05) நபியவர்களின் வறுமை

இஸ்லாம் கூறும் பொருளியல்

பொருளாதாரம், இறை நினைவை விட்டும் திசை திருப்பக் கூடியதாக ஆகி விடக் கூடாது என்பதைக்  கண்டோம். இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வறுமையான நிலையிலேயே தமது வாழ்நாளைக் கழித்துள்ளார்கள்.

நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று இன்று வரைக்கும் எவருக்கும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் வாழந்தார்கள். நபிகள் நாயகம் சிறு வயதில் தாய் தந்தையை இழந்த அனாதையாக இருந்தார்கள். அப்போது ஆடு மேய்த்து வாழ்க்கையை ஓட்டினார்கள். நபியாக ஆனதற்குப் பின் அவர்களை அல்லாஹ், தன்னிறைவு பெற்றவராக ஆக்கினான். இதைத் திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான்.

உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.

(அல்குர்ஆன்: 93:8)

மக்காவில் வாழ்ந்த போது செல்வம் கையில் நன்றாகப் புழங்கியது. மதீனா வாழ்க்கையில் கடுமையான வறுமை ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று யாருக்கும் ஏற்படவில்லை. இதைப் பற்றி நபிகள் நாயகத்தின் மனைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்:

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது” என்று கூறினார்கள். நான், “என் சிறிய அன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றி-ருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள்

(புகாரி: 2567)

அல்லாஹ்வின் படைப்பில் மிகச் சிறந்த படைப்பான, அகிலத்தின் அருட்கொடை என்று நாம் போற்றுகின்ற, நம் உயிரினும் மோலாக மதிக்கின்ற நபி (ஸல்) அவர்களுக்கே வறுமையை அல்லாஹ் தந்துள்ளான். சுலைமான் நபிக்கு செல்வத்தை வழங்கியது போன்று, ஒரு சாம்ராஜ்யத்தின் தலைவரான இறுதித் தூதருக்கு அல்லாஹ் தரவில்லை. வறுமையில் உள்ளவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் அனைவரும் நபியை விட மிகப் பெரிய பணக்காரர்களாகவே இருக்கின்றோம். நபியவர்களுக்கு வந்த வறுமையைப் போன்று நமக்கு யாருக்கும் வரவில்லை.

பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் தான் குவிந்து கிடக்கின்றது; அல்லாஹ் நம்மைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நாம் நினைத்தால் நபியவர்களின் வாழ்க்கையை நினைக்க வேண்டும். அல்லாஹ் நம்மை ஏழையாக வைத்துள்ளான் என்று நினைத்தால் நம்மை விட ஏழையாக உள்ளவர்களைக் கவனிக்க வேண்டும்.

அவர்களின் நிலையை நாம் நினைத்தால் அவர்களை விட அல்லாஹ் நம்மை சிறப்பாக வைத்துள்ளான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இப்படி நினைத்தால் நமது உள்ளத்திற்கு ஆறுதலாக இருக்கும். நம்மை விட மிக ஏழையான, சாம்ராஜ்யத்தின் தலைவரான இறுதித் தூதருடைய வாழ்க்கையில் இருந்த உடை, ஆடை, இருப்பிடம் ஆகியவைப் பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளை நாம் பார்த்தால் நமது கண்களில் கண்ணீர் வந்துவிடும். இந்த அளவுக்கு வறுமை இருந்தும் செம்மையாக வாழ்ந்துள்ளார்கள்.

நமக்கு வறுமை வந்தால் நம்மில் சிலர் தற்கொலை செய்து விடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் கடுமையான வறுமையில் இருந்துள்ளார்கள். அல்லாஹ் எதற்காக நபிக்கு வறுமையை உண்டாக்கினான் என்றால் சமுதாயத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வசதியை பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதருடைய வீட்டிலிருந்த உணவு வகைகள் எப்படி இருந்தது என்று நாம் பார்க்க வேண்டும்.

சல்லடை கிடையாது

நபி (ஸல்) அவர்கள் மாவு சலிக்கும் சல்லடையைக் கூட பயன்படுத்தியதில்லை. சல்லடை இருந்தால் மாவைத் தனியாகவும், உமியைத் தனியாகவும் பிரித்தெடுக்க முடியும். மாவைத் தனியாக பிரித்தெடுத்தால் தான் மன நிறைவாகவும் நிம்மதியாகவும் சாப்பிட முடியும். இல்லையென்றால் அதை சாப்பிடுவதற்குக் கஷ்டப்பட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சல்லடை கூட இல்லாமல் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள். அப்படிப்பட்ட வறுமையில் வாழ்ந்துள்ளார்கள்.

அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நன்கு ச-த்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததி-ருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (ச-த்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை” என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத் தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததி-ருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை” என்றார்கள். நான், “கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டு வந்தீர்கள்? சலிக்காமலேயா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதி-ருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்” என்றார்கள்.

(புகாரி: 5413)

வயிறு நிறைய சாப்பிட்டதில்லை

ஒரு மனிதன் வயிறு நிரம்ப சாப்பிடுவான். அல்லது அரை வயிறாவது சாப்பிடுவான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வயிறு நிரம்பவோ அல்லது அரை வயிறோ கூட சாப்பிடதில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததி-ருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

(புகாரி: 5416, 5374),(முஸ்லிம்: 5682)

இப்படி ஒருவராவது நாம் இருக்கிறோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “(ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த்தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்” என்று பதிலளித்தார்கள். “உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை” என்று சொன்னார்கள்

(புகாரி: 5423)

நபியின் மனைவிகளிடமும் உணவில்லை

ஆட்சிக்கு தலைவரான, சாம்ராஜியத்திற்கு முதல்வரான, மனித குலத்திற்கு இறுதி தூதரான, அல்லாஹ்வின் தூதருடைய அனைத்து மனைவியர்களிடத்திலும் ஒரே நேரத்தில் உணவு இருந்தது கிடையாது. இந்த வறுமையிலும் கூட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மார்க்கத்தில் உறுதியாக இருந்துள்ளார்கள். தமது மனைவிமார்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக செல்வங்களை தேடி மார்க்கத்தின் கட்டுப்பாடுகளை விட்டு விலகவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், “தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார். பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. “இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்றே கூறினர்.

(முஸ்லிம்: 4175)

ஒரே நாளில் இரண்டு வேளை சாப்பிட்டதில்லை

நாம் ஒரு நாளைக்கு இருவேளை உணவு சாப்பிடாமல் இருந்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.

(முஸ்லிம்: 5691)

மாதக் கணக்கில் அடுப்பு எரியாத நிலை

நமது காலத்தில் வாழக் கூடியவர்கள் வீட்டில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அடுப்பு பற்ற வைக்காமல் இருந்ததில்லை. யாருடைய வீட்டிலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அடுப்பு பற்ற வைக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் தொடர்ந்து மாதக் கணக்கில் அடுப்பு பற்ற வைக்காமல் இருந்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.

(முஸ்லிம்: 5688)

உணவிற்காகப் பிரார்த்தனை

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

(முஸ்லிம்: 5680)

எண்ணையில் பொறித்த இறைச்சியை சாப்பிடவில்லை

இந்த காலத்தில் வாழக்கூடிய நமது வீட்டில் சில நபர்கள் இறைச்சியில்லாமல் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எண்ணையால் பொறித்த இறைச்சியைச் சாப்பிட்டதில்லை.

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்று வருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ் (ரலி) அவர்கள், “சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த மட்டில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

(புகாரி: 5421, 6457)

அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய பணியாளராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப் பார்த்து கவலைப்படுகிறார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு அவரது பணியாளரான அனஸ் (ரலி) உணவு வழங்கியுள்ளார்கள். நமது காலத்தில் யாருக்காவது அவரது பணியாளர் உணவு வழங்கியுள்ளார் என்று சரித்திரம் உண்டா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து அவரிடமிருந்து தமது குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாஉ, மற்ற தானியத்தில் ஒரு ஸாஉ இருந்ததில்லை. அந்த நேரத்தில் நபியவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.

(புகாரி: 2069, 2508)

ஒரே உணவை 15 நாள் வைத்து சாப்பிடும் நிலை

நமது வீட்டில் எதாவது உணவு செய்தால் அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுவோம். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் ஒரு உணவைப் பதினைந்து நாட்கள் வைத்து சாப்பிடுவார்கள்.

ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் “(ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச்சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், “மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பி னார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்” என்று பதிலளித்தார்கள். “உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை” என்று சொன்னார்கள்.

(புகாரி: 5423)

இந்த வாழ்க்கையை நபியவர்கள் எப்படித் தான் வாழ்ந்தார்கள் என்று நாம் எண்ணிப் பார்த்தால் நமக்கு நமது வாழ்க்கை வறுமையாகத் தெரியாது.

