Tamil Bayan Points

10) ஹதீஸ்களில் குழப்பமா?-2

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

Last Updated on February 24, 2022 by

10) ஹதீஸ்களில் குழப்பமா?-2

உண்பதற்குத் தடை செய்யப்பட்ட சில உணவுகளை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். குர்ஆனில் கூறப்படாத இன்னும் சில உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராம் என அறிவித்துள்ளார்கள். இது குர்ஆனுக்கு முரணானது என இவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். இதை விரிவாகப் பார்ப்போம்.

தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லைஎன்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:6:145.)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:2:173.)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:16:115.)

6:145 வசனத்தில் நான்கு உணவுகளைக் குறிப்பிட்டு விட்டு இவை தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான். இந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்று குர்ஆன் கூறும் போது நபிகள் நாயகம் அவர்கள் இதற்கு மேலும் சில உணவுகளை ஹராம் எனக் கூறியிருப்பது குர்ஆனுக்கு எதிராக உள்ளது. எனவே இது நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்பது இவர்களின் வாதம்.

அது போல் 2:173, 16:115 ஆகிய வசனங்களில் இதே நான்கு உணவுகளைக் குறிப்பிட்டு விட்டு இவற்றையே அல்லாஹ் ஹராமாக்கி உள்ளான் எனக் கூறப்படுகிறது. இவற்றை ஹராமக்கியுள்ளான் என்பதற்கும் இவற்றையே ஹராமாக்கியுள்ளான் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இவற்றையே ஹராமாக்கியுள்ளான் என்றால் இவை தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்து அடங்கியுள்ளது. எனவே இவை அல்லாதவற்றை ஹராமாக்கும் ஹதீஸ்கள் இவ்வசனங்களுக்கு முரணானவை எனவும் வாதிடுகின்றனர். குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதில் நமக்கும் உடண்பாடு உண்டு. ஹதீஸ் துறையிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் அருளப்படவில்லை. மாறாக சிறிது சிறிதாக தேவைக்கேற்ப அருளப்பட்டதாகும். ஒரு காலத்தில் மதுபானம் தடை செய்யப்படாமல் இருந்தது. பின்னர் அது தடை செய்யப்பட்டது. அது போல் ஒரு கால கட்டத்தில் இந்த நான்கு உணவுகள் மட்டும் தடை செய்யப்பட்டிருந்தன.

அதன் பின்னர் இந்தப் பட்டியல் அதிகரிப்பது இவ்வசனங்களுக்கு முரணாகாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இது தொடர்பான ஹதீஸ்களை இவ்வசனத்துக்கு முரணானது எனத் தவறாக நினைக்கின்றனர்.

இந்த நான்கைத் தவிர மற்ற எந்த உணவும் தடுக்கப்பட்டவை அல்ல என்பது இவர்களின் வாதம். இவர்களின் வாதப்படி கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத் தக்கதே. இவர்களின் வாதப்படி மலம் கூட உண்ணத் தக்கதே. இவர்கள் வாதம் தவறு என்பதைப் பின்வரும் வசனம் தெள்ளத் தெளிவாக்குகிறது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.)

பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:5:3.)

ஏற்கனவே கூறப்பட்ட நான்குடன் கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, மேட்டிலிருந்து உருண்டு விழுந்தவை, தமக்கிடையே மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றை இவ்வசனத்தில் அல்லாஹ் மேலதிகமாகக் கூறுகிறான்.

ஆரம்ப காலத்தில் நான்கு மட்டுமே ஹராமாக இருந்தன என்பதும், பின்னர் 5:3 வசனத்தில் கூறப்பட்டவைகளும் ஹராமாக்கப்பட்டன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

இந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்பதால் ஹதீஸ்களை மறுத்தவர்கள் இப்போது இந்த வசனத்தை என்ன செய்யப் போகிறார்கள்? நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலை என இதிலிருந்து விளங்கலாம்.

நான்கு உணவுகள் ஹாராம் என அறிவிக்கும் வசனங்கள் இவற்றைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தை உள்ளடக்கி இருந்தன. ஆனால் நான்கை விட அதிகமானவற்றைக் கூறும் இவ்வசனத்தில் இவற்றைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லைஎன்று கூறப்படவில்லை. இன்னும் ஹராமானவை இருக்கலாம் என்ற சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலவற்றை ஹராம் என அறிவித்தது இவ்வசனத்தின் விளக்கமே தவிர முரண் அல்ல.

மேலும் ஹாராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பதை திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுவதையும் இவர்கள் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது, அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாது, உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காதோர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!

(அல்குர்ஆன்:9:29.)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போடுமாறு இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(திருக்குர்ஆன்:7:157.)

