06) அனாதைகளின் சொத்துக்கள் பற்றிய ஹதீஸ் ஆதாரமாகுமா?
ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன.
அவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலைநாட்ட உதவுவதாக இல்லை.
மற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
முதலாவது ஹதீஸ்
அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
سنن الترمذي
641 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ المُثَنَّى بْنِ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَقَالَ: أَلَا مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ فِيهِ، وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ: وَإِنَّمَا رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ هَذَا الوَجْهِ، وَفِي إِسْنَادِهِ مَقَالٌ، لِأَنَّ المُثَنَّى بْنَ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الحَدِيثِ، وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ فَذَكَرَ هَذَا الحَدِيثَ
அனாதைகளின் சொத்துக்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றால் அதை வியாபாரத்தில் முதலீடு செய்யட்டும். அவ்வாறு செய்யாமல் விட்டு வைத்தால் ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐப்
எதிர்வாதத்துக்கு மறுப்பு
இந்த ஹதீஸை அவர்கள் தமது ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த ஹதீஸிலிருந்து அவர்கள் எவ்வாறு வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை அறிந்து விட்டு இந்த ஹதீஸின் தரத்தையும், இவர்களின் வாதம் சரியானது தானா என்பதையும் ஆராய்வோம்.
கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லையென்றால், ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். ஒரு தடவை இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுத்து விட்டால் மீதி தொன்னூற்று ஏழரை சதவிகிதம் மிச்சமாக இருந்து விடும். ஆனால் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருந்தால் படிப்படியாக சொத்து கரைந்து கொண்டே வரும். எனவே தான் அனாதையின் சொத்துக்கள் கரைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வியாபாரத்தில் முதலீடு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வர வேண்டும் என்பது தெரிகின்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.
ஹதீஸின் தரம்
மேற்கண்ட ஹதீஸின் தரம் சரியானதல்ல என்பதால் எடுத்த எடுப்பிலேயே இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.
இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ அவர்கள், இதன் அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் உள்ளது என்றும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் பலவீனமானவர் என்றும் ஹதீஸின் கடைசியில் குறிப்பிடுகின்றார்கள்.
இரண்டாவது ஹதீஸ்
இதே ஹதீஸ் தாரகுத்னீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن الدارقطنى
1993 – حَدَّثَنَا عَلِىُّ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْمِصْرِىُّ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ غُلَيْبٍ الأَزْدِىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَامَ يَخْطُبُ النَّاسَ فَقَالَ مَنْ وَلِىَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ لَهُ وَلاَ يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ
மேற்கண்ட ஹதீஸும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க.
முஸன்னா பின் ஸப்பாஹ் பற்றிய விமர்சனம்
تهذيب التهذيب
-المثنى بن الصباح اليماني الأبناوي أبو عبد الله قال عمرو بن علي كان يحيى وعبد الرحمن لا يحدثان عنه وقال عبد الله بن أحمد عن أبيه لا يساوي حديثه شيئا مضطرب الحديث قال إسحاق بن منصور عن بن معين ضعيف وكذا قال معاوية بن صالح عن بن معين وقال عباس الدوري عن بن معين مثنى بن الصباح مكي ويعلي بن مسلم مكي والحسن بن مسلم مكي وجميعا ثقة وقال بن أبي حاتم سألت أبي أبا زرعة عنه فقالا لين الحديث وقال الجوزجاني لا يقنع بحديثه وقال الترمذي يضعف في الحديث وقال النسائي ليس بثقة وقال في موضع آخر متروك الحديث وقال بن عدي له حديث صالح عن عمرو بن شعيب وقد ضعفه الأئمة المتقدمون والضعف على حديثه بين قال بن سعد وله أحاديث وهو ضعيف وقال علي بن الجنيد متروك الحديث وقال الدارقطني ضعيف وقال بن عمار ضعيف وقال الساجي ضعيف الحديث جدا حدث بمناكير وقال أبو أحمد الحاكم ليس بالقوي عندهم وضعفه أيضا سحنون الفقيه وغيره وذكره العقيلي في الضعفاء
யஹ்யா, அப்துர்ரஹ்மான் ஆகிய இரு ஹதீஸ் கலை வல்லுநர்களும் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக எதையும் அறிவித்ததில்லை என்று அம்ரு பின் அலீ குறிப்பிடுகின்றார்கள். இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் சரியானவை அல்ல; ஹதீஸ்களை இவர் மாற்றி மாற்றிக் கூறுபவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார்கள். இவரிடம் ஏற்பட்ட மனக் குழப்பத்தின் காரணமாக இவர் வழியாக எதையும் நான் அறிவிப்பதில்லை என்று யஹ்யா கூறுகின்றார். இவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்றாலும் ஹதீஸ் துறையில் சரியானவர் அல்லர் என்றும் இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம்; இவர் பலவீனமானவர் என்றும் யஹ்யா பின் மயீன் கூறுகின்றார்.
