10) 5 ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள்

நூல்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார்.

ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அவரைத் திருமணம் செய்தார்கள். இரண்டாண்டுகள் மட்டுமே அவர்களின் இல்லறம் நடந்தது. அதன் பிறகு நடந்த உஹத் போரில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள்.

ஏற்கெனவே மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று முறை விதவையாகி நின்ற ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்தாவது மனைவியாக ஏற்கிறார்கள்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழானில் இவர்களை நபியவர்கள் மணந்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபியுல் அவ்வலில் அதாவது எட்டு மாதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்து விட்டு ஸைனப் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். மூன்று கணவர்களுடன் வாழ்ந்து மூன்று முறை விதவையான ஒரு முதிய வயதுப் பெண்ணைத் திருமனம் செய்ததற்கு காமவெறிதான் காரணம் என்று சிந்திக்கும் எவராவது கூற முடியுமா? இதுவரை சொல்லப்பட்ட திருமணங்களில் எதுவுமே காமவெறியைக் காரணமாகக் கூற முடியாதவாறு தான் அமைந்துள்ளது.

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து திருமணங்கள் செய்து விட்டாலும், கதீஜா (ரலி) முன்னரே மரணித்து விட்டதாலும், ஸைனப் (ரலி) எட்டு மாதங்களில் மரணித்து விட்டதாலும் இப்போது உயிரோடு இருந்தவர்கள் ஸவ்தா, ஆயிஷா, ஹப்ஸா (ரலி) ஆகிய மூவர் மட்டுமே.

இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடுத்தடுத்த திருமணங்களைக் காண்போம்.