் பஸராவில் ஓரளவு பலத்துடன் இருந்ததால் முதலில் அவர்களைப் பழி தீர்க்கத் தேவையான யுக்திகளை தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வகுத்தனர்.
இதற்கிடையில் இந்த மோதலைத் தவிர்ப்பதற்காக பஸராவில் இருந்த பல முக்கியப் பிரமுகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.
ஹாரிஸா பின் ஹுதாமா என்பவர், “உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளைப் பழி தீர்க்க வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை விட, உம்முல் முஃமினீனாகிய நீங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டு, முஃமின்களில் ஒரு சாராரை எதிர்த்துப் படை திரட்டி வந்தது மிகப் பெரிய விஷயம். எனவே மோதலைத் தவிர்த்து விடுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
இது போல் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பலனில்லை. தம் படையினரிடத்தில் தல்ஹா, ஜுபைர், ஆயிஷா (ரலி) ஆகியோர் வீர உரை நிகழ்த்தி பஸரா மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படுகின்றது. ஆயிஷா (ரலி) அவர்களின் படைக்கு ஆதரவு தர மறுத்தவர்களும் தாக்கப்படுகின்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளில் முக்கியமானவனான ஹக்கீம் பின் ஜபலா என்பவன் தலைமையில் ஓரளவு படை பலம் இருந்தது. அவன் ஆயுதம் தாங்கிய 300 பேர் கொண்ட படையுடன் திடீர் தாக்குதல் நடத்தினான். ஆயிஷா (ரலி) அவர்களின் படையினர் திருப்பித் தாக்குதல் நடத்தி அவர்களில் 70 பேர் கொல்லப்பட்டு விடுகின்றார்கள். இத்தாக்குதலில் ஹக்கீம் பில் ஜபலாவும் கொல்லப்படுகின்றான்.
ஜுபைர் மற்றும் தல்ஹா (ரலி)யின் படையினர் இரவோடு இரவாகப் புகுந்து ஒரே தாக்குதலில் 40 பேரைக் காலி செய்து விடுகின்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவு தர மறுத்த பஸராவின் முக்கியப் பிரமுகர் உஸ்மான் பின் ஹனீப் என்பவர் தூக்கி வரப்பட்டு தாக்கப்படுகின்றார். அவரது தாடி ரோமங்கள் பிடுங்கப்படுகின்றது. அவர் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து பஸராவை விட்டு ஓடுகின்றார்.
இரு தரப்பிலும் பெரிய இழப்பிற்குப் பின் ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸரா நிர்வாகத்தையே கைப்பற்றி விடுகின்றது. பஸரா மாகாண நிதியமைச்சராக, பைத்துல் மால் பொறுப்பாளராக அபூபக்ர் (ரலி)யின் மகனும், ஆயிஷா (ரலி)யின் சகோதரருமான அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) நியமிக்கப்படுகின்றார். பஸராவின் மக்களைச் சரி கட்டுவதற்காக பைத்துல்மால் பொருட்கள் மக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன.
அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பஸராவை ஆயிஷா (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரின் படையினர் கைப்பற்றிய செய்தியை அறிந்த முஆவியா (ரலி) அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றார்கள்.