இவர் பலவீனமானவர் என்று நஸாயீ, அபூஸுர்ஆ, அலீ பின் அல்ஜுனைத், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு அம்மார், ஸாஜி, அபூஅஹ்மத், அபூஹாத்திம், ஜவ்ஸஜானி, திர்மிதீ, இப்னு ஸஅது, இப்னு அம்மார், ஹாகிம், உகைலீ, யஹ்யா அல் கத்தான், யஹ்யா பின் ஸயீத், யஹ்யா பின் மயீன் ஆகியோர் கூறியதாக ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீப் நூலில் (10/32) குறிப்பிடுகின்றார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்
இந்தச் செய்தியை அறிவிக்கும் முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.
மூன்றாவது ஹதீஸ்
இதே ஹதீஸ் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக அல்லாமல் வேறு வழியிலும் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن الدارقطنى
1994 حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ بْنِ إِسْحَاقَ الْعَطَّارُ بِالْكُوفَةِ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا مِنْدَلٌ عَنْ أَبِى إِسْحَاقَ الشَّيْبَانِىِّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم احْفَظُوا الْيَتَامَى فِى أَمْوَالِهِمْ لاَ تَأْكُلُهَا الزَّكَاةُ
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும், மின்தல் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள்.
மின்தல் பற்றிய விமர்சனம்
تهذيب التهذيب
مندل بن علي العنزي أبو عبد الله الكوفي وقال عبد الله بن أحمد عن أبيه ضعيف الحديث وقال أحمد بن أبي مريم عن ابن معين ليس به بأس يكتب حديثه قال ابن أبي خيثمة عن ابن معين ليس بشيء وقال عثمان الدارمي عن ابن معين لا بأس به وقال الدوري عن ابن معين حبان ومندل ضعيفان وأصحابنا يحيى بن معين وعلي بن المديني وغيرهما من نظرائهم يضعفونه في الحديث وكان خيرا فاضلا صدوقا وهو ضعيف الحديث وكان البخاري ادخل مندلا في الضعفاء وسئل أبو زرعة عن مندل فقال لين الحديث وقال النسائي ضعيف وقال بن عدي له غرائب وأفراد وهو ممكن يكتب حديثه وقال علي بن الحسين بن الجنيد سئل ابن معين عنه فقال ليس بذاك القوي وقال الجوزجاني واهي الحديث وقال الحاكم أبو أحمد ليس بالقوي عندهم وقال الساجي ليس بثقة روى مناكير وقال لي بن مثنى كان عبد الرحمن بن مهدي لا يحدث عنه وقال بن قانع والدارقطني ضعيف وقال ابن حبان كان ممن يرفع المراسيل ويسند الموقوفات من سوء حفظه فاستحق الترك وقال الطحاوي ليس من أهل التثبت في الرواية بشيء ولا يحتج به.
அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அலீ பின் மத்யனி, புகாரி, அபூஸுர்ஆ, நஸாயீ, இப்னுஅதீ, அபூஹஸ்ஸான், ஜவ்ஸஜானி, அபூஅஹ்மத், ஹாகிம், ஸாஜி, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இப்னு கானிவு, தாரகுத்னீ, தஹாவீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியதாகவும் நம்பகமானவர் என்று கூறியதாகவும் முரண்பட்ட இரண்டு அறிவிப்புக்கள் உள்ளன. முஆத் பின் முஆத், அஜலீ, ஆகியோர் மட்டும் தான் இவரது ஹதீஸ்களை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர் என்றாலும் இவரைக் குறை கூறியவர்கள் மோசமான நினைவாற்றல் உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளவர் என தக்க காரணத்துடன் குறை கூறியுள்ளதால் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்
எனவே இவர் இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.
உபைத் பின் இஸ்ஹாக் பற்றிய விமர்சனம்
மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் பலவீனமானவர்.
الكامل في ضعفاء الرجال
عُبَيد بن إسحاق العطار كوفي حَدَّثَنَا ابن حَمَّاد، حَدَّثَنا العباس، عَن يَحْيى، قَالَ: عُبَيد عطار المطلقات قلت له هذه الأحاديث التي يحدث بها باطل قَالَ اتق الله ويحك، قلتُ: وَهو باطل فسكت. وسمعتُ ابن حماد يقول: قال البُخارِيّ عُبَيد العطار هُوَ منكر الحديث. وَعَامَّةُ مَا يَرْوِيهِ إما أن يكون منكر الإسناد أو منكر المتن.
புகாரி, யஹ்யா ஆகியோர் இவரது ஹதீஸ்கள் முன்கர் (நிராகரிக்கத்தக்கது) என்ற தரத்தில் அமைந்தவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் அறிவித்துள்ள தவறான பல ஹதீஸ்கள் தக்க சான்றுகளுடன் காமில் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது.
நூல் : அல்காமில்
எனவே மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நான்காவது ஹதீஸ்
المعجم الأوسط
998 – حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا عَبْدُ الْعَزِيزِ قَالَ: نا مَنْدَلُ بْنُ عَلِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ابْتَغُوا الْيَتَامَى فِي أَمْوَالِهِمْ، لَا تَأْكُلُهَا الزَّكَاةُ
மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் தப்ரானியின் அவ்ஸத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மின்தல் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதை மேலே விளக்கியுள்ளோம்.
ஐந்தாவது ஹதீஸ்
மேற்கண்ட ஹதீஸ் மேற்கூறப்பட்ட மூவர் வழியாக இல்லாமல் வேறு சில அறிவிப்பாளர்கள் மூலமும் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن الدارقطنى
1995 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِىٍّ الْبَزَّازُ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ حَدَّثَنَا رَوَّادُ بْنُ الْجَرَّاحِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى مَالِ الْيَتِيمِ زَكَاةٌ
இந்த ஹதீஸில் மேற்கண்ட மூவரில் எவரும் இடம் பெறாவிட்டாலும் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் (அல்அஸ்ரமி) என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் நம்பகமானவர் அல்லர்.
முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமி பற்றிய விமர்சனம்
المجروحين لابن حبان
– محمد بن عُبَيد الله العرزمي. ، وكان صدوقا إلا أن كتبه ذهبت وكان رديء الحفظ فجعل يحدث من حفظه ويهم فكثر المناكير في روايته. تركه ابن المبارك، ويَحيَى القطان، وابن مهدي، ويَحيَى بن مَعِين. كان يحيى، وعَبد الرحمن لا يحدثان، عَن مُحَمد بن عُبَيد الله العرزمي قلت لابن نمير: ما تقول في محمد بن عُبَيد الله العرزمي؟ فقال: رجل صدوق ولكن ذهبت كتبه وكان رديء الحفظ فمن ثم أنكرت أحاديثه.
இவர் உண்மையாளராக இருந்தாலும் இவரது நூற்கள் அழிந்து விட்டன. இவர் நினைவாற்றல் குறைந்தவராக இருந்தார். தனது நினைவில் உள்ளதை இவர் அறிவிக்கும் போது தவறாக அறிவித்து விடுவார். நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் பலவற்றை இவர் அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் இவரை விட்டு விட்டனர்.
நூல் : அல்மஜ்ரூஹீன்
எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.
