07) 2 ஸவ்தா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.

ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். தங்களின் கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக இத்தம்பதியினர் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்தனர். மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு வி;ட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் மக்காவுக்கே இருவரும் திரும்பி வந்தனர். திரும்பியதும் ஸக்ரான் (ரலி) அவர்கள், தம் மனைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரணமடைந்தார்.

இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமஉணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டால், கதீஜா (ரலி) அவர்களுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்வு அந்தக் காமஉணர்வுக்கு ஈடு கொடுக்கத்தக்க விதமாக அமைந்திருக்காத நிலையில், இந்த இரண்டாம் திருமணத்தின் போதாவது இளம் பெண்ணை விரும்பியிருக்க வேண்டும். காமஉணர்வைப் பிரதானமாகக் கொண்டவர் நீண்டகாலம் அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டவர் இளம் வயதுப் பெண்ணைத் தான் தேர்வு செய்வார்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும்.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மனைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா (ரலி) அவர்களைத் தான். நிச்சயமாக காமஉணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது இதிலிருந்தும் தெளிவாகும்.

கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பின் அவர்கள் மூலம் பிறந்த தமது பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற காரணம் தான் இதற்கு இருக்க முடியும்.