முன் வசனங்களில் கூறப்பட்ட நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார்என்ற இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை. எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(திருக்குர்ஆன்:66:1.)

இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தைச் சரியாகச் சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம் மீது மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனி மேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்கவில்லையானால் அதைத் தன்னளவில் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றால் உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.

அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் இவ்வசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியன் திருப்தியை நாடி – தமக்கு அதில் விருப்பம் இருந்தும் – விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

மனிதர்கள் மரணித்த பின் மறுமை நாளில் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை அனைத்து முஸ்லிம்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் வரை பர்ஸக் எனும் இன்னொரு உலகத்தில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு வைக்கப்படுவார்கள்; இது கப்ரு வாழ்க்கை எனவும் கூறப்படுகிறது. இது பற்றி பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களும், கப்ரு வாழ்க்கையும் பின் வரும் குர்ஆன் வசனத்துக்கு முரணாக உள்ளதால் இதை ஏற்க முடியாது என்பதும் இவர்களின் வாதம்.

ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத் தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

(திருக்குர்ஆன்:36:51, 52.)

இவ்விரு வசனங்களும் மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது பற்றிக் கூறுகின்றன. அவ்வாறு எழுப்பப்படும் போது எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?என்று கேட்டுக் கொண்டே எழுவார்கள் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

கப்ரில் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்என்று எப்படிக் கூறுவார்கள்?

எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும். இவ்வாறு எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கைசேதமும் கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர். தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக மற்றொரு வாதத்தையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ருடைய வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது தான் அந்த வாதம்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ருடைய வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இறந்த ஒருவர் கப்ரில் தண்டிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது போல் இன்று மரணித்த ஒருவரும் அதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இருவரும் வேதனை செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிட்டால் இன்று மரணித்த வரை விட முன்னர் மரணித்தவர் 1400 வருடங்கள் அதிகமான தண்டனை பெற்றிருப்பார். இது தான் இறைவன் வழங்கும் நீதியா? என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

மேலும் கப்ரு வேதனை பற்றி குர்ஆனில் எங்குமே கூறப்படாததையும், தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும், அல்லாஹ்வின் நீதியைச் சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவுக்கு வருவது முற்றிலும் தவறானதாகும். குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோ இச்சைப்படி புந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வஜ்மல் போய் விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்குக் கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.

ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும் போது மறந்து விடுவார்கள் என்பதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளன.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?(என்று கேட்டான்.) ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர். இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம் என்றோ,இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம்.)

(திருக்குர்ஆன்:7:172, 173.)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் அல்லாஹ் வெளிப்படுத்தி நான் உங்கள் இறைவனல்லவா?என்று கேட்டான். அனைவரும் ஆம்என்றனர் என்பதை இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். ஆம் எனக் கூறியவர்களில் அனைத்து மாந்தரும் அடங்குவோம்.

இவ்வாறு இறைவன் கேட்டது நமக்கு நினைவில் இல்லை. நாம் ஆம் எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.

ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும் போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகத்தில் வைத்து அல்லாஹ் உறுதி மொழி வாங்கினானோ, அந்த உலகத்தில் நாம் மீண்டும் எழுப்பப்படுவோம். உறுதி மொழி வாங்கிய அந்த உலகத்தில் இறைவன் எடுத்த உறுதி மொழி நமக்கு நினைவுக்கு வரும் எனவும் இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இறைவன் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியாதே! என்றெல்லாம் கியாமத் நாளில் யாரும் மறுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த உறுதிமொழி என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மறுமை நாளில் அந்த உறுதிமொழி நமக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம், திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, கப்ரிலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும் போது எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவன் யார்? என்று கேள்வி கேட்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.

ஒரு உலகிலிருந்து மறு உலகத்துக்கு இடம் பெயர்ந்தது மட்டுமின்றி மற்றொரு காரணத்தினாலும் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று கேள்வியெழுப்பியிருக்கலாம்.

பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும் போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்து விடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்து விடுகிறது.

எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?என்று மனிதன் கேட்பதற்கு இதுவும் மற்றொரு காரணமாக அமைந்து விடுகிறது. இந்தக் காரணமும் நமது சொந்தக் கற்பனை அல்ல. திருக்குர்ஆனில் இதற்குச் சான்று உள்ளது.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(திருக்குர்ஆன்:22:1,2.)

மனிதன் திரும்ப எழுப்பப்படும் நாளில் காணப்படும் அதிர்ச்சி, அனைத்தையுமே மறக்கடிக்கச் செய்வதாக இருக்கும். பெற்ற தாய் பிள்ளையைக் கூட மறக்குமளவுக்குக் கடுமையானதாக இருக்கும்.