ஆறாவது ஹதீஸ்
மேற்கண்ட நால்வர் வழியாக அல்லாமல் வேறு அறிவிப்பாளர்கள் மூலமாகவும் தப்ரானியின் அவ்ஸத் நூலில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
المعجم الأوسط
4152 – حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا الْفُرَاتُ بْنُ مُحَمَّدٍ الْقَيْرَوَانِيُّ قَالَ: نا شَجَرَةُ بْنُ عِيسَى الْمَعَافِرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي كَرِيمَةَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اتَّجِرُوا فِي أَمْوَالِ الْيَتَامَى، لَا تَأْكُلْهَا الزَّكَاةُ
இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் ஃபுராத் பின் முஹம்மத் என்பவரும் உமாரா பின் கஸிய்யா என்பவரும் இடம் பெறுகின்றார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் ஆவர்.
ஃபுராத் பின் முஹம்மத் பற்றிய விமர்சனம்
لسان الميزان
فرات بن محمد بن فرات العبدي القيرواني وقال ابن حارث كان يغلب عليه الرواية والجمع ومعرفة الأخبار وكان ضعيفا متهما بالكذب
இவர் பலவீனமானவர் மட்டுமின்றி பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவராகவும் இருந்தார்
நூல் : லிஸானுல் மீஸான்
உமாரா பின் கஸிய்யா பற்றிய விமர்சனம்
மற்றொரு அறிவிப்பாளரான உமாரா பின் கஸிய்யா என்பவரும் பலவீனமானவராவார்.
الضعفاء الكبير للعقيلي
– حَدثنا مُحمد بن عيسى، قال: حَدثنا صالح، قال: حَدثنا عَلي، قال: قُلت لسُفيان: كُنت جالَست عُمارة بن غَزيَّةَ؟ قال: نَعَم، جالَستُه كَم مِن مَرَّة، فَلَم أَحفَظ عنه شَيئًا، ثُم قال لي سُفيان: أَيش رَوى؟ قُلتُ: ابن أَبي سَعيد الخُدريّ, عن أَبيه، قال: مَن سَأَل ولَه أُوقيَّة، قال سُفيان هَذا، وحَدثناه عنه زَيد بن أَسلَم، عن عَطاء بن يَسار.
இவருடன் எத்தனையோ தடவை நான் அமர்ந்துள்ளேன். ஆயினும் இவரிடமிருந்து எந்த ஹதீஸையும் நான் மனனம் செய்ததில்லை என்று சுஃப்யான் கூறுகின்றார். இவரைப் புகழ்ந்து கூறும் விமர்சனம் எதையும் நாம் காணவில்லை எனவும் கூறுகின்றார்.
நூல் : லுஅஃபாவுல் உகைலீ
ஆக அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
எனவே இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.
இது தவிர உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து(தாரகுத்னீ: 2) ➚/110,பைஹகீ 4/107 மற்றும் 6/2, முஸ்னத் ஷாஃபி 1/204, முஅத்தா 1/251, முஸன்னப் அப்துர்ரஸாக்4/69 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரத்தையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.
மற்றொரு அறிவிப்பில் பைஹகீ (4/107) நபிகள் நாயகத்தின் கூற்றாக சரியான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப் பட்டிருந்தாலும் அதில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதாக பைஹகீ அவர்களே கூறுகின்றார்கள்.
ஆக இவர்கள் எடுத்து வைத்த முதல் ஆதாரம் ஏற்புடையதாக இல்லை.
வருடா வருடம் என்று ஹதீஸில் இல்லை
இது தவிர ஒரு வாதத்துக்காக மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸிலிருந்து நிலைநாட்ட முடியாது.
ஜகாத் கொடுத்தால் அனாதையின் சொத்து கரைந்து விடும் என்று மட்டும் தான் மேற்கண்ட பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வருடா வருடம் என்று கூறப்படவில்லை. வருடா வருடம் என்பது இவர்களாக நுழைத்துக் கொண்டதாகும்.
ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தால் அனாதைகளின் சொத்து கரையும் என்றால் வருடா வருடம் கொடுப்பதை விட மாதந்தோறும் கொடுத்தால் இன்னும் சீக்கிரமாகக் கரைந்து விடும். எனவே மாதாமாதம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று நாம் வாதிட்டால் அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இருக்காது.
