19) விமர்சனம் 28,29,30,31,32
விமர்சனம் 28
குர்ரான் 3;45. 4;71 இயேசு இறைவனின் வார்த்தையானவர் என்று கூறுவதாக ஜெபமணியார் கூறுகிறார்.
கலிமத்துல்லாஹ் இறைவனின் வாக்கு என்று குர்ஆன் ஈஸா (அலை) அவர்களைக் கூறுவது உண்மையே. இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் இறைவனின் உத்தரவால் படைக்கப்பட்டதால் இறைவன் அவ்வாறு கூறுகிறான். இதனால் தேவ மைந்தன் ஆகி விட முடியுமா?
ஆகி விட முடியும் என்றால் 3:30➚ வசனத்தில் யஹ்யாவையும் இறைவன் க லிமதுல்லாஹ் என்று கூறுகிறான். அதற்கும் இது தான் பொருளா? யஹ்யாவும் ஏசுவும் சம நிலையில் உள்ளவர் என்பதை ஜெபமணியார் ஒப்புக் கொள்ளத் தயாரா?
விமர்சனம் 29
குர்ரான் 21:91➚ 19:19➚ இயேசு இறைவனின் அருளானவர் என்று கூறுவதாக ஜெபமணி கூறுகிறார்.
(பக்கம் 79)
இறைவனின் உத்தரவுப் பிரகாரம் மர்யம் பிரசவித்ததையும் அவரையும் அவரது மனைவியையும் உலகுக்கு ஒரு அத்தாட்சியாக- அதாவது இறைவன் நினைத்தால் தந்தையின்றிக் கூடப் படைக்க முடியும் என்பதற்குச் சான்றாக ஆக்கினோம் என்று அவ்வசனங்கள் கூறுகின்றன. உலகுக்கே அருளானவர் என்று கூறவில்லை. அப்படி வேறு சிலரை குறித்து கூறி இருந்தாலும் அதற்கு இறைவன் என்பது அர்த்தமில்லை.
விமர்சனம் 30
குர்ரான் 3:45➚ இயேசு வானில் பூமியில் கெம்பீரமானவரும் இறைவனின் மிக நெருங்கியவருமாம் என்கிறார் ஜெபமணி
(பக்கம் 79)
இதை நாம் மறுக்கவில்லை. ஜபமணியே முன்பு குறிப்பிட்டப்படி ஆபிரகாமை கலீலுல்லாஹ் என்றும் மோஸையை கலீமுல்லாஹ் என்றும் கூறி அவர்களும் இறைவனுக்கு நெருக்கமானவர்களே என்கிறது. ஈஸா (அலை) ஒரு சிறந்த மனிதர் என்பதை எந்த முஸ்லிமும் மறுக்கவில்லையே. கடவுளின் குமாரர் என்று கூறுவதைத் தான் மறுக்கின்றனர்.
விமர்சனம் 31
3:55➚. 4:158➚. 19:15➚. 33 இயேசு மரித்து உயிர்த்து இறைவனால் உயர்த்தப்பட்டவர் என்கிறது என்கிறார் ஜெபமணி
(பக்கம் 79)
அவ்வசனங்களில் மரித்து உயிர்தெழுந்தார் என்று கூறப்படவில்லையே. அவரைக் கொல்லவுமில்லை சிலுவையில் அறையவுமில்லை. என்று தன்னளவில் இறைவன் உயர்த்திக் கொண்டான் என்று தானே அவ்வசனங்கள் கூறுகின்றன. சிலுவையில் அறையப்பட்டதையே மறுக்கும் இவ்வசனங்களை சிலுவைப் ப லிக்கு அதாரமாக்கும் பேதமையை என்னவென்பது.
விமர்சனம் 32
3:56➚ 98:6➚ இயேசுவை நிராகரிப்போர் இம்மை மறுமையில் வாதிக்கப்படுவர் என்று கூறுவதாக ஜெபமணி கூறுகிறார்.
ஏசுவை எந்த முஸ்லிமும் நிராகரிக்கவில்லையே? எல்லா நபிமார்களையும் அவர்கள் நம்பத்தான் செய்கிறார்கள் . அவரைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ கடவுளின் அம்சம் என்றோ கூறி இறைவனை நிராகரிப்பதைத் தானே முஸ்லி ம்கள் மறுக்கின்றனர்.