எதுவுமே இல்லாத நிலை

நாம் வாழக் கூடிய சமுதாயத்தில் அடிமட்ட ஏழையை எடுத்துக் கொள்வோம். அவனது வீட்டில் ஏதாவது உணவிருக்கிறதா என்று கேட்டால் உணவுயில்லையென்று சொன்னாலும் மற்ற பொருட்கள் இருக்கும். ஆனால் நபியவர்களின் வீட்டில் பேரிச்சம் பழம் கூடக் கிடையாது.

உம்மு அத்திய்யா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று “(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), “நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியெனில் அது தனது இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது” என்றார்கள்.

(புகாரி: 1494)

இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை‘ என்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்” என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு “ஹைஸ்‘ எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது” என்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.

(முஸ்லிம்: 2125)

நபியின் பசி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்‘ அல்லது “ஓர் இரவு‘ (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இரு வரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது” என்று கூறி விட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டு வருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்து விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 4143)

வினிகரை குழம்பாகப் பயன்படுத்துதல்

அல்லாஹ்வுடைய தூதரின் வீட்டில் உண்ணுவதற்கு உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்கள். அப்படி உணவு கிடைத்தாலும் குழம்பு இருக்காது அப்படி இருந்தாலும் புளியாகத் தான் இருக்கும். புளியை வைத்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ரொட்டியை சாப்பிட்டுள்ளார்கள். இப்படித் தான் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.

பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரை வரை சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஏதேனும் உணவு உள்ளதா?” என்று கேட்டார்கள். வீட்டார், “ஆம்‘ என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.

பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.

பிறகு (தம் வீட்டாரிடம்), “குழம்பேதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 4172)

சாப்பிடுவதற்குப் பாத்திரம் கூட இல்லை

நமது வீட்டில் சாப்பிடுவதற்கு தட்டு இல்லாமல் இருந்ததில்லை. நம்மிடத்தில் சாப்பிடுவதற்குத் தட்டு இல்லையென்றால் வாழை இலையாவது நாம் பயன்படுத்துவோம். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் தட்டு இல்லாமல் தான் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்களிடம், “அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “உணவு விரிப்பில்” என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 5386, 5415)

நபியவர்களின் படுக்கை வசதி

நமது காலத்தில் மிகவும் வறுமைக்குக் கீழ் உள்ளவர்கள் கூட, படுப்பதற்குப் பாய் வைத்திருப்பர்கள். தரையிலும் ஈச்சம்பாயிலும் யாரும் படுக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அரசனாக இருந்தாலும், மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் தரையிலும் ஈச்சம் பாயிலும் படுத்துள்ளார்கள்.

நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயின் மீது தூங்கினார்கள். அதனுடைய வரிகள் அவர்களின் விலாப்புறத்தில் (நன்றாக) பதிந்திருந்தது. “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு விரிப்பை ஏற்பாடு செய்யட்டுமா?” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள், “எனக்கும் இந்த உலகிற்கும் என்ன இருக்கிறது? ஒரு மரத்தின் கீழ் நிழலிற்காக ஒதுங்கி ஓய்வெடுத்து, பிறகு அதை விட்டுச் செல்கிறானே அந்தப் பயணியைப் போன்று தான் இவ்வுலகத்தில் நான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

(திர்மிதி: 2299)

நமது காலத்தில் வாழ்கின்ற அனைவருடைய வீட்டிலும் குறைந்தது இரண்டு பாயாவது இருக்கும். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் ஒரு பாய் தான் இருந்தது. அதை வைத்துப் பகலில் படுப்பார்கள். இரவில் தனது வீட்டிற்குக் கதவாகப் பயன்படுத்துவார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.

(புகாரி: 730)

இதன் மூலம் நமக்கு ஒரு படிப்பினையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். நபியவர்கள் வறுமையாக இருந்தாலும் சீராகவும் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள். நபியவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் அல்லாஹ் நம்மை செழிப்பாக்கியுள்ளான். அதனால் நாம் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும்.

குட்டையாக இருந்த வீட்டுச் சுவர்

சாதாரண ஏழைகள் கூட தனது வீட்டைக் கட்டினால் குறைந்த அளவு ஒரு நபரின் உயரத்தை விட அதிகமாகத் தான் கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டின் உயரத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுச் சுவர் அவர்களது மார்பளவு தான் இருக்கும். அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசியபோது, “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)” என்று கூறினார்கள்.

(புகாரி: 729)

வீடோ சிறியது; விளக்கும் கிடையாது!