இன்னும் ஒருவர் வாரா வாரம் ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது. சொத்தைக் கரைத்து விடும் என்ற கருத்து வாரா வாரம் கொடுத்தால் தான் அதிகம் பொருந்தும் என்று வாதிடலாம். வேறொருவர் தினமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டலாம்.
தினசரி ஐந்து வேளை தொழுகை போல் தினசரி ஐந்து வேளை ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றும் கூற முடியும்.
இவையெல்லாம் எப்படி ஹதீஸில் இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளதோ அது போல் தான் வருடா வருடம் என்பதும் மேற்கண்ட ஹதீஸில் திணிக்கப்பட்டதாகும்.
இதை ஒரு வாதத்துக்காகவும், மேலதிக விளக்கத்திற்காகவும் தான் குறிப்பிடுகின்றோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பது தான் அடிப்படையான விஷயமாகும்.
மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீனமானவை என்ற நம் வாதங்களுக்கு மாற்றுக் கருத்துடையோரிடம் தக்க பதில் இல்லை.
அனாதைக்கு அநீதி
அறிவிப்பாளர்களில் பலவீனம் என்பதுடன், வருடா வருடம் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி இந்த ஹதீஸ் கூறும் கருத்தும் இஸ்லாமிய நெறிகளுக்கு உகந்ததாக இல்லை.
பருவ வயதை அடைவதற்கு முன்பு தான் ஒருவரை அனாதை என்று கூற முடியும். இவர்களும் ஒப்புக் கொண்ட இஸ்லாமியச் சட்டப்படி பருவ வயது வராதவர்களின் எந்த ஒப்பந்தமும் செல்லாது.
அனாதையின் சொத்தை வியாபாரத்தில் முடக்க வேண்டுமானால் அனாதையின் சம்மதம் அவசியம்.
அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.
திருக்குர்ஆன் 17:34
அனாதை சம்மதம் கொடுக்கும் வயதுடையவனாக இல்லாததால் அனாதை சொத்தை வியாபாரத்தில் போடுவதற்கு பொறுப்பாளருக்கு உரிமை இல்லை.
இந்தக் காரணத்தாலும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனப்படுகின்றது.
வியாபாரம் என்பது லாபமும், நட்டமும் ஏற்படும் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டதாகும்.
அனாதைச் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே, ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும்.
மேலும் இவர்களது வாதப்படி ஜகாத் கரைந்து கொண்டே வந்து ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் ஜகாத் கடமையாகாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தொகை மட்டுமாவது அனாதைக்காக மிஞ்சியிருக்கும். ஆனால் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் எதுவுமே மிஞ்சாத நிலை கூட ஏற்படலாம்.
ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடும் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இந்தப் பலவீனமான ஹதீஸ் கூறுகின்றது. இந்தக் கருத்து உண்மைக்கு மாற்றமாக உள்ளது.
இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை.
ஒரு வயதுடைய அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் சொத்தை ஒருவன் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவர் அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம்.
ஒரு லட்ச ரூபாய் அனாதைச் சொத்தை ஒருவர் பராமரிக்கின்றார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும்.
அடுத்த வருடம் 2437 ரூபாய் ஐம்பது காசுகள் ஜகாத் கொடுக்க வேண்டும்.
15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட அதிகபட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும்.
அனாதையாக இருப்பவன் பருவமடையும் போது 68,402 ரூபாய் கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ, அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை.
எனவே இது போன்ற பொருத்தமற்ற வாதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இது மேலும் பலவீனப்படுகின்றது.
மேலும் அனாதைச் சொத்தை மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.
உன் சொத்தை வியாபாரத்தில் போட்டேன். எல்லாம் நட்டமாகி விட்டது என்று சொத்தைப் பராமரித்தவர் அனாதை வளர்ந்து பெரியவனாகும் போது கூறும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்த மட்டார்கள் என்பதும் மேற்கண்ட ஹதீஸை இன்னும் பலவீனப்படுத்துகின்றது.