03) அரபியர்களின் அறியாமை பழக்கங்கள் மற்றும் வழிபாடுகள்
அரபியர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி வந்தார்கள். பின்பு காலம்
செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மறக்க ஆரம்பித்தார்கள். நபியவர்கள் பிறப்பதற்கு முன் அரபியர்களிடத்தில் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன.
அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்கள் மற்றும் கால்நைடகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.
உர்வா (ரஹ்) கூறுகின்றார்கள் : அறியாமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவைச்)
சுற்றி வந்துள்ளனர்.
ஹஜ்ஜூக்காக சென்று விட்டு திரும்பும்போது பின் வாசல் வழியாக திரும்புவார்கள். அவர்களின் இந்தச் செயலை திருக்குர்ஆன் கண்டிக்கின்றது. வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவைன) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவர்கள்.
திருமணம் என்ற பெயரில் சர்வசாதரணமாக விபச்சாரம் புரிந்து வந்தனர். இதை அவர்களில் யாரும் குற்றமாக கருதுவது கிடையாது. (புகாரி: 5127) ➚ வது ஹதீஸில் அறியாமைக் கால மக்கள் இது போன்ற பாவங்களில் அதிகம் ஈடுபட்டனர் என்று விரிவாக வந்துள்ளது.
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.
ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!’ என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலகி இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஉ’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாகி சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ‘இவன் உங்கள் மகன், இன்னாரே!” என்றே விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.
நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.
இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவரின் மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.
சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள். (புகாரி: 5127) ➚
அறியாமைக் கால மக்கள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். இதனை பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.
அறியாமைக் கால மக்களிடம் நட்சத்திர ஜோதிடம், குலப்பெருமை, ஒப்பாரி வைத்தல் போன்ற பல மூடப் பழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவை யாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. (முஸ்லிம்: 1700) ➚
இவ்வாறு பல அநீதங்களையும் மதுவில் மூழ்கி திளைப்பது போன்ற இன்னபிற சீர்கேடுகளையும் அதிகமான அளவில் செய்து வந்தனர்.
இத்தகைய பழக்கவழக்கங்கள் கொண்ட மக்களிடையே தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.