நாம் வறுமையில் இருந்தாலும் கூட வாழ்வதற்கு வசதியிடத்தை சரியாக அமைத்துக் கொள்கிறோம். இக்காலத்தில் வாழ்கின்ற ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் தனது வீட்டை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கட்டுகிறார்கள். எல்லா வீட்டிலும் சமையலறை, படுக்கையறை அல்லது ஹால் வைத்துக் கட்டுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு நபர் படுத்தால் மற்றொரு நபர் தொழ முடியாது. வீட்டில் வேறு இடத்திலும் தொழ முடியாது. இந்த அளவுக்கு வீடு மிகவும் சிறியதாக இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக(ப் படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் “சஜ்தா‘ செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் “சஜ்தா‘விற்கு வரும் போது என்னை தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்றுவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.

(புகாரி: 382, 513)

நமது வீட்டில் ஒரு நாள் மின்சாரம் இல்லையென்றால் மிகவும் கஷ்டப்படுகிறோம். இரவில் சரியாகத் தூங்க முடிவதில்லை. ஆனால் அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் வாழ்நாள் முழுவதும் விளக்கு கிடையாது. இப்படித் தான் தனது வாழ்க்கையைக் கழித்துள்ளார்கள்.

தலையணை

நம்முடைய வீட்டில் உள்ள தலையணையை எடுத்துக் கொண்டால் பருத்திப் பஞ்சாலும், இளவம் பஞ்சாலும், அல்லது ஏனைய உயர் ரக பஞ்சுகளால் நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பேரிச்சம் நாரினால் செய்யப்பட்ட தலையணையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம் நாரினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது

(புகாரி: 6456)

நபியவர்களின் ஆடைகள்

ஒரு நாட்டிற்கு மன்னராகவும் சாம்ராஜ்யத்திற்கு அதிபதியாகவும் இருந்த அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு ஆடை தவிர வேறு ஆடையில்லை. அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களை எடுத்துக் கொண்டால் பல விதமான உயர் ரக ஆடைகளை வைத்திருந்தார்கள். ஆனால் நபியவர்கள் ஆடைக்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான ஒரு ஆடையிருக்கும். பெருநாள் அல்லது முக்கியமான நபர்களைச் சந்திக்கும் போது அதனைப் பயன்படுத்துவார்கள். இன்னொரு ஆடை வைத்திருப்பார்கள். அந்த ஆடையைத் தான் எப்பொழுதும் உடுத்தியிருப்பார்கள். அந்த ஆடையில் விந்து பட்டால் கழுவி விட்டு மீண்டும் அந்த ஆடையை உடுத்திக் கொள்வார்கள்.

உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.

(புகாரி: 354, 355, 356)

அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு ஆடையிருந்தாலும் முழுமையான ஆடையாக இருந்ததா என்றால் கிடையாது. அந்த ஆடையின் அளவு அவர்களது உடலின் பாகங்கள் வெளியில் தெரிகின்ற மாதிரி இருக்கும். சாம்ராஜ்யத்தின் அதிபதிக்கு ஆடைக்குப் பஞ்சமாகி விட்டது. இப்படி ஆடை கூட இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் மா-க் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தமது இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு ஒரு கை (புஜங்)களையும் விரி(த்து வை)ப்பார்கள்.

(புகாரி: 807)

சொத்து எதையும் விட்டுச் செல்லவில்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தனது குடும்பத்தாருக்கு எந்தச் செல்வமும் கொடுக்கவில்லை. சரி! மரணத்திற்குப் பிறகாவது தனது குடும்பத்தாருக்கு எதையாவது விட்டுச் சென்று இருக்கிறார்களா? என்று பார்த்தால் மரணத்திற்குப் பிறகும் எந்தச் செல்வத்தையும் விட்டுச் செல்லவில்லை. தனது குடும்பத்திற்காக கோவேறுக் கழுதையையும் தனது ஆயுதத்தையும் ஒரு நிலத்தையுமே விட்டுச் சென்றார்கள். அந்த நிலத்தையும் தர்மமாக ஆக்கியிருந்தார்கள்.

அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; “பைளா‘ எனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர!

(புகாரி: 4416, 2739, 3149, 6088)

ஆயுதத்தை அடைமானம் வைத்தல்

அல்லாஹ்வின் தூதருடைய கஷ்டத்தை எடுத்துக் கொண்டால் கேட்பதற்கே மிகவும் துயரமாக இருக்கும். தனது வாழ்நாளில் யாரிடமும் கையேந்தாமல் தனது பொருட்களை அடைமானம் வைத்து, கடைசி வரை அதை மீட்டாமலேயே மரணித்து விட்டார்கள். அந்தச் செல்வத்தை தனது குடும்பத்திற்கு விட்டு செல்ல வில்லை.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். “முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

(புகாரி: 2508, 2069)