திரும்ப எழுப்பப்படும் மனிதன் அதிர்ச்சியின் போது கூறும் வார்த்தை நூறு சதவிகிதம் உண்மையானதாக இருக்காது. மறுமை நாளின் கொடூரமான நிலை அதற்கு முன் அவன் பட்ட வேதனைகளை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. அதனால் தான் கப்ர் வேதனையை மறந்து உறக்கத்திலிருந்து எழுப்பியவன் யார்? எனக் கூறுகிறான்.

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத் தான் இவ்வசனம் அமைந்துள்ளது. அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத் தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். அல்லாஹ்வின் கூற்றாக அமையவில்லை. இறந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருப்பதாக அல்லாஹ் எங்கேயும் கூறவில்லை.

மேலும் காஃபிர்கள் இது மட்டுமின்றி உண்மைக்கு மாற்றமான இன்னும் பல கூற்றுக்களை மறுமை நாளில் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று கருத முடியாது. இதைத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அந்த நேரம் வரும் போது சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

(திருக்குர்ஆன்:30:55.)

சிறிது நேரம் தவிர உலகில் அல்லது கப்ரில் தங்கியிருக்கவில்லைஎன காஃபிர்கள் மறுமையில் எழுப்பப்படும் போது கூறுவார்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதை ஆதாரமாகக் கொண்டு மனிதன் இறந்து சிறிது நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று இவர்கள் கூறுவார்களா? அல்லது இவ்வுலகில் சிறிது நேரமே வாழ்ந்தார்கள் என்று கூறுவார்களா? அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?

நிச்சயமாக அதிர்ச்சியின் புலம்பல் என்றே கூறுவார்கள். இது புலம்பல் என்றால் தூக்கத்திலிருந்து எழுப்பியது யார்?என்று இவர்கள் புலம்புவதை மட்டும் எப்படி ஆதாரமாகக் கொள்கிறார்கள்?

காஃபிர்கள் மறுமை நாளில் உலகில் நடந்த எத்தனையோ விஷயங்களை மறுப்பார்கள். அவர்களுக்கு எதிராக அவர்களின் கைகளும், கால்களும் சாட்சியமளிக்கும் என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறுகிறது. காஃபிர்கள் இவற்றை மறுப்பதால் அவர்கள் அக்காரியங்களைச் செய்யவில்லை என்று அறிவுடைய யாரேனும் விளங்கிக் கொள்வார்களா?

எனவே, காஃபிர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து கப்ருடைய வாழ்வு இல்லை எனக் கூறுவது அறியாமை என்பதில் சந்தேகமில்லை.

மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாகக் குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் தவறாகும். கப்ருடைய வேதனை என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் பின் வரும் வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

(திருக்குர்ஆன்:40:45,46.)

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்றும் கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.

இது ஃபிர்அவ்னுடைய கூட்டத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தண்டனை; மற்றவர்களுக்கு இது இல்லைஎன்று சிலர் கூறுகின்றனர். இதுவும் தவறான வாதமாகும். ஏனெனில் ஃபிர்அவ்னுக்கு எவ்வாறு வேதனை செய்யப்படுகிறதோ அவ்வாறு தான் மற்ற காஃபிர்களும் வேதனை செய்யப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் விளக்குகிறது.

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன். ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

(திருக்குர்ஆன்:8:50, 51, 52.)

அக்கிரமக்காரர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது அவர்களை அடிப்பார்கள். மேலும், சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்எனக் கூறுவார்கள் என்று கூறுகின்ற இறைவன் ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்குச் செய்யப்படுவது போல் இவர்களுக்கும் ஏற்படும்என்று கூறுகிறான்.

உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் எனக் கூறி மற்றவர்களுக்கும் கப்ரு வேதனை உள்ளது என்று இறைவன் வலியுறுத்திக் கூறுகிறான். எனவே கப்ர் வேதனை குர்ஆனில் இல்லை எனக் கூறுவதும், அது குர்ஆனுக்கு எதிரானது என வாதிடுவதும் குர்ஆனை அறியாதவர்களின் கற்பனையில் உதித்ததாகும்.

சிலர் அதிக காலமும், சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இது தான் என்பது தெந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். எனவே செய்த தப்புக்கும் இவன் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னுதாரணம். அவன் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தான் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை அவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

(திருக்குர்ஆன்:16:25.)

அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில் விசாரிக்கப்படுவார்கள்.

(திருக்குர்ஆன்:29:13.)

வழிகெடுத்த பாவத்தையும் ஒருவன் சுமந்தாக வேண்டும் என்று இறைவன் கூறுவதால் இவர்களின் இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது. எனவே, குர்ஆனை முழுமையாக நம்புபவர்கள் கப்ருடைய வேதனையை ஒருக்காலும் மறுக்க மாட்டார்கள்.