மதீனாவுக்குப் படையெடுக்க ஆயத்தம்

பஸராவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்களின் அடுத்த இலக்கான மதீனாவின் மீது குறி வைக்கின்றார்கள். பஸராவிலிருந்து மதீனா செல்லும் வழியில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவை அல்லது எதிர்க்காத நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஆயிஷா (ரலி) கடிதம் எழுதுகின்றார்கள்.
அவ்வாறு அப்துல் கைஸ் கூட்டத்தினரின் தலைவராக விளங்கிய ஜைத் பின் ஸவ்ஹான் என்பவருக்கு, தங்களுக்கு உதவி செய்யுமாறும் அல்லது நடுநிலையை மேற்கொள்ளுமாறும் கடிதம் அனுப்புகின்றார்கள்.
அதற்குப் பதில் எழுதிய ஜைத், “உம்முல் முஃமினீன் அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! தங்களை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் தாங்கள் வீட்டில் இல்லாமல் அல்லாஹ்வின் கட்டளையை மீறி போருக்குத் தலைமை ஏற்று வந்திருக்கின்றீர்கள். இவ்விஷயத்தில் நீங்கள் எங்களுக்குக் கட்டளையிடக் கூடாது” என்று கூறிவிட்டார்.
ஆயிஷா (ரலி)க்கு எதிராக அலீ (ரலி) படையெடுப்பு
அமீருல் முஃமினீன் (அலீ-ரலி) அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்து அவர்களுக்கு எதிராக படை திரட்டிக் கொண்டிருந்த சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி) அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதற்காக, அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற முறையில் சிரியாவை நோக்கி படை திரட்டிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் பஸராவின் நிலையைக் கேள்விப்பட்டவுடன் தனது ஆட்சியின் கீழ் இருந்த பஸராவை மீட்டாக வேண்டும், குழப்பங்களைக் களைந்தாக வேண்டும் என்ற கடமையுணர்வு மேலிட்டதால் சிரியாவுக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு பஸராவை நோக்கிச் செல்ல முடிவெடுக்கின்றார்கள்.
பத்ரீன்கள் என்றழைக்கப்படும் பத்ருப் போரில் பங்கெடுத்த வீர ஸஹாபாக்கள் ஆறு பேர் உட்பட 900 வீரர்களுடன் படை மதீனாவிலிருந்து புறப்படுகின்றது.
அச்சமயத்தில் அப்துல்லாஹ் பின் ஸலாம் என்ற நபித்தோழர் அலீ (ரலி) அவர்களின் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துத் தடுக்கின்றார்கள். அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்கள் அதற்கு முந்தைய சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, பஸராவுக்குச் செல்ல வேண்டாம் என்று தடுக்கின்றார்கள்.
ஆனாலும் அலீ (ரலி) அவர்கள், தான் ஆட்சித் தலைவர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்லி மறுத்து விடுகின்றார்கள்.
மேலும் படை பலத்தை அதிகரிக்கச் செய்வதற்காக அபூபக்ர் (ரலி)யின் மகனான முஹம்மத் பின் அபூபக்ர் மற்றும் அலீ (ரலி)யின் சகோதரர் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் மகனான முஹம்மது பின் ஜஃபர் ஆகிய இருவரையும் கூஃபாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்பி அங்கிருந்து படை திரட்டுகின்றார்கள்.

சமாதான முயற்சியும் தோல்வியும்

மதீனாவிலிருந்து பஸரா செல்லும் வழிகளில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப் படை திரளுகிறது. பஸராவுக்கு வந்து சேர்ந்த பிறகு பஸராவுக்கு வெளியே உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களின் படையில் 30 ஆயிரம் முஸ்லிம்களும், அமீருல் முஃமினீன் அலீ (ரலி) அவர்களின் படையில் 20 ஆயிரம் முஸ்லிம்களும் இடம் பெற்றிருந்தனர்.
இரு படைகளும் எதிரும் புதிருமாய் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து வேதனையடைந்தவர்கள், இறை விசுவாசிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அக்கறையும் கவலையும் கொண்ட நல்ல உள்ளம் படைத்தவர்கள் போரை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அலீ (ரலி) அவர்களும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமாகப் போவதற்குத் தயாரானார்கள். அவர்களே கூட பல முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். ஒரு வழியாக சமாதானம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் போர் தவிர்க்கப்படும் அளவுக்குச் சென்று விடுகின்றது.
ஆனால் அலீ (ரலி) அவர்களின் படையில் வந்திருந்த உஸ்மான் (ரலி) கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், சமாதானம் ஏற்பட்டால் தங்களின் கதி அதோகதியாகிவிடும் என்பதை உணர்ந்து சமாதானத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தார்கள்.
அதேபோல் ஆயிஷா (ரலி) அவர்களின் படையில் இருந்த சதிகாரர்கள், சமாதானம் ஏற்பட்டால் தங்களின் (அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரை மோத விட்டுக் காலி செய்யும்) திட்டம் நிறைவேறாமல் போய் விடும் என்ற காரணத்தால் அவர்கள் சமாதானத்திற்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள்.

ஒட்டகப் போர்

அதன் விளைவு இரண்டு பக்கத்திலும் திடீர் தாக்குதல் நடத்தப் பட்டு யுத்தம் துவங்கி விடுகின்றது. சமாதான முயற்சிகள் அனைத்தும் வீண் போயின. ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தின் கால் ஒடிக்கப்படுகின்றது.
அலீ (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று, போர்க்களத்தை விட்டு வெளியேறிய ஜுபைர் (ரலி) அவர்களை அம்ர் பின் ஜர்மூஸ் என்ற கொடியவன் கொன்று விடுகின்றான். அதே போல் அலீ (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று போர்க்களத்தில், முன் வரிசையிலிருந்து விலகி பின்புறம் சென்ற தல்ஹா (ரலி) அவர்களை மர்வான் பின் ஹகம் கொன்று விடுகின்றான்.
சொர்க்கத்திற்கு நன்மாராயம் சொல்லப்பட்ட அஷ்ரத்துல் முபஸ்ஸரா என்றழைக்கப்படும் பத்துப் பேரில் இருவரான தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவர் உட்பட 5 ஆயிரம் பேர் இந்த ஒட்டகப் போரில் கொல்லப்படுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாதின் பெயரால் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டு ஆயிரக்கணக்கில் மடிந்த முதல் நிகழ்ச்சி இது தான்.