03) நட்பைப் பலப்படுத்துவதற்கா?

நூல்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி), உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை நபியவர்கள் திருமணம் செய்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.

இந்தக் காரணமும் பொருந்தாக் காரணமேயாகும். நண்பர்களுடன் உள்ள உறவைப் பலப்படுத்துவதற்காக நான்கு என்ற வரம்பு நீக்கப்பட்டதென்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் வரம்பு நீக்கப்பட்டிருக்க வேண்டும். நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக இது போன்று யார் செய்தாலும் வரவேற்கத்தக்க காரியம் தான் என்று மார்க்கம் சொல்லி இருக்க வேண்டும்.

மேலும் திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே இடைவெளி எதுவுமிருக்கவில்லை. இந்தத் திருமணங்கள் நடந்திருந்தாலும், நடக்காதிருந்தாலும் அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை எதிர்பார்க்காது தங்கள் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.

இந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தும். அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தாது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது.