11) வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா?
இன்னொரு செய்தியைப் பாருங்கள்!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர் மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
(இதை எடுத்துரைத்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன் என்று கூறினார்கள்.
ஹம்மாம் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.(புகாரி: 3407) ➚
உயிரைக் கைப்பற்றும் வானவர் தன் கடமையைச் செய்ய வந்தால் மூஸா நபி அவரது கன்னத்தில் அறைய முடியுமா?
உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்தால் அவரை அல்லாஹ் தான் அனுப்பியுள்ளான் என்பது மூஸா நபிக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அவர் வானவர் என்று தெரிந்து கொண்டு, அல்லாஹ் தான் அவரை அனுப்பியுள்ளான்; சுயமாக சொந்த விருப்பம் ஏதும் வானவருக்கு கிடையாது என்று தெரிந்து கொண்டு அவரை மூஸா நபி கன்னத்தில் அறைந்தார் என்று சொல்லவே மூமின்களின் உள்ளம் நடுங்க வேண்டும். இது அல்லாஹ்வுக்கு எதிராகத் தொடுக்கும் யுத்தமாக அமைந்துள்ளது என்று பளிச்சென்று தெரிகின்றது.
மூஸா நபிக்கு மரணிக்க விருப்பம் இல்லாமல் இருந்து இன்னும் சிறிது காலம் வாழ ஆசைப்பட்டிருந்தால் எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் தர வழியுண்டா என்று இறைவனிடம் கேட்டு வருமாறு அவர் கூறினால் ஓரளவுக்கு அதை ஏற்கலாம்.
வானவரின் அசாத்திய பலத்துக்கு முன்னால் மூஸா நபியின் பலம் ஒன்றுமில்லை. இவ்வாறிருக்க எப்படி அறைந்திருக்க முடியும்? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அப்படியே மூஸா நபி அறைந்திருந்தாலும் வானவர் தன் கடமையைச் செய்யாமல் தோல்வியுடன் திரும்பிச் செல்வாரா?
வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தக் கூடியவர்கள் என்றும் அல்லாஹ்வின் எந்தக் கட்டளையையும் அவர்கள் மீற மாட்டார்கள் என்பதையும் பினவரும் வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.(அல்குர்ஆன்: 6:61)➚
அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.(அல்குர்ஆன்: 21:27)➚
தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.(அல்குர்ஆன்: 16:50)➚
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.(அல்குர்ஆன்: 66:6)➚
இத்தகைய தன்மை பெற்ற வானவர்கள் அல்லாஹ் சொன்னதைத் தான் செய்வார்களே தவிர அடிவாங்கிக் கொண்டு திரும்ப மாட்டார்கள் என்ற சாதாரண அறிவு இருப்பவர் கூட இதை ஏற்க மாட்டார்.
அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்.
வந்தவர் வானவர் என்று தெரிந்து கொண்டே அவரை அறைந்து விரட்டியது அல்லாஹ்வுக்கு எதிரான செயல் என்ற சாதாரண உண்மை தெரிந்தவர்கள் இதை நம்ப முடியுமா?
இதை நம்பினால் அல்லாஹ்வை எதிர்த்துப் பேசலாம் என்ற நிலை வருகின்றது.
அல்லாஹ்வின் ஏற்பாட்டில் அதிருப்தி அடைந்து கோபப்பட்ட யூனுஸ் நபியின் வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டியிருக்கின்றான்.
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்” என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.(அல்குர்ஆன்: 21:87-88)➚
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.(அல்குர்ஆன்: 68:48-50)➚
யூனுஸ் நபியின் சம்பவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டு முகம்மதே மீன் வயிற்றில் இருந்தாரே அவரைப் போன்று நீர் ஆகிவிடக் கூடாது என்றும் எச்சரிக்கின்றான்.
தனது பெருமையைப் பாதிக்கும் வகையில் யார் நடந்தாலும் அல்லாஹ் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்பதை இதிலிருந்து அறியலாம்.
தனது வானவரை கன்னத்தில் அறைந்த மூஸா நபியின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானதாக இருந்திருக்கும்.
அல்லாஹ்வின் கன்னியத்துக்கு எதிராகப் போர் செய்யும் வகையில் அமைந்த இந்தச் செய்தியையும் சிலர் நியாயப்படுத்த படாதபாடு படுகின்றனர்.
நீ மூஸா நபியிடம் போ! அவர் உன் கன்னத்தில் அறைவார். அதை வாங்கிக் கொண்டு திரும்பி வா என்று அல்லாஹ் சொல்லி அனுப்பி இருக்கலாம் அல்லவா? என்று உளறுகின்றனர்.
இப்படி இருந்தால் உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறுவாரா? நீ சொன்னபடி என்னை அறைந்து விட்டார்; நானும் அறை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன் என்றல்லவா சொல்லி இருப்பார்.