09) 4- ஹஃப்ஸா (ரலி) அவர்கள்

நூல்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர்.

அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹப்ஸா (ரலி) அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய வரலாறு கண்ட வீரப் பெண்மணிகளில் இவர்களுக்குத் தலையாய இடமுண்டு.

கணவரை இழந்து விதவையாகிப் போன ஹப்ஸா (ரலி) அவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள். இந்தத் திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்காவது திருமணம் என்றாலும், கதீஜா (ரலி) அவர்கள் முன்பே மரணித்து விட்டதால் இவர்களையும் சேர்த்து இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூன்று மனைவியர் தான் இருந்தார்கள்.

ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் வரை தான் மணந்து கொள்ளலாம் என்று அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த பொதுவான அனுமதியை இந்தச் சந்தர்ப்பத்திலும் நபியவர்கள் கடந்து விடவில்லை.

நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதிக்குரிய நியாயங்களே இத்திருமணங்களுக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தவரும், தமது துணிச்சலான நடவடிக்கைகளால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்த்தவருமான உமர் (ரலி) அவர்களின் மகளாக ஹப்ஸா (ரலி) அவர்கள் இருந்தது இத்திருமணத்திற்கு பிரத்தியேகக் காரணமாக இருக்கலாம்.

இந்தப் பிரத்தியேகக் காரணம் இல்லாவிட்டால் கூட இந்தத் திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு மனைவிக்கு மேல் கூடாது எனும் வரம்பைக் கடந்து விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது திருமனத்தைக் காண்போம்.